" |
பொதுக்காலம் 30 ஆம் வாரம் 27-10-2020 |
|
முதல் வாசகம்
திருமணம் பற்றிய இம்மறைபொருள்
பெரிது. |
|
எபேசியர் 5: 21-33 “உங்களுள் ஒவ்வொருவரும் தம்மீது அன்புகொண்டிருப்பது போலத் தன் மனைவியின்மீதும் அன்பு செலுத்தவேண்டும்” நிகழ்வு அருள்பணியாளர் ஒருவர், சிறுவயதில் தன்னோடு படித்த பெண்மணி ஒருவரைத் தற்செயலாக இருப்பூர்த்தி நிலையத்தில் சந்தித்தார். அவர் அந்தப் பெண்மணியின் குடும்பத்தைப் பற்றி விசாரித்துவிட்டு, “உன்னுடைய கணவர் பார்ப்பதற்கு நன்றாக இருப்பாரா?” என்றார். “ஏதோ இருப்பார்” என்றார் அந்தப் பெண்மணி. “உன்னுடைய கணவருக்கு நல்ல சம்பளம் கிடைக்குமா?” என்று அருள்பணியாளர் அடுத்த கேள்வியைக் கேட்டார். இதற்கு அந்தப் பெண்மணி, “சொல்லிக்கொள்கின்ற அளவுக்கு அவர் நிறைய சம்பளம் எல்லாம் வாங்குவதில்லை” என்றார். அருள்பணியாளர் தொடர்ந்தார்: “உன்னுடைய கணவருக்குக் குடிப்பழக்கம், போதைப் பழக்கம்... இதுபோன்ற தீய பழக்க வழக்கங்கள் உண்டா?” “ஆமாம். என்னுடைய கணவருக்கு குடிப்பழக்கமும் போதைப் பழக்கமும் உண்டு” என்று பொறுமையாகச் சொல்லி முடித்தார் அந்தப் பெண்மணி. உடனே அருள்பணியாளர் அவரிடம், “உன்னுடைய கணவர், பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக இருக்கமாட்டார் என்கின்றாய். நல்ல சம்பளமும் இல்லை என்றும் சொல்கின்றாய். போதாக்குறைக்கு அவருக்குக் குடிப்பழக்கமும் போதைப்பழக்கமும் உண்டு என்று வேறு சொல்கின்றாய். இப்படிப்பட்ட மனிதரை நீ ஏன் மணந்து உன்னுடைய வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டாய்?” என்றார். “நான் என்னுடைய வாழ்க்கையைப் பாழாக்கிக் கொண்டதாய் நினைக்கவில்லை. என்னுடைய கணவர் வண்டி ஓட்டுநர் என்பதாலும், அவர் பெரும்பாலான நேரங்களில் வீட்டில் இருக்க மாட்டார் என்பதாலும், அவரால் எனக்கு எந்தவொரு தொந்தரவு இருக்கப்போவதில்லை என்பதாலுமே அவரை நான் மணந்துகொண்டேன்” என்று மிகச் சாதாரணமாகச் சொன்னார் அந்தப் பெண்மணி. அவர் இப்படிச் சொன்னதைக் கேட்டு அருள்பணியாளர் அதிர்ந்து போனார். ஆம், இன்றைக்குத் திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருசிலர் தன்னுடைய வாழ்க்கைத் துணையால் தனக்கு எந்தவொரு தொந்தரவும் இடைஞ்சலும் வந்துவிடக்கூடாது என்று தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், திருமண வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் எப்படி வாழவேண்டும் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றார். அதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் பணிந்திருக்க வேண்டும் இன்றைக்குப் பெரும்பாலான குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனை, சண்டை சச்சரவுகளுக்குக் காரணம், ‘தான் என்ற ஆணவம்தான்’. ‘நான் நிறைய படித்திருக்கின்றேன்... நிறைய சம்பாதிக்கின்றேன். அதனால் நான் யாருக்கும் எதற்குப் பணிந்துபோகவேண்டும்?’ என்ற எண்ணம்தான் ஒவ்வொரு கணவனையும் மனைவியையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழ்நிலையில் புனித பவுல், திருமணமான ஒவ்வொரு ஆணும் பெண்ணும் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்கின்றார். இதில் மனைவி மட்டும்தான் கணவருக்குப் பணிந்திருக்க வேண்டும் என்பதில்லை. கணவனும் தன்னுடைய மனைவிப் பணிந்திருக்கவேண்டும். ஒருவரையொருவர் அன்பு செய்யவேண்டும் திருமண வாழ்வில் இணைந்திருக்கும் ஒவ்வோர் ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவருக்குப் பணிந்து நடக்கவேண்டும் என்பது பவுல் கொடுக்கும் முதன்மையான கட்டளை எனில், ஒவ்வொருவரும் தன்மீது அன்புகொள்வது போலத் தன்னுடைய வாழ்க்கைத் துணையின்மீதும் அன்புகொள்ள வேண்டும் இது புனித பவுல் கொடுக்கும் இரண்டாவது கட்டளை. இதற்குப் புனித பவுல் தொடக்க நூலில் வருகின்ற, “இதனால் கணவர் தம் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பார்; இருவரும் ஒரே உடலாயிருப்பர்” (தொநூ 2: 24) என்ற வார்த்தைகளை மேற்கோள் காட்டிப் பேசுகின்றார். ஆம், கணவனும் மனைவியும் ஈருடலாக, திருமண பந்தத்தால் ஒரே உடலாக மாறுகின்றார்கள். அதனால் அவர்கள் ஒருவர் மற்றவர்மீது உள்ளார்ந்த அன்பு காட்டி ஒரே உடலாக வாழவேண்டும்; ஆனால், இன்றைக்குப் பலர் இந்த ஈருயிர், ஓருடல் தத்துவத்தை உணர்ந்துகொள்ளாமல், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு, தங்களுடைய பிள்ளைகளுக்கும் முன்மாதிரியாக இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தகையதொரு நிலை தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு கணவனும் மனைவியும் தங்களுடைய வாழ்க்கைத் துணைக்குப் பணிந்து, ஒருவர் மற்றவரிடம் அன்பு காட்டி வாழவேண்டும். இதுவே இறைவனின் திருவுளம். சிந்தனை ‘ஒவ்வொரு மனிதருடைய துன்பமும் இன்பமும் அவர் செய்த திருமணத்தைப் பொறுத்தது’ என்பார் பைரன் என்ற அறிஞர். ஆகையால், இல்லற வாழ்வு இன்பமான வாழ்வாக இருக்க, ஒவ்வொரு கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் பணிந்து, ஒருவர் ஒருவரை அன்பு செய்ய நாம் இறைவனை வேண்டிக்கொண்டு, இறைவழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
லூக்கா 13: 18-21 நாம் செய்துகொண்டிருப்பது சிறிய செயலாக இருக்கலாம்; ஒருநாள் அது மிகப்பெரிய செயலாக மாறும் என்பது நிச்சயம் நிகழ்வு ஒரு மாலை வேளையில், பெரியவர் ஒருவர் தன் பேரனைக் கூட்டிக்கொண்டு வீட்டின் அருகே இருந்த குளத்திற்குச் சென்றார். அந்தக் குளத்தை கண்டதும் பேரன் – சிறுவன் – குதுகலமானான். அதனால் அவன் குளத்திலுள்ள நீரின் அளவை எப்படியாவது உயர்த்தவேண்டும் என்று முடிவு செய்தான். ‘குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்துவதற்கு என்ன செய்யலாம்’ என்று யோசித்த அவன், குளக்கரையில் இருந்த சிறு சிறு கற்களை எடுத்துக் குளத்திற்குள் வீசினான். நீரின் அளவு கூடவில்லை. குளக்கரையில் கிடந்த பாறாங்கற்களையும் குளத்திற்குள் தள்ளிப் பார்த்தான். அப்பொழுதும் குளத்தின் நீர் மட்டம் உயரவில்லை. இதனால் அவன் மனமுடைந்து குளக்கரையின் ஓர் ஓரமாக நின்றுகொண்டு அழத் தொடங்கினான். அவனை தேற்றிய அவனது தாத்தா, அவனது கையில் ஒருசில கற்களைக் கொடுத்து, “இவற்றைக் குளத்திற்குள் எறி” என்றார். அவனும் அவ்வாறே செய்தான். அப்பொழுது அவர் அவனிடம், “தம்பி! நீ குளத்திற்குள் கற்களை எறிந்தபொழுது, அலைகள் எழுவதைக் கவனித்தாயா...?” என்று கேட்க, அவன் “ஆமாம்” என்றதும், அவர் அவனிடம் தொடர்ந்து பேசினார்: “குளத்தில் உள்ள நீரின் அளவை உன்னால் உயர்த்த முடியவில்லை என்று வருத்தப்படாதே! இந்த வயதில் உன்னால் குளத்தில் அலைகளை ஏற்படுத்த முடிகின்றதே என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள். இப்படியே நீ தொடர்ந்து செய்தால், என்றாவது ஒருநாள் உன்னால் இந்தக் குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்த முடியும். இது குளத்தில் உள்ள நீரின் அளவை உயர்த்துவதற்கு மட்டுமல்ல, எல்லாச் செயல்களுக்கும் பொருந்தும்.” இப்படித் தன் தாத்தா சொல்லி வளர்க்கப்பட்ட சிறுவன்தான் பின்னாளில் அமெரிக்காவின் புகழ்பெற்ற தொலைகாட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராய் உருவான நார்மன்வியர். ஆம், நாம் செய்யக்கூடிய செயல் சிறிதாக இருக்கின்றதே என்று வருந்தத் தேவையில்லை. அது என்றாவது ஒருநாள் மிகப்பெரிய விருச்சமாக மாறி நிற்கும் என்பது உறுதி. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் இறையாட்சியைக் கடுகுவிதைக்கும் புளிப்பு மாவுக்கும் ஒப்பிடவேண்டும் என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம். சிறிய தொடக்கம், பெரிய மாற்றம் நற்செய்தியில் இயேசு, இறையாட்சிக்கு ஒப்பிடுகின்ற கடுகுவிதை, புளிப்பு மாவு ஆகிய இரண்டும் அளவில் சிறியவை; ஆனால் ஆற்றலில் பெரியவை. எப்படியெனில், மிகச் சிறிய கடுகுவிதை மண்ணில் ஊன்றப்பட்டு மரமாக மாறுகின்றபொழுது, வானத்துப் பறவைகள் தங்கக்கூடிய அளவுக்கு மிகப் பெரியதாக மாறுகின்றது. அதுபோன்று கையளவு புளிப்புமாவு மூன்று மரக்கால் மாவையே புளிப்பேறச் செய்கின்றது. இவ்வாறு அவை அளவில் சிறிதாக இருந்தாலும், படிப்படியாக வளர்ந்து, ஆற்றலில் பெரிதாக மாறிவிடுகின்றது. இறையாட்சியும் கூட ஆண்டவர் இயேசுவால் நாசரேத்து என்ற ஒரு சாதாரண சிற்றூரில் தொடங்கப்பட்டு, உங்களுக்குள், எனக்குள்; ஏன், இன்று இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பதாய் இருக்கின்றது. இறையாட்சி எல்லாருக்கும் உரியது நற்செய்தியில் இயேசு இறையாட்சியைக் கடுகு விதைக்கு ஒப்பிடுவதன் வழியாக, மற்றொரு மிகப்பெரிய உண்மையைச் சொல்கின்றார். எது என்னவெனில், இறையாட்சி என்பது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டுமல்ல, அது எல்லா மக்களுக்கும் சொந்தமானது என்பதாகும். மிகச் சிறிய அளவில் இருக்கும் கடுகுவிதை, வளர்ந்து வானத்துப் பறவைகளுக்கெல்லாம் தன்னுடைய கிளைகளில் தங்க இடம் தருகின்றது. அது போன்று இறையாட்சியானது எல்லா இனத்தவரையும், எல்லா மொழி பேசுவோரையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. இறையாட்சி எல்லாரையும் உள்ளடக்கியது அல்லது இறையாட்சியில் எல்லாருக்கும் இடம் உண்டு எனில், மனிதர்களிடம் இருக்கும் பிரிவினைகள், ஏற்றத்தாழ்வுகள் களையப்படவேண்டும். இன்று அறிவியலும் தொழில்நுட்படமும் எவ்வளவோ வளர்ந்துவிட்டது; ஆனால், சக மனிதரை மனிதராக மதிக்காத நிலையயும், பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்க்கின்ற நிலையிலும்தான் இன்றும் தொடர்கின்றது. புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “நீங்கள் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றீர்கள்” (கொலோ 3: 15). நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்க அழைக்கப்பட்டிருக்கின்றோம் எனில், நம் நடுவில் ஏற்றத்தாழ்வு நிலவுவது கடவுளின் பார்வையில் ஏற்புடையதாக இருக்குமா? சிந்திப்போம். சிந்தனை ‘சிறிய தொடக்கத்திலிருந்தே பெரிய செயல்கள் உண்டாகின்றன’ என்பார் ஜேம்ஸ் கிளியர் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் இந்தச் சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க, இயேசுவுக்கு உகந்த சிறி சிறு செயலை இன்றே தொடங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |