maraikal
MUM
           
 
             மரியாயின்சேனை - Legion of Mary    

இளையோர்


 

மரியாயின் சேனை - 20வது ஆண்டு நிறைவில் - 2019 அருடதந்தையர்களின் ஆசிச் செய்தி
இலங்கை தமிழ்க் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகத்தின் மரியாயின்  சேனையினர் தங்கள் 20ம் ஆண்டு நிறைவு விழாவை 08-12-2019 ல் கொண்டாடுகிறார்கள். மரியாயின் சேனையினருக்கு எமது வாழ்த்துக்கள்



இயக்குனரின் இதயத்திலிருந்து……..

மரியாயின் சேனையை வாழ்த்துகிறேன்
ஆண்டவரே என் முழு இதயத்துடன் உம்மைப் புகழ்வேன் (திபா: 9:1)

எமது தாய் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட, எமது விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, நம் தாய்நாட்டை விட்டு இடம் பெயர்ந்து, பல ஆண்டுகளாக பிரான்ஸ் தேசத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

தேசம்விட்டு தேசம் மாறுதல் என்பது இலகுவான காரியமல்ல. எமது முழுப் பண்பாடு, வாழ்வியல் யாவுமே ஒரு சவாலுக்கு உள்ளாகி விடும். ஆனால் நம் கிறிஸ்தவ விசுவாசம் எம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அளிக்கப்பட்டுள்ளது என்பதில் மகிழ்வடைகின்றேன்.

எமது பிரான்ஸ் ஆன்மீகப்பணியகத்தின் பக்திச் சபைகளில் மிகவும் உயிரோட்டமாகச் செயல்பட்டு 20தாவது அகவையில் கால்பதிக்கும் மரியாளின் சேனையை வாழ்த்துகிறேன். அதனுடைய வளர்ச்சிக்கும் அயராது உழைக்கும் அங்கத்தவர்களுக்கும் எனது நன்றிகள் பல கூறுகின்றேன். தொடர்ந்தும் அன்னை மரியாளின் பிள்ளைகளாக வாழ வளர வாழ்த்துகிறேன்.

அருட்பணி: போல் மதன்ராஐ; அ.ம.தி.
இயக்குனர்
இலங்கைத்தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப்பணியகம்


முன்னாள் இயக்குனரின் ஆசிச் செய்தி
இலங்கைத் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகத்தில் 1999ம் ஆண்டு மார்கழி மாதம் 8ந் திகதி அன்னையின் அமல உற்பவப் பெருவிழா அன்று, அன்றைய ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை செபஸ்தியன் அ.ம.தி. அடிகளாரினால் 9 உறுப்பினர்களுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட மரியாயின் சேனை, தற்போது 20 ஆண்டை எட்டியுள்ள இந்நாளில், 25 அங்கத்தவர்களுக்கும் மேலாக அன்னை சேனையில் அங்கத்துவம் வகித்து வருகின்றனர். பல சவால்களைக் கடந்து 20வது ஆண்டை நினைவு கூருகின்ற இந்த நாளில் அவர்களை வாழ்த்துவதில் பெருமிதம் அடைகின்றேன்.

ஓவ்வொரு மாதமும் 2ம், 4ம் சனிக்கிழமைகளில் ஒன்று கூடி அன்னையின் புகழ்பாடி அன்னைக்கு வணக்கம் செலுத்துவதும், தங்களின் சிறிய சிறிய அறச்செயல்களால் அன்னையின் புகழ் பறைசாற்றப்படுவதையும் நானறிவேன். நடுத்தரவயது முதல் பெரியோர்வரை தவறாது அறச்செயல்களில் ஈடுபடுவது, எம் பணியகத்திற்கு பெருமையைச் சேர்க்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அத்தோடு ஒவ்வொரு கூட்டத்திலும் ஒவ்வொரு அங்கத்தவர்களின் அறச்செயல், அனுபவப்பகிர்வுகள் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஆன்மீகத் தாகத்தையும், இதயப் புத்தெழுச்சியையும் தூண்டுவதாக அமைகிறது.

ஆகவே இந்த அன்னையின் புகழ்பாடும் இச்சேனையில் இன்னும் பல அங்கத்தவர்கள் இணைந்து அன்னையைப் போற்றிப் புகழ்ந்து, அவள் புகழை உலகமெங்கும் பறைசாற்ற, ஆண்டவன் துணை நின்று இவர்களை வழிநடத்த வேண்டுமென்று செபித்து, ஆசித்து மரியாயின் சேனையினரை வாழ்த்தி நிற்கின்றேன். “மரியாயின் மகிமையை அதிகப்படுத்துவதால் இயேசுவின் மகிமை குறைந்துவிடும் என்று யாரும் எண்ணவேண்டாம்” (புனித பெர்னாந்து).

அருள் தந்தை யோ. யு. கமலானந்தன் அ.ம.தி.
முன்னாள் பணியக இயக்குனர்

 

முன்னாள் இயக்குனர் அருட்பணி. லீனஸ் சொய்சா அ.ம.தி

அவர்களின்ஆசிச் செய்தி

உலகே வா !
உன்னத வாழத்தினைத் தா ! !
வீழ்வதும் அழகே, நீரருவியாய் இருந்தால்…..
தலை தாழ்வதும் அழகே, நெற்கதிராய் இருந்தால்…..
தொடர் தோல்விகள் அழகே, அலைகடலாய் இருந்தால்….
சிதறல்கள் அழகே, விண்மீன்களாய் இருந்தால்…..
கதறலும் அழகே, கார்முகிலாய் இருந்தால்…..
உம்பணிகள் அனைத்தும் அழகே,
அது இறைபணியாய் இருப்பதால்!


மனதில் மகிழ்வையும் கண்களுக்குள் பெருமையையும் வளர்த்து, இறைமக்களின் குடும்பச் சோலையில் மணமோடும் அழகோடும் கவிதைப் பூக்களை மலரச் செய்து, அகர வரிசையின் அடையாளங்களை ஆலயத்தில் சங்கமித்து, இறைவனை அழியாத சின்னமாய், இல்லங்களின் மையமாய் அடையாளப்படுத்தி, இறைநம்பிக்கைக்கு உரமூட்டி, பலநூறு மக்களுக்கு உயிர்கொடுத்து, செபங்களையும் நற்செயல்களையும் வாழ்வாக்கி நம்மிடையே நீக்கமற நிறைத்திருக்கும் பாரிஸ் மரியாயின் சேனையின் 20 ஆம் ஆண்டின் நிறை படைப்பைப் பாராட்டி மகிழ்கிறேன்.


'எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது" என்ற திருவள்ளுவனின் வாக்கை வாழ்வாக்கி, தனது சபை உறுப்பினர்களை இறைவன்பால் ஈர்த்து, இறை அச்சம், இறை ஞானம், இறை அருள் அனைத்தையும் அபரிவிதமாக பெற்றுத்தந்த அனைவரையும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த அனைத்து இந்நாள் முன்னாள் அருட்பணியாளர்கள், உதவி பணியாளர்கள், உபகாரிகள், பங்கு மக்கள் அனை-வருக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துக்கள். கடல்போல் விரிந்த மனதை, கேடகாமலே தரும் உள்ளத்தை, இளையோர் பட்டாளத்திற்கு முதுகெலும்பாய் தேய்வதை, மக்களை இடைவிடாது இறைவனை நோக்கி பயணிக்க வழிகாட்டுவதை நினைத்து வியக்கிறேன், மகிழ்கிறேன், வாழத்துகிறேன், செபிக்கிறேன்.


ஈசனே மனிதனாய், மனிதன் ஈசனாய் உருதிரு எடுத்தது நம் பாரம்பரியம்! அந்த உன்னத பாரம்பரியம் நம்மில் நிறைவுகாணட்டும். மனிதம் ஈசனை நோக்கி பயணிக்கட்டும். வானெங்கும் மலர்களின் சிரிப்போடு, நிலமெங்கும் நிம்மதியின் வாசத்தோடு, கடல்கடந்த அன்போடு, முழு நினைவோடு பயணத்தை தொடர பேரன்போடு உனை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்கள் நிம் இறைபணிக்கு! வளர்பிறையாகட்டும் உங்கள் பயணம்!


அருட்பணி. லீனஸ் சொய்சா அ.ம.தி. தமிழ் ஆன்மீகத் தந்தை
லூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்

 

இயக்குனர் அருட்திரு. அ. அமலதாஸ் அ.ம.தி அவர்களின் ஆசிச் செய்தி

சேனை பலம் பெற வாழ்த்துக்கள்


என் அன்பிற்குரிய மரியாயின் சேனை அங்கத்தவர்கட்கு!
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள் - இயேசுவின் வார்த்தைகளை கேட்டு அதன்படி நடந்த தாய் மரியாவின் சேனையில் அங்கத்தவர்களாக நீங்கள் இருந்து பணியாற்றி வருவது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன். புலம்பெயர் வாழ்வின் சவால்கள் மத்தியிலும் விசுவாசம் நிறைந்த செயல்களை தொடர்ந்து ஆர்வத்தோடு மேற்கொள்ளும் உங்கள் அனைவரையும் மனதார பாராட்டி நிற்கின்றேன். வாழ்த்துக்கள்.


உங்களோடு இணைந்து பணியாற்றிய 6 ஆண்டு காலங்கள் இன்னும் நினைவில் இருந்து நீங்கவில்லை. அன்னை மரியாவின் வணக்கத்திற்கு தனிப்பட்ட வாழ்வில் முக்கிய இடம் கொடுத்து தவறாமல் ஒன்று கூடி ஒருவர் ஒருவருக்காய் செபம் செய்தல் நற்செய்திப்பணியே!. மரியாயின் சேனையில் உங்கள் அங்கத்துவம் நிலைவாழ்வு பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆன்மிக வாழ்வின் போராட்டங்களை துணிவுடன் எதிர்கொள்ள ஆற்றல் தந்திருக்கும் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கை. நாங்கள் இருப்பதும் இயங்குவதும் கிறிஸ்துவாலேதான் என்பதற்கு நீங்களே சாட்சிகள்.


வெள்ளிவிழாக் கொண்டாடும் நமது பணியகத்தின் செயற்பாடுகளில் உங்களின் உறவு தனி இடம் பிடித்திருக்கிறது. எப்போதும் உதவி செய்யும் தாராள குணம், தளராத மனம் கொண்ட உங்கள் பணி இனிதே தொடர, மரியாவின் பரிந்துரையும் இறைவனின் ஆசீரும் உங்களுக்கு எப்போதும் இருக்கும். பணியகத்தோடு மட்டுமல்லாமல் தாயகத்தோடும் நல்ல இணைப்பை நீங்கள் ஏற்படுத்தி வருவது மிகச்சிறப்பானது. உங்கள் நற்செய்திப்பணி தொடரட்டும்.


தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்ட தாய் மரியாவைப்போல் தூய ஆவியின் செயற்பாடுகளுக்கேற்ற வாழ்வை கொண்டு நடாத்துங்கள். என்ன நேர்ந்தாலும் இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள். இடைவிடாது செபியுங்கள். இன்னும் பல ஆண்டுகள் பணி தொடர்ந்து பணியக செயற்பாடுகளில் ஆர்வத்தோடு பங்கெடுத்து அன்னைமரியாவின் புண்ணியங்களை வாழ்வாக்க இறைவனின் அழைப்பை மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களும் செபமும்!


"அவர் சொல்வதை எல்லாம் செய்யுங்கள்” (யோவான் 2:5) என்ற மரியாவின் அழைப்புக்கு வாழ்வால் பதிலளித்து இறைவனின் மகிமைக்காய் அனைத்தையும் செய்யுங்கள். விசுவாசத்தையும் செயலையும் இணைத்து நம் தாய் மரியாவின் முன்மாதிரிகையைப் பின்பற்றி கிறிஸ்துவை நம்பிக்கையுடன் பின்செல்லுங்கள்.


இறையாசீருடன்
அருட்திரு. அ. அமலதாஸ், அ.ம.தி
இயக்குனர், அமைதித் தென்றல்
முல்லைத்தீவு



இயக்குனர் அருட்தந்தை . செபஸ்ரியன் அ.ம.தி, அவர்களின் ஆசிச் செய்தி

மரியசேனையின் பணிகள் புத்தூக்கம் பெற்று வளர வாழ்த்துகின்றேன்

மரியன்னை புகழ்பாடும் மரியாயின் சேனை உலகில் பல்வேறு நாடுகளிலும் பக்திச் சபையாக திருச்சபையில் முக்கிய பணிகளில் பங்கேற்று வருவது சிறப்புக்குரியது. பிரான்ஸ் நாட்டில் தமிழ் கத்தோலிக்க ஆன்மீகப் பணியகம் மிகவும் எழுச்சியுடன் திருச்சபையின் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதன் பணிகளில் மரியாயின்சேனை 1999 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு இவ்வாண்டில் இரு தசாப்த ஆண்டை நிறைவு செய்வது பாராட்டுக்குரியது.

“செல்லும் எங்கும் நற்செய்தியைப் பரப்புங்கள்” என்ற இறை இயேசுவின் அழைப்பினை ஏற்று, இலங்கை மக்களின் ஆன்மீக விருட்சம் பிரான்ஸ் நாட்டிலும் மரியாயின் சேனை வழியாக சென்ற இடங்களிலும் தமது அர்ப்பணிப்பான ஆன்மீகப் பணி மூலம் மேற்கொண்ட முயற்சி 1999ஆம் ஆண்டில் சிறுகுழுவாக தொடங்கிய காலப்பகுதியில் எனது வழிகாட்டலில் ஊக்கப்படுத்தியவை, அவர்களின் ஆர்வத்தின் தூண்டுதல் 20 ஆவது ஆண்டுவரை வளர்ச்சி கண்டதை எண்ணி மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

இதன் முயற்சியில் வழிகாட்டிய நினைவுகள் இன்றும் என் மனதில் மனநிறைவைத் தருகின்றது. ஆன்மீக வளர்ச்சியின் பங்காளராக புதிய - அங்கத்தவர்களையும் இணைத்து, இறைவனின் நற்செய்தி பணிகளைப் பகிர மரியாயின் சேனையின் செயல்களை பரவலாக்குவதில் புதியவர்களை கைகோர்த்து, நம்பிக்கையூட்டும் நற்செயல்களால் புத்தூக்கம் பெற்று வாழ, ஒவ்வொரு அங்கத்தவரும் திடசங்கற்பத்துடன் முன்னேற இறை ஆசீர் வேண்டி வாழ்த்துகின்றேன்.


அருட்தந்தை . செபஸ்ரியன் அ.ம.தி,
பங்குத்தந்தை, மணியந்தோட்டம், யாழ்ப்பாணம், இலங்கை.

 

இயக்குனர் அருட்தந்தை .அருட்தந்தை ம.றெஜி இராஜேஸ்வரன் அவர்களின் ஆசிச் செய்தி

ST.JOHN THE BAPTIST CHURCH

 

 

PARISH PRIEST

868.Hospital Road

JAFFNA – SRI-LANKA

TEL :021-222-2524


வாழ்த்துக்கள்


பிரான்ஸ் பாரீஸ் மாநகரில் மரியாயின் சேனையின் தமிழ் பேசும் மக்களின் « அமலேற்பவ அன்னையின் பிரசீடியம்» கேட்பதற்கே எவ்வளவு இனிமையாகவுள்ளது. பிரசீடியம் ஆரம்பமாகி 20 ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் சேனையருக்கு எமது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
வாழும் இடங்கள் மாறலாம். ஆனால் உள்ளத்தில் வேரோடியிருக்கும் இறைபக்தி மாறாது. என்றுமே உறுதிகொண்டதாக இருக்கவேண்டும். மரியன்னையின் பெயரில் நீங்கள் கொண்டாடும் இவ்விழா உங்கள் பக்தியின் உறுதிப்பாட்டுக்கு எழுச்சிக்கு ஓர் எடுத்துக்காட்டு.


மரியாயின் சேனை செபம், சேவை என்னும் 2 தூண்களில் கட்டி எழுப்பப்படுகிறது. இரண்டுமே சரிசமமாக முக்கியமானது. வாராவாரம் இடம் பெறும் கூட்டங்களில் நாம் ஒன்று கூடி செபிக்கின்றோம். அதன் பலாபலனாக வாரா வாரம் பெறுமதியுள்ள பிறர் அன்புப்பணிகளில் குறைந்தது. இரண்டு இரண்டு பேராக ஈடுபாடு கொள்கின்றோம். இந்த இரண்டுமே: செபம்இ சேவை மரியாவின் சேனையருக்கு தவிர்க்க முடியாத கடமைகளாக உள்ளது. உங்கள் பிரமாணிக்கத்தின் அடையாளங்களாக உள்ளது.


மகிழ்ச்சியான இந்தத் தருணத்தில் சேனையர்களாகிய நீங்கள் இறையரசின் வளர்ச்சிக்கும்இ மரியாவின் மகிமைக்கும் அயராது மரியாயின் சேனை வழி சென்று பணிசெய்ய வேண்டும் என்று எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


அருட்தந்தை ம.றெஜி  இராஜேஸ்வரன்

 
Free Blog Widget
Stats Counter
hit counter