" |
பொதுக்காலம் 29 ஆம் வாரம் 23-10-2020 |
|
முதல் வாசகம்
உடலும் ஒன்றே; தூய ஆவியும்
ஒன்றே. அவ்வாறே ஆண்டவரும் ஒருவரே; திருமுழுக்கும் ஒன்றே. |
|
எபேசியர் 4: 1-6 “அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழ்ந்து, ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” நிகழ்வு ஒருநாள் காட்டிலிருந்த பறவைகளுக்கு ஒரு கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பறவைகளின் தலைவன், வந்திருந்த எல்லாப் பறவைகளிடம், “நாம் அனைவரும் குழுவாக இணைந்து செயல்படாமல், தனித்தனியாகச் செயல்படுவதால்தான், நம்மில் பலர் வேடன் விரிக்கும் வலையில் மாட்டிக்கொண்டு சாகின்றோம். இனிமேல் நாம் அப்படிச் செயல்படாமல், குழுவாக இணைந்து செயல்படுவோம். அப்படி நாம் செயல்பட்டால், வேடன் நம்மீது வலையை விரிக்கும்பொழுது, நாம் அனைவரும் ஒருசேர மேலே பறந்து சென்று, ஒரு கருவேல அமர்ந்துகொண்டு, வலையை அங்கும் இங்கும் இழுத்தால், வலை எளிதாகக் கிழிந்துவிடும். நாம் வேடனின் வலையிலிருந்து மிக எளிதாகத் தப்பித்து விடலாம்” என்றது. பறவைகளின் தலைவன் சொன்ன யோசனை எல்லாப் பறவைகளுக்கும் சரியெனப் பட்டதால், அவை அவ்வாறு செய்வதற்கு வாக்குறுதி அளித்தன. இதற்குப் பிறகு வேடன் பறவைகளின்மீது வலையை விரித்தபொழுது, பறவைகள் எல்லாம், முன்பு தீர்மானம் செய்தது போன்று, வலையில் இருந்த ஓட்டுக்குள் தங்களுடைய தலையை நுழைத்துக்கொண்டு, ஒரு சேர மேலே பறந்துசென்று, ஒரு கருவேலம் மரத்தில் அமர்ந்துகொண்டு, வலையைக் கிழித்து, தங்களை விடுவித்துக் கொண்டன. இப்படியே காட்டில் இருந்த பறவைகளெல்லாம் ஒற்றுமையாய்ச் செயல்பட்டதால், வேடன் விழிபிதுங்கி நின்றான். இது குறித்து வேடன் தன் மனைவியிடம் பேசியபொழுது, அவர் வேடனிடம், “நீங்கள் ஒன்றும் கவலைப்படாதீர்கள்! இந்த பறவைகள் எல்லா நேரமுமா ஒற்றுமையாய்ச் செயல்படும். எப்பொழுதாவது அவற்றுக்குள் வாக்குவாதம் ஏற்படும்தானே! அப்பொழுது நீங்கள் அவற்றின்மீது வலையை வீசுங்கள். நிச்சயம் அவை நீங்கள் விரிக்கும் வலையில் மாட்டிக்கொள்ளும்” என்றார். இதற்கடுத்து வந்த நாள்களில் வேடன் தன் மனைவி சொன்னது போன்றே, காட்டிலிருந்த பறவைகளையெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கத் தொடக்கத் தொடங்கினான். ஒருநாள் பறவைகளெல்லாம் தங்களுக்குள் சத்தமாக வாக்குவாதம் செய்வதைக் கவனித்தான். உடனே அவன், ‘பறவைகளைப் பிடிக்க இதுதான் நல்லநேரம்’ என்று முடிவுசெய்து கொண்டு, வலையை அவற்றின்மீது வீசினான். பறவைகள் யாவும் ஒன்றோடொன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததால், வேடன் வலையை வீசியபொழுது, ஒற்றுமையாய்ச் செயல்படாமல், ஆளுக்கொரு திசையில் இழுத்தன. இதனால் அவை உயரமாகப் பறக்க முடியாமல், வேடனின் கையில் மாட்டிக்கொண்டன (-Bruno Hagspiel) இந்த நிகழ்வில் வரும் பறவைகள் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்த வரைக்கும் வேடனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. எப்பொழுது அவை ஒன்றோடொன்று வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனவோ, அப்பொழுதே அவை வேடனின் வலையில் மாட்டிக்கொண்டன. ஆம், குழுமமாக வாழும் நம்மிடத்தில் ஒருவர்மீது ஒருவருக்கு அன்பு இருக்கின்றபொழுது, அங்கு ஒற்றுமையும் இருக்கும். அப்பொழுது எந்தவொரு தீய சக்தியும் எதுவும் செய்யாது. இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள் என்கின்றார். இது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். பெற்றுக்கொண்ட அழைப்பிற்கேற்ப வாழ அழைக்கப்படும் இன்றைய முதல் வாசகத்தில் புனித பவுல், இறைமக்களிடம் ஒருமைப்பாடு நிலவவேண்டும் என்ற கருத்தினை வலியுறுத்திக் கூறுகின்றார். நாம் பலராக இருந்தாலும், கிறிஸ்துவில் ஓருடலாக இருக்கின்றோம் (1 கொரி 12: 12) இவ்வாறு கிறிஸ்துவில் ஓருடலாக இருக்கின்ற நாம், இதற்கேற்ப வாழவேண்டும். இதுவே நாம் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட அழைப்பாகும். ஒன்றாய் இருப்பதற்கு அன்பும் அமைதியும் இன்றியமையாதவை கிறிஸ்துவில் ஓருடலாக வாழவேண்டும், இதுதான் நமக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு எனில், இந்த அழைப்பிற்கேற்ப நாம் வாழ்வதற்கு நம்மிடத்தில் அன்பும் அமைதியும் கட்டாயம் தேவைப்படுகின்றன. இதைத்தான் புனித பவுல் இன்றைய முதல் வாசகத்தில், “முழுமனத்தான்மையோடும் கனிவோடும் பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து, தூய ஆவியார் அருளும் ஒருமைப்பாட்டைக் காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள்” என்றார். ஆகவே, இறைமக்களாகிய நம்மிடத்தில் ஒற்றுமையும் ஒருமைப்பாடும் நிலவ அன்பும் அமைதியும் இன்றிமையாதவையாக இருக்கின்றன. நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் அன்போடும் அமைதியோடும் வாழ்கின்றோமா? சிந்திப்போம். சிந்தனை ‘இவையனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்’ (கொலோ 3: 14) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் அனைவரும் கிறிஸ்து என்ற உடலில் உறுப்புகளாக இருக்கின்றோம் என்ற உணர்வோடு ஒருவரையொரு அன்புடன் தாங்கி, அமைதியுடன் இணைந்து வாழக் கற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
லூக்கா 12: 54-59 “நேர்மையானது எது எனத் தீர்மானியுங்கள்” நிகழ்வு காட்டில் குடிசையமைத்து, அங்கேயே வாழ்ந்து வந்த கிறிஸ்தவர் ஒருவர் தற்செயலாக ஒருநாள் ஊருக்குள் வந்தார். அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ‘கோயிலுக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன... இன்றைக்காவது நாம் கோயிலுக்குப் போய்விட்டு வருவோம்’ என்று நினைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனார் அவர். ‘பல ஆண்டுகளாகக் கோயிலுக்குப் போகாமல், திடீரென்று கோயிலுக்குப் போவதால், யாரும் எதுவும் நினைக்கக்கூடும்’ என்று கோயிலின் பின் வரிசையிலேயே அமர்ந்துகொண்டார் அவர். அன்றைக்கு அவர் உடுத்தியிருந்த ஆடையும், அவருடைய தோற்றமும்கூட காண்பதற்கு இனியனவாய் இல்லை. ஏனெனில், அவர் உடுத்திருந்த ஆடை அழுக்குப் படிந்திருந்தது; அவர் பல மாதங்களாக முகச்சவரம் செய்யவில்லை. அதனாலேயே அவருடைய தோற்றம் காண்பதற்கு இனியதாய் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் வழிபாட்டில் கலந்துகொண்டார். அருள்பணியாளர் மறையுரையாற்றும் நேரம் வந்தது. அன்று அவர் மெசியா வரப்போகிறார். அதனால் ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும் என்பது பற்றி மறையுரையாற்றினார். மறையுரையில் அருள்பணியாளர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த மனிதருடைய உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. மறையுரைக்குப் பின் திருப்பலி வழக்கம்போல் தொடர்ந்து, நிறைவடைந்தது. திருப்பலி நிறைவடைந்த பிறகும்கூட, மறையுரையில் அருள்பணியாளர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த மனிதரை எதோ செய்தது. இது குறித்து அவர் தொடர்ந்து சிந்தித்தார். ‘இத்தனை ஆண்டுகளும் கோயிலுக்குப் போகாமல்.. ஆண்டவருடைய வழிகளையும் நாடாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துவிட்டேனே! இனிமேலும் நான் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடாது; மனம்மாறி நல்லதொரு கிறிஸ்தவனாக வாழவேண்டும்” என்று அவர் முடிவுசெய்து அதன்படி வாழத் தொடங்கினார். அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அன்றைய நாளில் நடைபெற்ற ஞாயிறுத் திருப்பலியில் கடந்துகொண்டார்; ஆனால், பழைய மனிதராக அல்ல; புதிய மனிதராக. ஆம், அவர் முகச் சவரம் செய்து, முடியை நன்றாகத் திருத்தி, புதியதோர் ஆடை உடுத்தி, காட்சிக்கு இனியவராகக் காணப்பட்டார். அவரிடத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு வியந்துபோன, அவருக்கு மிகவும் அறிமுகமான ஒருவர், “உன்னிடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்குக் காரணமென்ன?” என்றார். அதற்கு அவர் அவரிடம், “கடந்த வாரம் நான் கேட்ட மறையுரையின் வழியாக, ஆண்டவர் இயேசு என்னுடைய உட்பகுதியை அதாவது உள்ளத்தை மாற்றினார். அதனால் நான் என்னுடைய வெளிபகுதியை மாற்றிக்கொண்டேன்” என்று கண்களில் மகிழ்ச்சி பொங்கப் பேசினார். ஆம், பெயருக்குக் கிறிஸ்தவராக இருந்து, மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த இந்த நிகழ்வில் வரும் மனிதர், தான் கேட்ட மறையுரையின் மூலம், மனம்மாறி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதுதான் கடவுள் உகந்தது என்று மனம்மாறிப் புதிய மனிதனாக வாழத் தொடங்கினார். இன்றைய நற்செய்தியில், நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானியுங்கள் என்றோர் அழைப்பினைத் தருகின்றார் இயேசு. நேர்மையானது என இயேசு எதைக் குறிப்பிடுகின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம். மனம்மாறி ஆண்டவருக்கு உகந்த வழிகளை நாடுவதே நேர்மையானது இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, இந்த நேரத்தில் மழை வரும்... இந்த நேரத்தில் வெப்பம் உண்டாகும் என்று நன்றாகவே கணித்தார்கள். ஆனால், அவர்கள் ஆண்டவர் இயேசு மூன்று ஆண்டுகள் தங்களோடு இருந்து பணிசெய்கின்றார்; அவர் மனமாற்றத்திற்குத் தங்களை அழைக்கின்றார் என்பதை உணராமல் வாழ்ந்துவந்தார்கள். இது குறித்து மக்களிடம் பேசும் இயேசு, காலத்தின் அறிகுறிகளை நன்றாகத் தீர்மானிக்கத் தெரிந்த நீங்கள், “நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?” என்கின்றார். நேர்மையானது எதுவெனில், தீமையை விட்டு நன்மையை நாடுவது, பாவத்தை விட்டுவிட்டு பரமரை நாடுவது. இத்தகையதொரு வாழ்க்கை வாழத்தான் ஆண்டவர் இயேசு நாம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார். ஆகையால், நாம் ஆண்டவரை எதிர்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக இருக்க, நம்மிடமிருக்கும் பாவத்தை அப்புறப்படுத்திவிட்டு, ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். சிந்தனை ‘நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்; நல்லது எதுவோ அதை நமக்குள்ளே முடிவுசெய்துகொள்வோம்’ (யோபு 34: 4) என்கிறது யோபு நூல். ஆகவே, நாம் நேர்மை எதுவென, நல்லது எதுவென தெரிந்துகொண்டு, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, தகுதியுள்ளவர்களாய் ஆண்டவரை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |