maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                                தூய ஆவி பெருவிழா


தூய ஆவி ஞாயிறுக்குப் பின் வரும் திங்கள் கிழமையிலும், இன்னும் செவ்வாய்க் கிழமையிலும் கூட, எங்கெல்லாம் இறைமக்கள் திரளாகத் திருப்பலிக்கு வரவேண்டுமோ, அல்லது வருவது வழக்கமோ, அங்கெல்லாம் தூய ஆவி விழாத் திருப்பலி வாசகங்களை மீண்டும் பயன்படுத்தலாம்.

அல்லது உறுதிப்பூசுதல் அளிக்கும் சடங்கு முறையிலுள்ள வாசகங்களைப் பயன்படுத்தலாம்.

முதல் வாசகம்


தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் பேசத் தொடங்கினார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 2: 1-11

பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது சீடர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவதுபோன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்ந்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத் தொடங்கினார்கள்.

அப்பொழுது வானத்தின் கீழுள்ள அனைத்து நாடுகளிலுமிருந்தும் வந்திருந்த இறைப்பற்றுள்ள யூத மக்கள் எருசலேமில் தங்கியிருந்தனர். அந்த ஒலியைக் கேட்டுக் கூடிய திரளான மக்களுள் ஒவ்வொருவரும் தம் சொந்த மொழிகளில் அவர்கள் பேசக் கேட்டுக் குழப்பமடைந்தனர். எல்லாரும் மலைத்துப்போய், “இதோ பேசுகின்ற இவர்கள் அனைவரும் கலிலேயர் அல்லவா? அவ்வாறிருக்க நம்முடைய தாய்மொழிகளில் இவர்கள் பேசுவதை நாம் ஒவ்வொருவரும் கேட்பது எப்படி?” என வியந்தனர். “பார்த்தரும், மேதியரும், எலாமியரும், மெசப்பொத்தாமியா, யூதேயா, கப்பதோக்கியா, போந்து, ஆசியா ஆகிய நாடுகளில் வாழ்கின்றவர்களும் பிரிகியா, பம்பிலியா, எகிப்து, சிரேன் நகரையடுத்த லிபியாவின் பகுதிகளில் வாழும் மக்களும் உரோமையிலிருந்து வந்து தங்கியிருந்தவர்களும், யூதரும், யூதம் தழுவியோரும், கிரேக்கரும், அரேபியரும் ஆகிய நாம் நம் மொழிகளிலே கடவுளின் மாபெரும் செயல்களை இவர்கள் பேசக் கேட்கிறோமே!” என்றனர்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 104: 1ab,24ac. 29bc-30. 31,34 (பல்லவி: 30) Mp3

பல்லவி: ஆண்டவரே, உம் ஆவியை அனுப்பி, மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.

அல்லது: அல்லேலூயா.
1ab
என் உயிரே! ஆண்டவரைப் போற்றிடு! என் கடவுளாகிய ஆண்டவரே! நீர் எத்துணை மேன்மைமிக்கவர்!
24ac
ஆண்டவரே! உம் வேலைப்பாடுகள் எத்தனை எத்தனை! பூவுலகம் உம் படைப்புகளால் நிறைந்துள்ளது. - பல்லவி

29bc
நீர் அவற்றின் மூச்சை நிறுத்திவிட்டால், அவை மாண்டு மறுபடியும் புழுதிக்கே திரும்பும்.
30
உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன; மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர். - பல்லவி

31
ஆண்டவரின் மாட்சி என்றென்றும் நிலைத்திருப்பதாக! அவர் தம் செயல்களைக் குறித்து மகிழ்வாராக!
34
என் தியானப் பாடல் அவருக்கு உகந்ததாய் இருப்பதாக! நான் ஆண்டவரில் மகிழ்ச்சி கொள்வேன். - பல்லவி

இரண்டாம் வாசகம்

 

நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 12: 3b-7, 12-13

சகோதரர் சகோதரிகளே,

தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டவரன்றி வேறு எவரும் ‘இயேசுவே ஆண்டவர்’ எனச் சொல்ல முடியாது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள் கொடைகள் பலவகை உண்டு; ஆனால் தூய ஆவியார் ஒருவரே. திருத்தொண்டுகளும் பலவகை உண்டு; ஆனால் ஆண்டவர் ஒருவரே. செயல்பாடுகள் பலவகை உண்டு; ஆனால் கடவுள் ஒருவரே. அவரே எல்லாரிடமும் எல்லாவற்றையும் செயல்படுத்துபவர். பொது நன்மைக்காகவே தூய ஆவியாரின் செயல்பாடுகள் ஒவ்வொருவரிலும் வெளிப்படுகிறது.

உடல் ஒன்றே; உறுப்புகள் பல. உடலின் உறுப்புகள் பலவாயினும் உடல் ஒன்றாயிருப்பதுபோல கிறிஸ்துவும் இருக்கிறார். ஏனெனில், யூதரானாலும் கிரேக்கரானாலும், அடிமைகளானாலும் உரிமைக் குடிமக்களானாலும் நாம் எல்லாரும் ஒரே தூய ஆவியால் ஒரே உடலாய் இருக்கும்படி திருமுழுக்குப் பெற்றோம். அந்த ஒரே ஆவியையே பானமாகவும் பெற்றோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.



தொடர்பாடல்

தூய ஆவியே, எழுந்தருள்வீர்
வானினின்றுமது பேரொளியின்
அருட்சுடர் எம்மீதனுப்பிடுவீர்.

எளியவர் தந்தாய், வந்தருள்வீர்,
நன்கொடை வள்ளலே, வந்தருள்வீர்,
இதய ஒளியே, வந்தருள்வீர்.

உன்னத ஆறுதலானவரே,
ஆன்ம இனிய விருந்தினரே,
இனிய தண்மையும் தருபவரே.

உழைப்பில் களைப்பைத் தீர்ப்பவரே,
வெம்மை தணிக்கும் குளிர் நிழலே,
அழுகையில் ஆறுதலானவரே.

உன்னத பேரின்ப ஒளியே,
உம்மை விசுவசிப்போருடைய
நெஞ்சின் ஆழம் நிரப்பிடுவீர்.

உமதருள் ஆற்றல் இல்லாமல்
உள்ளது மனிதனில் ஒன்றுமில்லை,
நல்லது அவனில் ஏதுமில்லை.

மாசு கொண்டதைக் கழுவிடுவீர்.
வறட்சியுற்றதை நனைத்திடுவீர்,
காயப்பட்டதை ஆற்றிடுவீர்.

வணங்காதிருப்பதை வளைத்திடுவீர்,
குளிரானதைக் குளிர் போக்கிடுவீர்,
தவறிப்போனதை ஆண்டருள்வீர்.

இறைவா உம்மை விசுவசித்து,
உம்மை நம்பும் அடியார்க்குக்
கொடைகள் ஏழும் ஈந்திடுவீர்.

புண்ணிய பலன்களை வழங்கிடுவீர்,
இறுதியில் மீட்பும் ஈந்திடுவீர்,
அழிவிலா இன்பம் அருள்வீரே.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! தூய ஆவியே, எழுந்தருளி வாரும், உம்மில் நம்பிக்கை கொண்டோரின் இதயங்களை நிரப்பியருளும், அவற்றில் உமது அன்பின் தீ பற்றியெரியச் செய்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

 

தந்தை என்னை அனுப்பியதுபோல, நானும் உங்களை அனுப்புகிறேன்; தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம் 20: 19-23

அன்று வாரத்தின் முதல் நாள். அது மாலை வேளை. யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடிவைத்திருந்தார்கள். அப்போது இயேசு அங்கு வந்து அவர்கள் நடுவில் நின்று, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக!” என்று வாழ்த்தினார். இவ்வாறு சொல்லியபின் அவர் தம் கைகளையும் விலாவையும் அவர்களிடம் காட்டினார். ஆண்டவரைக் கண்டதால் சீடர்கள் மகிழ்ச்சி கொண்டார்கள்.

இயேசு மீண்டும் அவர்களை நோக்கி, “உங்களுக்கு அமைதி உரித்தாகுக! தந்தை என்னை அனுப்பியது போல நானும் உங்களை அனுப்புகிறேன்” என்றார். இதைச் சொன்னபின் அவர் அவர்கள்மேல் ஊதி, “தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 

 



பெந்தக்கோஸ்தே பெருவிழா


(திப 2: 1-11; 1 கொரி 12: 3b-7, 12-13; யோவா 20: 19-23)

தூய ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்

நீங்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்டுள்ளீர்களா?

நற்செய்தி அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இறுதியில் நியூயார்க்கிலிருந்து இந்தியாவிற்குக் கப்பலில் புறப்பட்டு வந்தவர் ஜான் ஹைட் (John Hyde).

இவர் கப்பலில் வந்துகொண்டிருந்தபோது இவரது நெருகிய நண்பர் சில நாள்களுக்கு முன்பு இவருக்கு எழுதிய ஒரு கடிதத்தைப் படிக்க நேர்ந்தது. அந்தக் கடித்தத்தில், “இந்தியாவிற்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் நீ தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கின்றாயா?” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்ததும், இவர், ‘நான் எவ்வளவு படித்திருக்கின்றேன். தூய ஆவியால் நிரப்பப்பட்டிருக்கின்றாயா? என்று கேட்கின்றானே இவன்’ என்று அந்தக் கடிதத்தைக் கசக்கிப் போட்டார்.

இவர் இந்தியாவிற்கு வந்து நற்செய்தியை அறிவிக்கத் தொடங்கியபோதும் தூய ஆவியின் முக்கியத்துவத்தை உணராமலேயே நற்செய்தி அறிவித்தார். இதனால் மக்கள் நடுவில் எந்தவொரு மாற்றமும் ஏற்படவில்லை. அப்போதுதான் இவர் தூய ஆவியின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். உடனே இவர் கடவுளிடம் தூய ஆவியைத் தன்மீது பொழியுமாறு மன்றாடினார். கடவுளும் இவர்மீது தூய ஆவியைப் பொழியவே வல்லமையோடு இவர் நற்செய்தி அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தார்.

நற்செய்திப் பணியாளரான ஜான் ஹைட் தூய ஆவியைப் பெறும்வரை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை. எப்போது இவர் தூய ஆவியைப் பெற்றுக்கொண்டாரோ, அப்போது இவரால் வல்லமையோடு நற்செய்தியை அறிவிக்க முடிந்தது. இன்று நாம் பெந்தக்கோஸ்தே பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். தூய ஆவியின் வருகை திருஅவையில் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது? இன்று அவர் நமக்கு விடுக்கும் அழைப்பு என்ன? என்பன குறித்து நாம் சிந்திப்போம்.

உள்ளே

புளிப்பற்ற அப்பவிழா, வாரங்கள் விழா, கூடார விழா என முப்பெரும் விழாக்களுக்கு யூதர்கள் ஆண்டுதோறும் எருசலேமிற்குச் செல்ல வேண்டும் (இச 16: 16). புளிப்பற்ற அப்பவிழாவாம் பாஸ்கா விழாவிற்குப் பின் ஐம்பதாம் நாளில் – பெந்தக்கோஸ்து நாளில் – அறுவடை விழாவாம் வாரங்கள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவைக் கொண்டாட யூதர்கள் எருசலேமில் கூடியிருந்தார்கள். அப்போதுதான் இயேசுவின் சீடர்கள்மீது தூய ஆவி இறங்கி வர, அவர்கள் இறைவாக்கு உரைக்கத் தொடங்குகின்றார்கள்.

தூய ஆவி வருவதற்கு முன்பு, சீடர்கள் எப்படி இருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அப்போதுதான் தூய ஆவி அவர்களுக்கு “உள்ளே” எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய முதல் வாசகத்தில், “யூதர்களுக்கு அஞ்சிச் சீடர்கள் தாங்கள் இருந்த இடத்தின் கதவுகளை மூடி வைத்திருந்தார்கள்” என்று வாசிக்கின்றோம். இப்படி யூதர்களுக்கு அஞ்சி வாழ்ந்த சீடர்கள், தூய ஆவியின் வருகைக்குப் பின் துணிவோடு நற்செய்தியை அறிவிக்கிறார்கள். எனில், தூய ஆவி அவர்களுக்கு உள்ளே துணிவையும் ஆற்றலையும் வல்லமையும் தந்திருக்கின்றார் என்று உறுதியாகச் சொல்லலாம்.

வெளியே

தூய ஆவி சீடர்களுக்கு உள்ளே மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், வெளியேயும் - மக்களிடையேயும் - மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தினார்.

பெந்தக்கோஸ்தே நாளில் எருசலேமிற்குப் பல நாடுகளிலிருந்தும் மக்கள் வந்திருந்தார்கள். அவர்கள் அடிப்படையில் யூதர்களாக இருந்தாலும், பல்வேறு காரணங்களால் பல இடங்களுக்குச் சிதறுண்டு போனார்கள். இவர்கள் தூய ஆவியால் நிரப்பப்பட்ட இயேசுவின் சீடர்கள் இறைவாக்கு உரைக்கின்றபோது, தத்தம் மொழியிலேயே கேட்கின்றார்கள்; இயேசுவை நம்பி ஏற்றுக் கொள்கின்றார்கள். இது தூய ஆவி “வெளியே” செய்த மிகப்பெரிய மாற்றமாகும்.

தொடக்க நூலில், மக்கள் பாபேல் கோபுரத்தைக் கட்டி எழுப்பும்போது, கடவுள் கீழே இறங்கிச் சென்று, ஒருவர் மற்றவரின் பேச்சைப் புரிந்துகொள்ள முடியாதபடி, அவர்கள் மொழியில் குழப்பத்தை உண்டாக்குவதைப் பற்றி வாசிக்கின்றோம் (தொ 11:7). காரணம், அவர்கள் கடவுளின் கட்டளைப்படி நடக்காமல், அதாவது உலகம் முழுவதும் சிதறுண்டு போய் மண்ணுலகை நிரப்பாமல் இருந்தார்கள். பெந்தக்கொஸ்தே நாளில் வந்தவர்களோ, ஒருவகையில் கடவுளின் கட்டளைப்படி சிதறுண்டு போனவர்கள். இதனால் அவர்கள் திருத்தூதர் பேசியதைத் தத்தம் மொழியிலேயே கேட்கும் ஆற்றலைப் பெறுகின்றார்கள். அதன்மூலம் இயேசுவை நம்பி ஏற்றுக்கொள்கின்றார்கள.

மேலே

தூய ஆவி சீடர்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தார். அத்தோடு அவர் இன்னொரு மாற்றத்தையும் கொண்டு வந்தார். அதுதான் மக்களின் உள்ளங்களை மேலே எழுப்பியது.

இயேசு தம் சீடர்களை விட்டுப் பிரிந்து செல்வதற்கு முன்பாக அவர்களிடம், “உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் உங்களை முழு உண்மையை நோக்கி வழி நடத்துவார்” (யோவா 16: 13) என்று சொல்லியிருப்பார். இங்கே இயேசு சொல்கின்ற முழு உண்மை என்பது அவரையும், அவரது படிப்பினையும் குறிக்கின்றது. இயேசுவின் படிப்பினை என்ன என்பதைப் பற்றி இன்றைய இரண்டாம் வாசகத்தில் பவுல் தெளிவுபடுத்துகின்றார்.

கொரிந்து நகரில் இருந்த ‘இறைமக்கள்’ பல்வேறு காரணங்களால் பிரிந்து கிடந்தார்கள். அதைவிடவும் தூய ஆவி அவர்களுக்கு அருளிய கொடைகளைப் பொது நலத்திற்காகப் பயன்படுத்தாமல், தங்களுடைய நலனுக்காகப் பயபடுத்தினார்கள். இதையறிந்த பவுல் அவர்களிடம் கிறிஸ்து என்னும் உடலில் நீங்கள் உறுப்புகளாய் இருக்கின்றீர்கள் என்று சொல்லிவிட்டு, உங்களிடையே பிளவுகள் வேண்டாம் என்கிறார்; தூய ஆவி அருளும் கொடைகளைப் பொது நன்மைக்காகப் பயன்படுத்துங்கள் என்கின்றார். பவுல் கூறும் இவ்வார்த்தைகள் மூலம் தூய ஆவி ஒருவரை இம்மண்ணுலகு சார்ந்த வாழ்க்கை வாழாமல், மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ அழைக்கின்றார் என்பது தெளிவாகின்றது.

இன்று பலர் தன்னலச் சேற்றிலும், இம்மண்ணுலக வாழ்க்கையே பெரிது என்ற எண்ணத்திலும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் தூய ஆவியாரால் ஆட்கொள்ளப்பட, தங்களையே அவர்கள் கடவுளிடம் ஒப்படைக்கவேண்டும். தூய ஆவியாரால் வழிநடத்தப்படுகின்ற ஒருவரே கடவுளின் மகனாக, மகளாக முடியும் (உரோ 8:14); அவர் அளிக்கும் ஆசிகளைப் பெற முடியும்.

எனவே, நாம் கடவுளின் ஆவியால் இயக்கப்பட்டு அவரது மக்களாவோம்; அவர் தரும் ஆசிகளைப் பெறுவோம்.

சிந்தனைக்கு

மூச்சுத் திணறல் நோய் எனப்படும் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவர் காற்று இல்லாதபோது மிகவும் துன்பப்படுவார். காற்று வடிவில் வந்த தூய ஆவியார் நம் நடுவில் இல்லாமல் போனாலும், நாம் மிகவும் துன்புறவேண்டும். ஆகையால், நாம் தூய ஆவியாரின் தூண்டுதலுக்கேற்ப நம்மிடம் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter