maraikal
MUM
"

 

                      பொதுக்காலம் 25 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்
இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்.

இறைவாக்கினர் ஆகாய் நூலிலிருந்து வாசகம் 2: 1-9

தாரியு அரசனது இரண்டாம் ஆட்சியாண்டின் ஏழாம் மாதத்தின் இருபத்தோராம் நாளன்று, ஆண்டவரின் வாக்கு இறைவாக்கினர் ஆகாய் வாயிலாக அருளப்பட்டது: ``யூதாவின் ஆளுநரும் செயல்தியேலின் மகனுமாகிய செருபாபேலிடமும் தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவிடமும் மக்களுள் எஞ்சியிருப்போர் அனைவரிடமும் இப்பொழுது நீ போய் இவ்வாறு சொல்: `இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியைக் கண்டவர் எவராகிலும் உங்களிடையே இன்னும் இருக்கின்றனரா? இப்போது இது உங்களுக்கு எக்கோலத்தில் தோன்றுகிறது? இது உங்கள் பார்வையில் ஒன்றும் இல்லாதது போல் தோன்றுகிறது அல்லவா? ஆயினும் செருபாபேலே! மன உறுதியோடு இரு,' என்கிறார் ஆண்டவர்.

`தலைமைக் குருவும் யோசதாக்கின் மகனுமாகிய யோசுவாவே! மன உறுதியோடு இரு; நாட்டிலுள்ள அனைத்து மக்களே, ஊக்கம் கொள்ளுங்கள்; பணியைத் தொடருங்கள்; ஏனெனில் நான் உங்களோடு இருக்கிறேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.''

``நீங்கள் எகிப்தினின்று புறப்பட்டு வந்த போது உங்களுக்கு நான் அளித்த வாக்குறுதியின்படி, உங்கள் நடுவில் எனது ஆவி நிலைகொண்டிருக்கிறது; அஞ்சாதீர்கள்.

ஏனெனில் படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே: `இன்னும் சிறிது காலத்தில் நான் விண்ணுலகையும், மண்ணுலகையும், கடலையும் பாலை நிலத்தையும் நடுக்கமுறச் செய்வேன். வேற்றினத்தார் அனைவரையும் நிலைகுலையச் செய்வேன். அப்போது வேற்றினத்தார் அனைவரின் விருப்பத்திற்குரியவைகளும் இங்கு வந்து சேரும்; இந்தக் கோவிலை நான் மாட்சியால் நிரப்புவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர். `வெள்ளி எனக்கு உரியது, பொன்னும் எனக்கு உரியது', என்கிறார் படைகளின் ஆண்டவர்.

`இந்தக் கோவிலின் முன்னைய மாட்சியை விடப் பின்னைய மாட்சி மிகுதியாய் இருக்கும்', என்கிறார் படைகளின் ஆண்டவர். `இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்' என்கிறார் படைகளின் ஆண்டவர்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 43: 1. 2. 3. 4 (பல்லவி: 5bc) Mp3

பல்லவி: கடவுளின் மீட்புச் செயல்களுக்காக அவருக்கு நன்றி செலுத்துவேன்.

1 கடவுளே, என் நேர்மையை நிலைநாட்டும்; இறைப் பற்றில்லா இனத்தோடு என் வழக்குக்காக வாதிடும்; வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த மனிதர் கையினின்று என்னை விடுவித்தருளும். பல்லவி

2 கடவுளே! நீரே என் ஆற்றல்; ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்? எதிரியால் ஒடுக்கப்பட்டு, நான் ஏன் துயருடன் நடமாட வேண்டும்? பல்லவி

3 உம் ஒளியையும் உண்மையையும் அனுப்பியருளும். அவை என்னை வழி நடத்தி, உமது திருமலைக்கும் உமது உறைவிடத்திற்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும். பல்லவி

4 அப்பொழுது, நான் கடவுளின் பீடம் செல்வேன்; என் மன மகிழ்ச்சியாகிய இறைவனிடம் செல்வேன்; கடவுளே! என் கடவுளே! யாழிசைத்து ஆர்ப்பரித்து உம்மைப் புகழ்ந்திடுவேன். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மாற் 10: 45

அல்லேலூயா, அல்லேலூயா! மானிட மகன் தொண்டு ஆற்றுவதற்கும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22

அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர்.

அப்போது அவர்களிடம் ``நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?'' என்று அவர் கேட்டார்.

அவர்கள் மறு மொழியாக, ``சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள்.

``ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார்.

பேதுரு மறுமொழியாக, ``நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார்.

இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.

மேலும் இயேசு, ``மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்'' என்று சொன்னார்.

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

சிந்தனை

லூக்கா 9: 18-22

நான் யார்?

நிகழ்வு

          பிறந்ததிலிருந்து காடுகளிலேயே வளர்ந்துவந்த மனிதர் ஒருவர், திடீரென்று ஒருநாள் ஒரு சிறு நகருக்குள் நுழைந்தார். நகருக்குள் நுழைந்த அவர்க்கு எல்லாமே வித்தியாசமாகத் தோன்றின. மனிதர்கள் விதவிதமான ஆடைகள் உடுத்தியிருப்பதையும் அவர்கள் பேசும்  மொழி வித்தியாசமாக இருப்பதையும் கண்டு அவர்களை அவர் ஆச்சரியமாகப் பார்த்தார். பின்னர் அவர் அங்கிருந்த கடைகளில் ஏறி இறங்கினார்; தன்னுடைய பார்வையில் தென்பட்ட பொருள்களை எல்லாம் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் இவ்வாறு நடந்துகொள்வதை   மக்கள் அவரை வித்தியாசமாகப் பார்த்தார்கள்.

இப்படியே நேரம் கடந்துகொண்டிருக்க, அவர்க்கு ஓர் ஐயம் எழுந்தது. ‘பார்ப்பதற்கு எல்லாரும் ஒன்றுபோல் இருக்கின்றார்கள். இவர்களிடமிருந்து நான் வித்தியாசமாக இருக்காவிட்டால், என்னை நான் எப்படி அடையாளம் கொள்வது?’ இதுதான் அவருடைய உள்ளத்தில் எழுந்த ஐயமாகும். எனவே அவர், ‘மற்றவர்களிடமிருந்து நான் என்னை வித்தியாசப்படுத்திக் கொள்வதற்கு என்ன செய்வது?’ என்று சிந்திக்கத் தொடங்கினார். எனவே, அவர் அவருடைய பார்வையில் தென்பட்ட ஒரு சிவப்பு நிற  பாலூனை வாங்கித் தன் காலில் மாட்டிக்கொண்டு ஒரு கடையின் முன்பக்கம் போடப்பட்டிருந்த டேபிளுக்கு அடியில் படுத்துத் தூங்கத் தொடங்கினார்.

அந்த மனிதர் செய்துவந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் கவனித்து வந்த அந்த நகரில் இருந்த ஒரு குறும்புக்கார இளைஞன், அந்த மனிதர் தன்னுடைய காலில் கட்டியிருந்த பாலூனைக் கழற்றித் தன்னுடைய காலில் மாட்டிக்கொண்டு, தன்னுடைய வீட்டுக்குக் கிளம்பிப் போனான்.

அடுத்த நாள் காலையில், காட்டிலிருந்து வந்த அந்த மனிதர், தன்னுடைய காலில் கட்டியிருந்த பலூன் இல்லாததைக் கண்டு அதிர்ந்துபோனார். ‘என்னுடைய காலில் பாலூன் இல்லையே! அப்படியென்றால் இது நான் கிடையாதா...? நான் எங்கு போனேன்...? எங்கே நான் ஓடி ஒளிந்தேன்...? என்று அவர் தன்னைத் தேடத் தொடங்கினார்.

கார்லோஸ் வல்லஸ் (Carlos Valles) என்ற எழுத்தாளர் சொல்கின்ற இந்த வேடிக்கையான நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் தாங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பதைத் தெரியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தியில் இயேசு தன் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்ற, “நான் யார்?” என்ற கேள்வி நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. எனவே, நாம் அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்த்து நிறைவுசெய்வோம்.

இயேசு தான் யாரென்று அறியாதகொள்ள விரும்புகிறாரா?  

          நற்செய்தியில் இயேசு தன் சீடர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கின்றார்கள்?” “நான் யார் என நீங்கள் சொல்கிறீர்கள்?” என்ற இரண்டு கேள்விகளைக் கேட்கின்றார். இவ்விரு கேள்விகளையும் இயேசு தன் சீடர்களிடம் ஏன் கேட்கின்றார்...? அதற்கு அவர்கள் பதிலென்ன...? என்பவை பற்றிச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது.

இயேசு எழுப்புகின்ற இக்கேள்விகளை அவர் தன்னைக் குறித்து அறிந்துகொள்வதற்காகக் கேட்கின்றாரா? என்றால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இயேசு, இன்றைக்கு இருக்கும் ஒருசிலரைப் போன்று தன்னைக் குறித்து அறியாதவர் அல்ல, அவர் தான் யார்? எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன்? என்பதை முற்றிலுமாக அறிந்து வைத்திருந்தார். அப்படியிருந்தும் அவர் ஏன் இக்கேள்விகளைக் கேட்கவேண்டும்? தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.

இயேசு தான் எவ்வளவு பெரிய ஆள் என்பதைக் காட்ட விரும்புகின்றாரா?

ஒருசிலர் இருக்கின்றார்கள். அவர்கள் எப்போதும் தங்களுடைய அதிகாரத்தையும் பணபலத்தையும் காட்ட விரும்பி, ‘நான் யார் தெரியுமா?’ என்று கேட்பார்கள். இயேசு தன் சீடர்களிடம் கேட்கின்ற கேள்வி அப்படிப்பட்டதா? நிச்சயமாக இல்லை. அப்படியானால் இயேசு இக்கேள்விகளை ஏன் தன் சீடர்களிடம் கேட்க வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது.  அதற்கான பதிலை இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்

தான் யார் என்பதை சீடர்கள் உணர்ந்திருக்கின்றார்களா என்பதையறிய விரும்பிய இயேசு

          இயேசு இக்கேள்வியைக் கேட்டதன் முதன்மையான நோக்கம் தன்னைக் குறித்து அறிந்து கொள்ளவோ தான் எவ்வளவு பெரியவர் என்பதை வெளிப்படுத்தவோ அல்ல. மாறாக, தன்னோடு இருந்த சீடர்கள் தன்னைக் குறித்து அறிந்திருக்கின்றார்களா என்று தெரிந்துகொள்ளத்தான் இயேசு இப்படியொரு கேள்வியைக் கேட்டார்.  இயேசு கேட்ட இக்கேள்விக்கு சீமோன் பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்று சொன்னதும், இயேசு அவரிடம், ‘இதை யார்க்கும் சொல்லவேண்டாம்’ என்று சொல்கின்றார்.

இயேசு பேதுருவிடம் இவ்வாறு சொல்வதற்குக் காரணம், அவரும் மற்ற சீடர்களும்  ஏனைய யூதர்களைப் போன்று இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாக, அருமடையாளங்கள் நிகழ்த்துபவராகப் புரிந்துவைத்திருந்தார்கள். அதனால்தான் அவர் பேதுருவிடம் யார்க்கும் சொல்லவேண்டாம் என்று சொல்கின்றார். இதற்குப் பின் இயேசு தன் சீடர்களிடம், தான் அரசியல் மெசியா அல்ல, துன்புறும் ஊழியன் என்பதை எடுத்துக் கூறுகின்றார்.

இயேசுவின் சீடர்கள் அவரைக் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அவரை அடுத்தவர்க்கு நல்லமுறையில் அறிவிக்க முடியும். நாம் இயேசுவைக் குறித்து முழுமையாக அறிந்து வைத்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை 

‘ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்’ (திபா 34: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். நாம் இயேசுவை முழுமையாய் அறிந்து, அதை மற்றவர்க்கு அறிவிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   

ஆகாய் 2: 1-9

“இந்த இடத்தில் நான் உனக்குக் நலம் நல்குவேன்”


நிகழ்வு

           ‘ஒருநாள் முதல்வர்’ மாதிரி, அமெரிக்காவில் ‘ஒருநாள் மட்டும் அதிபராக’ ஒருவர் இருந்தார். அவர் யார் என்றும் அவர் ஏன் ஒருநாள் மட்டும் அதிபராக இருந்தார் என்பதையும் உங்களிடம் சொல்கின்றேன். கேளுங்கள்.

அமெரிக்காவின் பதினோறாவது அதிபராக இருந்தவர் ஜேம்ஸ் போக் (James Polk). இவர் அமெரிக்க அதிபராக 1845 ஆம் ஆண்டு, மார்ச் 4 ஆம் நாள் முதல் 1849 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் நாள் வரை இருந்தார். மார்ச் 3 ஆம் நாள் சனிக்கிழமை; அன்று அவருடைய அதிபர் பதவிக்காலத்தின் இறுதிநாள். அடுத்த நாள் மார்ச் 4 அன்று, ஜக்கரி டெய்லர் என்பவர் புதிய அதிபராகப் பதவி ஏற்க வேண்டும். ஆனால், மார்ச் 4 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜக்கரி டெய்லர், ‘எனக்கு அதிபர் பதவியை விட கோவிலுக்குச் சென்று வழிபாட்டில் கலந்துகொள்வதுதான் பெரிது. அதனால் மார்ச் 5 நாம் நாள் திங்கட்கிழமை வைத்துகொள்ளலாம்” என்று சொல்லிவிட்டார்.

இதைத் தொடர்ந்து ‘ஒருநாள் அமெரிக்க அதிபரராக’, அமெரிக்க செனட் தலைவரான டேவிட் அட்சிசன் என்பவர் இருந்தார். மார்ச் 5 நாம் நாள் திங்கட்கிழமை அன்று, அமெரிக்க அதிபராக ஜக்கரி டெய்லர் என்பவர் பதவி ஏற்றுக்கொண்டார். பதிவு ஏற்பு நிகழ்ச்சிக்குப் பிறகு ஒருசில பத்திரிகையாளர்கள் அவரிடம், “நீங்கள் ஏன் நேற்று பதிவு ஏற்காமல் இன்று பதவி ஏற்றீர்கள்?” என்று கேட்டதற்கு அவர், “என்னைப் பொறுத்தளவில் ஞாயிற்றுக்கிழமை என்றால் கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடவேண்டும். ஏனென்றால், இறைவன்தான் எல்லாவற்றுக்கும் மேலானவர்; அவர்தான் எல்லாவிதமான நன்மைகட்கும் ஊற்றானவர். அப்படிப்பட்டவரைத்தான் முதலில் தேடவேண்டும். அதன்பிறகுதான் இந்த அதிபதி எல்லாம்” என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜக்கரி டெய்லர் சொல்வதுபோல், இறைவன்தான் எல்லாவிதமான நலன்களுக்கும் நன்மைக்கும் ஊற்றாக இருக்கின்றார். அப்படிப்பட்டவர்க்கு நம்முடைய வாழ்வில் முதன்மையான இடம் தருவது மிகவும் முக்கியமானது என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய முதல் வாசகத்தில் படைகளின் ஆண்டவர், “இந்த இடத்தில் நான் நலம் வழங்குவேன்” என்கின்றார். படைகளின் ஆண்டவர் இந்த இறைவார்த்தையின் வழியாக நமக்கு என்ன கூறுகின்றார் என்பதை இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

இப்பொழுதுள்ள கோயில் இதற்கு முந்தைய கோயிலின் மாட்சிக்கு முன்பாக ஒன்றுமில்லையா?

          இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் ஆகாய், ஆளுநரான செருபாபேலையும் தலைமைக் குருவான யோசுவாவையும் எஞ்சியிருந்தவர்களையும் ஒன்றாகக்கூட்டி அவர்களிடம்,  ‘உங்களில் ஒருசிலர் இப்பொழுதுள்ள கோயில் இந்த முந்தைய கோயிலின் (சாலமன் அரசர் கட்டிய முதல் கோயில்) மாட்சிக்கு முன்பாக ஒன்றில்லை என்று பேசிக்கொள்கிறீர்கள்... இன்னும் சில காலத்தில் ஆண்டவராகிய கடவுள் புறவினத்தாரை சிலைகுலையச் செய்வார். பின்னர் கோயிலைத் தன்னுடைய மாட்சியால் நிரப்புவார். அதன்பிறகு புறவினத்தார் யாவரும் அங்கு வருவர்’ என்று கூறுகின்றார்.

சாலமோன் அரசர் கட்டிய முதல் கோயிலின் அழகை வார்த்தையால் விவரித்துச் சொல்லமுடியாத அளவுக்கு அவ்வளவு அழகாகவும் பிரமாண்டமாகவும் இருந்தது (எஸ் 3: 8-13). அதே நேரத்தில் பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பிறகு கட்டப்பட்ட இரண்டாம் கோயில் எந்தவிதவிதத்திலும் குறைந்ததல்ல; அதைக் கடவுள் தன்னுடைய மாட்சியால் நிரப்புவார் என்பதுதான் இறைவாக்கினர் ஆகாய் மக்கள்ட்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றது.

‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்று சொல்லும் ஆண்டவர்

இறைவாக்கினர் ஆகாய் வழியாக, தன்னுடைய இல்லத்தை மாட்சியால் நிரப்புவேன் சொல்லும் ஆண்டவர், அங்கு நலம் நல்குவேன் என்றும் குறிப்பிடுகின்றார். எத்தகைய நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் இவை! அனைவரும் சிந்தித்துப் பார்க்கவேண்டிய வார்த்தைகளாக இருக்கின்றன இவை.

படைகளின் ஆண்டவர் தன்னுடைய இல்லத்தில் நலம் நல்குகின்றார் எனில், அங்கு நாம் எத்தகைய நம்பிக்கையோடு செல்லவேண்டும்; அவ்வில்லத்திற்கு நாம் அவ்வளவு முக்கியத்தும் கொடுக்கவேண்டும்...? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒரு விசயமாக இருக்கின்றது. சாலமோன் அரசர், முதல் கோயிலைக் கட்டி முடித்த பின்னர், அந்நியர் ஒருவர் இக்கோயிலை நோக்கி வேண்டுதல்செய்தால், அவர் வேண்டுதலை கடவுள் கேட்பார்’ (1 அர 8: 41-43) என்பார். அதுபோன்றுதான் இருக்கின்றது, இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறுகின்ற ‘இந்த இடத்தில் நான் நலம் நல்குவேன்’ என்ற வார்த்தைகள்.

ஆகையால், நலன்களின் பிறப்பிடமாக இருக்கும் ஆண்டவரின் திருக்கோயிலுக்கு நம்பிக்கை சென்று, அவரிடம் உருக்கமாக மன்றாடி, அவர்தரும் ஆசியைப் பெறுவது நல்லது.

சிந்தனை

‘கோயில் – ஆலயம் -  தொழுவது சாலமும் நன்று’ என்ற முதுமொழிக்கு ஏற்ப, நாம், ஆண்டவரின் திருக்கோயிலுக்கு நம்பிக்கையோடு சென்று, அவரிடம் மன்றாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
-          மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

Free Blog Widget
Stats Counter
hit counter