முதல் வாசகம்
ஆண்டவரின் மாட்சி வெளிப்படுத்தப்படும்;
மானிடர் அனைவரும் இதைக் காண்பர்.
இறைவாக்கினர் எசாயா
நூலிலிருந்து வாசகம் 40: 1-5, 9-11
“ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக் கனிமொழி கூறுங்கள்”
என்கிறார் உங்கள் கடவுள். எருசலேமிடம் இனிமையாய்ப்
பேசி, உரத்த குரலில் அவளுக்குச் சொல்லுங்கள்; அவள்
போராட்டம் நின்றுவிட்டது; அவள் குற்றம் மன்னிக்கப்பட்டது;
அவள் தன் பாவங்கள் அனைத்திற்காகவும் ஆண்டவர் கையில் இருமடங்கு
தண்டனை பெற்றுவிட்டாள்.
குரலொலி ஒன்று முழங்குகின்றது: பாலைநிலத்தில் ஆண்டவருக்காக
வழியை ஆயத்தமாக்குங்கள்; பாழ்நிலத்தில் நம் கடவுளுக்காக
நெடுஞ்சாலை ஒன்றைச் சீராக்குங்கள். பள்ளத்தாக்கு எல்லாம்
நிரப்பப்படும்; மலை, குன்று யாவும் தாழ்த்தப்படும்; கோணலானது
நேராக்கப்படும்; கரடு முரடானவை சமதளமாக்கப்படும். ஆண்டவரின்
மாட்சி வெளிப்படுத்தப்படும்; மானிடர் அனைவரும் ஒருங்கே
இதைக் காண்பர்; ஆண்டவர்தாமே இதை மொழிந்தார்.
சீயோனே! நற்செய்தி தருபவளே, உயர்மலைமேல் நின்றுகொள்!
எருசலேமே! நற்செய்தி உரைப்பவளே! உன் குரலை எழுப்பு, அஞ்சாதே!
‘இதோ உன் கடவுள்’ என்று யூதா நகர்களிடம் முழங்கு! இதோ
என் தலைவராகிய ஆண்டவர் ஆற்றலுடன் வருகின்றார்; அவர் ஆற்றலோடு
ஆட்சிபுரிய இருக்கிறார். அவர்தம் வெற்றிப் பரிசைத் தம்முடன்
எடுத்து வருகின்றார்; அவர் வென்றவை அவர்முன் செல்கின்றன.
ஆயனைப் போல் தம் மந்தையை அவர் மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத்
தம் கையால் ஒன்று சேர்ப்பார்; அவற்றைத் தம் தோளில்
தூக்கிச் சுமப்பார்; சினையாடுகளைக் கவனத்துடன் நடத்திச்
செல்வார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 104: 1-2.
3-4. 24-25. 27-28. 29-30 (பல்லவி: 1) Mp3
பல்லவி: என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு!
1
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே!
நீர் எத்துணை மேன்மைமிக்கவர்! நீர் மாண்பையும்
மாட்சியையும் அணிந்துள்ளவர்.
2
பேரொளியை ஆடையென அணிந்துள்ளவர்; வான்வெளியைக் கூடாரமென
விரித்துள்ளவர். - பல்லவி
3
நீர்த்திரள்மீது உமது உறைவிடத்தின் அடித்தளத்தை அமைத்துள்ளவர்;
கார் முகில்களைத் தேராகக் கொண்டுள்ளவர்; காற்றின் இறக்கைகளில்
பவனி வருகின்றவர்!
4
காற்றுகளை உம் தூதராய் நியமித்துள்ளவர்; தீப்பிழம்புகளை
உம் பணியாளராய்க் கொண்டுள்ளவர். - பல்லவி
24
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! நீர் அனைத்தையும்
ஞானத்தோடு செய்துள்ளீர்! பூவுலகம் உம் படைப்புகளால்
நிறைந்துள்ளது.
25
இதோ! பரந்து விரிந்து கிடக்கும் கடல்கள்; அவற்றில்
சிறியனவும் பெரியனவுமாக வாழும் உயிரினங்கள் எண்ணிறந்தன.
- பல்லவி
27
தக்க காலத்தில் நீர் உணவளிப்பீர் என்று இவையெல்லாம் உம்மையே
நம்பியிருக்கின்றன.
28
நீர் கொடுக்க, அவை சேகரித்துக் கொள்கின்றன; நீர் உமது
கையைத் திறக்க, அவை நலன்களால் நிறைவுறுகின்றன. - பல்லவி
29
நீர் உமது முகத்தை மறைக்க, அவை திகிலடையும்; நீர் அவற்றின்
மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும்
புழுதிக்கே திரும்பும்.
30
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின்
முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
புதுப்பிறப்பு அளிக்கும்
நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை
மீட்டார்.
திருத்தூதர் பவுல் தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 2: 11-14; 3: 4-7
அன்பிற்குரியவரே,
மனிதர் அனைவருக்கும் மீட்பராம் கடவுளின் அருள் வெளிப்பட்டுள்ளது.
நாம் இறைப்பற்றின்மையையும் உலகு சார்ந்த தீய நாட்டங்களையும்
மறுத்துக் கட்டுப்பாட்டுடனும் நேர்மையுடனும் இறைப்பற்றுடனும்
இம்மையில் வாழ இவ்வருளால் பயிற்சி பெறுகிறோம். மகிழ்ச்சியோடு
எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக்
காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய
இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது. அவர் நம்மை
எல்லா நெறிகேடுகளிலிருந்தும் மீட்டு, நற்செயல்களில் ஆர்வமுள்ள
தமக்குரிய மக்களாகத் தூய்மைப்படுத்தத் தம்மையே ஒப்படைத்தார்.
நம் மீட்பராம் கடவுளின் நன்மையும் மனித நேயமும் வெளிப்பட்டபோது,
நாம் செய்த அறச்செயல்களை முன்னிட்டு அல்ல, மாறாகத் தம்
இரக்கத்தை முன்னிட்டு, புதுப்பிறப்பு அளிக்கும்
நீரினாலும் புதுப்பிக்கும் தூய ஆவியாலும் கடவுள் நம்மை
மீட்டார். அவர் நம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின்
வழியாகத் தூய ஆவியை நம்மீது நிறைவாகப் பொழிந்தார்.
நாம் அவரது அருளால் அவருக்கு ஏற்புடையவர்களாகி, நாம்
எதிர்நோக்கி இருக்கும் நிலைவாழ்வை உரிமைப்பேறாகப்
பெறும்பொருட்டே இவ்வாறு செய்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
லூக் 3: 16
அல்லேலூயா, அல்லேலூயா! “என்னைவிட வலிமைமிக்க ஒருவர் வருகிறார்.
அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத்
திருமுழுக்குக் கொடுப்பார்” அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு திருமுழுக்குப் பெற்று,
இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது, வானம் திறந்தது.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 3: 15-16, 21-22
அக்காலத்தில்
மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை
யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள்
எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும்
பார்த்து, “நான் தண்ணீரால் உங்களுக்குத்
திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமைமிக்க
ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட
எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும்
நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்.
மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசுவும்
திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தபோது
வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர்மீது
இறங்கியது. அப்பொழுது, “என் அன்பார்ந்த மகன் நீயே, உன்
பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்று வானத்திலிருந்து
ஒரு குரல் ஒலித்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|
I எசாயா 40: 1-5, 9-11
II தீத்து 2: 11-14; 3:4-7
III லூக்கா 3: 15-16, 21-22
“விட்டுவிடுகிறீர்களா? நம்புகிறீர்களா?
கடவுளோடு ஒன்றித்திருத்த வாழ்வு:
கிறிஸ்துவின்மீது கொண்ட ஆழமான நம்பிக்கைக்காக நாஜிக்களால்
வதைமுகாமில் அடைக்கப்பட்டவர் அருள்பணியாளர் ஆல்பிரட்
டெல்ப் (Alfred Delp 1907-1945). இவர் வதைமுகாமில் அடைக்கப்பட்ட
பிறகும்கூட யாருக்கும் தெரியாமல் திருப்பலி
நிறைவேற்றியும், கிறிஸ்துவைப் பற்றி எழுதியும் வந்தார்.
இந்நிலையில் இவர் 1945 ஆம் ஆண்டு, பிப்ரவரி 2 ஆம் நாள்
நாஜிக்களால் கொல்லப்பட்டார். இவர் கொல்லப்படுவதற்குச் சில
நாள்களுக்கு முன்பு எழுதிய வார்த்தைகள் இவை: “கடவுளோடு ஒன்றித்திருக்கும்போதே
ஒரு மனிதன் மனிதனாக இருக்கின்றான்.”
தான் நாஜிக்களால் கொல்லப்படப் போகிறோம் என்று தெரிந்தபின்பும்கூட,
கடவுளோடு ஒன்றித்து வாழ்வதுதான் உண்மையான வாழ்க்கை என்று
வாழ்ந்த அருள்பணியாளர் ஆல்பிரட் டெல்ப், திருமுழுக்குப்
பெற்ற ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம்
முன்மாதிரி. இன்று நாம் ஆண்டவருடைய திருமுழுக்குப்
பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா நம்மைக் கடவுளோடு
ஒன்றித்து வாழ அழைக்கின்றது. கடவுளோடு ஒன்றித்து வாழும் ஒருவரது
வாழ்க்கை எப்படி இருக்கும், அதனால் அவர் பெறுகின்ற
கைம்மாறு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.
எதையெல்லாம் விட்டுவிட வேண்டும்?
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது அருள்பணியாளர்
கேட்கின்ற முதற்கேள்வி, “பாவத்திற்குக் காரணனும் தலைவனுமாகிய
சாத்தானை விட்டுவிடுகிறீர்களா?” என்பதுதான். இதற்கு அந்தத்
திருச்சடங்கில் பங்கேற்கிற அனைவரும் “விட்டுவிடுகிறேன்” என்று
பதிலளிக்கின்றார்கள். முதல் பெற்றோரான ஆதாமும் ஏவாவும் ஆண்டவரையும்
அவரது கட்டளையையும் விட்டுவிட்டு (தொநூ 2:16,17), பாவத்திற்குத்
தலைவனான சாத்தானைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் பாவம்
செய்தார்கள். இவ்வாறு வரும் பிறப்பு நிலை பாவத்திலிருந்து
விடுவிக்கப்பட வேண்டுமெனில், ஒவ்வொருவரும் சாத்தானை
விட்டுவிட வேண்டும். அதனாலேயே அருள்பணியாளர்
திருமுழுக்குத் திருச்சடங்கின்போது, “சாத்தானை
விட்டுவிடுகின்றீர்களா?” என்று கேட்கின்றார்.
பவுல், தீத்துக்கு எழுதிய திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட
இன்றைய இரண்டாம் வாசகத்தில், நாம் இறைப்பற்றின்மையையும்
உலகு சார்ந்த நாட்டங்களையும் மறுத்து வாழவேண்டும் என்கிறார்.
நாம் ஏன் இறைப்பற்றின்மையை மறுத்து வாழவேண்டும்? என்ற எழலாம்.
“இறைப்பற்றில்லாதவர்கள் தங்கள் செயலாலும் சொல்லாமலும் இறப்பை
வரவழத்தார்கள்” (சாஞா 1:16) என்கிறது சாலமோனின் ஞான நூல்.
இறைப்பற்றின்மை இறப்பை வருவிக்கும் என்பதால்தான் பவுல், இறைப்பற்றிமையை
மறுத்து வாழச் சொல்கின்றார்.
இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள் வருவித்துக்கொண்டவர்களுக்கு
மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் முதல் பெற்றோர். கடவுள் மனிதர்களை
அழியாமைக்கென்று படைத்திருந்தபோது (சாஞா 2:23), கடவுளின்
கட்டளையை மீறி அல்லது இறைப்பற்றின்மையால் இறப்பைத் தங்கள்மேல்
வருவித்துக்கொண்டார்கள் அவர்கள் (தொநூ 2:17). ஆகையால், இறைப்பற்றின்மை
இறப்பை வருவிக்கும் என்பதால் அந்த இறைப்பற்றின்மை நமக்குள்
தூண்டி எழுப்பும் சாத்தானையும் அவனுடைய மாயக் கவர்ச்சிகளையும்
விட்டு விடுவது நல்லது
யார்மீது நம்பிக்கை கொள்வது?
திருமுழுக்குத் திருச் சடங்கில் அருள்பணியாளர், “சாத்தானை
விட்டுவிடுகிறீர்களா?” என்று கேட்பதோடு நிறுத்திக் கொள்வதில்லை.
அதற்கு அடுத்ததாக, “விண்ணையும் மண்ணையும் படைத்த எல்லாம்
வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறீர்களா?” என்று
கேட்கின்றார். இதற்கு அனைவரும், “நம்புகிறேன்” என்று மறுமொழி
கூறுகின்றார்கள். எனில், பாவத்திற்குத் தலைவனாகிய சாத்தானை
விட்டுவிடுவதோடு அல்லாமல், கடவுளை நம்ம வேண்டும். அப்பொழுதுதான்
ஒருவருடைய வாழக்கை பெறும்.
இரண்டாம் வாசகத்தில் பவுல், “இறைப்பற்றின்மையையும் உலகு
சார்ந்த நாட்டங்களையும் மறுத்துவிடுங்கள்” என்று
சொல்லிவிட்டுத் தொடர்ந்து, “கட்டுப்பாடுடனும் நேர்மையுடனும்
இறைப்பற்றுடனும் இம்மையில் வாழ இறையருளால் பயற்சி
பெறுகின்றோம்” என்கிறார். நாம் ஏன் இறைபற்றுடன் வாழவேண்டும்
என்பதற்குச் சாலமோனின் ஞான நூல், “இறைப்பற்று எல்லாவற்றையும்விட
வலிமை மிக்கது” (சாஞா 10:12) என்று விளக்கம் தருகின்றது.
இந்த வார்த்தைகளை நாம் இன்றைய முதல் வாசகத்தோடு இணைத்துச்
சிந்தித்துப் பார்த்தால் இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.
கடவுளாகிய ஆண்டவரை அன்பு செய்யாமல், அவர் கொடுத்த கட்டளையையும்
கடைப்பிடிக்காததால் யூதா நாட்டினர் பாபிலோனியரிடமிருந்து
இரு மடங்கு தண்டனை பெற்றனர். இந்நிலையில் கடவுள் அவர்களது
குற்றங்களை மன்னித்து, அவர்களது போராட்டத்தை முடிவுக்குக்
கொண்டு வந்தார். தவிர, “ஆறுதல் கூறுங்கள்; என் மக்களுக்குக்
கனிமொழி கூறுங்கள்” என்று இறைவாக்கினர் எசாயா வழியாக அழைப்பு
விடுக்கின்றார். கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக இத்தகையதோர்
அழைப்பு விடுகின்றார் எனில், யூதா நாட்டினர் தன்னை மறந்து
இறைப்பற்றில்லாமல் வாழ்ந்தால் தண்டனை பெற்றார்கள். அதனால்
அவர்கள் தன்மீது நம்பிக்கை கொண்டு இறைப்பற்றுடன்
வாழ்ந்தால் ஆறுதலையும் அரவணைப்பையும் பெறுவார்கள் என்று
கடவுள் சொல்லாமல் சொல்கின்றார்.
ஆதலால், யூதா நாட்டினர் என்றில்லை, ஒவ்வொருவரும்,
“மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட ஆண்டவரிடம் தஞ்சம் புகுவது
நலம்” (திபா 118:8)
ஆண்டவரின் அன்பார்ந்த மக்களாவோம்:
சாத்தானை விட்டுவிட்டுக் கடவுளை நம்புகிற ஒருவர் அவரது
பிள்ளையாகின்றார். அதன்பிறகு அவர், கடவுளின் அன்பார்த்த
மகனான இயேசுவைப் போன்று வாழ அழைக்கப்படுகின்றார்.
நற்செய்தியில் இயேசு மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக்
கொள்ளும்விதமாய்த் திருமுழுக்குப் பெறுகின்றார். அவ்வாறு
அவர் திருமுழுக்குப் பெறுகின்றபோது, “என் அன்பார்ந்த மகன்
நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” என்றொரு குரல்
வானத்திலிருந்து ஒலிக்கின்றது. இயேசு தந்தையின் திருவுளத்தை
நிறைவேற்றி (லூக் 22:42), அவரது அன்பார்ந்த மகனானார்.
திருமுழுக்குப் பெற்றதன் மூலம் சாத்தானை விட்டுவிட்டு, ஆண்டவர்மீது
நம்பிக்கை கொண்டு வாழும் நாம், இயேசுவைப் போன்று கடவுளின்
திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தால், அவரது மக்களாவோம்.
இயேசு திருமுழுக்குப் பெற்ற பிறகு, சென்ற இடங்களில் எல்லாம்
நன்மை செய்தார் (திப 10:38). திருமுழுக்குப்
பெற்றிருக்கும் நாமும் இயேசுவைப் போன்று, செல்லும் இடங்களில்
எல்லாம் நன்மை செய்ய அழைக்கப்படுகின்றோம். இன்றைக்குப் பலர்
திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை மறந்துவிட்டுச் சாத்தனைப்
பற்றிக்கொண்டு வாழ்வது வேதனையாக இருக்கின்றது. ஆண்டவருடைய
திருமுழுக்குப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் நமது
வாக்குறுதிகளைப் புதுப்பித்துக் கொண்டு, ஆண்டவரோடு ஒன்றித்து
வாழ்வது நல்லது. ஏனெனில், ஆண்டவரோடு ஒன்றித்து
வாழும்போதுதான் நமது வாழ்க்கை வாழ்க்கையாகவே இருக்கின்றது.
சிந்தனைக்கு:
‘கிறிஸ்துவோடு ஒன்றித்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற
நீங்கள அனைவரும் கிறிஸ்துவை அணிந்துகொண்டீர்கள்’ (கலா
3:27) என்பார் புனித பவுல். ஆகையால், திருமுழுக்கின் மூலம்
கிறிஸ்துவை அணிந்து கொண்ட நாம், அவரைப் போன்று சென்ற இடங்களில்லாம்
நன்மை செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
|