maraikal
MUM
"

 

                             பொதுக்காலம் 27ம் ஞாயிறு - 3ம் ஆண்டு

முதல் வாசகம்

நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இறைவாக்கினர் அபக்கூக்கு நூலிலிருந்து வாசகம் 1: 2-3; 2: 2-4

ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணைவேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்?

கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன.

ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: " காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரே உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



பதிலுரைப் பாடல்

திபா 95: 1-2. 6-7. 8-9 (பல்லவி: 8b) Mp3

பல்லவி: உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

1 வாருங்கள்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடுங்கள்; நமது மீட்பின் பாறையைப் போற்றி ஆர்ப்பரியுங்கள். 2 நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்; புகழ்ப்பாக்களால் அவரைப் போற்றி ஆர்ப்பரிப்போம். பல்லவி

6 வாருங்கள்; தாள்பணிந்து அவரைத் தொழுவோம்; நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன் முழந்தாளிடுவோம். 7 அவரே நம் கடவுள்; நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்; நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள். இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்! பல்லவி

8 அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில் மாசாவிலும் செய்தது போல், உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள். 9 அங்கே உங்கள் மூதாதையர் என்னைச் சோதித்தனர்; என் செயல்களைக் கண்டிருந்தும் என்னைச் சோதித்துப் பார்த்தனர். பல்லவி



இரண்டாம் வாசகம்

நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்து வெட்கமடையத் தேவை இல்லை.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து வாசகம் 1: 6-8, 13-14

அன்பிற்குரியவரே, உன்மீது என் கைகளை வைத்துத் திருப்பணியில் அமர்த்தியபோது உனக்குள் எழுந்த கடவுளின் அருள்கொடையினைத் தூண்டி எழுப்புமாறு நினைவுறுத்துகிறேன்.

கடவுள் நமக்குக் கோழை உள்ளத்தினை அல்ல, வல்லமையும் அன்பும் கட்டுப்பாடும் கொண்ட உள்ளத்தையே வழங்கியுள்ளார்.

எனவே நம் ஆண்டவருக்கு நீ சான்று பகர்வதைக் குறித்தோ அவர் பொருட்டு நான் கைதியாக இருப்பதைக் குறித்தோ வெட்கமடையத் தேவை இல்லை; கடவுளின் வல்லமைக்கேற்ப நற்செய்தியின் பொருட்டுத் துன்பத்தில் என்னுடன் பங்குகொள்.

கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக்கொள்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.



நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

1 பேது 1: 25

அல்லேலூயா, அல்லேலூயா! நம் ஆண்டவரின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கும். இவ்வார்த்தையே உங்களுக்கு அறிவிக்கப்பட்ட நற்செய்தி. அல்லேலூயா.



நற்செய்தி வாசகம்

கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால்...

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 5-10

அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், " எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள்.

அதற்கு ஆண்டவர் கூறியது: " கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, `நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும்.

உங்கள் பணியாளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல்வெளியிலிருந்து வரும்போது அவரிடம், `நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல்வாரா?

மாறாக, `எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும்வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வாரல்லவா?

தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ?

அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், `நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

I அபகூக்கு 1: 2-3, 2: 2-4

II 2 திமொத்தேயு 1: 6-8, 13-14

III லூக்கா 17: 5-10


' என் கடன் பணிசெய்து கிடப்பதே'

நிகழ்வு

இந்திய விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்திருந்த சமயம். ஆங்கிலேய அரசாங்கத்திற்கு எதிராகக் கலகம் செய்ததாக 46 இந்தியர்கள் கைதுசெய்யப்பட்டு, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டார்கள். அவர்கள் சார்பாக வழக்குரைஞர் ஒருவர் பேச்சில் அனல் பறக்க வாதித்துக் கொண்டிருந்தார். நடுவில் அந்த வழக்குரைஞரின் உதவியாளர் அவரிடம் வந்து, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொடுத்துவிட்டுப் போனார். அதை வாசித்துப் பார்த்த வழக்குரைஞர் ஒரு கணம் அதிர்ந்துபோனார். பின்னர் அவர் அந்தத் துண்டுக் காகிதத்தை தான் அணிந்திருந்த சட்டைப் பைக்குள் வைத்துவிட்டு, அந்த 46 இந்தியர்கட்காக வாதிட்டார். வழக்கின் முடிவில் அந்த 46 இந்தியர்களும் நிரபராதிகள் என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.


தீர்ப்பு வழங்கப்பட்ட பின் வழக்காடிய வழக்குரைஞரிடம் வந்த அந்த (ஆகிலேய) நீதிபதி அவரிடம், ' குற்றம் சுமத்தப்பட்ட இந்த 46 இந்தியர்கட்காக நீங்கள் வாதாடும்போது, நடுவில் உங்களுடைய உதவியாளர் கொண்டுவந்து கொடுத்த துண்டுக் காகிதத்தைப் படித்ததும் ஒரு கணம் நீங்கள் அதிர்ந்துபோனீர்களே! அதில் என்ன எழுதியிருந்தது?” என்றார். ' அதுவா! என்னுடைய மனைவி இறந்துவிட்டார் என்ற செய்தி” என்றார் அந்த வழக்குரைஞர். ' என்ன உங்களுடைய மனைவி இறந்துவிட்டார்களா...? உங்களுடைய மனைவி இறந்த செய்தியை அறிந்தும், நீங்கள் ஏன் வழக்கை அப்படியே விட்டுவிட்டு பாதியிலேயே சென்றிருக்கக்கூடாது...? என்றார் நீதிபதி.


' நீங்கள் சொல்வதுபோன்று இந்த வழக்கைப் பாதியிலேயே விட்டுவிட்டுப் போயிருந்தால் இறந்துபோன என் மனைவி திரும்பக் கிடைத்துவிடுவாளா...? இல்லைதானே! ஆனால், நான் அங்கு செல்லாமல் இருந்தால், அநியாயமாகக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் இந்த 46 இந்தியர்களையும் தூக்குத் தண்டனையிலிருந்து மீட்க முடியும். அதனால்தான் என்னுடைய மனைவியின் இறப்புச் செய்தியை அறிந்தபின்னும் வீட்டுக்குப் போகாமல், இங்கேயே இருந்து, இவர்கட்காக வாதிட்டேன்” என்றார். இதைக் கேட்ட அந்த ஆங்கிலேயே நீதிபதி, ' இப்படியெல்லாம் கடமை உணர்வோடு மனிதர்கள் இருப்பார்களா! என்று வியந்து நின்றார். தன்னுடைய மனைவி இறப்புச் செய்தியை அறிந்தபின்னும் 46 இந்தியர்கட்காக வாதித்த அந்த வழக்குரைஞர் வேறு யாருமல்ல, இந்தியாவின் இரும்பு மனிதர் என அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல்தான்!


நாம் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளை யாருடைய பாராட்டுக்காகவும் இல்லாமல், பிறர் நலனுக்காக (இறைவனின் மகிமைக்காகக்) கடமை உணர்வோடு செய்யவேண்டும் என்ற உண்மையை உணர்த்தும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. பொதுக்காலத்தின் இருபத்து ஏழாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், கடமையுணர்வோடு இறையாட்சிப் பணியையும் நம்மிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கும் பணியினையும் செய்யவேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.


பிரதிபலன் பாராது பணிசெய்யவேண்டும்


இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில், இயேசு பயனற்ற பணியாளர் உவமையைச் சொல்கிறார். இவ்வுவமையில் வருகின்ற பணியாளர் வயலில் உழுதுவிட்டோ, மந்தையை மேய்த்துவிட்டோ வருகின்றபோது, அவருடைய தலைவர் அவரிடம், ' உணவருந்த அமரும்' என்று சொல்லவில்லை. மாறாக, அவர் அவரிடம், ' எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்... எனக்குப் பணிசெய்யும்' என்றுதான் சொல்கின்றார்; அந்தப் பணியாளர் செய்த பணிக்காகத் தலைவர் அவர்க்கு நன்றி கூறவில்லை. நீங்களும் அந்தப் பணியாளரைப் போன்று இருங்கள் என்கின்றார் இயேசு.


உவமையில் வருகின்ற பணியாளர் செய்கின்ற பணிகளாக இயேசு, உழுவதையும் மந்தையை மேய்ப்பதையும் குறிப்பிடுகின்றார். இந்த இரண்டு பணிகளும் நற்செய்திப் பணியோடு தொடர்புடையவை. எப்படி என்றால், உழவர் உழுது விதைகளை விதைத்து, பின்னர் அறுவடை செய்கின்றார். அதுபோன்று நற்செய்திப் பணியாளர் ஆண்டவருடைய வார்த்தையை மனிதர்களுடைய உள்ளம் என்று நிலத்தில் விதைக்கின்றார்.


மேலும் மந்தையை மேய்ப்பவர், தன்னுடைய மந்தைக்குத் தேவையானதைச் செய்துதந்து, அதனை முன்னின்று வழிநடத்தி, நல்லாயனைப் போன்று விளங்குகின்றார். அவரைப்போன்று இயேசுவின் சீடரும் ஆயனைப் போன்று இருந்து, மக்களைப் பேணிவளர்க்க வளர்க்கின்றார் (யோவா 21: 15-17). அப்படியென்றால், உவமையில் வருகின்ற பணியாளர் எப்படி தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் அது தன்னுடைய கடமை என்ற உணர்வோடு செய்கின்றாரோ, அதுபோன்று நற்செய்தியை அறிவிகின்றவரும் மந்தையை மேய்க்கிறவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை தலைவராகிய ஆண்டவரின் பாராட்டையோ நன்றியையோ எதிர்பாராமல் தன்னுடைய கடமை என்ற உணர்வோடு செய்யவேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், எந்தவொரு பிரதிபலனையும் எதிர்பாராமல் இறைவனுக்குப் பணிசெய்யவேண்டும் என்கின்றார் இயேசு


அன்போடு பணிசெய்யவேண்டும்


இயேசு தன்னுடைய சீடர்கள் யாவரும், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடமையுணர்வோடு செய்யவேண்டும் என்று சொன்னதை ' கடமைக்காகச் செய்வது' என்றோ, ' அடிமை மனோபாவத்தோடு செய்வது' என்றால் நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. இன்றைக்குப் பலர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணிகளை கடமைக்காக ஏனோதானோ என்று செய்கின்ற போக்கானது நிலவிக்கொண்டிருக்கின்றது. இது இயேசுவின் சீடர்களிடமிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டியதொன்றாக இருக்கின்றது. மேலும் ஒருசிலர் தங்களை அடிமை என கருதிக்கொண்டு பணிசெய்கின்ற போக்கையும் காணமுடிகின்றது. இதுவும் தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாக இருக்கின்றது. இயேசுவின் சீடர்கள் கடமைக்காகவோ அல்லது அடிமை மனபாவத்தோடோ அல்ல, அன்போடு அல்லது உளமாரப் பணிசெய்ய வேண்டும்.


புனித பவுல் இதைத்தான், ' கிறிஸ்துவின் பணியாளர்களாய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுங்கள்” (எபே 6:6) என்று குறிப்பிடுகின்றார். கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்ற வேண்டும் என்றால், அதற்கு கடவுளின்மீது/ இயேசுவின்மீது நமக்கு உண்மையான அன்பு இருக்கவேண்டும். ஏனென்றால் இயேசுவின்மீது உண்மையான அன்பு கொண்டிருப்பவரால் மட்டுமே, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க (யோவா 14: 15) முடியும்; அதன்மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியையும் அடைய முடியும் (திபா 40: 8). இயேசுவின் பணியை அல்லது கடவுளின் திருவுளத்தை கடமைக்காகவும் அடிமை மனோபாவத்தோடும் செய்தால், அங்கு மகிழ்ச்சி இருப்பதற்கு வாய்ப்பே இல்லை


இயேசுவைப் போன்று பணிசெய்ய வேண்டும்


கடவுளின் பணியை உளமாரச் செய்யவேண்டும் என்பதை இதுவரையில் பார்த்தோம். அதை வேறுசொற்களில் சொல்லவேண்டும் என்றால், நாம் செய்யும் பணியை இயேசுவைப் போன்று செய்யவேண்டும் என்று சொல்லலாம்.


இயேசு கடவுள் தன்மையில் விளங்கியபோதும், அதை வலிந்து பற்றிக் கொண்டிருக்காமல், தம்மையே வெறுமையாக்கி மனிதரானார் (பிலி 2: 6-7) மட்டுமல்லாமல், தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவே வந்தேன் (மாற் 10: 45) என்று சொல்லி, சீடர்களின் காலடிகளைக் கழுவி, அவர்களையும் அவ்வாறு இருக்கச் சொல்கின்றார் (யோவா 13: 14). இதுதான் நாம் இயேசுவிடமிருந்து கற்கவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், இயேசு இறைப்பணியை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடா செய்யவில்லை. மாறாக அவர் அதை உளமாரச் செய்தார். ஆகையால், இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் ஒவ்வொருவரும் நமக்குப் பணிக்கப்பட்ட பணிகளை உளமாரவும் அன்போடும் செய்யவேண்டும். அதன்மூலம் இயேசு விரும்பும் நல்ல சீடர்களாக, பணியாளர்களாக மாறவேண்டும்.


சிந்தனை


' மனிதராகப் பிறந்தவர்க்கு எவ்வளவோ நற்பேறுகள் – பாக்கியங்கள் – உண்டு. அந்த நற்பேறுகளில் எல்லாம் தலைசிறந்த பேறு பிறருக்குப் பணி – சேவைசெய்வதே' என்பார்கள் பெரியோர். ஆகையால், நாம் இறைவனுக்கும் அவருடைய மக்களுக்கும் பணிசெய்வதையே மிகப்பெரிய பேறாக நினைத்து வாழ்வோம். மேலும் அதை கடமைக்காகவோ அல்லது அடிமை மனோபாவத்தோடோ செய்யாமல் உளமாரவும் உள்ளார்ந்த அன்போடும் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
 
Free Blog Widget
Stats Counter
hit counter