தெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்

'செபமாலை
அன்னை'
அன்னை கன்னி மரியாளை நாம், 'செபமாலை அன்னை' என்று கொண்டாடி மகிழ்கிறோம்.
இன்றைய முதல் வாசகத்தில் (காண். திப 1:12-14), 'திருத்தூதர்கள் அனைவரும்
சில பெண்களோடும், இயேசுவின் சகோதரர்களோடும், அவருடைய தாய் மரியாவோடும் இணைந்து
ஒரே மனத்தோடு இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார்கள்' என்று பதிவு
செய்கின்றார் லூக்கா.
இங்கே, இறைவனிடம் வேண்டுவது என்பது மரியாளின் செயலாக இருக்கிறது.
இறைவேண்டலின் மாலையே செபமாலை. இந்த மாலையில், நாம் திருஅவையின் நம்பிக்கை
அறிக்கை தொடங்கி, இயேசு கற்றுத் தந்த இறைவேண்டல், கபிரியேல் மற்றும் எலிசபெத்து
ஆகியோரின் வாழ்த்தொலிகள், மூவொரு இறைவன் புகழ், இப்போதும் இறப்பின்
வேளையிலும் நினைவுகூர்தல் என விண்ணப்பம் என்று நாம் இறைவேண்டல் செய்கிறோம்.
செபமாலையின் மணிகள் நகர்வது, நம் வாழ்க்கையும் ஒவ்வொரு மணியாக நகர்ந்துகொண்டே
போகிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.
செபமாலை என்பதை நாம் வெறும் அணிகலனாக, அல்லது ஆபத்து நீக்கும் அருள்கருவி
எனப் பார்க்காமல், நாம் செய்யும் இறைவேண்டல்கள் நம் வாழ்க்கையின் பண்புகளாக
மாற வேண்டும் எனவும், நாம் செபிக்கும் மறையுண்மைகள் நம் வாழ்வின் இறையனுபவங்களாக
மாற வேண்டும் எனவும் செபித்தல் நலம்.
|