பொதுக்காலம் 7 ஆம் வாரம் 23-02-2020 |
|
முதல் வாசகம்
|
|
I லேவியர் 19: 1-2, 17-18 II 1 கொரிந்தியர் 3: 16-23 III மத்தேயு 5: 38-48 பகைவருக்கு அருள்வாய் நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸில் ஒரு கிறிஸ்தவப் பெண்மணி இருந்தாள். அவள் தன்னுடைய பிழைப்பிற்காக ஒரு சிறு கடை நடத்தி வந்தாள். ஒரு நாள் அவள் தன்னுடைய கடையைச் சாத்திவிட்டு, அருகிலிருந்த வீட்டிற்குச் சென்றபிறகு, நீண்டநாள்களாக அவளுடைய கடையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்த மூன்று இளைஞர்கள் அவளுடைய கடையை உடைத்து, அதற்குள் இருந்த பொருள்களையெல்லாம் அள்ளிக்கொண்டுபோய் பக்கத்து ஊரில் ஒரு கடை போட்டு அவற்றை விற்கத் தொடங்கினார்கள். மறுநாள் தன்னுடைய கடைக்கு வந்த பெண்மணி, அங்கிருந்த பொருள்கள் யாவும் காணாமல் போனதைக் கண்டு அதிர்ந்து போனாள். பின்னர் அவள் காவல்துறையினரிடம் ஒரு புகார் எழுதிக் கொடுத்தாள். காவல்துறையினர் அவள் அளித்த புகாரை வாங்கிக்கொண்டு தேடுதல் வேட்டையைத் தொடங்கியது. ஓரிரு நாள்களில் அவளுடைய கடையிலிருந்த பொருள்களை யார் திருடினார் என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடித்து, அந்த மூன்று இளைஞர்களையும் சிறையில் அடைத்தனர். செய்தியறிந்த கிறிஸ்தவப் பெண்மணி அந்த மூன்று இளைஞர்களையும் தேடி, அவர்கள் இருந்த சிறைக்குச் சென்றாள். அவளைப் பார்த்ததும் அந்த மூன்று இளைஞர்களும் "இவர் நம்மைக் கடுமையாகத் திட்டித் தீர்ப்பதற்குத்தான் இங்கு வந்திருக்கின்றார்" என்று அஞ்சினார்கள்; ஆனால் அவள் அவர்களைத் திட்டவோ, அவர்களுக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தவோ இல்லை. மாறாக அவர்களுக்கு அவள் திருவிவிலியத்திலிருந்து ஒருசில பகுதிகளை வாசித்துக்காட்டி விளக்கமளித்தாள். இப்படியே அவள் பலநாள்களாகச் செய்து வந்ததால், அவர்கள் தங்களுடைய தவற்றை உணர்ந்து மனம்வருந்தினார்கள். மட்டுமல்லாமல் கிறிஸ்துவைத் தங்களுடைய தலைவராக ஏற்றுக்கொண்டார்கள். இதற்குப் பின்பு அவள் அங்கிருந்த சிறையதிகாரியின் அனுமதியின் பெயரில் அவர்களை அருகிலிருந்த கோயிலுக்கு அழைத்துச் சென்று, திருப்பலியில் பங்குகொள்ளச் செய்தாள். அது அவர்களுக்குப் புதுவிதமான அனுபவமாக இருந்தது; அவர்களுடைய வாழ்க்கையிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின. இப்படியிருக்கையில் சிறையதிகாரி அந்த இளைஞர்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தைக் கண்டு அவர்களை விரைவில் சிறையிலிருந்து விடுதலை செய்தார். சிறையிலிருந்து விடுதலையான அந்த மூன்று இளைஞர்களும் நல்லதொரு தொழிலைச் செய்து, நல்லமுறையில் வாழத் தொடங்கினார்கள். இந்த நிகழ்வில் வருகின்ற பெண்மணி தன்னுடைய கடையிலிருந்து திருடிய அந்த மூன்று இளைஞர்களையும் திட்டவோ அல்லது அவர்கள்மீது கடுமையான நடவடிக்கையோ எடுக்காமல், அவர்களை மன்னித்து அன்புசெய்து வாழ்வின் வழியைக் காட்டினார். அதனால் அவர்கள் நல்லவர்களாக வாழத் தொடங்கினார்கள். இன்றைய இறைவார்த்தையும்கூட நாம் நமக்கு எதிராகத் தீமை செய்பவர்களுக்கு நன்மை செய்யவும் பகைவர்களை அன்பு செய்யவும் அழைத்துத் தருகின்றது. நாம் அது குறித்து இப்பொழுது சிந்தித்துப் பாப்போம். இயேசுவின் புதிய போதனை இந்த உலகம் "பழிக்கு பழி" என்று தத்துவத்தின் அடிப்படையிலும் "அடித்தால் திருப்பி அடி" என்ற தத்துவத்தின் அடிப்படையிலும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஆண்டவர் இயேசு புதிய போதனையை அல்லது தத்துவத்தை முன் வைக்கின்றார். அதுதான் தீமைக்கு நன்மை செய்வதும் பகைவரை அன்புசெய்வதுமாகும். ஒருகன்னத்தில் அறைபவருக்கு மறுகன்னத்தையும், அங்கியை எடுத்துக்கொள்பவருக்கு மேலாடையையும், ஒரு கல் தொலை நடக்கக் கட்டாயப்படுத்துவோரிடம் இருகல் தொலைவும், கேட்போருக்குக் கொடுக்கவும், பகைவரிடம் அன்பும், துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டவும் சொல்லும் இயேசு, தீமைக்கு ஒருபோதும் தீமைக்குத் தீர்வாகாது நன்மையையும் அன்பும் மட்டுமே தீர்வாகும் என்ற உண்மையை எடுத்துக்கூறுகின்றார். இயேசுவின் இப்போதனையை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் கடைபிடிப்பது மிகக்கடினம் என்று ஒருசிலர் சொல்லலாம். இயேசுவின் இப்போதனையைக் கடைப்பிடிப்பது கடினமாக இருந்தாலும், இயலாத ஒன்று அல்ல. ஏனென்றால், இயேசுவே தனக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்து, பகைவர்களை அன்பு செய்தார். அப்படியானால் நாமும் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்கு நன்மையும் பகைவர்களை அன்பு செய்ய முடியும் என்பதுதானே உண்மை. நாம் ஏன் தீமை செய்வதற்கு நன்மையும் பகைவர்களை அன்புமசெய்யவும் வேண்டும்? இதனால் நமக்குக் கிடைக்கும் பலனென்ன? ஆகியவற்றைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்போம். நாம் ஒவ்வொருவரும் தூய ஆவியார் தங்கும் கோயில் இயேசு சொல்வது போன்று நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மையும் பகைவர்களை அன்புசெய்வதற்கும் முதன்மையான காரணம், ஒவ்வொருவரும் கடவுளுடைய கோயில்... ஒவ்வொருவருக்குள்ளும் தூய ஆவியார் குடிகொண்டிருக்கின்றார் என்பதால்தான். வேறு வார்த்தைகளில் சொல்லவேண்டும் என்றால், ஒருவர் நமக்கெதிராகத் தீமை செய்துவிட்டார் என்பதற்காகப் பதிலுக்கு நாம் அவருக்குத் தீமை செய்தால், நாம் கடவுளின் கோயிலுக்கு எதிராகவும் ஒவ்வொருவரிலும் குடிகொண்டிருக்கும் தூய ஆவியாருக்கு எதிராகவும் பாவம் செய்கின்றோம் என்று ஆகிவிடுவோம். கடவுளின் கோயிலை அழிக்கின்றவரைக் கடவுள் அழித்துவிடுவார் என்று புனித பவுல் கூறுகின்றார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்கு நன்மையையும் நம்முடைய பகைவர்களுக்கு அன்பையும் காட்டவேண்டியது தேவையானதாக இருக்கின்றது. நாம் யாவரும் விண்ணகத்தந்தையின் மக்கள் நாம் நமக்குத் தீமை செய்தவர்களுக்கு நன்மையும் பகைவர்களுக்கு அன்பையும் செலுத்தவேண்டிய இரண்டாவது முக்கியமான காரணம், நாம் யாவரும் விண்ணகத் தந்தையின் மக்கள் என்பதால் ஆகும். விண்ணகத் தந்தையோ நல்லோர் மேலும் தீயோர் மேலும் தம் கதிரவனை உதித்தெழச் செய்கிறார். நேர்மையுள்ளோர் மேலும் நேர்மையற்றோர் மேலும் மழை பெய்யச் செய்கின்றார். இப்படி இருக்க, நாம் நமக்கெதிராகத் தீமை செய்தவர்களுக்குத் தீமையையும் பகைவர்களிடம் வெறுப்பையும் காட்டிக்கொண்டிருந்தால், ஒருபோதும் நாம் விண்ணகத் தந்தையின் மக்களாக முடியாது. மாறாக, அலகையின் பிள்ளைகளாகத்தான் முடியும் ஏனெனில், தம் சகோதர் சகோதர்களிடம் அன்பு காட்டாதவர்களும் அவர்கள் செய்த தீமைக்குத் தீமையையே செய்கிறவர்களும் அலகையின் பிள்ளைகளாகத்தான் இருக்கமுடியும் (1 யோவா 3: 10). ஆகையால் நாம் விண்ணகத்தந்தையின் மக்களாக இருக்க தீமை செய்தவர்களுக்கு நன்மையையும் பகைவர்களிடம் அன்பையும் காட்டவேண்டும். ஒருமுறை ஒரு வயதான பெரியவரிடம் இளைஞன் ஒருவன், “தாத்தா! உங்களுடைய வயது என்ன?” என்றான். அவர் “தொண்ணூறு” என்றதும், “இந்தத் தொண்ணூறு வயதிலும் இவ்வளவு இளமையாகவும் நலமோடும் இருக்கிறீர்களே...! இதற்கான காரணமென்ன?” என்றான் அவன். “எனக்கு எதிரிகள் கிடையாது. அதனால்தான் நான் இவ்வளவு நலமாக இருக்கின்றேன்” என்று பெரியவர் சொன்னதும், அவன் நம்பமுடியாதவனாய், “என்ன...! உங்களுக்கு எதிரிகள் கிடையாதா...? கொஞ்சம் நம்புகின்ற மாதிரி பொய் சொல்லுங்கள்” என்று ஏளனமாகச் சொன்னான். “தம்பி! நான் சொல்வது உண்மை. எனக்கு எதிரிகள் என்று யாருமே கிடையாது. ஏனெனில் எனக்கு இருந்த எதிரிகளை எல்லாம் நான் என் நண்பர்களாக்கிக்கொண்டேன். அதனால் என்னிடத்தில் யார்மீதும் வெறுப்பு என்பதே கிடையாது... அன்பு மட்டுமே இருக்கின்றது. அதனால்தான் நான் இவ்வுளவு இளமையாகவும் நலமாகவும் இருக்கின்றேன்” என்றார் பெரியவர். ஆம் தீமைக்குப் பதில் நன்மை செய்து, நம் பகைவர்களை மன்னித்து அன்பு செய்கின்றபோது நாம் நல்ல உடல் நலத்துடன் இருப்பதோடு மட்டுமல்லாமல், விண்ணகத் தந்தையின் மக்களாகவும் ஆகுகின்றோம். ஆகையால், நாம் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வோம்; பகைவர்களை மன்னித்து அன்புசெய்வோம். சிந்தனை "ஒருவரை நாம் வெறுக்கத் தொடங்கும்பொழுதே, அவரை நாம் நம்மீது அதிகாரம் செலுத்த அனுமதித்துவிடுகின்றோம்" என்பார் டால் கார்னகி என்ற எழுத்தாளர். ஆகையால் நாம் யாரும் நம்மீது அதிகாரம் செலுத்தாமல் இருக்கவும் இறைவனின் அதிகாரத்திற்கு மட்டுமே கட்டுப்பட்டு, அவருடைய அன்பு மக்களாக இருக்கவும் தீமை செய்தவர்களுக்கு நன்மை செய்வோம்; பகைவர்களை அன்பு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |