maraikal
MUM
 

இளையோர்


ஆண்டவரின் இராவுணவுத் திருப்பலி்

முதல் வாசகம்

பாஸ்கா இராவுணவு பற்றிய விதிமுறைகள்.

விடுதலைப் பயண நூலிலிருந்து வாசகம் 12: 1-8, 11-14

எகிப்து நாட்டில் ஆண்டவர் மோசேக்கும் ஆரோனுக்கும் பின்வருமாறு கூறினார்: உங்களுக்கு மாதங்களில் தலையாயது இம்மாதமே! ஆண்டில் உங்களுக்கு முதல் மாதமும் இதுவே! இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் நீங்கள் அறிவியுங்கள்: அவர்கள் இம்மாதம் பத்தாம் நாள், குடும்பத்துக்கு ஓர் ஆடு, வீட்டிற்கு ஓர் ஆடு என்று தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்.

ஓர் ஆட்டினை உண்ண ஒரு வீட்டில் போதிய ஆள்கள் இல்லையெனில், உண்போரின் எண்ணிக்கைக்கும் உண்ணும் அளவுக்கும் ஏற்ப அண்டை வீட்டாரைச் சேர்த்துக்கொள்ளட்டும்.

ஆடு குறைபாடற்றதாக, கிடாயாக, ஒரு வயது குட்டியாக இருக்க வேண்டும். தேர்ந்தெடுப்பது வெள்ளாடாகவோ செம்மறியாடாகவோ இருக்கலாம். இம்மாதம் பதினான்காம் நாள்வரை அதை வைத்துப் பேணுங்கள். அந்நாள் மாலை மங்கும் வேளையில் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் அனைத்துச் சபையும் அதை வெட்ட வேண்டும். இரத்தத்தில் சிறிதளவு எடுத்து, உண்ணும் வீடுகளின் இரு கதவு நிலைகளிலும், மேல் சட்டத்திலும் பூச வேண்டும். இறைச்சியை அந்த இரவிலேயே உண்ண வேண்டும். நெருப்பில் அதனை வாட்டி, புளிப்பற்ற அப்பத்தோடும் கசப்புக் கீரையோடும் உண்ண வேண்டும். நீங்கள் அதனை உண்ணும் முறையாவது: இடையில் கச்சை கட்டி, கால்களில் காலணி அணிந்து, கையில் கோல் பிடித்து, விரைவாக உண்ணுங்கள். இது "ஆண்டவரின் பாஸ்கா". ஏனெனில், நான் இன்றிரவிலேயே எகிப்து நாடெங்கும் கடந்து சென்று, எகிப்து நாட்டில் மனிதர் தொடங்கி விலங்குவரை அனைத்து ஆண்பால் தலைப்பிறப்பையும் சாகடிப்பேன். எகிப்தின் தெய்வங்கள் அனைத்தின்மேலும் நான் தீர்ப்பிடுவேன். நானே ஆண்டவர்! இரத்தம் நீங்கள் இருக்கும் வீடுகளில் உங்களுக்கு அடையாளமாக இருக்கும். நான் இரத்தத்தைக் கண்டு உங்களைக் கடந்து செல்வேன். எகிப்து நாட்டில் நான் அவர்களைச் சாகடிக்கும்போது, கொல்லும் கொள்ளை நோய் எதுவும் உங்கள் மேல் வராது. இந்நாள் உங்களுக்கு ஒரு நினைவு நாளாக விளங்கும். இதனை ஆண்டவரின் விழாவாக நீங்கள் தலைமுறைதோறும் கொண்டாடுங்கள். இந்த விழா உங்களுக்கு நிலையான நியமமாக இருப்பதாக!

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்

திபா 116: 12-13. 15-16. 17-18 (பல்லவி: 1 கொரி 10: 16)Mp3


பல்லவி: கடவுளைப் போற்றிக் கிண்ணத்தில் பருகுதல் கிறிஸ்துவின் இரத்தத்தில் பங்குகொள்வதே.

12 ஆண்டவர் எனக்குச் செய்த எல்லா நன்மைகளுக்காகவும் நான் அவருக்கு என்ன கைம்மாறு செய்வேன்? 13 மீட்பின் கிண்ணத்தைக் கையில் எடுத்து, ஆண்டவரது பெயரைத் தொழுவேன். பல்லவி

15 ஆண்டவர்தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. 16 ஆண்டவரே, நான் உண்மையாகவே உம் ஊழியன்; நான் உம் பணியாள்; உம் அடியாளின் மகன்; என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். பல்லவி

17 நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன்; ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன்; 18 இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். பல்லவி


இரண்டாம் வாசகம்

அப்பத்தை உண்டு, கிண்ணத்தில் பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அறிவிக்கிறீர்கள்.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 11: 23-26

சகோதரர் சகோதரிகளே, ஆண்டவரிடமிருந்து நான் எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

அதாவது, ஆண்டவராகிய இயேசு காட்டிக்கொடுக்கப்பட்ட அந்த இரவில், அப்பத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, "இது உங்களுக்கான என் உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்" என்றார்.

அப்படியே உணவு அருந்தியபின் கிண்ணத்தையும் எடுத்து, "இந்தக் கிண்ணம் என் இரத்தத்தால் நிலைப்படுத்தப்படும் புதிய உடன்படிக்கை. நீங்கள் இதிலிருந்து பருகும் போதெல்லாம் என் நினைவாக இவ்வாறு செய்யுங்கள்" என்றார்.

ஆதலால் நீங்கள் இந்த அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

 

யோவா 13: 34
அல்லேலூயா, அல்லேலூயா!  "ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள் என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்" என்கிறார் ஆண்டவர்.அல்லேலூயா! 


நற்செய்தி வாசகம்


இயேசு தமக்குரியோர்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார்.

+யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 1-15

பாஸ்கா விழா தொடங்க இருந்தது. தாம் இவ்வுலகத்தை விட்டுத் தந்தையிடம் செல்வதற்கான நேரம் வந்துவிட்டது என்பதை இயேசு அறிந்திருந்தார். உலகில் வாழ்ந்த தமக்குரியோர்மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். இயேசுவைக் காட்டிக்கொடுக்கும் எண்ணத்தை அலகை சீமோனின் மகனாகிய யூதாசு இஸ்காரியோத்தின் உள்ளத்தில் எழச் செய்திருந்தது.

இரவுணவு வேளையில், தந்தை அனைத்தையும் தம் கையில் ஒப்படைத்துள்ளார் என்பதையும் தாம் கடவுளிடமிருந்து வந்ததுபோல் அவரிடமே திரும்பச் செல்ல வேண்டும் என்பதையும் அறிந்தவராய், இயேசு பந்தியிலிருந்து எழுந்து, தம் மேலுடையைக் கழற்றி வைத்துவிட்டு, ஒரு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார். பின்னர் ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துச் சீடர்களுடைய காலடிகளைக் கழுவி இடுப்பில் கட்டியிருந்த துண்டால் துடைக்கத் தொடங்கினார்.

சீமோன் பேதுருவிடம் இயேசு வந்தபோது அவர், "ஆண்டவரே, நீரா என் காலடிகளைக் கழுவப் போகிறீர்?" என்று கேட்டார்.

இயேசு மறுமொழியாக, "நான் செய்வது இன்னதென்று இப்போது உனக்குப் புரியாது; பின்னரே புரிந்துகொள்வாய்" என்றார். பேதுரு அவரிடம், `"நீர் என் காலடிகளைக் கழுவ விடவேமாட்டேன்"" என்றார்.

இயேசு அவரைப் பார்த்து, "நான் உன் காலடிகளைக் கழுவாவிட்டால் என்னோடு உனக்குப் பங்கு இல்லை" என்றார்.

அப்போது சீமோன் பேதுரு, "அப்படியானால் ஆண்டவரே, என் காலடிகளை மட்டும் அல்ல, என் கைகளையும் தலையையும்கூடக் கழுவும்" என்றார்.

இயேசு அவரிடம், "குளித்துவிட்டவர் தம் காலடிகளை மட்டும் கழுவினால் போதும். அவர் தூய்மை யாகிவிடுவார். நீங்களும் தூய்மையாய் இருக்கிறீர்கள். ஆனாலும் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார்.

தம்மைக் காட்டிக் கொடுப்பவன் எவன் என்று அவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. எனவேதான் "உங்களுள் அனைவரும் தூய்மையாய் இல்லை" என்றார். அவர்களுடைய காலடிகளைக் கழுவியபின் இயேசு தம் மேலுடையை அணிந்துகொண்டு மீண்டும் பந்தியில் அமர்ந்து அவர்களிடம் கூறியது: `"நான் உங்களுக்குச் செய்தது என்னவென்று உங்களுக்குப் புரிந்ததா? நீங்கள் என்னைப் "போதகர்" என்றும் "ஆண்டவர்" என்றும் அழைக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறு கூப்பிடுவது முறையே. நான் போதகர்தான், ஆண்டவர்தான். ஆகவே ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால் நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்.

நான் செய்ததுபோல நீங்களும் செய்யுமாறு நான் உங்களுக்கு முன்மாதிரி காட்டினேன்" என்றார்.


இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.


 
 

I விடுதலைப் பயணம் 12: 1-8, 11-14
II 1கொரிந்தியர் 11: 23-26
III யோவான் 13: 1-15

போதியுங்கள்; தேவைபட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்

நிகழ்வு


இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அமெரிக்காவில் தோன்றிய மிகப்பெரிய மறைப்பணியாளர் டாசன் ட்ரோட்மன் (Dawson Trotman) என்பவர். பல நாடுகளுக்குச் சென்று ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து வந்த இவர், ஒருமுறை தைவானில் உள்ள பழங்குடி மக்கள் நடுவில் நற்செய்தி அறிவிக்கச் சென்றார். இவர் அந்த மக்கள் இருந்த இடத்திற்குச் சென்ற நேரம், மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதையெல்லாம் பொருள்படுத்தாமல், இவர் அந்த மக்கள் நடுவில் சென்று நற்செய்தி அறிவித்தார். இவர் அங்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும்போது, தன்னோடு ஓர் உள்ளூர்வாசியையும் துணைக்கு அழைத்துக் கொண்டு சென்றார்.

இவர் அந்தப் பழங்குடி மக்களிடம் நற்செய்தி அறிவித்துவிட்டுச் சென்ற சில நாள்களுக்குப் பின், அவரை அந்த மக்களிடம் கூட்டிவந்த உள்ளூர்வாசியிடம் ஒரு பழங்குடி மனிதர், "டாசன் ட்ரோட்மனைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அந்த உள்ளூர்வாசி சிறிதும் தாமதியாமல், "டாசன் ட்ரோட்மன் மிகவும் தாழ்ச்சியுடையவர்" என்றார். "எதை வைத்து இப்படிச் சொல்கின்றீர்கள்?" என்று அந்த மனிதர் மீண்டுமாகக் கேட்டபொழுது, உள்ளூர்வாசி இவ்வாறு சொன்னார்: "டாசன் ட்ரோட்மன் இங்கு வந்தபொழுது, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தன. இதனால் அவரும் நானும் அதற்குள்தான் நடந்துவரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சேறும் சகதியுமாய் இருந்த பகுதியைக் கடந்து வந்ததும், ஒரு நீரோடை வந்தது, அதில் அவருடைய காலணிகளை மட்டுமல்ல, என்னுடைய காலணிகளையும் கழுவினார். இத்தனைக்கும் நான் அவரை எவ்வளவோ தடுத்தபோதும்கூட, அவர் என்னுடைய காலணிகளைக் கழுவினார். இதனால்தான் நான் அவரை மிகவும் தாழ்ச்சியுடையவர் என்று சொல்கிறேன்."

ஒரு சாதாரண மனிதருடைய காலணிகளைக் கழுவுவது எளிதான செயலல்ல; ஆனால் டாசன் ட்ரோட்மன் அத்தகைய செயலைச் செய்தார். இவ்வாறு அவர் தன்னுடைய வாழ்வால் இயேசுவுக்குச் சான்று பகர்ந்தார். இன்றைய நாளில் இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவியதை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவிய நிகழ்வு நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது, இந்த நிகழ்வு இயேசு ஏற்படுத்திய நற்கருணைக்கும் அவர் கொடுத்த அன்புக் கட்டளைக்கும் எப்படி அடிநாதமாக இருக்கின்றது என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

யார் பெரியவர் என்ற வாக்குவாதத்தில் ஈடுபட்ட சீடர்கள்

இந்த நாள் ஒவ்வொரு கிறிஸ்தவருக்கும் மிக முக்கியமான நாள். ஏனெனில், இந்த நாளில் இயேசு நற்கருணையையும் குருத்துவத்தையும் ஏற்படுத்தினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவினார்; இந்த நாளில்தான் இயேசு தன் சீடர்களுள் ஒருவரால் காட்டிக்கொடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட நாளில், நாம் நற்செய்தியாகப் படிக்கக்கேட்ட பகுதியில், இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவுவதைக் குறித்துத்தான் வாசிக்கின்றோம். அப்படியானால் இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியது எவ்வளவு முக்கியமான ஒரு நிகழ்வு என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.

இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளை ஏன் கழுவவேண்டும் என்ற கேள்வி எழலாம். இதற்குக் நாம், இதற்கு முன்பு என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். இதற்கு முன்பு (லூக் 22: 24) இயேசுவின் சீடர்கள் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்பது பற்றிய விவாதத்தில் ஈடுபட்டிருந்தார்கள். இதனால் இயேசு, தன்னுடைய சீடர்கள் தனக்குப் பின்பு, தான் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து ஆற்றவேண்டியவர்கள்... அவர்கள் இப்படி யார் பெரியவராக எண்ணப்பட வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடுவது நல்லதில்லை என்பதால், அவர் அவர்களுடைய காலடிகளைக் கழுவி, பெரியவர் என்பவர் எப்படி இருக்கவேண்டும் என்று பாடம் கற்பிக்கின்றார்.

அன்று சீடர்கள்தான் தங்களுக்குள் பெரியவராக எண்ணப்படவேண்டியவர் யார் என்று விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்று இல்லை. இன்றைக்கும் நம்முடைய பங்கு அமைப்பில், குடும்பங்களில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடைபெறுகின்றது. மிகவும் கேவலான அரசியலும் நடக்கின்றது. இப்படிப்பட்ட வேளைகளில் ஈடுபடுவர், பெரியவர் யார் என்பதற்கு இயேசு அளிக்கின்ற விளக்கத்தினை நன்கு உணரவேண்டும்.

தாழ்ச்சியோடு சீடர்களின் காலடிகளைக் கழுவிய இயேசு

இயேசு தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவினார் என்றால், அது எவ்வளவு பெரிய செயல் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். வீட்டிற்கு வருகின்ற விருந்தினருடைய காலடிகளைக் கழுவுகின்ற வழக்கம் யூதர்களின் நடுவில் இருந்தாலும் (லூக் 7: 44), இப்படிப்பட்ட வேலையினை அடிமைகள்தான் செய்துவந்தனர் (1 சாமு 25: 41). இயேசு தன்னை ஓர் அடிமை போன்று பாவித்து அல்லது அடிமையின் வடிவை (பிலி 2: 7) எடுத்துத் தன்னுடைய சீடர்களுடைய காலடிகளைக் கழுவுகின்றார். அப்படியானால் இயேசுவின் உள்ளத்தில் எவ்வளவு தாழ்ச்சி இருந்திருந்தால், அவர் இவ்வளவு இறங்கித் தன் சீடர்களின் காலடிகளைக் கழுவியிருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்த்துக் கொள்ளலாம். இயேசு தன்னுடைய சீடர்களிடத்தில், உங்களுள் பெரியவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் தொண்டராகவும் உங்களுள் முதன்மையானவராக இருக்க விரும்புகின்றவர் உங்கள் பணியாளராகவும் இருக்கட்டும் (மத் 20: 26-28) என்று சொல்லி வந்தார். இங்கு அவர் தன்னுடைய சீடர்களின் காலடிகளைக் கழுவுவதன் வழியாக, அதை வாழ்ந்து காட்டவும் செய்கின்றார்.

அன்பானவர்களால் மட்டும்தான் தாழ்ச்சியாக இருக்க முடியும்

இயேசு தன் சீடர்களின் காலடிகளைக் கழுவிட்டு, "ஆண்டவரும் போதகருமான நான் உங்கள் காலடிகளைக் கழுவினேன் என்றால், நீங்களும் ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவக் கடமைப்பட்டிருக்கின்றீர்கள்" என்று கூறுகின்றார். இதுதான் நாம் வாழ்ந்து காட்டவேண்டிய பாடமாக இருக்கின்றது. ஆம், ஒருவர் மற்றவருடைய காலடிகளைக் கழுவவேண்டும் என்றால் அல்லது தொண்டு செய்யவேண்டும் என்றால், அதற்கு அவருடைய உள்ளத்தில் அன்பு இருக்கவேண்டும். இயேசுவுக்குச் சீடர்களிடத்தில் (எல்லாரிடமும்) அன்பு இருந்தது (யோவா 13: 34). அந்த அன்பின் மிகுதியால், அவர் சீடர்களின் காலடிகளைக் கழுவினார். நமக்கு அடுத்தவரிடம் அன்பு இருந்தால்தான், அவர்களுக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யவேண்டும்.

இப்படி நாம் அடுத்தவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்வதற்குத் தேவையான அன்பினை, இயேசு ஏற்படுத்தி, நாம் உட்கொள்கின்ற நற்கருணையால் மட்டும்தான் தரமுடியும். வேறு விதமாகச் சொல்லவேண்டும் என்றால், நாம் உட்கின்ற நற்கருணை நற்கருணை நம்மை அடுத்தவரிடம் அன்பு கொள்ளச் செய்து, அவர்களுக்குப் பணிவிடை செய்யத் தூண்டவேண்டும். இல்லையென்றால் நாம் உட்கின்ற நற்கருணையால் பயனொன்றும் இல்லை.

ஆகையால், இயேசு தன் சீடர்கள்மீதுகொண்ட அன்பினால், அடிமை போன்று தன்னைத் தாழ்த்திக்கொண்டு, அவர்களுடைய காலடிகளைக் கழுவியது போன்று, நாமும் உள்ளார்ந்த அன்பினால் நம்மைத் தாழ்த்திக்கொண்டு, அடுத்திருப்பவருக்குத் தொண்டும் பணிவிடையும் செய்யத் தயாராவோம். அதற்கான ஆற்றலை நாம் உட்கொள்ளும் நற்கருணை தரவேண்டும் என்று இறைவனை வேண்டுவோம்.

சிந்தனை

"போதியுங்கள். தேவைப்பட்டால் வார்த்தையைப் பயன்படுத்துங்கள்’ (Preach the Gospel at all times and if necessary use words) என்பார் அசிசி நகர்ப் புனித பிரான்சிஸ். ஆகையால், இயேசு தன்னுடைய வார்த்தையால் மட்டுமல்ல, செயலாலும் போதித்தது போன்று, நாமும் நம்முடைய செயல்களால் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். மேலும் நாம் செய்யக்கூடிய தொண்டுகளாலும் பணிவிடையாலும் நாம் உட்கொளும் நம் ஆண்டவர் இயேசுவின் திருவுடல் திருஇரத்தத்திற்கு – நற்கருணைக்கு அர்த்தம் தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter