maraikal
MUM
"


பொதுக்காலம் 23 ஆம் வாரம்  09-09-2020

முதல் வாசகம்

மணமானோர் மணவிலக்குக்கு தேடக்கூடாது; மணமாகாதோர் திருமணம் செய்துகொள்ள வழி தேடக்கூடாது.

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 7: 25-31

சகோதரர் சகோதரிகளே,

மணமாகாதவர்களைக் குறித்துப் பார்ப்போம். இவர்களைப் பற்றிய ஆண்டவரின் கட்டளை எதுவும் என்னிடம் இல்லை. எனினும், ஆண்டவரின் இரக்கத்தால் நம்பிக்கைக்குரியவனாய் இருக்கும் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது. இப்போதுள்ள இடர் நிலையை முன்னிட்டு இவ்வாறு இருப்பதே நல்லதென எண்ணுகிறேன். மனைவியுடன் திருமணத்தால் இணைக்கப்பட்டு இருப்பவர்கள் மணவிலக்குக்கு வழி தேடக் கூடாது; மனைவியுடன் இணைக்கப்படாதவர்கள் திருமணம் செய்து கொள்ள வழி தேடக் கூடாது. நீங்கள் திருமணம் செய்து கொண்டால் அது பாவமல்ல. இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டால் அதுவும் பாவமல்ல. ஆனால் திருமணம் செய்து கொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர். நீங்கள் அவ்வின்னல்களுக்கு உள்ளாகாதிருக்க வேண்டும் என்பதே என் நோக்கம்.

அன்பர்களே, நான் சொல்வது இதுவே: இனியுள்ள காலம் குறுகியதே. இனி மனைவி உள்ளவரும் மனைவி இல்லாதவர்போல இருக்கட்டும். அழுபவர் அழாதவர் போலவும், மகிழ்ச்சியுறுவோர் மகிழ்ச்சியற்றவர் போலவும், பொருள்களை வாங்குவோர் அவை இல்லாதவர் போலவும் இருக்கட்டும். உலகச் செல்வத்தைப் பயன்படுத்துவோர் அவற்றில் முழுமையாக ஈடுபடாதவர் போல் இருக்கட்டும். இவ்வுலகு இப்போது இருப்பது போல் நெடுநாள் இராது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 45: 10-11. 13-14. 15-16 . (பல்லவி: 10a) Mp3

பல்லவி: கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேளாய்!
10
கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு.
11
உனது எழிலில் நாட்டங் கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! - பல்லவி

13
அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள்.
14
பல வண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். - பல்லவி

15
மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர்.
16
உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெல்லாம் இளவரசர் ஆக்கிடுவீர். - பல்லவி

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
லூக் 6: 23ab

அல்லேலூயா, அல்லேலூயா! துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

ஏழைகளே நீங்கள் பேறு பெற்றோர்; செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!

✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 6: 20-26

அக்காலத்தில்

இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை: "ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில் நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள்.

மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்து வந்தனர்.

ஆனால் செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள். இப்போது உண்டு கொழுத்திருப்போரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் பட்டினி கிடப்பீர்கள். இப்போது சிரித்து இன்புறுவோரே, ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் துயருற்று அழுவீர்கள். மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்."

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

 1 கொரிந்தியர் 7: 25-31

"திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்"

நிகழ்வு



ஸ்பெயின் நாட்டில் பிறந்து, தோமிக்கன் சபையில் சேர்ந்து, பின்னாளில் புனிதராக உயர்த்தப்பட்டவர் புனித வின்சென்ட் ஃபெரர் (1350-1419). ஒருநாள் இவரிடம் ஒரு பெண்மணி வந்தார். அவர் இவரிடம், "என்னுடைய கணவர் எப்பொழுதும் என்மேல் எரிந்து எரிந்து விழுகின்றார். என்னிடம் அவர் சரியாகவே பேசுவதில்லை. இப்பிரச்சனைக்கு ஒரு தீர்வு தாருங்கள்" என்றார்.

உடனே வின்சென்ட் ஃபெரர் அவரிடம், "ஊருக்கு வெளியே ஒரு துறவுமடம் இருக்கின்றது. அந்தத் துறவுமடத்தின் வாசலில் ஒரு துறவி இருப்பார். நீங்கள் அவரிடத்தில் சென்று, "இந்தத் துறவுமடத்தில் கிணறு ஒன்று இருக்கின்றதாமே! அது எங்கே இருக்கின்றது?" என்று கேளுங்கள். அவர் அந்தக் கிணற்றைச் சுட்டிக்காட்டுவார். அது சாதாரண கிணறு கிடையாது; அதிசயக் கிணறு. அந்தக் கிணற்றிலிருந்து நீங்கள் தண்ணீர் மொண்டு கொள்ளுங்கள். பின்னர் உங்களுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்குச் சிறிதுநேரத்திற்கு முன்பு, கிணற்றிலிருந்து மொண்டுசென்ற தண்ணீரை, உங்கள் வாயிற் ஊற்றிக்கொண்டு, அதை விழுங்கிவிடாமல் அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். இப்படியே சில நாள்களுக்குச் செய்து வாருங்கள். அதன்பிறகு என்ன நடக்கின்றது என்று பாருங்கள்" என்று சொல்லி அனுப்பி வைத்தார்.

அந்தப் பெண்மணியும் வின்சென்ட் ஃபெரர் தன்னிடத்தில் சொன்னதுபோன்று துறவுமடத்திலிருந்த "அதிசயக் கிணற்றிலிருந்து" தண்ணீர்மொண்டு வந்து, அதைத் தன்னுடைய கணவர் வேலையை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வருவதற்கு முன்பாக, வாயில் ஊற்றிக்கொண்டு பொறுமையாக இருந்தார். வேலையை முடித்துக்கொண்டு வந்த அந்தப் பெண்மணியின் கணவர், அவரைக் கடுமையான வார்த்தைகளால் திட்டி, அவர்மீது எரிந்துவிழுந்தார். அவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். இப்படியே பல நாள்கள் தொடர்ந்தன.

இதனால் அந்தப் பெண்மணியின் கணவர், "இத்தனை நாள்களும் நான் என்னுடைய மனைவியைத் திட்டும்பொழுது, அவர் பதிலுக்கு என்னைத் திட்டுவார்! இப்பொழுது நான் அவரைத் திட்டும்பொழுதும் அவர் என்னைத் திட்டாமல், அமைதியாய் இருக்கின்றாரே! அப்படியானால் அவர் மனம்மாறியிருக்கவேண்டும்! என்னுடைய மனைவி என்னை மிகுதியாக அன்புசெய்யத் தொடங்கிவிட்டதால், நானும் அவரை மிகுதியாக அன்பு செய்வதுதான் முறை" என்று அவர் தன் மனைவியை மிகுதியாக அன்பு செய்யத் தொடங்கினார். இதனால் அவர்களுடைய குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியத் தொடங்கினார்.

தன் கணவர் இவ்வளவு சீக்கிரம் மாறுவார் என்பதைக் கனவிலும் எதிர்பார்த்திராத அந்தப் பெண்மணி, "எல்லாவற்றும் காரணம் அற்புதக் கிணற்றிலிருந்து நான் குடித்த தண்ணீர்தான். இதற்கு வழிவகை செய்துதந்த வின்சென்ட் ஃபெரருக்கு நன்றி சொல்லிவிட்டு வருவோம்" என்று நினைத்துக்கொண்டு அவர் வின்சென்ட் ஃபெரரிடம் சென்று நடந்த அனைத்தையும் எடுத்துச் சொன்னார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக்கொண்ட வின்சென்ட் ஃபெரர் இறுதியாக அந்தப் பெண்மணியிடம், "நீங்கள் தண்ணீர் மொண்டு பருகினீர்களே! அது ஒன்றும் அதிசயத் தண்ணீர் கிடையாது; சாதாரண தண்ணீர்தான். உங்களுடைய கணவர் உங்களைத் திட்டும்பொழுது, உங்களுடைய வாயில் தண்ணீர் இருந்ததால், பதிலுக்கு நீங்கள் அவரைத் திட்ட முடியவில்லை. அதனால்தான் உங்களுடைய கணவர் உங்களை அன்பு செய்யத் தொடங்கிவிட்டார்" என்றார்.

இந்த நிகழ்வில் வருகின்ற கணவனும் மனைவியும் தொடக்கத்தில் ஒருவரை ஒருவரை திட்டிக்கொண்டும், காயப்படுத்திக்கொண்டும் தங்களுடைய இல்லற வாழ்வையே இன்னல்கள் மிகுந்ததாக மாற்றிக்கொண்டதுபோல, இன்றைப் பல தம்பதியர்கள் தங்களுடைய வாழ்க்கைத் துணையோடு நல்ல புரிதல் இல்லாமல், சண்டைபோட்டுக் கொண்டு, தங்களுடைய இல்லற வாழ்க்கையே இன்னல் மிகுந்ததாக மாற்றிக் கொண்டிருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில், இன்றைய முதல் வாசகத்தில், புனித பவுல், "திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்" என்று சொல்கின்றாரே...! இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஆட்சியாளர்களிடமிருந்து கிறிஸ்தவர்களுக்கு வரும் இன்னல்கள் முன்னிட்டு அறிவுரை

இன்றைய முதல்வாசகத்தில் புனித பவுல், "மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது... திருமணம் செய்துகொள்வோர் இவ்வுலக வாழ்வில் இன்னலுறுவர்" என்று சொல்கின்றாரே, அப்படியானால் திருமணமே யாரும் செய்துகொள்ளக்கூடாதா...? திருமணத்தைக் கடவுள் புனிதப்படுத்தியது என்னாயிற்று...?" போன்ற பல கேள்விகள் எழலாம். புனித பவுல் திருமணமே செய்துகொள்ளவேண்டாம் என்று சொல்லவில்லை. மாறாக, ஆட்சியாளர்களால் வரக்கூடிய துன்பங்கள் ஏறலாம். ஆகையால், மணமாகாதோர் தாம் அழைக்கப்பட்ட நிலையிலேயே இருந்துவிடுவது நல்லது என்று குறிப்பிடுகின்றார்.

புனித பவுல் இவ்வார்த்தைகளை எழுதிய காலக்கட்டத்தில், உரோமையர்கள் கிறிஸ்தவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தார்கள். உரோமையர்களால் கிறிஸ்தவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றொரு நிலையிருந்தது. இதனால் கிறிஸ்தவர்கள் தாங்கள் இருக்கக்கூடிய நிலையிலேயே இருப்பது நல்லது என்றும், திருமண வாழ்வில் ஈடுபட்டிருப்போர் இவ்வுலகுக்குரியவற்றை நாடினால் இன்னல்தான் ஏற்படும்; அதனால் மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றார்.

புனித பவுலைப் பொறுத்தளவில், மணமாகாதவரும் சரி, மணமானவரும் சரி, அவர்கள் இவ்வுலகுக்குரியவற்றை நாடாமல், மறுவுலகுக்குரியவற்றை நாடவேண்டும் என்பதாகத்தான் இருந்தது. அதற்காகத்தான் அவர் இன்றைய முதல் வாசகத்தில் இடம்பெறும் வார்த்தைகளைக் குறிப்பிடுகின்றார். ஆகையால், நாம் எந்த நிலையில் அழைக்கப்பட்டிருந்தாலும், அந்த நிலையில் இருந்துகொண்டு, கடவுளுக்கு உகந்தவற்றை நாடி, அவருக்கு உரிய மக்களாவோம்.

சிந்தனை

"நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால், மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்" (கொலோ 3:1) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இவ்வுலக வாழ்வுக்குரிய கவலைகளால் நம்முடைய வாழ்வை இழந்துவிடாமல், மறுவுலக வாழ்வுக்குரியவற்றை நாடி, நம் வாழ்வைக் காத்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 6: 20-26

யாருக்கு இறையாட்சி உரியது?


நிகழ்வு



"அன்னை கபிரினி" என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் புனித பிரான்சிஸ் சேவியர் கபிரினி, 1900 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த புலம்பெயர்ந்தோர் நடுவில் பணிசெய்யத் தொடங்கியபொழுது, அவரிடம் தங்குவதற்கு இடமோ, கையில் பணமோ எதுவுமே இல்லை. இவர் புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் ஆர்வத்தோடு பணிசெய்வதைப் பார்த்துவிட்டு பெருஞ்செல்வந்தர் ஒருவர் இவரும், புலம்பெயர்ந்தோரில் இருந்த அனாதைக் குழந்தைகளும் தங்குவதற்கு இடமும், கையில் கொஞ்சம் பணமும் கொடுத்துவிட்டுப் போனார்.

இப்படி இருக்கும்பொழுது ஒருநாள் இவர், நியூயார்க்கில் ஆயராக இருந்த கோரிகன் (Corrigan) என்பவரைப் பார்க்கச் சென்றிருந்தார். காரணம் அவருடைய ஆளுகைக்குள் இவர் தங்கியிருந்தார். இவர் ஆயர் கோரிகனைப் பார்க்கச் சென்றிருந்தபொழுது ஆயர் இவரிடம், "புலம்பெயர்ந்த மக்கள் நடுவில் பணிசெய்ய வந்திருக்கும் நீங்கள், ஏதோ ஒரு செல்வந்தர் கொடுத்த இடத்தில் தங்கிக்கொண்டு, அவர் கொடுத்த கொஞ்சம் பணத்தைக் கொண்டு, காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கின்றீர்கள்...! இது எத்தனை நாள்களுக்குப் போகும்?" என்றார்.

உடனே இவர் ஆயரிடம், "இறைவனிடம் நாம் வேண்டுகின்றபொழுது "இன்று தேவையான உணவை எங்களுக்குத் தாரும்" என்று சொல்லித்தான் வேண்டுகின்றோமே ஒழியே, "நாங்கள் இறக்கும்வரைக்கும் தேவையான உணவை எங்களுக்குத் தாரும்" என்று வேண்டுவதில்லை" என்றார். இப்படிச் சொல்லிவிட்டு இவர் ஆயரிடம் தொடர்ந்து பேசினார்: "ஆயர் அவர்களே! நான் கடவுள்மீது நம்பிக்கை வைத்து இந்தப் பணியைத் தொடங்கியிருக்கின்றேன். கடவுள் எனக்குக் தேவையானதைத் தருவார்; அந்த நம்பிக்கை எனக்கு இருக்கின்றது."

கபிரினியிடமிருந்து இப்படியொரு பதில் வந்ததைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ச்சியடைந்த ஆயர், "நீங்கள் மேற்கொண்டிருக்கும் இந்தப் பணி நல்லமுறையில் நடக்க எனது வாழ்த்துகள்" என்றார். இதற்குப் பிறகு கபிரினி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைத் தொடங்கினார். இவர் மக்கள் நடுவில் மிகவும் ஈடுபாட்டோடும், அர்ப்பண உள்ளத்தோடும் பணிசெய்வதைப் பார்த்துவிட்டுப் பலரும் தங்களால் இயன்றை இவருக்குத் தந்து உதவினார்கள். இதனால் இவர் புலம்பெயர்ந்தோர் நடுவில் மிகச் சிறந்தமுறையில் பணிசெய்து, பின்னாளில் புனிதையாக உயர்ந்தார்.

ஆம், அன்னை கபிரினி, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்துத் தனது பணியைச் செய்து, பலருக்கும் ஒளியாய் விளங்கினார். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழும் ஏழைகளை, "நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே" என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

ஏழைகள் ஏன் பேறுபெற்றோர்?

நற்செய்தியில் இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்து, "ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்" என்கின்றார். இயேசு தம் சீடரைப் பார்த்துச் சொன்ன இவ்வார்த்தைகள், அவர்களுக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். ஏனெனில், செல்வம் படைத்தோர்தான் கடவுளின் ஆசியைப் பெற்றோர்; அவர்கள்தான் பேறுபெற்றோர் என்ற புரிதல் மக்கள் நடுவில் இருந்தது. இத்தகைய சூழ்நிலையில் இயேசு "ஏழைகளே! நீங்கள் பேறுபெற்றோர்" என்று சொன்னது அவர்களுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்திருக்கும்.

ஏழைகள் பேறுபெற்றோர் என இயேசு ஏன் சொல்கின்றார் என்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். ஏழைகளிடம் பணம் கிடையாது. அதனால் அவர்கள் பணத்தைச் சார்ந்து வாழாமல், பணத்தால், செல்வத்தால் ஏற்படும் தீமைகளுக்குள்ளும் வீழ்ந்துவிடாமல், இறைவனை மட்டுமே சார்ந்து, அவரை மட்டுமே நம்பி, அவரது வழியில் நடப்பார்கள். இதனாலேயே அவர்கள் பேறுபெற்றோராக மாறுகின்றார்கள்; இறையாட்சியையும் தங்களுக்கு உரித்தாக்கிக் கொள்கின்றார்கள்.

அப்படியானால் செல்வந்தர் பேறுபெற்றோர் ஆகமுடியாதா?

ஏழைகளைப் பேறுபெற்றோர் என்று சொன்ன இயேசு, "செல்வர்களே ஐயோ! உங்களுக்குக் கேடு!" என்கின்றார். இயேசு இவ்வாறு சொல்லக் காரணம், செல்வர்கள் செல்வம்தாம் எல்லாம் என்று அதையே சார்ந்து வாழ்வார்கள். இதற்கு நல்லதொரு எடுத்துகாட்டுதான் இயேசு சொல்லக்கூடிய பணக்காரன், ஏழை இலாசர் உவமை (லூக் 16: 19-31). இந்த உவமையில் வருகின்ற பணக்காரன் பணத்தை மட்டுமே சார்ந்து வாழ்ந்துவந்தான்; ஆனால், இலாசரோ ஆண்டவரைச் சார்ந்து, அவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார். இதனால் பணக்காரனுக்குப் பாதாளமும் அல்லது நரகமும் இலாசருக்கு விண்ணகமும் கிடைத்தது.

ஆகையால், நாம் பணத்தின்மீது அல்ல, படைத்தவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்து, பேறுபெற்றோர் ஆவோம்.

சிந்தனை

"மனிதர்மீது நம்பிக்கை வைப்பதை விட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்" (திபா 118: 8) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் நமக்கு இறையாட்சியை உரித்தாக்கும் ஆண்டவரிடம் தஞ்சம் புகுந்து, அவரிடம் நம்பிக்கை வைத்து வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
Free Blog Widget
Stats Counter
hit counter