கிறிஸ்துமஸ்
மரம் தோன்றிய வரலாறு.! |
கிறிஸ்துமஸ் தாத்தா, அவர் தரும் கிறிஸ்துமஸ் பரிசு, கிறிஸ்துமஸ்
ஸ்டார், கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டை, கிறிஸ்துமஸ் குடில், கிறிஸ்துமஸ்
கேக் போலவே கிறிஸ்துமஸ் மரமும் கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டத்தின்
முக்கிய அங்கமாக மாறிவிட்டது. அதன் வரலாறோ மிகவும் சுவையானது.
ஜெர்மனியில் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் புனித போனிபேஸ் என்ற
பாதிரியார். கிறிஸ்தவ மக்கள் மத்தியில் பல மூடநம்பிக்கைகள் இருந் ததாகச்
சாடியும் எதிர்த்தும் வந்தவர்.
ஊர் ஊராகச் சென்று மதப் பிரச்சாரம் செய்து வந்த அவர், ஓக் மரம் ஒன்றை
மக்கள் வழிபடுவதைக் கண்டார். அச்செயலைக் கண்டு கடுங்கோபம் கொண்ட அவர்,
அந்த மரத்தை வெட்டி வீழ்த்தினார். அந்த மரம் மீண்டும் துளிர்த்துவிடாமல்
இருக்க அந்த மரத்தின் வேர்ப்பகுதியையும் அங்கிருந்து பெயர்த்தெடுத்து
அப்புறப்படுத்தினார்.
ஆனால் மரம் இருந்த அதே இடத்திலிருந்து அடுத்த சில தினங்களிலேயே ஓக் மரக்
கன்று முளைத்து விறுவிறுவென்று வளர்ந்து ஓராண்டு காலத்துக்குள்ளாக
முன்பிருந்த மரத்தைப்போலவே கம்பீரமாக எழுந்து நின்றதைக் கண்ட மக்கள்,
அதை இயேசு உயிருடன் மீண்டெழுந்த உயிர்த்தெழுதலின் அடையாளமாக பார்க்கத்
தொடங்கினார்கள்.
பாதிரியார் போனிபேஸ் தனது ஊழியத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அவ்வழியே
திரும்பியபோது தாம் வெட்டிப்போட்ட இடத்தில் புதிய மரத்தைக் கண்டு வியந்து
அதனடியில் முழந்தாளிட்டு ஜெபிக்கத் தொடங்கினார். இதனால் கிறிஸ்தவ
வழிபாட்டில் பத்தாம் நூற்றாண்டில் ஓக் மரம் உயிர்ப்பின் அடையாளமாக இடம்பெறத்
தொடங்கியது.
சுமார் ஆயிரத்து ஐநூறாம் ஆண்டு மார்ட்டின் லூத்தர் கிங் ஒரு கிறிஸ்மஸ்
காலப் பனி நாளில் நடந்து செல்கையில் சிறு சிறு பச்சை மரங்களின் மீது
படர்ந்திருந்த பனி வெளிச்சத்தில் பிரமிக்க வைக்கும் அழகுடன் ஒளிர்வதைக்
கண்டார்.
உடனே ஒரு ஃபீர் மரத்தை எடுத்து அதை மெழுகுவர்த்திகளால் அலங்கரித்து அதைக்
கிறிஸ்து பிறப்பு விழாவில் பயன்படுத்தினார். அன்றிலிருந்து கிறிஸ்மஸ்
விழாக்களில கிறிஸ்மஸ் மரம் இடம் பெற்றது என்றும் சொல்கிறார்கள்.
ஜெர்மானியர்கள் தான் கிறிஸ்மஸ் மரத்தை முதலில் வீடுகளுக்குள்ளும் அனுமதித்தவர்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டுகளில் கிறிஸ்மஸ் மரங்கள் தலைகீழாகக் கட்டித்
தொங்கவிடப்பட்டு விழாக்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
இங்கிலாந்து அரசி விக்டோரியா அடிக்கடி ஜெர்மனி நாட்டுக்குப் பயணம் செய்வதுண்டு.
அப்படிப்பட்ட பயணங்கள் அவருக்கு ஜெர்மனிநாட்டு இளைஞர் இளவரசர் ஆல்பர்ட்
டுடன் காதலை வளர்த்தன. திருமணம் செய்துகொண்ட இருவரும் இங்கிலாந்து
திரும்பினார்கள். 1841ல் அரசர் ஆல்பர்ட் ஒரு அலங்காரம் செய்த மரத்தை இங்கிலாந்திலுள்ள
விண்ட்ஸர் மாளிகையில் வைத்து விழா கொண்டாடினார். அதுவே கிறிஸ்மஸ் மரத்தின்
இங்கிலாந்து பிரவேசம் என்ற கதையும் உண்டு.
கிறிஸ்மஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தைக் கொண்டிருப்பது
கிறிஸ்மஸ் மரத்தின் சிறப்பம்சம். அதேபோல கிறிஸ்மஸ் மரத்தின் முக்கோண வடிவம்
தந்தை, மகன், தூய ஆவி எனும் இயேசுவின் மூன்று பரிமாணங்களைக் குறிப்பதாகவும்
எனவே இயேசு மனிதம் உருவான நாளை மரத்தை அலங்கரிப்பதன் மூலம் கொண்டாடுவது
அதிக அர்த்தமுடையது என்றும் கிறிஸ்தவ விளக்கங்கள் பரிமாறப்படுகின்றன.