பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு |
|
முதல் வாசகம்
நம்பிக்கை கொண்டோர் அனைவரும் ஒன்றாய் இருந்தனர்;
எல்லா உடைமைகளையும் பொதுவாய் வைத்திருந்தனர்.
(யோவா
20: 29)
நற்செய்தி வாசகம் |
|
பாஸ்கா காலம் இரண்டாம் ஞாயிறு I திருத்தூதர் பணிகள் 2: 42-47 II 1 பேதுரு 1: 3-9 III யோவான் 20: 19-31 நம்பிக்கையும் நம்வாழ்வும் நிகழ்வு ஜெர்மனியில் பிறந்து, தெற்காசியாவில் உள்ள சுமத்ராத் தீவில் ஆண்டவர் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, ஆயிரக்கணக்கான மக்களை அவர்மீது நம்பிக்கை கொள்ளச் செய்தவர் மிகப்பெரிய மறைப்பணியாளரான லுத்விக் நோம்மென்சென் (Ludwig Nommensen 1834-1918). இவர் 1862 ஆம் ஆண்டு, சுமத்ராத் தீவில் உள்ள படாக் மொழி பேசக்கூடிய மக்கள் நடுவில் நற்செய்தியை அறிவித்த வந்தபொழுது, அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர் இவரிடம், "எங்களுக்கென்று ஒரு மதம் உண்டு; பக்தி முயற்சிகளும் உண்டு. எங்களுடைய மதத்தை விடவும் பக்திமுயற்சிகளையும்விடவும் உங்களுடைய மதம் எந்தவிதத்தில் உயர்ந்தது?" என்றார். அதற்கு லுத்விக், "எங்களுடைய மதத்தைக் குறித்துப் பேசவேண்டும் என்றால், மணிக்கணக்காகப் பேசவேண்டும்" என்றார். உடனே அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர், "சரி, உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் அவகாசம் தருகின்றேன். இந்த இரண்டு ஆண்டுகளில் நீங்கள் உங்களுடைய மதத்தைப் பற்றி இங்கு போதிக்கலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மக்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால், நீங்கள் இங்கேயே இருந்து தொடர்ந்து உங்கள் மதத்தைப் பற்றிப் போதிக்கலாம். ஒருவேளை மக்களுடைய வாழ்க்கையில் எந்தவொரு மாற்றமும் முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றால், நீங்கள் இங்கு இருக்கக்கூடாது" என்றார். லுத்விக்கும் அவர் சொன்னதற்குச் சரியென்று ஒத்துக்கொண்டு ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அந்த மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார். லுத்வித் முதலில் அவர்கள் பேசிய படாக் மொழியைக் கற்றுக்கொண்டார். பின்னர் இவர் அவர்களுக்கு அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தார். இயேசுவைப் பற்றியும் அவருடைய போதனையைப் பற்றியும் கேள்விப்பட்ட அந்த மக்கள் மிகவும் வியந்தார்கள். லுத்விக் இதோடு நின்றுவிடாமல், மாலைநேரங்களில் அவர்களுடைய வீடுகளுக்குச் சென்று, அவர்களோடு பேசினார்கள்; அவர்களிடம் இருந்த நோயாளர்களைத் தனக்குத் தெரிந்த மருத்துவத்தைக் கொண்டு நலப்படுத்தினார்; எல்லாரிடத்திலும் அன்போடு பழகினார். இவையெல்லாம் அந்த மக்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. லுத்விக் சுமத்ராத் தீவிற்கு வந்து ஆறுமாதங்கள் இருக்கும். ஒருநாள் அந்த மக்கள்கூட்டத்தின் தலைவர் இவரிடம் வந்து, "உங்களுக்கு இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தேன்; ஆனால், நீங்கள் இங்கு வந்த ஆறு மாதங்களிலேயே இந்த மக்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் பார்க்கின்றேன். இப்பொழுது சொல்கிறேன், எங்களுடைய மதம், வழிபாடு, பக்தி முயற்சிகளை விட உங்களுடைய மதமும் போதனையும் மிக உயர்ந்தவை. இதனால் நீங்கள் இங்கேயே இருந்து, தொடர்ந்து நற்செய்தியை அறிவியுங்கள்" என்றார். லுத்விக்கும் அந்த மக்களோடு இருந்து, ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை தன்னுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் அறிவித்து ஆயிரக்கணக்கான மக்களை ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ஆம், நம்முடைய நம்பிக்கை பெயரளவில் இல்லாமல், ஆண்டவரில் வேரூன்றியதாக, செயல்வடிவம் பெறக்கூடியதாக இருந்தால், மற்றவர்களும் நம்மால் ஈர்க்கப்படுவார்கள். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டுதான் மேலே உள்ள நிகழ்வு. பாஸ்கா காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நம்முடைய நம்பிக்கையும் வாழ்வும் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். காணாமலே நம்பவேண்டும் யோவான் எழுதிய நற்செய்தி நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகம், நம்பிக்கையின் முதல்நிலையை நமக்கு எடுத்துச் சொல்கின்றது. அதுதான் காணாமலேயே நம்புவதாகும். ஆம், கண்டால்தான் நம்புவேன் என்பது நம்பிக்கையல்ல, காணாமலேயே நம்பவேண்டும் (எபி 11:1) அதுதான் நம்பிக்கையாகும். உயிர்த்த இயேசு தங்களுக்குத் தோன்றிய செய்தியை மற்ற சீடர்கள் தோமாவிடம் சொல்கின்றபொழுது, அவர் நம்ப மறுக்கின்றார். பின்னர் உயிர்த்த ஆண்டவரை அவர் கண்டபிறகு நம்புகின்றார். அப்பொழுதுதான் இயேசு அவரிடம், "நீ என்னைக் கண்டதால் நம்பினாய்; காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்" என்று கூறுகின்றார். ஆம், நாம் காணாமலே நம்பினோம் என்றால் பேறுபெற்றோர் ஆவோம். இது கடவுள் அவரை நம்புகின்றவருக்குக் கொடுக்கும் மிகப்பெரிய ஆசி. இன்றைகுப் பலர் கடவுளைக் கண்டால்தான் நம்புவோம் என்று அவநம்பிக்கையோடு பேசித் திரிக்கின்றார்கள். இத்தகையோர் கடவுள்மீது நம்பிக்கைகொண்டு, அவர் தருகின்ற ஆசியைப் பெற்றுக்கொள்வது நல்லது. நம்பிக்கை செயலில் வெளிப்படவேண்டும் திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், நம்பிக்கையின் இரண்டாவது நிலையை, அதாவது நம்பிக்கையானது பெயரளவில் இருந்துவிடாமல், செயல்வடிவில் இருக்கவேண்டும் என்பதை எடுத்துச் சொல்கின்றது. தொடக்கக்காலக் கிறிஸ்தவர்கள் திருத்தூதர்கள் கற்பித்தவற்றிலும் நட்புறவிலும் அப்பம்பிடுவதிலும் இறைவேண்டலிலும் நிலைத்திருந்தார்கள் என்று வாசிக்கின்றோம். இவர்கள் இப்படி இருந்ததால் இவர்களிடம் ஒன்றிப்பும் பகிர்வும் பெருகின. இதன் பயனாக இவர்கள் மக்களுடைய நன்மை மதிப்பைப் பெற்றார்கள். இறுதியில் மற்ற மக்கள் இவர்களோடு சேர்ந்தார்கள். ஆம், தொடக்கக்காலக் கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில் வேரூன்றிய வாழ்வு அல்லது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்த வாழ்வு, கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையை மேலும் மேலும் உயர்த்தியது. அப்படியானால், நாம் கிறிஸ்துவின்மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என்றால், அந்த நம்பிக்கைக்கு ஏற்றாற்போல் வாழவேண்டும். அப்பொழுதுதான் நம்மைப் பார்க்கக்கூடிய மக்கள் கிறிஸ்துவின் பால் ஈர்க்கப்படுவார்கள். ஏனென்றால் சொற்களை விட செயலே உரக்கப் பேசும். நம்பிக்கையில் நிலைத்திருக்கவேண்டும் திருத்தூதர் புனித பேதுரு எழுதிய முதல் நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகம், நம்பிக்கையின் மூன்றாம் நிலையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அதுதான் இயேசுவின் மீதுகொண்ட நம்பிக்கையில் துன்பங்களுக்கு நடுவிலும் நிலைத்திருப்பதாகும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு, அவருடைய வழியில் நடக்கின்றபோது அல்லது நம்பிக்கைக்குச் செயல்வடிவம் கொடுத்து வாழ்கின்றபோது துன்பங்கள் வரலாம்; சோதனைகள் வரலாம். இவற்றைக் கண்டு துவண்டுபோய்விடக் கூடாது. எப்படி பொன் நெருப்பினால் புடமிடப்படுகின்றதோ, அதைப் போன்று துன்பங்களால் நம்முடைய நம்பிக்கை புடமிடப்படும். அத்தகையே வேளையில் நாம் மனம் சோர்ந்துவிடாமல், உறுதியாக இருக்கவேண்டும் என்று புனித பேதுரு ஒவ்வொருவருக்கும் அறிவுரை கூறுகின்றார். இன்றைக்குப் பலர் ஒரு துன்பத்திற்குக்கூட, கிறிஸ்துவை விட்டு விலகிவிடுகின்றார்கள். இது உண்மையான கிறிஸ்துவ வாழ்க்கையாக இருக்காது. எத்தகைய துன்பம் வந்தாலும் கிறிஸ்துவில் உறுதியாக இருக்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்துவ வாழ்க்கையாகும். ஆகையால், நாம் நமது நம்பிக்கை வாழ்வில் எதிர்வருகின்ற துன்பங்களைக் கண்டு துவண்டுவிடாமல், இயேசு சொல்வதுபோல், இறுதிவரை மனவுறுதியுடன் இருப்போம். (மத் 24: 13) நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்மூலம் இயேசுவின் உண்மையான சீடர்களாவோம். சிந்தனை "கிறிஸ்துவ வாழ்க்கை கலங்கரை விளக்கு போன்றது. கலங்கரை விளக்கு எப்படி கடலில் பயணிப்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்கின்றதோ, அதுபோன்று கிறிஸ்தவர்கள் தங்களுடைய வாழ்க்கையால் மற்றவர்களைத் தன் பக்கம் ஈர்க்கவேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கை" என்பார் புகழ்பெற்ற மறைப்பணியாளராகிய டி.எல். மூடி என்பவர். ஆகையால், கிறிஸ்துவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்ற நாம், அந்த நம்பிக்கை பெயரளவுக்கு இல்லாமல், பெயர் சொல்லக்கூடிய அளவுக்கு இருக்குமாறு செய்வோம். நம்பிக்கையை வாழ்வாக்குவோம்; மற்றவரையும் ஆண்டவர் இயேசுவில் நம்பிக்கை கொள்ளச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |