முதல் வாசகம்
நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உலகப் போக்கிலான உங்கள்
இயல்புக்குரியவற்றை ஒழித்துவிடுங்கள்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 3: 1-11
சகோதரர் சகோதரிகளே, நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால் மேலுலகு
சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின் வலப் பக்கத்தில் அமர்ந்திருக்கிறார்.
இவ்வுலகு சார்ந்தவைபற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள்.
ஏனெனில் நீங்கள் கிறிஸ்துவோடு இறந்து விட்டீர்கள். உங்கள் வாழ்வு அவரோடு இணைந்து
கடவுளிடம் மறைந்து இருக்கிறது. கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர்
தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த் தோன்றுவீர்கள்.
ஆகவே உலகப் போக்கிலான உங்கள் இயல்புக்குரிய பரத்தைமை, ஒழுக்கக் கேடு, கட்டுக்கடங்காத
பாலுணர்வு, தீய நாட்டம், சிலை வழிபாடான பேராசை ஆகியவற்றை ஒழித்துவிடுங்கள். இவையே
கீழ்ப்படியா மக்கள்மீது கடவுளின் சினத்தை வரவழைக்கின்றன. இத்தகையவர்களோடு நீங்கள்
வாழ்ந்தபோது நீங்களும் இவற்றில்தான் உழன்றீர்கள்.
ஆனால் இப்பொழுது நீங்கள் சினம், சீற்றம், தீமை ஆகிய அனைத்தையும் அகற்றிவிடுங்கள்.
பழிப்புரை, வெட்கக்கேடான பேச்சு ஆகிய எதுவும் உங்கள் வாயினின்று வரக்கூடாது. ஒருவரோடு
ஒருவர் பொய் பேசாதீர்கள்.
ஏனெனில் நீங்கள் பழைய மனித இயல்பையும் அதற்குரிய செயல்களையும் களைந்துவிட்டு, புதிய
மனித இயல்பை அணிந்திருக்கிறீர்கள். அவ்வியல்பு தன்னை உண்டாக்கினவரின் சாயலுக்கேற்பப்
புதுப்பிக்கப்படுகிறது. இவ்வாறு நீங்கள் கடவுளை முழுமையாய் அறிய முடியும்.
புதுப்பிக்கப்பட்ட நிலையில் கிரேக்கர் என்றும், யூதர் என்றும், விருத்தசேதனம் பெற்றவர்
என்றும், விருத்தசேதனம் பெறாதவர் என்றும், நாகரிகம் அற்றோர் என்றும், சீத்தியர் என்றும்,
அடிமை என்றும், உரிமைக் குடிமக்கள் என்றும் வேறுபாடு இல்லை. கிறிஸ்துவே அனைவருள்ளும்
அனைத்துமாய் இருப்பார்.
இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.
பதிலுரைப்
பாடல்
திபா 145: 2-3. 10-11. 12-13ab (பல்லவி: 9a)
(mp3)
பல்லவி: ஆண்டவர் எல்லாருக்கும் நன்மை செய்பவர்.
2 நாள்தோறும் உம்மைப் போற்றுவேன்; உமது பெயரை என்றும் எப்பொழுதும் புகழ்வேன். 3 ஆண்டவர்
மாண்புமிக்கவர்; பெரிதும் போற்றுதலுக்கு உரியவர்; அவரது மாண்பு நம் அறிவுக்கு எட்டாதது.
பல்லவி
10 ஆண்டவரே, நீர் உருவாக்கிய யாவும் உமக்கு நன்றி செலுத்தும்; உம்முடைய அன்பர்கள்
உம்மைப் போற்றுவார்கள். 11 அவர்கள் உமது அரசின் மாட்சியை அறிவிப்பார்கள்; உமது வல்லமையைப்
பற்றிப் பேசுவார்கள். பல்லவி
12 மானிடர்க்கு உம் வல்லமைச் செயல்களையும் உமது அரசுக்குரிய மாட்சியின்
பேரொளியையும் புலப்படுத்துவார்கள். 13யb உமது அரசு எல்லாக் காலங்களிலும் உள்ள அரசு;
உமது ஆளுகை தலைமுறை தலைமுறையாக உள்ளது. பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 6: 23ab
அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக்
கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.
நற்செய்தி
வாசகம்
ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக்
கேடு!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26
அக்காலத்தில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: "ஏழைகளே, நீங்கள்
பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே.
இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு
பெறுவீர்கள்.
இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.
மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று
இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து
கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு
மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.
ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.
இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள்.
இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள்.
மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில்
அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்."
இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி. |
|
மறையுரை சிந்தனை கொலோசையர் 3: 1-11
“மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்”
நிகழ்வு
அது ஒரு கிராமத்துப் பங்கு. அந்தப் பங்கில் இளங்குரு ஒருவர் பங்குத்தந்தையாகப் பணியாற்றி
வந்தார். அந்தப் பங்கில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இருந்தார்கள். ஆனால், கோயிலுக்கு
வெகு சொற்பமானவர்கள்தான் வந்தார்கள். இது அந்த இளங்குருவிற்கு மிகுந்த வேதனையைத் தந்தது.
ஆதலால், அவர் பங்கு மக்களை கோயிலுக்கு வரவைப்பதற்கு எவ்வளவோ முயற்சிகள் செய்து
பார்த்தார்; திருப்பலியின் முக்கியத்துவத்தையும் நற்கருணை விருந்தில் கலந்துகொள்வதால்
கிடைக்கக்கூடிய ஆசியையும் அவர்கட்கு எடுத்துச் சொன்னார். அப்படியிருந்தும் மக்கள்
கோயிலுக்கு வருவதாக இல்லை.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான அந்த இளங்குரு தன்னுடைய ஆன்ம குருவிடம் இது தொடர்பாக
ஆலோசனை கேட்டார். ‘நான் சொல்வது போன்று செய்... நிச்சயம் கோயில் நிரம்பி வழியும்
அளவுக்கு மக்கள் வருவார்கள்” என்று ஆன்மகுரு அந்த இளங்குருவிற்கு ஆலோசனை சொல்லி அனுப்பி
வைத்தார்.
இதற்குப் பின்பு வந்த ஞாயிற்றுக்கிழமைத் திருப்பலியின்போது அவர் மக்களிடம்,
“அன்பார்ந்த மக்களே! ஒரு முக்கியமான விசயத்தை உங்களிடம் நான் சொல்லப்போகிறேன். இனிமேல்
வருகின்ற ஞாயிற்றுக்கிழமையிலிருந்து முழுத் திருப்பலி காண்பவர்கட்கு பத்துக் கிலோ
கோதுமை பரிசாகத் தரப்படும்” என்றார். இதைக் கேட்டு மக்கள் ‘முழு திருப்பலி காண்பதால்
பத்துக் கிலோ கோதுமையா...? நன்றாக இருக்கின்றதே! என்று அடுத்த ஞாயிற்றுக்கிழமைத்
திருப்பலிக்கு கோயில், அதை ஒட்டியிருந்த மண்டபம் நிரம்பி வழியும் அளவுக்கு வந்தார்கள்.
அப்பொழுது பங்குத்தந்தை அவர்களைப் பார்த்துச் சொன்னார்: “இத்தனை நாள்களும் பரலோக இராஜ்ஜியம்
என்ற விண்ணகத்தைக் குறித்துப் போதித்துக்கொண்டிருந்தேன்... அப்பொழுதெல்லாம் வராத
நீங்கள், பத்துக் கிலோ கோதுமை பரிசாகத் தரப்படும் என்று சொன்னதும் இப்படிக் கோயில்
நிரம்பி வழியும் அளவுக்கு வந்திருக்கிறீர்களே! இப்பொழுது உங்களுடைய நாட்டம் படைத்தவர்மீது
அல்ல, பத்துக்கிலோ கோதுமையில்தான் இருக்கின்றது என்று நன்றாகப் புரிகின்றது.
கிறிஸ்துவர்களாக இருந்துகொண்டு இப்படியெல்லாம் இருப்பதற்கு நீங்கள் வெட்கப்படவேண்டும்.”
இப்படிச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து அவர் அவர்களிடம், “முதலில் ஆண்டவர்க்கு உரியவற்றையும்
மேலுலகு சார்ந்தவற்றையும் நாடுகள். அப்பொழுது எல்லாம் சேர்த்துக் கொடுக்கப்படும்.”
பங்குத்தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு எல்லாரும் வெட்கித் தலைகுனிந்து
நின்றார்கள். அதேநேரத்தில் தங்களுடைய தவறை நினைத்து மனம்வருந்தி, ‘இனிமேலும் இப்படிப்பட்ட
தவறினைச் செய்ய மாட்டோம்’ என்று ஒருமித்த குரலில் உறுதிபூண்டார்கள்.
கிறிஸ்தவர்கள் என்றால், இவ்வுலகு சார்ந்தவர்களாய் வாழக்கூடாது. மாறாக, தங்களுடைய பெயர்க்குக்
ஏற்றாற்போல் மேலுலகு சரந்தவர்களாய், ஆண்டவர்க்கு உகந்தவர்களாய் வாழவேண்டும் என்ற அழைப்பினைத்
தரும் இந்த நிகழ்வு நமது சிந்தனைக்குரியதாக இருக்கின்றது. முதல் வாசகத்தில் பவுல்
கொலோசை மக்களைப் பார்த்து, “மேலுலகு சார்ந்தவற்றை நாடுகள்” என்றோர் அழைப்பைத் தருகின்றார்.
அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இவ்வுலகு சார்ந்தவற்றை நாடுதலும் அதற்குக் கிடைக்கும் தண்டனைகளும்
புனித பவுல் கொலோசை மக்களிடம், ‘நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு நாடுங்கள்’ என்று சொல்கின்றாரே, அப்படியானால் கீழுலகு அல்லது இவ்வுலகு
சார்ந்தவை எவை, மேலுலகு எவை என்ற தெளிவு நமக்கு இருக்கவேண்டும். இப்பொழுது இவ்வுலகு
சார்ந்தவை எவை? அவற்றின் படி நடப்பதால் ஒருவர்க்குக் கிடைக்கும் தண்டனை என்ன? இவற்றைக்
குறித்துப் பார்ப்போம்.
புனித பவுல் இவ்வுலகு சார்ந்தவையாக, பரத்தமை, ஒழுக்கக்கேடு, கட்டுக்கடங்காத பாலுணர்வு...
என்று அடுக்கிக் கொண்டே போகின்றார். இவையும் இவற்றோடு சேர்ந்தவையும் உலகு சார்ந்த
வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்க்கை வாழ்வோர் கடவுளின் சினத்திற்கு ஆளாவர் என்கின்றார்
பவுல். சோதோம், கொமோராவில் இருந்தவர்கள் இப்படித்தான் உலகப் போக்கிலான வாழ்க்கை
வாழ்ந்து வந்தார்கள். இதனால் அவர்கள் கடவுளின் சினத்திற்கு ஆளானார்கள் (தொநூ 19).
நாம் இத்தகையோரைப் போன்று இருக்கின்றோமா? என்று நம்மை நாம் தன்னாய்வுக்கு உட்படுத்திப்
பார்ப்பது நல்லது
மேலுலகு சார்ந்தவற்றை நாடுதலும் அதற்குக் கிடைக்கும் வெகுமதியும்
உலகப் போக்கிலான வாழ்க்கையையும் அதனால் விளையும் அழிவுகளையும் குறித்துப் பேசிய
புனித பவுல், தொடர்ந்து மேலுலகு சார்ந்த வாழ்க்கையையும் அதனால் ஒருவர் பெறுகின்ற ஆசியையும்
குறித்துப் பேசுகின்றார்.
மேலுலகு சார்ந்தவற்றை நாடுதல் என்பதை, புனித பவுல், தூய ஆவியாரின் கனிகளாகச்
சொல்கின்ற அன்பு, பரிவு, பொறுமை, நம்பிக்கை, அமைதி, கனிவு... (கலா 5: 22, 23) போன்ற
பண்புகளைக் கடைப்பிடித்து, புனித இயல்பை அணிந்துகொண்டு, மறுகிறிஸ்துவாக வாழ்தல் என்று
பொருள் எடுத்துக் கொள்ளலாம். இத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கின்றபோது கடவுளை
முழுமையாய் அறிய முடியும் என்கின்றார் அவர். கடவுளை முழுமையாய் அறிதல் என்பது எத்தகைய
பெரிய பேறு!. இத்தகைய பேற்றினை நாம் பெற, மேலுலகு சார்ந்தவற்றை நாடுவது மிகவும் இன்றியமையாததது.
சிந்தனை
ஆகவே, அனைத்திற்கும் மேலாக அவரது ஆட்சியையும் அவர்க்கு ஏற்புடையவற்றையும் நாடுங்கள்.
அப்பொழுது இவையனைத்தும் உங்கட்குச் சேர்த்துக் கொடுக்கப்படும்' (மத் 6: 33) என்பார்
இயேசு. ஆகையால், நாம் கடவுளுடைய ஆட்சியை, அதாவது மேலுலகு சார்ந்தவற்றை நாடுவோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
|
|