" |
பொதுக்காலம் 15 ஆம் வாரம் 13-07-2020 |
|
முதல் வாசகம்
உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்துங்கள்; உங்கள் தீச்செயலை என்
திருமுன்னிருந்து அகற்றுங்கள். |
|
எசாயா 1: 11-17 "உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்துள்ளன" நிகழ்வு காட்டில் இருந்த மான் ஒன்று பள்ளத்தை நோக்கி ஓடிக்கொண்டிருந்த ஒரு சிற்றாறில் தண்ணீர் குடிக்கொண்டிருந்தது. தற்செயலாக அங்கு வந்த ஒரு சிங்கமானது, மானைப் பார்த்ததும், "இன்றைக்கு நமக்குச் சரியான இரை கிடைத்திருக்கின்றது" என்று மகிழ்ச்சியடைந்தது. இருந்தாலும், அது, மானை ஒரே பாயச்சலில் அடித்துச் சாப்பிட்டு விடக்கூடாது... நயமாகத்தான் பேசித்தான் அடித்துச் சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்தது. இதனால் சிங்கம் மானிடம், தன்னுடைய முகத்தைக் கோபத்தோடு வைத்துகொண்டு. "நேற்று உன்னுடைய தந்தை எனக்கு மதிப்புத்தராமல் நடந்துகொண்டார். இது அவ்வளவு நல்லதாகப் படவில்லை" என்றது. "என்ன! நேற்று என்னுடைய தந்தை உங்களை மதிக்கவில்லையா...? அவர் உயிரோடு இருந்தால்தானே உங்களை மதிக்கப்பதற்கு...? அவர் இறந்து ஆறுமாதங்கள் ஆகின்றன" என்றது மான். சிங்கத்திற்குப் பெருத்த ஏமாற்றமாகப் போய்விட்டது. இருந்தாலும் அது விடாமல் மானிடம், "நான் குடித்துக்கொண்டிருக்கின்ற தண்ணீரைக் களங்கப்படுத்துகிறாயே! உனக்கு எவ்வளவு திமிர் இருந்தால் இப்படிச் செய்வாய்?" என்றது. "சிங்க இராஜாவே! நீங்கள் என்னைத் தவறாக நினைத்துக்கொண்டீர்கள்! நானோ பள்ளத்தில் இருக்கின்றேன்; நீங்கள்தான் மேடான பகுதியில் நின்றுகொண்டிருக்கின்றீர். உண்மையில் நானல்ல, நீங்கள்தான் தண்ணீரைக் களங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றீர்கள்" என்று சிறிதும் பதற்றமில்லாமல் சொன்னது மன்னன். மான் தன்னிடம் இப்படியெல்லாம் பேசும் என்று சிறிதும் எதிர்பார்த்திராத சிங்கம், "இதற்கு மேலும் இதைப் பேசவிட்டுக் கொண்டிருந்தால் நம்முடைய நோக்கம் நிறைவேறாமல் போய்விடும் என்று நினைத்துக்கொண்டு, "உனக்கு வயதில் மூத்தவர்களிடம் எப்படிப் பேசவேண்டும் என்று கூடத் தெரியாதா?" என்று சொல்லிக்கொண்டு, மானின் பதிலுக்குக் கூடக் காத்திராமல், அதன்மீது பாய்ந்து கொன்றது. இந்தக் கதையை அவ்வளவு எளிதாகக் கடந்துபோய்விட முடியாது; அதிகார பலம், ஆள் பலம் கொண்டிருப்பவர்கள் சாதாரண மக்கள்மீது அன்றாடம் நடத்தக்கூடிய அடாவடித்தங்களைத் தோலுரிப்பதாக இருக்கின்றது. இன்றைய முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, "உங்கள் கைகளோ இரத்தக் கறையால் நிறைந்திருக்கின்றன. உங்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக்கொள்ளுங்கள்" என்கின்றார். இறைவாக்கினர் எசாயாவின் இவ்வார்த்தைகள் என்ன செய்தியை சொல்கின்றன... இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். மக்களின் போலித்தனமான வாழ்க்கை இஸ்ரயேல் மக்கள் இரண்டு மிகப்பெரிய தவறுகளைச் செய்தார்கள். ஒன்று, உண்மைக் கடவுளை மறந்து, பாகால் தெய்வத்தை வழிபட்டது. இரண்டு, நாட்டில் இருந்த ஏழைகள், வறியவர்களை நசுக்கியது; அதன்மூலம் தங்களுடைய கைகளை இரத்தக் கறையாக்கிக்கொண்டது. இதைவிடவும் இன்னொரு தவற்றைச் செய்தார்கள், அது என்னவெனில், வழிபாடு என்ற பெயரில் போலியாக நடந்துகொண்டது. அதனால்தான் கடவுள் அவர்களிடம், நீங்கள் காட்டும் தூபம் எனக்கு அருவருப்பையும், உங்களுடைய அமாவாசை மற்றும் ஓய்வுநாள் கொண்டாட்டங்கள் எனக்கு வெறுப்பையும் தருகின்றன என்கின்றார். இறைவன் இஸ்ரயேல் மக்களிடம் எதிர்பார்த்தது, பலிகளை விடவும் கீழ்ப்படிதலையும் (1 சாமு 15: 22), நொறுங்கிய உள்ளத்தையும் (திபா 51: 17), நேர்மை, இரக்கம், தாழ்ச்சி (மீக் 6: 6-8) ஆகிய பண்புகளைத்தான். இவற்றையெல்லாம் அவர்கள் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, தங்களுடைய கைகளைத் இரத்தக் கறையாக்கிக் கொண்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாக, தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்" என்கின்றார். கடவுள் இறைவாக்கினர் எசாயா வழியாகச் சொல்லக்கூடிய இவ்வார்த்தைகள் உணர்த்தும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம். தீமையை விட்டொழித்து, நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள் இஸ்ரயேல் மக்கள் தாங்கள் கடவுளுக்கும், அவர் சாயலாகப் படைக்கப்பட்ட மனிதர்களுக்கும் எதிராகப் பாவம் செய்தது, தங்களுடைய கைகளைக் கறைப்படுத்திக்கொண்டதால், இத்தகைய தீமைகளை விட்டொழித்து, ஒடுக்கப்பட்டோருக்கு உதவியும், திக்கற்றோருக்கு நீதியும், கைம்பெண்களுக்கு வழக்காடவும் செய்யுங்கள் என்கின்றார். இஸ்ரயேல் சமூகத்தில் வறியவர்களிலும் வறியவர்களாக இருந்தர்கள், மேலே சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள், திக்கற்றவர்கள், கைம்பெண்கள். ஆகையால், இவர்களுக்குச் செய்யப்படும் நன்மையையும் உதவிகளுமே உண்மையான வழிபாடாக இருக்கும். அதையே கடவுள் விரும்புகின்றார் என்று எசாயா இறைவாக்கினர் மிக ஆணித்தரமாகக் கூறுகின்றார். இஸ்ரயேல் மக்களின் போலித்தனத்தைக் குறித்துச் சிந்தித்துப் பார்க்கும் நாம், நம்முடைய வழிபாடுகளும் பக்தி முயற்சிகளும் எப்படி இருக்கின்றன என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். கண்முன்னே இருப்பவரை அன்பு செய்யாமல், கடவுளை அன்பு செய்ய முடியாது என்பது யோவான் சொல்லக்கூடிய வார்த்தைகள் (1யோவா 4: 20). ஆகவே, நாம் இறைவனைப் போலியாக வழிபடுவதை விட்டுவிட்டு, உண்மையாக வழிபடுவோம். அவ்வழிபாடு பிறரன்பில் வேரூன்றியதாக இருக்கச் செய்வோம். சிந்தனை "பசித்திருப்போருக்காக உன்னையே கையளித்து, வறியோரின் தேவையை நிறைவு செய்வாயானால், இருள் நடுவே உன் ஒளி உதிக்கும்" (எசா 58: 10) என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் இறைவன்மீது கொண்டிருக்கும் அன்பைப் பிறரன்புப் பணிகளில் வெளிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
மத்தேயு 10: 34-11:1 தம் உயிரை இழப்பவரோ அதைக் காத்துக்கொள்வார் நிகழ்வு கறுப்பின மக்களின் விடுதலைக்காகவும், அவர்களுடைய உயர்வுக்காகவும் கடுமையாக உழைத்துத் தன்னுடைய உயிரையே இழந்தவர் முன்னாள் அமெரிக்க அதிபரான ஆபிரகாம் லிங்கன். இவர் இறந்த பிறகு, இவருடைய உடலானது வாஷிங்டனிலிருந்து அலபாமா வழியாக இல்லியானோய் என்ற இடத்திற்கு ஊர்வலமாகக் கொண்டுசெல்லப்பட்டது. ஆபிரகாம் லிங்கனின் உடல் அலபாமாவிற்கு வந்தபொழுது, அங்கு மிகுதியாக வாழ்ந்து வந்த கறுப்பினத்து மக்கள், அவருடைய உடலுக்கு உரிய மரியாதை செலுத்தினார்கள். அப்பொழுது அந்தக் கூட்டத்திலிருந்த ஒரு கறுப்பினத்தச் சார்ந்த பெண்மணி தன்னுடைய குழந்தையைத் தன் தோள்மேல் தூக்கி வைத்துக்கொண்டு, "என் மகனே! அதோ பார்; அவர் தான் நம்முடைய விடுதலைக்காகப் போராடியவர்; நமக்காகத் தன்னுடைய உயிரையே இழந்தவர்" என்றார். ஆம். ஆபிரகாம் லிங்கன் இன்று மறைந்து போயிருக்கலாம். ஆனால், அவர் செய்த தியாகம் அல்லது இழப்பு என்றுமே மக்களால் நன்றியோடு நினைவுகூரப்படும். அதே போன்று இயேசுவின் வழியில் நடந்து, அவருக்காகத்தான் தன்னுடைய உயிரையே இழப்பவர் அதைக் காத்துக்கொள்வார் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் மிக அழகாக எடுத்துக்கூருகின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். நாம் நம்முடைய உயிரையும் இழக்கவேண்டும் பணித்தளங்களுக்குச் செல்லும் பன்னிருவரிடமும் இயேசு பலவற்றைக் குறித்துப் பேசுகின்றார். இன்றைய நற்செய்தியிலோ அவர், "நான் உலகிற்கு அமைதி கொணர வந்தேன் என் எண்ண வேண்டாம். அமைதியை அல்ல, வாளையே கொணர வந்தேன்" என்கின்றார். இயேசுவின் இச்சொற்களை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு (குழந்தை) இயேசுவை அவருடைய பெற்றோர் எருசலேம் திருக்கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுத்தபொழுது, அவரைத் தம் திருக் கையில் ஏந்திய சிமியோன் சொன்ன, "இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக் இருக்கும்..." (லூக் 2: 34) என்ற சொற்களோடு இணைத்துச் சிந்தித்துப் பார்ப்பது நல்லதூ. ஆம். இயேசுவின் வருகையையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ளக்கூடியவருக்கு அவர் எழுச்சியாக இருப்பார். அதே நேரத்தில் அவரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ளாதவருக்கோ அவர் வீழ்ச்சியாக இருப்பார். இவ்வாறு இயேசுவின் வருகை மக்கள் நடுவில் அமைதியை அல்லாமல், வாளை அல்லது பிளவைக் கொணர்வதால், அவரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவரையும் அவருடைய செய்தியையும் ஏற்றுக்கொண்டவர்களையும் கொன்றுபோடலாம். இதனால், இயேசுவை ஏற்றுக்கொண்டவர்கள் தங்களுடைய உயிரையும் இழக்கலாம். இப்படித் தங்களுடைய உயிரை இழப்பவர்கள் அதைக் காத்துக்கொள்வார்கள் என்கின்றார் இயேசு. நாம் சிலுவையைச் சுமக்கவேண்டும் இயேசு இந்த உலகிற்கு அமைதியை அல்ல, வாளைக் கொண்டு வந்ததால், அவருடைய வழியில் நடப்பவர்கள், அவருக்காகவும் அவருடைய நற்செய்தியின் விழுமியங்களுக்காகவும் தங்களுடைய உயிரையும் இழக்கத் தயாராக இருக்கவேண்டும் என்று பார்த்தோம். இயேசு இந்த உலகிற்கு அமைதி அல்ல, வாளைக் கொண்டு வந்ததால், அவருடைய சீடர்கள் சிலுவையையும் சுமக்கத் தயாராக இருக்கவேண்டும். எப்படிப்பட்ட சிலுவையெனில், இயேசுவின் வழியில் நடப்பதால் வரும் அவமானம், பழிச்சொற்கள், உடல்ரீதியான சித்திரவதைகள்... இதுபோன்ற சிலுவைகளை ஒருவர் சுமக்கவேண்டும். இந்தச் சிலுவைகளை ஒருவர் சுமக்கத் தயாராக இல்லையென்றால், அவர் இயேசுவின் சீடராக இருக்க முடியாது. இன்றைக்குப் பலர் சிலுவையைச் சுமக்காமலேயே இயேசுவின் சீடராக இருக்க விரும்புகிறார்கள். இப்படிப்பட்டர்கள் இயேசுவின் உயிர்ப்பு மட்டும் போதும், அவருடைய பாடுகள் வேண்டவே வேண்டாம் என்று சொல்வது போன்று இருக்கின்றது. இயேசு பாடுகள் பட்ட பிறகுதான் உயிர்த்தார். அதுபோன்று ஒருவர் சிலுவையைச் சுமக்காமல், இயேசுவின் சீடராக இருக்க முடியாது. நாம் எல்லாரையும் விட இயேசுவை மிகுதியாக அன்புசெய்யவேண்டும் இயேசு இந்த உலகிற்கு அமைதி அல்ல, வாளைக்கொணர வந்ததால், அவர் பொருட்டு குடும்பங்களில், இயேசுவைச் சார்ந்தவர், இயேசுவைச் சாராதவர் என்ற பிளவு ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசுவின் சீடராக இருக்கின்றவர், எல்லாரையும் விட; ஏன், தன்னுடைய உயிரையும்விட இயேசுவை மிகுதியாக அன்பு செய்யவேண்டும். அப்பொழுதுதான் அவர் இயேசுவின் உண்மையான சீடராக இருக்கமுடியும். ஆகையால், நாம் இயேசுவின் உண்மையான சீடராக இருக்க, நம்முடைய உயிரை இழக்கத் துணிவோம்; சிலுவைகளைத் தாங்கிகொள்வோம;" எல்லாவற்றுக்கும் மேலாக இயேசுவை மிகுதியாக அன்பு செய்வோம். சிந்தனை "இயேசுவின் சீடராக இருப்பது என்பது, மக்களை இயேசுவின் சீடர்களாக மாற்றுவது" என்பர் டேவிட் பிளாட் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் எல்லாரையும் விட இயேசுவை மிகுதியாக அன்பு செய்து, சிலுவை சுமந்து, முடியுமானால் உயிரையும் இழந்து, எல்லா மக்களையும் இயேசுவின் சீடராக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |