ஆண்டவருடைய உயிர்ப்பின் பாஸ்கா ஞாயிறு |
|
முதல் வாசகம்இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு
அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
|
|
I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43 II கொலோசையர் 3: 1-4 III யோவான் 20: 1-9 ஆண்டவரின் உயிர்ப்பு - புதுவாழ்வுக்கான அழைப்பு நிகழ்வு அரிமத்தியா ஊரைச் சார்ந்த யோசேப்பைக் குறித்துப் பாரம்பரியமாகச் சொல்லப்படுகின்ற நிகழ்வு இது. இயேசு இறந்ததும் இவர் பிலாத்திடம் சென்று, இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி, தனக்கெனப் பாறையில் வெட்டியிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார். அப்பொழுது இவருக்குத் தெரிந்த ஒருசிலர் இவரிடம், "உங்களுக்கென வெட்டிய இந்த அழகான கல்லறையை இன்னொருவருக்குக் கொடுத்துவிட்டீரே...! நீர் ஏன் இப்படிச் செய்தீர்...?" என்று கேட்டார்கள். இதற்கு இவர், "இயேசு இந்தக் கல்லறையில் இரண்டு நாள்கள்தான் இருப்பார். மூன்றாம்தான் உயர்த்தெழுந்து விடுவார். அதனால்தான் கொடுத்தேன்" என்றார் ஆம், இயேசு இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுவேன் என்று சொன்னார். அவர் சொன்னது போன்றே உயிர்த்தெழுந்தார். அதைத்தான் இன்று நாம் உயிர்ப்புப் பெருவிழாவாக நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றோம். இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இன்றைய நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்குச் சொல்லும் செய்திகளைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அர்த்தம் தரும் இயேசுவின் உயிர்ப்பு திருத்தூதரான புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில், இவ்வாறு கூறுவார்: "கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாட்சிய நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாயிருக்கும்" (1கொரி 15:14). பவுலின் இவ்வார்த்தைகள் இயேசுவின் உயிர்ப்புதான் கிறிஸ்துவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்புக்கும் அர்த்தம் தருவதாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றது என்று ஆணித்தரமாகச் சொல்கின்றன. உலகில் தோன்றிய நான்கு பெரிய மதங்கள் யூதமதம், புத்தமதம், இஸ்லாம் மதம், பமற்றும் கிறிஸ்தவ மதம். இதில் யூத மதத்தைத் தோற்றுவித்த ஆபிரகாம் கி.மு.1900 ஆம் ஆண்டு இறந்தார் என்று சொல்லப்படுகின்றது. அவர் உயிர்த்தெழுந்ததாக எங்கேயும் சொல்லப்படவில்லை. அதே போன்று புத்தமதத்தைத் தோற்றுவித்த புத்தர் கி.மு.483 ஆம் ஆண்டு இறந்தார் என்று சொல்லப்படுகின்றது; அவரும் உயிர்த்தெழுந்ததாக எங்கும் குறிப்பு இல்லை. இஸ்லாம் மதத்தைத் தோற்றுவித்த முகமது நபி கி.பி 632 ஆம் ஆண்டு, ஜூன் திங்கள் 6 ஆம் இறந்தார் என்று சொல்லப்படுகின்றது; அவரும்கூட உயிர்த்தெழுந்தார் என்று சொல்லப்படவில்லை. ஆனால் இயேசு பாடுபட்டு, சிலுவையில் அறையப்பட்டு, இறந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். இதற்குச் சான்றுகளாக இருப்பவைதான் இயேசுவின் வார்த்தைகளும் வெற்றுக்கல்லறையும் சீடர்களின் சாட்சிகளும் ஆகும். அதனால் இயேசுவின் உயிர்ப்பே கிறிஸ்தவ நம்பிக்கைக்கும் நற்செய்தி அறிவிப்பும் அர்த்தம் தருவதாகவும் அடித்தளமாகவும் இருக்கின்றது என்று உறுதியாகச் சொல்லலாம். சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தும் இயேசுவின் உயிர்ப்பு இயேசுவின் உயிர்ப்பு, சீடர்கள் நடுவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது என்று ஆணித்தரமாகக் கூறலாம். அதுவரைக்கும் யூதர்களுக்கு அஞ்சித் தங்களை அறைக்குள் அடைத்துகொண்டு வாழ்ந்துவந்த இயேசுவின் சீடர்கள், இயேசுவின் உயிர்ப்புப் பிறகு யூதர்களுக்கு அஞ்சாமல், ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை மிகத் துணிச்சலாக எல்லாருக்கும் அறிவிக்கின்றார்கள். இதுதான் இயேசுவின் உயிர்ப்பு சீடர்கள் நடுவில் ஏற்படுத்திய மாற்றம் என்று சொல்லலாம். இன்று நாம் கொண்டாடக்கூடிய உயிர்ப்புப் பெருவிழா, பாஸ்கா விழா அல்லது பாஸ்கா ஞாயிறு என்றும் அழைப்படுகின்றது. வழக்கமாக யூதர்கள் அப்பம் சுடுகின்றபொழுது புளிப்பேறிய மாவில் அப்பம் சுடுவார்கள்; ஆனால், பாஸ்கா விழாவிற்கு அப்பம் சுடுகின்றபோது, புளிப்பற்ற மாவில் அப்பம் சுடுவார்கள். புளிப்பு என்பது தீமையின் அடையாளமாக இருக்கின்றது (1 கொரி 5:8). இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவும் நமக்கு உணர்த்தும் செய்தியும் இதுவாகத்தான் இருக்கின்றது. ஆம். நாம் உயிர்த்த ஆண்டவர் இயேசுவின் சீடர்களாக இருக்கின்றோம் என்றால், தீமை விளைவிக்கக்கூடிய வழியில் அல்லது தீய வழியில் செல்லக்கூடாது. மாறாக நல்லவராம் கடவுள் காட்டுகின்ற நல்ல வழியில் செல்லவேண்டும். கொலோசையருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்தில் இதைத்தான் புனித பவுல், "நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" என்று கூறுகின்றார். ஆகவே, இயேசுவின் உயிர்ப்பு சீடர்கள் நடுவில் மாற்றத்தை ஏற்படுத்தியது போன்று, நம்முடைய வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அந்த மாற்றம் நம்மை மேலுலகு சார்ந்தவற்றை நாடுபவர்களாக இருக்கச் செய்யவேண்டும். . இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாவோம் இயேசுவின் உயிர்ப்பு நமக்கு விடுக்கும் மேலான அழைப்பு, நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை எல்லாருக்கும் அறிவித்து, அவர்களை இயேசுவின் சீடர்களாக மாற்றவேண்டும் என்பதாகும். நற்செய்தியில் மகதலா மரியா உயிர்த்த ஆண்டவரைக் கண்டதும், அவரைப் பற்றி சீடர்களுக்கு அறிவிக்க விரைகின்றார். முதல் வாசகத்தில் புனித பேதுரு, உயிர்த்த ஆண்டவர் இயேசுவைப் பற்றி பிற இனத்தைச் சார்ந்த கொர்னலேயுக்கு அறிவிக்கின்றார். மட்டுமல்லாமல், இயேசுவின் உயிர்ப்பு "நாங்கள் சாட்சிகள்" என்று சொல்கின்றார். அப்படியானால், நாம் ஒவ்வொருவரும் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவித்து, அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாகத் திகழவேண்டும் என்பதுதான் நமக்கு முன்பாக இருக்கும் அழைப்பாக இருக்கின்றது. தெற்குப் பசிபிக் கடலில் உள்ள நியூ ஹெப்ரிட்ஸ் தீவிலிருந்த மனித மாமிசம் சாப்பிடும் மக்களுக்கு நடுவில் ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்களைப் புதிய மனிதர்களாக மாற்றிய பெருமை ஜான். ஜி.பேட்டன் என்பவரைச் சாரும். இவர் நியூ ஹப்ரிட்ஸ் தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கச் செல்லும் முன், இவருக்கு முன்பாகச் சென்ற இரண்டு மறைப்பணியாளர்கள் அத்தீவில் இருந்த மனிதமாமிசம் சாப்பிடுபவர்களால் கொல்லப்பட்டார்கள். இதனால் அந்தத் தீவுகளுக்குச் சென்று நற்செய்தி அறிவிக்க யாரும் முன்வர வில்லை. ஜான் ஜி. பேட்டன் அந்தத் தீவுகளுக்கு நற்செய்தி அறிவிக்கப் போவதாகச் சொன்னபோது, இவருக்கு அறிமுகமான ஒருவர், அங்கு செல்லவேண்டாம். அப்படிச் சென்றால், மனித மாமிசம் சாப்பிடுபவர்களால் கொல்லப்படுவாய் என்று எச்சரித்தார். அதற்கு ஜான். ஜி.பேட்டன், "ஒருவேளை நான் அங்கு சென்று நற்செய்தி அறிவிக்கும்போது, அவர்கள் என்னைக் கொன்றால், அவர்களுக்கு இரையாவேன். ஒருவேளை நான் அறிவித்த நற்செய்தியைக் கேட்டு, அவர்கள் மனம்மாறினார்கள் என்றால், இறுதியில் எல்லாரையும் போல நான் புழுக்களுக்கு இரையாவேன்... எப்படியிருந்தாலும் நான் இறுதிநாளில் இயேசு தோன்றுபோது, மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவேன்" என்றார். "எனக்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை. நான் ஆண்டவரைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பேன்" என்று சொன்ன மறைப்பணியாளரான ஜான்.ஜி.பேட்டனின் துணிச்சல் நாம் எவ்வொருவரும் உரித்தாக்கிக்கொள்ளவேண்டியது. ஆகையால், நாம் இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்ற இந்த வேளையில், அவருடைய உயிர்ப்புச் சாட்சிகளாகத் திகழ்ந்து, அவர்தருகின்ற அமைதியையும் அருளையும் பெறுவோம். சிந்தனை "நம்முடைய துன்பத்தைத் தீர்ப்பதற்கும், நம்முடைய குழப்பங்களை நீக்குவதற்கும், நம்முடைய அச்சங்களைப் போக்குவதற்கும், நம் சுமைகளை எளிதாக்குவதற்கும், கண்ணீரைத் துடைப்பதற்கும், நம்முடைய இதயத்தின் ஏக்கத்தைப் பூர்த்தி செய்வதற்கும், நம்முடைய மனத்தை அமைதிப்படுத்துவதற்கும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவுக்கு வல்லமை இருக்கின்றது" என்பார் சி.ஹச். மேக்கின்டோஷ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்குப் புதுவாழ்வு தரும் உயிர்த்த ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாய், அவருடைய உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் வாழ்வோம். அதன்வழியாய் இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
|
|
Stats Counter hit counter |