maraikal
MUM
வாசகம்

 

                              பொதுக்காலம் 24 ம் வாரம் - 1ம் ஆண்டு

முதல் வாசகம்


இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா.

திருத்தூதர் பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 6: 13-16

அன்பிற்குரியவரே, அனைத்துக்கும் வாழ்வளிக்கும் கடவுளின் முன்னிலையிலும், பொந்தியு பிலாத்துவின் முன் விசுவாசத்தைச் சிறப்பாக அறிக்கையிட்ட இயேசு கிறிஸ்துவின் முன்னிலையிலும் உனக்குக் கட்டளையிடுகிறேன். நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தோன்றும் வரையில் குறைச் சொல்லுக்கு இடந்தராமல் இந்தக் கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா. உரிய காலத்தில் பேரின்பக் கடவுள் அவரைத் தோன்றச் செய்வார்.

கடவுள் ஒருவரே வேந்தர், அரசருக்கெல்லாம் அரசர், ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவர். அவர் ஒருவரே சாவை அறியாதவர்; அணுக முடியாத ஒளியில் வாழ்பவர்; அவரைக் கண்டவர் எவருமிலர்; காணவும் முடியாது. அவருக்கே என்றென்றும் மாண்பும் ஆற்றலும் உரித்தாகுக! ஆமென்.

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 100: 1-2. 3-4. 5 (பல்லவி: 2b) Mp3

பல்லவி: மகிழ்ச்சி நிறை பாடலுடன் ஆண்டவர் திருமுன் வாருங்கள்.

1 அனைத்துலகோரே! ஆண்டவரை ஆர்ப்பரித்து வாழ்த்துங்கள். 2 ஆண்டவரை மகிழ்ச்சியுடன் வழிபடுங்கள்! மகிழ்ச்சி நிறை பாடலுடன் அவர் திருமுன் வாருங்கள்! பல்லவி

3 ஆண்டவரே கடவுள் என்று உணருங்கள்! அவரே நம்மைப் படைத்தவர்! நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்! 4 நன்றியோடு அவர்தம் திருவாயில்களில் நுழையுங்கள்! புகழ்ப் பாடலோடு அவர்தம் முற்றத்திற்கு வாருங்கள்! அவருக்கு நன்றி செலுத்தி, அவர் பெயரைப் போற்றுங்கள்! பல்லவி

5 ஆண்டவர் நல்லவர்; என்றும் உள்ளது அவர்தம் பேரன்பு; தலைமுறைதோறும் அவர் நம்பத்தக்கவர். பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி


லூக் 8: 15

அல்லேலூயா, அல்லேலூயா! சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்கள் பேறுபெற்றோர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 4-15

அக்காலத்தில் பெரும் திரளான மக்கள் எல்லா ஊர்களிலிருந்தும் இயேசுவிடம் கூடி வந்தபோது அவர் உவமை வாயிலாகக் கூறியது: " விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைத்தபோது சில விதைகள் வழியோரம் விழுந்து மிதிபட்டன; வானத்துப் பறவைகள் வந்து அவற்றை விழுங்கி விட்டன.

வேறு சில விதைகள் பாறைமீது விழுந்தன; அவை முளைத்தபின் ஈரமில்லாததால் கருகிப் போயின.

மற்றும் சில விதைகள் முட்செடிகளின் நடுவே விழுந்தன; கூடவே வளர்ந்த முட்செடிகள் அவற்றை நெருக்கி விட்டன.

இன்னும் சில விதைகளோ நல்ல நிலத்தில் விழுந்தன. அவை வளர்ந்து நூறு மடங்கு விளைச்சலைக் கொடுத்தன.'' இவ்வாறு சொன்னபின், " கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்'' என்று உரக்கக் கூறினார்.

இந்த உவமையின் பொருள் என்ன என்று அவருடைய சீடர் அவரிடம் கேட்டனர். அதற்கு இயேசு கூறியது: " இறையாட்சியின் மறைபொருளை அறிய உங்களுக்குக் கொடுத்து வைத்திருக்கிறது. மற்றவர்களுக்கு எல்லாம் உவமைகள் வாயிலாகவே கூறப்படுகின்றன. எனவே `அவர்கள் கண்டும் காண்பதில்லை; கேட்டும் புரிந்து கொள்வதில்லை.'

இந்த உவமையின் பொருள் இதுவே: விதை, இறைவார்த்தை. வழியோரம் விழுந்த விதைகள், அவ்வார்த்தைகளைக் கேட்பவர்களுள் சிலரைக் குறிக்கும். அவர்கள் நம்பி மீட்புப் பெறாதவாறு அலகை வந்து அவ்வார்த்தையை அவர்கள் உள்ளத்திலிருந்து எடுத்துவிடுகிறது.

பாறைமீது விழுந்த விதைகள், அவ்வார்த்தையைக் கேட்கும்போது அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்பவர்களைக் குறிக்கும். ஆனால் அவர்கள் வேரற்றவர்கள்; சிறிது காலமே அவ்வார்த்தையை நம்புவார்கள்: சோதனைக் காலத்தில் நம்பிக்கையை விட்டுவிடுவார்கள்.

முட்செடிகளுக்குள் விழுந்த விதைகள், வார்த்தையைக் கேட்டும் கவலை, செல்வம், வாழ்வில் வரும் இன்பங்கள் போன்றவற்றால் நெருக்கப்பட்டு முதிர்ச்சி அடையாதிருப்பவர்களைக் குறிக்கும்.

நல்ல நிலத்தில் விழுந்த விதைகளோ, சீரிய நல் உள்ளத்தோடு வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்து, மன உறுதியுடன் பலன் தருகிறவர்களைக் குறிக்கும்.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
 

சிந்தனை

 
1 திமொத்தேயு 6: 2-12

“கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா”

நிகழ்வு

          முன்பொரு காலத்தில் ஆர்தர் (Arthur) என்றோர் அரசர் இருந்தார். அவர்க்கு மெர்லின் என்ற நண்பர் ஒருவர் இருந்தார். மெர்லின், அரசர் ஆர்தர்க்கு நல்ல நண்பராக இருந்தது மட்டுமல்லாமல், மிகச் சிறந்த ஆலோசகராகவும் இருந்து வந்தார். ஆர்தரும் தன்னுடைய நண்பர் மெர்லின் சொல்லக்கூடிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கேட்டு அதன்படி நடந்து வந்தார்.

ஒருநாள் ஆர்தர் ஒரு காட்டு வழியாகப் போகவேண்டி இருந்தது. அவர் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னம் மெர்லின் அவரிடம், “நண்பா! நீ போகிற காட்டுப் பாதையில் குள்ளன் (Dwarf) ஒருவன் இருப்பான். அவன் உன்னோடு சண்டை போடுவதற்கு வருவான். அவனை நீ முதலிலேயே கொன்றுவிடு; இல்லையென்றால் உனக்கு அவன் மிகப்பெரிய ஆபத்தாக இருப்பான்” என்றார். ஆர்தரும் சரியென்று சொல்லிவிட்டு குதிரையில் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார்.

தொடக்கத்தில் ஆர்தருடைய பயணம் எந்தவோர் இடையூறும் இல்லாமல் நன்றாக இருந்தது. திடீரென்று ஒரு புதருக்குள் இருந்து கையில் வாளோடு ஓடிவந்த குள்ளன், ஆர்தர்க்கு முன்னம் வந்து நின்று, “வா! நாம் இருவரும் சண்டை போடுவோம்” என்றான். ஆர்தர் அவனைப் பார்த்தபோது மிகவும் பரிதாபமாக இருந்தது. ‘போயும் போயும் இந்தக் குள்ளனோடா சண்டை போடுவது...? இது நம்முடைய தகுதிக்கு இழுக்கல்லவா...?’ என்று அமைதியாக இருந்தார். குள்ளனோ விடவில்லை. அவன் தன்னுடைய கையிலிருந்த வாளை நாலாபக்கமும் வீசி, ஆர்தரைத் தன்னொடு சண்டையிட வருமாறு அழைத்தான். வேறு வழியில்லாமல் ஆர்தர் அவனோடு சண்டைக்குத் தயாரானார். குள்ளன் தன்னிடம் இருந்த வாளை வீசிக்கொண்டு ஆர்தரை நோக்கி வேகமாக ஓடிவந்தான். ஆர்தரோ அவனுடைய தலையில் ஓங்கி ஒரு மிதி மிதித்து, அவனை நிலைகுலையச் செய்தார். பின்னர் ‘இவனைக் கொல்வது நமக்கு அவமானம்’ என்று ஆர்தர் அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டு, தான் போகவேண்டிய இடத்திற்குப் போய்விட்டு அரண்மனைக்குத் திரும்பினார்.

அன்றிரவு ஆர்தரைப் பார்க்க அவருடைய நண்பர் மெர்லின் வந்தார். “வழியில் எதிர்ப்பட்ட குள்ளனைக் கொன்றாயா?” என்று அவர் கேட்க “இல்லை. அவனைக் கொல்வது எனக்கு அவமானமாக இருந்தது. அதனால் நான் அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டேன்” என்றார் ஆர்தர். “நண்பா! நான் மீண்டுமாக உனக்குச் சொல்கின்றேன். அவனைக் கொன்றுவிடு” என்று மெர்லின் சொன்னதற்கு “சரி பார்த்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு ஆர்தர் அவரிடமிருந்து விடைபெற்றார்.

மறுநாளும் ஆர்தர்க்கு காட்டு பாதை வழியாகச் செல்லவேண்டி இருந்தது. அப்பொழுதும் குள்ளன் அவரை வழிமறித்து சண்டை போடுமாறு அழைத்தான். இந்த முறை அவன் சற்று உயர்ந்திருந்தான். ஆனாலும் அவனைக் கொல்வது பெரிய அவமானம் என்று நினைத்துக்கொண்டு ஆர்தர் அவனை ‘நாலு தட்டுத் தட்டி’ தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்தார். இப்படியே பல நாள்கள் நடந்தன. ஒவ்வொருநாளும் ஆர்தர் அந்தக் குள்ளனைப் பார்த்தபோதும் அவன் வளர்ந்துகொண்ட வந்தான். ஒருநாள் ஆர்தர் அவனைப் பார்த்தபோது அவன் அவரைவிட உயர்ந்திருந்தான். அன்றைக்கும் அவன் அவரைச் சண்டைக்கு அழைத்தான். இந்தமுறை அவர் அவனோடு மிகக் கவனமாகச் சண்டைபோடவேண்டி வந்தது. ஏனெனில், ஒருசில முறைகள் அவன் வாளை வீசியபோது அது  அவருடைய கைகளையும் கால்களையும் பதம்பார்த்தது. ஒருவழியாக ஆர்தர் அந்தக் குள்ளனை (இப்போது அசுரன்) தன்னுடைய வாளால் வெட்டி வீழ்த்தினார்.

இதற்கிடையில் மெர்லின், தன்னுடைய நண்பர் வெகுநேரமாகியும் திரும்பி வராததைக் கண்டு, அவரைத் தேடி வந்தார். அங்கு அவர் ஒரு மரத்தடியில் உடலெல்லாம் இரத்தக் காயங்களோடு கிடப்பதைக் கண்டு அதிர்ந்துபோய், அவரை அரண்மனைக்குத் தூக்கிக்கொண்டு வந்து மருத்துவம் பார்த்தார். இது நடந்து ஒருவாரம் கழித்து, ஆர்தர் தன் நண்பர் மெர்லினிடம். “நண்பா! நீ சொன்னதைக் கேட்டு அந்தக் குள்ளனை முதல் நாளிலேயே கொன்றிருந்தால், இப்படியெல்லாம் நடந்திருக்காது; என்னை மன்னித்துக் கொள்” என்றார். உடனே மெர்லின் அவரிடம், “பரவில்லை இருக்கட்டும்... இப்பொழுது நான் உனக்கு இன்னோர் அறிவுரையும் சொல்கின்றேன்: ‘நம்மிடம் தவறு இருக்கின்றது தெரிந்தால், அதனைத் தொடக்கத்திலேயே களைந்துவிடவேண்டும். இல்லையென்றால் அது நம்மை சாய்த்துவிடும்” என்றார்.

நல்ல ஆலோசனைகளை அல்லது அன்புக் கட்டளைகளை ஒருவர் கேட்டு நடக்கவில்லை என்றால், அவர் எப்படி அழிவைச் சந்திக்கின்றார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இக்கதை நமது சிந்தனைக்குரியது. முதல் வாசத்தில் பவுல் திமொத்தேயுவிடம் ‘கட்டளையை அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா’ என்கின்றார். எந்தக் கட்டளையைக் கடைப்பிடித்து வரச் சொல்கின்றார் என்பதை இப்பொழுத் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆண்டவரோடு ஒன்றித்து வாழுங்கள்    

புனித பவுல் திமொத்தேயுக்கு பல அறிவுரைகளைக் கூறுகின்றார். அவற்றில் சபைக் கண்கானிப்பாளராக இருந்து அவர் செய்யவேண்டியவையும் செய்யக்கூடாதவையும் அடங்கியிருக்கின்றன. எல்லாவற்றிற்கு இறுதியாக பவுல் அவரிடம் “கட்டளையைக் அப்பழுக்கின்றிக் கடைப்பிடித்து வா” என்று சொல்கின்றார். அப்பழுக்கின்றிக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டளை என்ன என்று நாம் தெரிந்துகொள்வதற்கு யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் வருகின்ற ஓர் இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது.

புனித யோவான் கூறுவார், “பிள்ளைகளே! அவர் தோன்றும்போது நாம் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கவும் அவருடைய வருகையின்போது வெட்கி விலகாதிருக்கவும் அவரோடு இணைந்து/ஒன்றித்து வாழுங்கள்” (1 யோவா 2: 28). நாம் ஒவ்வொருவரும் ஆண்டவரோடு ஒன்றித்து வாழவேண்டும் அதைத்தான் பவுல் திமொத்தேயுக்கும் நமக்கும் அப்பழுக்கின்றி கடைப்பிடித்து வாழவேண்டிய கட்டளையாகத் தருகின்றார். இந்தக் கட்டளையின்படி யாரெல்லாம் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்கின்றார்களோ, அவர்கள் ஆண்டவர் வரும்போது அதற்கான கைம்மாறு பெறுவார்கள் என்பது உறுதி.

சிந்தனை   

‘ஆண்டவரோடு ஒன்றித்து என்றும் மகிழுங்கள் (பிலி 4:4). என்பார் புனித பவுல். ஆகையால், நாம் ஆண்டவரோடு ஒன்றித்து வாழ்வோம்; அவரோடு ஒன்றித்து மகிழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
 

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். 


லூக்கா 8: 4-15

நல்ல நிலம் என்னும் நல்ல உள்ளம்

நிகழ்வு

          இங்கிலாந்தில் பிறந்த மிகச்சிறந்த கவிஞர் மற்றும் பேச்சாளர், ஜார்ஜ் ஹெர்பர்ட் (George Herber 1593-1633) என்பவர். இவர் இங்கிலாந்துத் திருஅவையில் போதகராகப் பணிபுரிந்து வந்தார். மக்கள் இவருடைய போதனையால் மட்டுமல்லாது, வாழ்வாலும் பெரிதும் ஈர்க்கப்பட்டார்கள்.

ஒருநாள் இவர் மாலை வேளையில், பக்கத்து நகரில் நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்றுகொண்டிருந்தார். வழியில், ஒரு பள்ளத்தில் பொருள்களைக் குதிரையில் ஏற்றுக்கொண்டு, ஊர் ஊராகச் சென்று விற்றுக்கொண்டு வந்த வணிகர் ஒருவர், குதிரையிலிருந்து கீழே விழுந்து கிடந்தார்; அவர் குதிரையின்மீது ஏற்றுக்கொண்டு வந்த பொருள்களோ கீழே சிதறிக் கிடந்தன.

இதைக் கண்டதும்  அவர் கீழே கிடந்த அந்த வணிகரைத் தூக்கிவிட்டு, சிதறிக் கிடந்த பொருள்களை எல்லாம் சேகரித்து, அவரிடம் கொடுத்து, அவர் போய்ச்சேரவேண்டிய இடத்திற்கு அனுப்பி வைத்தார்.  ஜார்ஜ் ஹெர்பர்ட் இவ்வாறு அந்த வணிகர்க்கு உதவும்போது, அவர் அணிந்திருந்த ஆடையில் சேறு படிந்தது. அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், தான் கலந்துகொள்ளவிருந்த இசைக் கச்சேரி நடைபெற இடத்திற்கு விரைந்து சென்று, அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அவருடைய ஆடை சேறு படிந்திருப்பதைக் கண்டு, அவருடைய நண்பர்கள், “என்ன நடந்தது? என்று காரணத்தைக் கேட்டார்கள். அவரோ நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் சொன்னார்.

அப்பொழுது அவருடைய நண்பர்களில் ஒருவர் அவரிடம், “நண்பரே! நீங்கள் அந்த மனிதர்க்கு உதவி செய்யவில்லை என்றால், உங்கட்கு பின்னால் வரக்கூடிய யாரோ ஒருவர் அவர்க்கு உதவி செய்திருப்பார். அப்படியிருக்கும்போது, எதற்காக நீங்கள் அந்த மனிதர்க்கு உதவிசெய்து, உங்களுடைய ஆடையை இப்படி சேறாக்கிக் கொண்டார்கள்?” என்றார். அதற்கு ஜார்ஜ் ஹெர்பர்ட் அவரிடம், “நான் அந்த மனிதர்க்கு உதவி செய்தது, ஒரு நல்ல இசையைக் கேட்டது போன்று இருந்தது. ஒருவேளை நான் மட்டும் அந்த மனிதர்க்கு உதவி செய்யாமல் இருந்திருந்தால், ஒரு மோசமான இசையைக் கேட்டது போன்று இருக்கும். அது மட்டுமல்லாமல், அந்த மோசமான இசை என் வாழ்நாள் முழுவதும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும். அதனால்தான் நான் அந்த மனிதர்க்கு உதவிசெய்தேன்” என்றார்.

இவ்வுலகில் நல்ல மனம்கொண்டவர்களாக, நல்லது செய்பவர்களாக வாழ்கின்றபோது அதில் கிடைக்கின்ற மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை... அத்தகைய வாழ்வு வாழ்கின்றவர்கட்கு இறைவன் எல்லாவிதமான ஆசியையும் தருவார் என்ற உண்மையை எடுத்துச் சொல்லும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியது. இன்றைய நற்செய்தி வாசகம், நல்ல நிலம் எனப்படும் நல்ல உள்ளத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தை எப்படிப் பலன் தருகின்றது என்பதையும் கெட்ட நிலம் எனப்படும் கெட்ட உள்ளத்தில் விதைக்கப்படும் இறைவார்த்தை எப்படிப் பலன் தராமல் போகின்றது என்பதையும் எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

நல்ல உள்ளம் இல்லாமல், நற்கனி கொடாமல் வாழ்பவர்கள்

          நற்செய்தியில் இயேசு சொல்லும் விதைப்பவர் உவமையானது இடம் பெறுகின்றது. இவ்வுவமையில் வருகின்ற முதல் மூன்று நிலங்களும் மூன்று வகையான உள்ளங்களைக் குறிப்பவையாக இருக்கின்றன. இதை வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், முதல் மூன்று நிலங்களும் கெட்ட உள்ளங்களைக் குறிப்பவையான இருக்கின்றன. வழியோர நிலம், மனிதர்களால் மிதிபட்டு மிதிபட்டு எப்படி இறுகிக் போகின்றதோ, அதுபோன்று, சிலர் எல்லாவிதமான கருத்துகளையும் உள்வாங்கிக்கொண்டு இறைவார்த்தை பயனளிக்கா வகையில் கல்நெஞ்சத்தவராக மாறிவிடுகின்றார்கள். மண்ணில்லாப் பாறைநிலம் எப்படி ஒரு செடியை ஆழமாக வளரவிடாது செய்கின்றதோ, அதுபோன்று சிலர் தொடக்கத்தில் இறைவார்த்தையை நன்றாகக் கேட்டாலும் சவால்களும் துன்பங்களும் வந்தவுடன் இறைவார்த்தையின்படி வாழாமல், தங்கள் விருப்படி அல்லது கெட்ட உள்ளம் கொண்டவர்களாக வாழத் தொடங்கி விடுகின்றார்கள்.

முட்செடி நிலமோ இன்னும் ஒருபடி மேலே சென்று, இறைவார்த்தை, உலகப் போக்கிலான வாழ்க்கை என்று இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொண்டு, கெட்ட உள்ளம் கொண்டவர்களைப் போன்று வாழ்ந்து அழிந்து போகின்றவர்களைக் குறிப்பதாக இருக்கின்றது. இவ்வாறு இந்த மூன்று நிலங்களைப் போன்ற உள்ளங்களைக் கொண்டிருப்பவர்கள் இறைவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், அதன்படி வாழாமல் கெட்ட உள்ளத்தினராகவே இருந்து அழிந்து போகின்றார்கள்.

நல்ல உள்ளம் கொண்டு, நற்கனி தருகின்றவர்கள்

மேலே நாம் பார்த்த மூன்று நிலங்களைப் போன்று இல்லாமல், நல்ல நிலம் போன்று இருப்பவர்கள்தான் நல்ல உள்ளம் படைத்தவர்கள். இவர்கள் இறைவார்த்தையைக் கேட்டு, அதனைச் சாவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் வாழக்கூடியவர்கள் அல்லது தங்களுடைய வாழ்வால் அடுத்தவர்க்கு நன்மையையும் இறைவனுக்குப் பெருமையும் சேர்ப்பார்கள். மேலே நாம் பார்த்த ஜார்ஜ் ஹெர்பர்ட்டும் அப்படித்தான். அவர் இறைவார்த்தையின் படி நல்ல உள்ளத்தினராய் வாழ்ந்து வந்தார். அதனால்தான் அவர் அடுத்தவர்க்கு நன்மையையும் இறைவனுக்குப் பெருமையும் சேர்த்து வந்தார்.

நாம் நல்ல உள்ளம் கொண்டவர்களாக, இறைவார்த்தையைக் கேட்டு அதன்மூலம் அயலார்க்கு நன்மையையும் இறைவனுக்குப் பெருமையும் சேர்ப்பது எப்போது? சிந்திப்போம்.

சிந்தனை

          ‘உம் கட்டளைகள் காட்டும் நெறியில் என்னை நடத்தும்; ஏனெனில், அதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ (திபா 119: 35) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், ஆண்டவரின் கட்டளைகளைக் கேட்டு, அதன்படி நல்ல உள்ளத்தினராய் வாழ்வோம். அதன்வழியாக  இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

-         மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.   

Free Blog Widget
Stats Counter
hit counter