" |
பொதுக்காலம் 23 ஆம் வாரம் 10-09-2020 |
|
முதல் வாசகம்
நீங்கள் வலுவற்ற மனச்சான்றைக் காயப்படுத்திச் சகோதரர் சகோதரிகளுக்கு
எதிராகப் பாவம் செய்தால், அது கிறிஸ்துவுக்கே எதிரான பாவம் ஆகும். |
|
1 கொரிந்தியர் 8: 1b-7, 11-13 "கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை" நிகழ்வு தென்னாப்பிரிக்காவைச் சார்ந்தவர் மறைப்பணியாளரான ஜான் தாமஸ் (1871-1921) இவர் இந்திய மண்ணிற்கு வந்து, கடவுளின் வார்த்தையை அறிவித்துப் பலரையும் கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டுவந்தவர். ஒருநாள் இவர் ஒரு கிராமச் சாலை வழியாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, சிலர் ஒரு சிலைக்கு முன்பாக விழுந்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் செய்த செயல்களை மிகவும் வியப்போடு பார்த்த இவர், அவர்களுக்குச் முன்பாகச் சென்று, "நீங்கள் வழிபடுகின்ற இந்தச் சிலை இருக்கின்றதே! இதற்குக் கண்கள் உண்டு; பார்ப்பது கிடையாது. காதுகள் உண்டு; கேட்பது கிடையாது. கைகள் உண்டு; யாரையும் தொடுவது கிடையாது. மூக்கு உண்டு; நுகர்வது கிடையாது. வாயுண்டு; பேசுவது கிடையாது" என்றார். மறைப்பணியாளரான ஜான் தாமஸ் இப்படிச் சொன்னதுதான் தாமதம், சிலைக்கு முன்பாக விழுந்து வணங்கிக்கொண்டிருந்த அந்த மனிதர்கள், "நீங்கள் சொல்வது உண்மைதான். இப்பொழுது நாங்கள் என்ன செய்யவேண்டும்?" என்று கேட்டபொழுது இவர் அவர்களிடம், "உங்களைக் காண்கின்ற, உங்கள் குரல் கேட்கின்ற, உங்களோடு பேசுகின்ற, உங்களைத் தொட்டு ஆசி வழங்குகின்ற உயிருள்ள கடவுளாகிய ஆண்டவர் இயேசுவிடம் நம்பிக்கை கொள்ளுங்கள்" என்றார். அவர்களும் இயேசுவின்மீது நம்பிக்க கொள்ள, ஜான் தாமஸ் அவர்களுக்கு அந்த இடத்திலேயே திருமுழுக்குக் கொடுத்து, அவர்களைக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளச் செய்தார். ஆம், நம் நிலையைக் காண்கின்ற, நம் குரலைக் கேட்கின்ற, நம்மோடு பேசுகின்ற, நமக்கு ஆசி வழங்குகின்ற கடவுள் ஒருவரே, அவர்தான் நம் ஆண்டவர் இயேசு. அவரிடத்தில் நாம் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தால், நம்முடைய வாழ்வு சிறக்கும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், "கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை" என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்டுவந்த கொரிந்து நகர் மக்கள் இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், கொரிந்து நகரில் ஏற்பட்ட, சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை உண்ணுதல்" என்ற பிரச்சனையைக் குறித்துப் பேசுகின்றார். எருசலேம் நகரில் நடந்த பொதுச்சங்கத்தில், "சிலைகளுக்குப் படைக்கப்பட்டவை, இரத்தம், கழுத்து நெறிக்கப்பட்டுச் செத்தவை மற்றும் பரத்தமை ஆகியவற்றைத் தவிர்த்து உங்களைக் காத்துக் கொள்வது நல்லது" (திப 15: 29) என்று சொல்லப்பட்டது. ஆனாலும்கூட, கொரிந்து நகரில் இருந்த மக்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்டு வந்தார்கள். கொரிந்து நகரில் இருந்தவர்கள், சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றை உண்பதைத் தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலையும் இருந்தது. அது என்னவெனில், பல இனத்தவரும் நெருக்கமாக வாழ்ந்து வந்த கொரிந்து நகரில், பிற இனத்தைச் சார்ந்த ஒருவர், தன்னுடைய தெய்வத்திற்குப் படைக்கப்பட்ட உணவை, கிறிஸ்தவரிடம் கொடுக்க, அதை அவர் உண்ணாமல் இருக்க முடியவில்லை. அப்படி உண்ணாமல் இருப்பது, பிற இனத்தவரை அவமதிப்பது போன்று கருதப்பட்டது. இதை நாம் எதற்கு ஒப்பிடலாம் எனில், நமக்குத் தெரிந்த வேற்று மதத்தைச் சார்ந்த ஒருவர், தன்னுடைய வீட்டில் நடக்கும் முக்கியமான நிகழ்வுக்கு நம்மை அழைத்திருக்க, நாம் அதற்குப் போகாமல் இருப்பதற்கு ஒப்பானது. இதனாலேயே கொரிந்து நகரில் இருந்த கிறிஸ்தவர்கள், பிற இனத்தவர் தந்த சிலைகளுக்குப் படைக்கப்பட்ட உணவை எல்லாரும் கிடையாது, ஒருசிலர் உண்டு வந்தார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் புனித பவுல், "இவ்வுலகில் சிலை என்பது ஒன்றுமேயில்லை; கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை" என்கின்றார். யாரும் யாருக்கும் தடைக்கல்லாக இருக்கவேண்டாம் கடவுள் ஒருவரன்றி வேறு தெய்வங்கள் இல்லை என்று சொன்ன பவுல், "ஒருவருக்கு நான் உண்ணும் உணவு ஒரு தடைக்கல்லாக இருக்குமானால், இறைச்சியை ஒரு நாளும் உண்ண மாட்டேன்" என்கின்றார். புனித பவுல் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளில், ஒரு முக்கியமான செய்தி அடங்கியிருக்கின்றது. அது என்னவெனில், நாம் செய்யக்கூடிய செயல், அது சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்பதாக இருக்கட்டும், வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அது ஒருவருக்குத் தடைக்கல்லாக இருக்குமானால், அதை நாம் நம்மிடமிருந்து தவிர்க்கவேண்டும். இச்செய்தியைப் புனித பவுல் கொரிந்து நகரில் இருந்த மக்களுக்கு எடுத்துக்கூறி, அவர்கள் சிலைகளுக்குப் படைக்கப்பட்டதை உண்பது பிறருக்குத் தடைக்கல்லாக இருக்குமானால், அதைத் தவிர்ப்பது நல்லது என்று கூறுகின்றார். நமது வாழ்க்கை, நாம் செய்யக்கூடிய செயல் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டுமே ஒழியே, தடைக்கல்லாக இருக்கக்கூடாது. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் கடவுளை முழுமையாக அன்புசெய்து, அவர் காட்டும் வழியில் நடந்து, எல்லாருக்கும் எடுத்துக்காட்டாய் இருப்போம் சிந்தனை "நம் கடவுளாகிய ஆண்டவர் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும், உன் முழு உள்ளத்தோடும், உன் முழு ஆற்றலோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக!" (இச 6: 4-5) என்கிறது இணைச்சட்ட நூல். ஆகையால், நாம் கடவுளாகிய ஆண்டவரை முழுமையாக அன்பு செய்து, அவர் ஒருவருக்கு என்றும் நம்பிக்கைக்குரியவர்களாக இருந்து, அவரது வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
லூக்கா 6: 27-38 "உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" நிகழ்வு ஒரு நகரில் ஒருவர் மளிகைக் கடை நடத்திவந்தார். இவர் மளிகைக் கடை வைத்திருந்த பகுதியில் வேறு யாரும் கடை வைத்திராததால், இவருடைய வியாபாரம் நன்றாக ஓடியது; இவரது வாழ்க்கையும் மகிழ்ச்சிகரமாகச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஒருவர் இவருடைய கடைக்கு முன்பாகப் பல்பொருள் அங்காடி ஒன்றைக் கட்டித் தொழில் செய்யத் தொடங்கினார். மட்டுமல்லாமல், அவர் இவரிடம், "இன்னும் ஓராண்டுக்குள் உன்னுடைய கடையை இங்கு இல்லாமல் செய்துகாட்டுகின்றேன்" என்று சவால்விட்டார்; இவரைப் பற்றித் தவறாகவும் மற்றவரிடம் பேசத் தொடங்கினார். இது பல ஆண்டுகளாக அப்பகுதியில் கடை நடத்தி வந்த இவருக்கு பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. இவர் என்ன செய்தவதென்று தெரியாமல் புலம்பினார். அப்பொழுது இவருக்குத் தன் சிறுவயதிலிருந்தே அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் சொல்லும் பெரியவரின் ஞாபகம் வந்தது. உடனே இவர் அந்தப் பெரியவரிடம் சென்று, தனது பிரச்சனைகளை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டிருந்த பெரியவர் இவரிடம், "தம்பி! நீ உன் கடைக்கு முன்பாக புதிதாகப் பல்பொருள் அங்காடியைக் கட்டி, ஒருவர் தொழில் செய்து வருகின்றார் அல்லவா! அவருக்காக இறைவனிடம் வேண்டு! மட்டுமல்லாமல், ஒவ்வொருநாளும் நீ உன் கடையைக் திறந்ததும், உன் கடைக்கு ஆசி கூறுவதுபோல், அவருடைய கடையைப் பார்த்தும் ஆசி கூறு" என்றார். பெரியவர் இப்படிச் சொன்னதும், இவர், "என்ன! என்னுடைய பிழைப்பைக் கெடுப்பதற்காகவே பல்பொருள் அங்காடியைத் திறந்து வைத்திருக்கும்... என்னைப் பற்றித் தரக்குறைவாகப் பேசும்... அந்த மனிதருக்காக நான் இறைவனிடம் வேண்டி, அவருக்கு ஆசி கூறுவதா...? இது என்ன சுத்தப் பைத்தியக்காரத்தனமாக இருக்கின்றதே!" என்றார். "நான் சொல்வது போல் செய்! அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பார்" என்று பெரியவர் இவரிடம் வலியுறுத்திக் கூறியதும், அமைதியாகச் சென்றார். பின்னர் இவர் பெரியவர் தன்னிடம் சொன்னதுபோன்று, ஒவ்வொருநாள் காலையிலும் தன்னுடைய கடையைத் திறந்தது, தனக்காகவும் தன்னுடைய கடைக்காகவும் வேண்டிவிட்டு, கடையை விட்டு வெளியே வந்து, எதிரில் இருந்த பல்பொருள் அங்காடிக்காகவும், அதை நடத்தி வந்தவருக்காகவும் இறைவனிடம் வேண்டிவிட்டு, ஆசி கூறினார். இப்படியே ஆறுமாதங்கள் நகர்ந்தன. ஆறு மாதங்கள் கழிந்து இவர் பெரியவரிடம் மிகவும் மகிழ்ச்சியாகச் சென்று, "ஐயா! நீங்கள் சொன்னதுபோன்று நான் செய்தேன். இப்பொழுது நான் அந்தப் பல்பொருள் அங்காடிக்கும் பொறுப்பாளர். ஆம், நான் அந்த மனிதருக்காக வேண்டுவதையும், அவருக்கு ஆசிகூறுவதையும் பார்த்துவிட்டு, "இப்படியொரு மனிதருக்கா நான் கெடுதல் செய்ய நினைத்தேன்!" என்று தான் நடத்தி வந்த பல்பொருள் அங்காடியை என்னிடம் மிகக் குறைந்த விலையில் விற்றுவிட்டுப் போய்விட்டார்" என்றார். இச்செய்தியைக் கேட்டுப் பெரியவர் பெரிதும் மகிழ்ந்தார். ஆம், நாம் நம்மை இகழ்ந்து பேசுவோருக்காக, சபிப்போருக்காக இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, அது நிச்சயம் பலன் கொடுக்கும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. நற்செய்தியில் இயேசு, உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள் என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். இகழ்ந்தோருக்காக இயேசு வேண்டினார்; ஆதலால் நாமும் வேண்டவேண்டும் நம்மை இகழ்வோரைப் பதிலுக்கு இகழ்வதுதான் உலக வழக்கு. ஆனால், ஆண்டவர் இயேசு இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டச் சொல்கின்றார். இயேசு ஏன் இப்படிச் சொல்கின்றார் எனக் கேள்வி எழலாம். நம்மை இகழ்வோரை நாம் பதிலுக்கு இகழ்ந்துகொண்டிருந்தால், பிரச்சனை மேலும் பெரிதாகுமே அன்றி, அமைதி ஏற்படுவதற்கு வழியில்லை. மாறாக, நம்மை இகழ்வாருக்காக நாம் இறைவனிடம் வேண்டும்பொழுது, மேலே வரும் நிகழ்வில் ஏற்பட்ட அமைதி ஏற்படும். மேலும் நம்மை இகழ்வோரை நாம் ஏன் இகழாமல், அவருக்காக இறைவனிடம் வேண்டவேண்டும் எனில், இயேசு தன்னை இகழ்ந்தவர்களுக்காக இறைவனிடம் வேண்டினார் (லூக் 23: 34), நாமும் நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, இயேசுவின் உண்மையான சீடர்களாக மாறுகின்றோம்; விண்ணகத் தந்தையைப் போன்று நிறைவுள்ளவர்களாகவும் ஆகின்றோம். ஆகையால், நாம் நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டி, அவரது வழியில் நடப்பவர்கள் ஆவோம். சிந்தனை "வன்முறையாலோ ஆயுதங்களாலோ ஒருபோதும் மனிதனின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது" என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால். ஆகையால், நாம் இயேசுவும், திருத்தந்தை அவர்களும் சொல்லும் உண்மையை உணர்ந்தவர்களாய் பகைமையை அகற்றி, அன்போடு வாழ்வோம்; நம்மை இகழ்வோருக்காக இறைவனிடம் வேண்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |