முதல் வாசகம்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம்
6: 2-6
மோசே மக்களை நோக்கிக் கூறியது:
நீங்களும் உங்கள் பிள்ளைகளும், பிள்ளைகளின் பிள்ளைகளும்,
உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நான் உங்களுக்குக் கட்டளையிட்ட
எல்லா நியமங்களையும் கட்டளைகளையும் உங்கள் வாழ்நாளெல்லாம்
கடைப்பிடிப்பீர்களாக! இதனால், நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்.
இஸ்ரயேலே, அவற்றிற்குச் செவிகொடு! அவற்றைச் செயல்படுத்த
முனைந்திடு! அதனால், உன் மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர்
உனக்கு வாக்களித்தபடி, பாலும் தேனும் நிறைந்து வழியும்
நாட்டில் நீ நலம் பல பெற்று மேன்மேலும் பெருகுவாய்.
இஸ்ரயேலே, செவிகொடு! நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்.
உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும்
உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்புகூர்வாயாக! இன்று நான் உனக்குக்
கட்டளையிடும் இவ்வார்த்தைகள் உன் உள்ளத்தில் இருக்கட்டும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 18:
1-2abc,2def-3. 46,50ab (பல்லவி: 1)Mp3
பல்லவி: என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
1
என் ஆற்றலாகிய ஆண்டவரே! உம்மிடம் நான் அன்புகூர்கின்றேன்.
2abc
ஆண்டவர் என் கற்பாறை; என் கோட்டை; என் மீட்பர். - பல்லவி
2def
என் இறைவன்; நான் புகலிடம் தேடும் மலை அவரே; என் கேடயம்,
எனக்கு மீட்பளிக்கும் வல்லமை, என் அரண்,
3
போற்றற்குரிய ஆண்டவரை நோக்கி நான் மன்றாடினேன்; என் எதிரிகளிடமிருந்து
நான் மீட்கப்பட்டேன். - பல்லவி
46
ஆண்டவர் உண்மையாகவே வாழ்கின்றார்! என் கற்பாறையாம் அவர்
போற்றப்பெறுவாராக! என் மீட்பராம் கடவுள் மாட்சியுறுவாராக!
50ab
தாம் ஏற்படுத்திய அரசருக்கு மாபெரும் வெற்றியை அளிப்பவர்
அவர்; தாம் திருப்பொழிவு செய்த தாவீதுக்கும் அவர்தம் மரபினருக்கும்
என்றென்றும் பேரன்பு காட்டுபவரும் அவரே. - பல்லவி
இரண்டாம் வாசகம்
இவரோ, என்றென்றும்
நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப்
பெற்றுள்ளார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட
திருமுகத்திலிருந்து வாசகம் 7: 23-28
சகோதரர் சகோதரிகளே,
லேவியர் குலத்தைச் சார்ந்த குருக்கள் சாவுக்கு ஆளானவர்களாய்
இருந்ததால் தம் பணியில் நிலைத்திருக்க முடியவில்லை. வேறு
பலர் தொடர்ந்து குருக்களாயினர். இவரோ, என்றென்றும்
நிலைத்திருப்பதால், மாறாத குருத்துவப் பணியைப்
பெற்றுள்ளார். ஆதலின், தம் வழியாகக் கடவுளிடம் வருபவரை அவர்
முற்றும் மீட்க வல்லவராய் இருக்கிறார்; அவர்களுக்காகப் பரிந்து
பேசுவதற்கென என்றுமே உயிர் வாழ்கிறார்.
இத்தகைய தலைமைக் குருவே நமக்கு ஏற்றவராகிறார். இவர் தூயவர்,
கபடற்றவர், மாசற்றவர், பாவிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு,
வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவர். ஏனைய தலைமைக் குருக்கள்
செய்வதுபோல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும், பின்னர்
மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத்
தேவையில்லை. ஏனெனில் தம்மைத்தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே
ஒரு முறைக்குள் செய்து முடித்தார்.
திருச்சட்டப்படி வலுவற்ற மனிதர்கள் குருக்களாக ஏற்படுத்தப்
படுகிறார்கள். ஆனால் அத்திருச்சட்டத்திற்குப் பின்னர், ஆணையிட்டுக்
கூறப்பட்ட வாக்கின் மூலம் என்றென்றும் நிறைவுள்ளவரான மகனே
குருவாக ஏற்படுத்தப்படுகிறார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
யோவா 14: 23
அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான்
சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு
கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார்
ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இவற்றைவிட மேலான கட்டளை வேறு
எதுவும் இல்லை.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 28b-34
அக்காலத்தில்
மறைநூல் அறிஞருள் ஒருவர், இயேசு சதுசேயர்களுக்கு நன்கு பதில்
கூறிக்கொண்டிருந்ததைக் கண்டு அவரை அணுகி வந்து,
“அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?” என்று கேட்டார். அதற்கு
இயேசு, “ ‘இஸ்ரயேலே கேள். நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர்.
உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும்
முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’
என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது
கட்டளை. இவற்றைவிட மேலான கட்டளை வேறு எதுவும் இல்லை” என்றார்.
அதற்கு மறைநூல் அறிஞர் அவரிடம், “நன்று போதகரே, ‘கடவுள் ஒருவரே;
அவரைத் தவிர வேறு ஒரு கடவுள் இல்லை’ என்று நீர் கூறியது உண்மையே.
அவரிடம் முழு இதயத்தோடும் முழு அறிவோடும் முழு ஆற்றலோடும்
அன்பு செலுத்துவதும், தன்னிடம் அன்பு கொள்வதுபோல் அடுத்திருப்பவரிடமும்
அன்பு செலுத்துவதும் எரிபலிகளையும் வேறு பலிகளையும்விட
மேலானது” என்று கூறினார். அவர் அறிவுத்திறனோடு பதிலளித்ததைக்
கண்ட இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியினின்று தொலையில் இல்லை”
என்றார். அதன்பின் எவரும் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|
I இணைச்சட்டம் 6: 2-6
II எபிரேயர் 7: 23-28
III மாற்கு 12: 28b-34
“இதனால் நீங்கள் நெடுநாள் வாழ்வீர்கள்”
நிகழ்வு
எதிர்பாராத விதமாக நடந்தேறிய ஒரு கோர விபத்தில் பெற்றோரைப்
பறிகொடுத்த அறிவழகன், தன் தங்கை செல்விக்கு ஒரு நல்ல தந்தையாகவும்
தாயாகவும் இருந்து வந்தான். அறிவழகனின் பெற்றோர் விபத்தில்
இறந்தபோது, அவன் அப்போதுதான் கல்லூரிப் படித்துவிட்டு ஒரு
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான்.; அவனுடைய
தங்கை செல்வி வீட்டிற்குப் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியில்
எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்தாள்.
அறிவழகனின் தாயார் சிறந்ததொரு கதை சொல்லி. அதனால் அவர் தன்
பிள்ளைகளுக்குக் கதைசொல்லித் தூங்க வைப்பதுண்டு. தாயின்
இறப்பிற்குப் பிறகு அறிவழகன் அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு,
இரவு நேரங்களில் தன் தங்கைக்குக் கதை சொல்லித் தூங்க
வைத்தான். இப்படி நாள்கள் மெல்ல நகர்ந்தன. ஒருநாள் அறிவழகன்
கடைத்தெருவிற்குச் சென்றிருந்தபோது, மின்னணுச் சாதனம் ஒன்றைக்
கண்டான். அதில் பாடல்கள், உரைகள் போன்ற பலவற்றையும்
சேமித்து வைக்கலாம் என்று கடைக்காரர் சொன்னதும், அவன் அதை
விலை கொடுத்து வாங்கிக் கொண்டான்.
வீட்டிற்கு வந்ததும் அறிவழகன் தான் வாங்கிவந்த மின்னணுச்
சாதனத்தில், இரவு நேரங்களில் தன் தங்கைக்குச் சொல்லும் கதைகளைப்
பதிவேற்றி, அதைத் தன் அவளிடம் கொடுத்து, “இந்த மின்னணுச்
சாதனத்தில் நிறையக் கதைகளைப் பதிவேற்றி
வைத்திருக்கின்றேன். அதனால் இனிமேல் நீ இரவு தூங்கச்
சொல்லும்போது இதிலுள்ள் கதைகளைக் கேட்டுத் தூங்கு. அண்ணனுக்குப்
பல வேலைகள் இருக்கின்றன” என்றான்.
செல்வி தன் அண்ணன் கொடுத்த மின்னணுச் சாதனத்தைக் கையில்
வாங்கி, அதை உற்றுப்பார்த்தாள். பின்னர் அவள் தன் அண்ணனிடம்,
“அண்ணா! இந்த மின்னணுச் சாதனத்தில் நிறையக் கதைகள் இருக்கலாம்;
ஆனால், அதில் எனது தலையைச் சாய்த்துகொள்ள மடி இல்லையே! அதனால்
எனக்கு இந்த மின்னணுச் சாதனம் வேண்டாம்” என்றாள். அப்பொழுதுதான்
அறிவழகனுக்குத் தன் தவறு புரிந்தது. ‘என்னுடைய இடத்தைச்
சாதாரண இந்த மின்னணுச் சாதனத்தால் நிரப்ப முடியாது’ என்பதை
உணர்ந்தவனாய், வழக்கம்போல் அறிவழகன் தன் தங்கை செல்வியைத்
தன் மடியில் வைத்துக் கதைகள் சொல்லித் தூங்க வைத்தான்.
பொருளோ, மின்னணுச் சாதனங்களோ, பணமோ எதுவுமே அன்பிற்கு இணையகிவிடாது.
அன்புக்கு மாற்று அன்புதான். இத்தகைய அன்பை நாம் ஆண்டவரிடமும்
அடுத்திருப்பவரிடம் கொண்டிருந்தால், நாம் நெடுநாள்
வாழ்வோம் என்று இன்றைய இறைவார்த்தை நமக்கு எடுத்துக்கூறுகின்றது.
அது குறித்து நாம் சிந்திப்போம்.
இறையன்பு முதன்மையான கட்டளை
எதையெல்லாம் செய்யவேண்டும் என்று 248 கட்டளைகளும், எதையெல்லாம்
செய்யக்கூடாது என்று 365 கட்டளைகளும் இருந்த நிலையில், யூத
இரபிகள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் நடுவில் எது முதன்மையான
கட்டளை என்ற விவாதம் அடிக்கடி எழுவதுண்டு. இந்நிலையில், இயேசு
சதுசேயருக்கு நன்கு பதிலளித்தைப் பார்த்த மறைநூல் அறிஞர்
ஒருவர் அவரிடம் வந்து, “அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?”
என்றொரு கேள்வியைக் கேட்கின்றார்.
மறைநூல் நூல் அறிஞர் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு, மறைநூல்
அறிஞர் அதுவரை கேட்டிராத ஒன்றைப் பதிலாகத் தரவில்லை.
மாறாக, அவர் நன்கு அறிந்திருந்த, இன்றைய முதல் வாசகத்தில்
இடம்பெறுகின்ற, யூதர்களின் நம்பிக்கை அறிக்கை என்று சொல்லப்படுகின்ற
ஒன்றையே பதிலாகத் தருகின்றார். ஆம், யூதர்கள் காலையிலும்
மாலையிலும் சொல்லும் ஷம்மாவில் (இச 6: 4-9), இடம்பெறும் முதல்
இரு இறைவார்த்தைகளையே (4-5) இயேசு முதன்மையான கட்டளை என்கிறார்.
இயேசு, மறைநூல் அறிஞரிடம் முதன்மையான கட்டளை என்று
கூறுகின்ற பகுதியில் ஒரு முக்கியமான உண்மை அடங்கியிருக்கின்றது.
அது என்னவெனில் கடவுளை அரைகுறை மனத்தோடு அல்ல, முழு மனத்தோடு
அன்பு செய்யவேண்டும் என்பதுதான். இஸ்ரயேல் மக்கள், “நம்
கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர்” என்று சொல்லிகொண்டு,
அவரை முழுமையான அன்பு செய்யாமல், பிற தெய்வங்களை
வழிபாட்டார்கள். இதனால் அவர்கள் நாடுகடத்தப்பட்டு, அடிமைகளாக
வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். எனவேதான் கடவுள் ஒருவரே,
அவரை முழு இதயத்தோடு அன்பு செய்வதுதான் முதன்மையான கட்டளை
என்கிறார் இயேசு.
பிறரன்பு இறையன்புக்கு இணையான கட்டளை
மறைநூல் அறிஞர் தன்னிடம் கேட்ட, “அனைத்திலும் முதன்மையான
கட்டளை எது?” என்ற கேள்விக்கு, இயேசு, ஒரே கடவுளை முழு
இதயத்தோடு அன்பு செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லி
நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, “உன்மீது நீ அன்புகூர்வதுபோல்
உனக்கு அடுத்திருப்பவர்மீது அன்பு கூர்வாயாக” என்று லேவியர்
நூலில் (லேவி 19: 18) இடம்பெறும் இறைவார்த்தையைக்
குறிப்பிட்டுவிட்டு, “இது இரண்டாவது கட்டளை” என்கிறார். இதே
பகுதியை மத்தேயு நற்செய்தியில் நாம் படித்துப்பார்க்கும்போது,
அங்கே, “இதற்கு இணையான இரண்டாவது கட்டளை” (மத் 22: 39) என்று
வரும். எனில், இறைவனை அன்பு செய்யவேண்டும் என்ற கட்டளைக்கு
இணையானது பிறரை அன்புசெய்யவேண்டும் என்ற கட்டளை.
லூக்கா நற்செய்தியிலோ திருச்சட்ட அறிஞர், “எனக்கு அடுத்திருப்பவர்
யார்?” (லூக் 10: 29) என்று கேட்கின்றபோது, இயேசு அவரிடம்,
நல்ல சமாரியர் உவமையைச் சொல்லிவிட்டுத் தேவையில் உள்ளவர்
யாவரும் அடுத்திருப்பவரே என்பார். இவ்வாறு இயேசு ஒரே கடவுளை
முழு இதயத்தோடு அன்பு செய்யவேண்டும் என்பது முதன்மையான கட்டளை
என்றும் அதற்கு இணையாக அடுத்திருப்பவரை அன்பு செய்து இரண்டாவது
கட்டளை என்றும் கூறுகின்றார்.
அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்தால் நீண்டநாள் வாழலாம்
மறைநூல் அறிஞர், இயேசுவிடம் கேட்ட கேள்விக்கு இயேசு நன்றாகப்
பதிலளித்தும் அல்லது தான் கேட்ட கேள்விக்கு நல்ல பதில்
கிடைத்ததும், மறைநூல் அவர் அத்தோடு பேச்சை நிறுத்தியிருக்கலாம்;
ஆனால், அவர், இறைவனிடமும் அடுத்திருப்பவரிடமும் அன்பு
செலுத்துவது, “எரிபலிகளையும் வேறு பலிகளையும் விட மேலானது”
என்கிறார். அப்பொழு இயேசு அவரிடம், “நீர் இறையாட்சியின்று
தொலைவில் இல்லை” என்கிறார்.
இயேசு, அறிவுத்திறனோடு பதிலளித்த மறைநூல் அறிஞரிடம், நீர்
இறையாட்சியில் இருக்கின்றீர் என்று சொல்லவில்லை; இறையாட்சியின்று
தொலைவில் இல்லை என்று சொல்கிறார். காரணம், அவரும் அவரைப்
போன்றவர்களும் முதன்மையான கட்டளை எது என நன்றாகத்
தெரிந்துகொண்டு கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்
கொண்டார்கள் (மாற் 10: 40). ஆகையால், முதன்மையான கட்டளை எது
எனத் தெரிந்தும் அதைக் கடைப்பிடிக்காமல் இருந்தால், அவர்
இறையாட்சிலிருந்து தொலைவில்தான் இருக்கவேண்டும்.
அதேவேளையில் முதன்மையான கட்டளை எது எனத் தெரிந்துகொண்ட பிறகு
அதைக் கடைப்பிடித்து வாழ்கின்றபோது இன்றைய இரண்டாம் வாசகத்தில்
நாம் வாசிப்பது போன்று, நமக்காகவே பரிந்து பேசுவதற்கென என்றும்
உயிர் வாழ்கிற இயேசுவின் துணையுடன், இன்றைய முதல்வாசகத்தில்
நாம் வாசிப்பது போன்று, நெடுநாள் வாழ முடியும். ஆகையால்,
நாம் மறைநூல் அறிஞரைப் போன்று முதன்மையான கட்டளையை அறிந்து
வைத்திருப்பதோடு நின்றுவிடாமல், அதைக் கடைப்பிடித்து
வாழ்ந்து, இறையாசி பெறுவோம்.
சிந்தனை:
‘அன்பு செய்வதும் அன்பு செய்யப்படுவதையும் விட இந்த
வாழ்க்கையில் மகிழ்ச்சியானது வேறொன்றும் இல்லை’ என்பார் பிரஞ்சு
எழுத்தாளரான ஜார்ஜ் சான்ட். ஆகையால், நாம் இறைவனையும் நமக்கு
அடுத்திருப்பவரையும் முழுமையாக அன்புசெய்து, இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
|