முதல்
வாசகம் கிறிஸ்துவின் பெயரையும்
அவருடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில் பொறித்திருந்தனர்.
திருத்தூதர் யோவான் எழுதிய
திருவெளிப்பாட்டிலிருந்து வாசகம் 14: 1-5
யோவான் என்னும் நான் சீயோன் மலைமீது ஆட்டுக்குட்டி நிற்கக் கண்டேன்.
அதன் பெயரையும் அதனுடைய தந்தையின் பெயரையும் தங்களது நெற்றியில்
பொறித்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர் அதனுடன் இருந்தனர்.
பின்பு விண்ணகத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். அது பெரும் வெள்ளத்தின்
இரைச்சல் போலும் பேரிடி முழக்கம் போலும் யாழை மீட்டுவோர் எழுப்பும் இசை
போலும் ஒலித்தது.
அந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேரும் அரியணை முன்னிலையில்
நான்கு உயிர்களுக்கும் மூப்பர்களுக்கும் முன்பாகப் புதியதொரு பாடலைப்
பாடிக்கொண்டிருந்தார்கள். மண்ணுலகிலிருந்து விலை கொடுத்து மீட்கப்பட்ட
அவர்களைத் தவிர வேறு யாராலும் அந்தப் பாடலைக் கற்றுக்கொள்ள இயலவில்லை.
அவர்கள் பெண்களோடு சேர்ந்து தங்களைக் கறைப்படுத்திக் கொள்ளாமல் கற்பைக்
காத்துக் கொண்டவர்கள்.
ஆட்டுக்குட்டி சென்ற இடம் எங்கும் அதைப் பின்தொடர்ந்தவர்கள்; கடவுளுக்கும்
ஆட்டுக் குட்டிக்கும் உரிய முதற்கனியாக மனித குலத்திலிருந்து விலை
கொடுத்து மீட்கப்பட்டவர்கள். அவர்களது வாயினின்று பொய்யே வந்ததில்லை;
ஏனெனில் அவர்கள் மாசற்றவர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 24: 1-2. 3-4ab. 5-6 .
(பல்லவி: 6a) Mp3
பல்லவி: ஆண்டவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே.
1
மண்ணுலகும் அதில் நிறைந்துள்ள அனைத்தும் ஆண்டவருடை யவை; நிலவுலகும் அதில்
வாழ்வனவும் அவருக்கே சொந்தம்.
2
ஏனெனில், அவரே கடல்கள் மீது அதற்கு அடித்தளமிட்டார்; ஆறுகள் மீது அதை
நிலைநாட்டினவரும் அவரே. - பல்லவி
3
ஆண்டவரது மலையில் ஏறத் தகுதியுள்ளவர் யார்? அவரது திருத்தலத்தில் நிற்கக்கூடியவர்
யார்?
4ab
கறைபடாத கைகளும் மாசற்ற மனமும் உடையவர்; பொய்த் தெய்வங்களை நோக்கித் தம்
உள்ளத்தை உயர்த்தாதவர். - பல்லவி
5
இவரே ஆண்டவரிடம் ஆசி பெறுவார்; தம் மீட்பராம் கடவுளிடமிருந்து நேர்மையாளர்
எனத் தீர்ப்புப் பெறுவார்.
6
அவரை நாடுவோரின் தலைமுறையினர் இவர்களே; யாக்கோபின் கடவுளது முகத்தைத்
தேடுவோர் இவர்களே. - பல்லவி
நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி
மத் 24: 42a, 44
அல்லேலூயா, அல்லேலூயா! விழிப்பாய் இருங்கள்; ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில்
நீங்கள் நினையாத நேரத்தில் மானிடமகன் வருவார். அல்லேலூயா.
நற்செய்தி
வாசகம்
வறுமையில் வாடிய ஒரு கைம்பெண் இரண்டு காசுகளை அதில்
போடுவதைக் கண்டார்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 21:
1-4
அக்காலத்தில்
இயேசு நிமிர்ந்து பார்த்தபோது செல்வர்கள் தங்கள் காணிக்கைகளைக்
காணிக்கைப் பெட்டிக்குள் போடுவதைக் கண்டார். வறுமையில் வாடிய ஒரு
கைம்பெண்ணும் இரண்டு காசுகளை அதில் போடுவதைக் கண்டார்.
அவர், “இந்த ஏழைக் கைம்பெண் எல்லாரையும் விட மிகுதியான காணிக்கை
போட்டிருக்கிறார் என உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன். ஏனெனில் அவர்கள்
அனைவரும் தங்களுக்கு இருந்த மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை போட்டனர்.
இவரோ தமக்குப் பற்றாக்குறை இருந்தும் தம் பிழைப்புக்காக வைத்திருந்த எல்லாவற்றையுமே
போட்டுவிட்டார்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு. |
திருவெளிப்பாடு 14: 1-5
ஆட்டுக்குட்டியின் தோழர்(கள்)
நிகழ்வு
புவி ஈர்ப்பு விசையைக் கண்டு பிடித்தவர், மிகப்பெரிய கணிதவியலாரும்
அறிவியலாரும் தத்துவஞானியுமான சர் ஐசக் நியூட்டன் (1642-1727),
இவர் பள்ளியில் படித்த காலத்தில் மிகவும் துடிப்பான மாணவராக இருந்தார்;
ஆனால், இவருடைய தாயால் இவரைத் தொடர்ந்து படிக்கவைக்க முடியவில்லை.
அதனால் இவர் ஒரு பண்ணைவீட்டில் வேலை பார்க்கவேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது.
ஐசக் நியூட்டன் பண்ணை வீட்டில் வேலை பார்க்கும்பொழுதும் எப்பொழுதும்
தன்னோடு ஒரு குறிப்பேட்டையும் பேனாவையும் வைத்திருப்பார். அதில்
இவர் தான் கண்டுணர்ந்த உண்மைகள், கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள்
யாவற்றையும் குறித்து வைத்திருப்பார். இப்படி ஒரு பொக்கிஷம்
போன்று ஐசக் நியூட்டன் வைத்திருந்த அந்தக் குறிப்பேட்டின் முதல்
பக்கத்தில் “இது ஐசக் நியூட்டனின் குறிப்பேடு” என்று
குறிப்பிட்டுவிட்டு, “எனக்கு பிளேட்டோ, அரிஸ்டாட்டில் ஆகியோரெல்லாம்
நண்பர்கள்; ஆனால், இவர்கள் எல்லாரையும் விட மிகச் சிறந்த நண்பர்
உண்டு. அதுதான் உண்மை” என்று குறித்து வைத்திருந்தார்.
ஆம், மிகப்பெரிய ஆளுமையான ஐசக் நியூட்டன் எப்பொழுதும் உண்மையைப்
பேசினார்; உண்மையாக வாழ்ந்தார்; அவரிடம் பொய் என்பது இல்லவே இல்லை.
அதனாலேயே அவரால் மிகப்பெரிய ஆளுமையாக உருவாக முடிந்தது.
திருவெளிப்பாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில்,
ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் தோழர்களாக வருகின்றவர்களுடைய
வாயிலிருந்து பொய்யே வந்ததில்லை என்றும், அவர்கள் மாசற்றவர்களாய்
இருந்தார்கள் என்றும் வாசிக்கின்றோம். நாம் நம்முடைய
வாழ்க்கையில் ஆட்டுக்குட்டியாம் தோழர்களாக எப்படி மாறுவது, அந்தப்
பேற்றினை நாம் எப்படிப் பெற்றுக்கொள்வது என்பன குறித்து நாம்
சிந்தித்துப் பார்ப்போம்.
யார் இந்த ஓர் இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர்?
இன்றைய முதல் வாசகத்தில் யோவான் காணுகின்ற காட்சியில் சீயோன்
மலைமேல் ஆட்டுக்குட்டி நிற்கிறது. அதனுடன் தன் பெயரையும் தந்தையின்
பெயரையும் தங்கள் நெற்றியில் பொறிந்திருந்த ஓர் இலட்சத்து நாற்பத்து
நான்காயிரம் பேர் இருக்கின்றனர். இவர்கள் மண்ணுலகிலிருந்து
விலை கொடுத்து மீட்கப்பட்டவர்களாக, கற்பைக் காத்துக்கொண்டவர்களாக,
ஆட்டுக்குட்டியைப் பின்தொடர்பவர்களாக, பொய் பேசாதவர்களாக, மாசற்றவர்களாக
இருக்கின்றார்கள். இப்படிப்பட்டவர்கள் அரியணை முன்னிலையில் பாடல்
பாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
விண்ணுலகில் உள்ள அரியணை முன்பாக நிற்பதும், அதற்கு முன்பாகப்
பாடல் பாடுவதும் மிகப்பெரிய பேறு. அத்தகைய பேற்றினைத் தங்களுடைய
வாழ்க்கையில் பொய்யே பேசாமல், உண்மையை மட்டுமே பேசி, மாசற்றவர்களாய்
இருந்து, அதன்மூலம் ஆட்டுக்குட்டியாம் இயேசுவைப் பின்தொடர்பவர்கள்
பெற்றுக்கொள்கின்றார்கள். யோவான் கண்ட இக்காட்சி, “நான் இருக்கும்
இடத்தில் என் தொண்டரும் இருப்பர்” (யோவா 12:26) என்ற இயேசுவின்
வார்த்தைகளுக்கு அர்த்தம் சேர்ப்பதாக இருக்கின்றது. யோவான்
கண்ட இக்காட்சி நமக்கு மற்றொரு உண்மையையும் எடுத்துக்
கூறுகின்றது. அது என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பின்தொடர்வோர் அவருடைய தோழராகும், நண்பராகும்
பேறுபெறுதல்
யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு தன் சீடர்களைப் பார்த்து,
“இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்லமாட்டேன்; உங்களை நான்
நண்பர்கள் என்பேன்” (யோவா 15: 15) என்பார். இன்றைய முதல்
வாசகத்தில் இயேசுவைப் பின்தொடர்பவர்கள் அவருடைய தோழர்கள் என்று
அழைக்கப்படுகின்றார்கள். தோழர், நண்பர் இரண்டுக்கும் பெரிய
வித்தியாசம். அப்படியாயின் நாம் இயேசுவின் வார்த்தைகளைக்
கடைப்பிடித்து, அவரைப் பின்தொடர்ந்து நடக்கின்றபொழுது அவருடைய
தோழராகின்றோம் அல்லது நண்பர்கள் ஆகின்றோம்.
பொய்யே பேசாமல், மாசற்றவர்களாக இருப்பவர்கள் இயேசுவின்
தோழர்கள் அல்லது நண்பர்கள் எனில், பொய் பேசி, உண்மையில்லாமல்
திரிபவர்கள் இயேசுவுக்கு எதிராகச்
செயல்படுகின்றவர்களாகிறார்கள்.. நீதிமொழிகள் நூலில் இவ்வாறு
நாம் வாசிக்கின்றோம். “பொய்யுரைக்கும் நாவை ஆண்டவர்
அருவருக்கின்றார்; உண்மையாய் நடக்கிறவர்களை அவர்
அரவணைக்கின்றார்“ (நீமொ 12: 22) ஆகையால், நாம் நம்முடைய அன்றாட
வாழ்விலிருந்து பொய்யைத் தவிர்த்து, உண்மையைப் பேசி,
மாசற்றவர்களாக இருப்போம். அதன்மூலம் இயேசுவின் தோழர்களாக,
நண்பர்களாக மாறுவோம்.
சிந்தனை
‘என் வார்த்தைகளை நீங்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வந்தால்,
உண்மையில் என் சீடர்களாய் இருப்பீர்கள்’ (யோவா 8: 31) என்பார்
இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் வார்த்தைகளைத் தொடர்ந்து
கடைப்பிடித்து, ஆட்டுக்குட்டியாம் இயேசுவின் சீடர்களாக,
தோழர்களாக வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
லூக்கா 21: 1-4
“பற்றாக்குறையிலிருந்து மிகுதியாக”
நிகழ்வு
மன்னன் ஒருவன் இருந்தான். அவன் ஒரு பெரிய கோயிலைக் கட்டத் தொடங்கினான்.
மேலும் தான் கட்டுகிற கோயிலுக்கு யாருமே பண உதவி தரக்கூடாது, தன்னிடம்
உள்ள பணத்தால் மட்டுமே அந்தக் கோயில் கட்டப்படும் என்று அறிவித்துவிட்டுக்
கல்வெட்டில், இந்தக் கோயில் இன்னாரால் கட்டப்பட்டது என்று தன்னுடைய பெயரைப்
பொறித்து வைத்தான்.
அன்றிரவு அவன் ஒரு கனவு கண்டான். அந்தக் கனவில், அவன் கோயில் கல்வெட்டில்
தன்னுடைய பெயர் பொறிக்கப்பட்டிருந்த இடத்தில், ஒரு பெண்மணியின் பெயர்
பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்து போனான். மறுநாள் காலையில்
தூக்கத்திலிருந்து விழித்தெழுந்ததும் முதல்வேலையாக அவன் கோயில் கல்வெட்டில்
இருந்த பெண்மணியின் பெயரை நீக்கிவிட்டுத் தன்னுடைய பெயரைப் பொறித்து
வைத்தான்.
அன்றிரவும் அவன் அதேபோல் கனவு கண்டான். மறுநாள் காலையில் தூக்கத்திலிருந்து
விழித்தெழுந்ததும் முதல் வேலையாக அவன் கோயில் கல்வெட்டியில் இருந்த
பெண்மணியின் பெயரை நீக்கிவிட்டு, தன்னுடைய பெயரைப் பொறித்தான். இப்படியே
நாள்கள் சென்றுகொண்டிருந்தன. ஒருநாள் அவன் பொறுமை இழந்து, கல்வெட்டில்
பொறிக்கப்பட்டிருக்கும் அந்தப் பெண்மணி யார் என்று விசாரித்து, அவரைத்
தன்னிடம் அழைத்து வரச் சொன்னான். மன்னனின் அழைப்பின் பேரில் அந்தப்
பெண்மணியும் அங்கு வந்தார்.
“கோயில் கல்வெட்டில் உன்னுடைய பெயர் பொறிக்கப்படும் அளவுக்கு நீ அப்படி
என்ன செய்தாய்?” என்று சீறினான் மன்னன். “மன்னா! நானோ கணவனை இழந்த ஒரு
கைம்பெண்; ஏழை. நான் என்னுடைய அன்றாடத் தேவைக்குப் போக, மீதமிருந்த பணத்தை
கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து வைத்துவந்தேன். இந்த நேரத்தில்தான் நீங்கள்
கோயில் கட்டத் தொடங்கினீர்கள். கோயில் திருப்பணிக்கு என்னால் இயன்ற உதவிகளைச்
செய்யலாம் என்று இருந்தேன். நீங்கள் யாரும் பண உதவியோ, பொருள் பொருள்
உதவியோ செய்யக்கூடாது என்று கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டீர்கள். அதனால்தான்
நான் சிறுகச் சிறுகச் சேமித்து வைத்த பணத்தை கோயிலுக்குச் சலவைக் கற்களைச்
சுமந்துகொண்டு வரும் காளை மாடுகளுக்கு உணவிட – வைக்கோல் வாங்கித்தரப் -
பயன்படுத்தினேன். நான் செய்தது இதுதான்” என்று பொறுமையாகச் சொல்லி
முடித்தார் அந்தப் பெண்மணி. இதைக் கேட்டதும் மன்னனின் ஆணவம் அடங்கியது.
இந்த நிகழ்வில் வருகின்ற மன்னன், கடவுளுக்கு நான்தான் கோயிலிலைக் கட்டுவேன்;
என்னுடைய பெயர்தான் கல்வெட்டில் நிலைக்க வேண்டும் என்று நினைத்துக்
கொண்டிருந்தபொழுது, கடவுளோ கோயில் திருப்பணிக்குத் தன்னால் இன்றைய உதவியைச்
செய்த பெண்மணியின் பெயரை நிலைக்கச் செய்தார். ஆம், நாம் கடவுளுக்கு எவ்வளவு
கொடுக்கின்றோம் என்பது பெரிதல்ல, அதை எப்படிக் கொடுக்கின்றோம் என்பதே
பெரிது. இன்றைய நற்செய்தி வாசகமும் நமக்கு இதே செய்தியைத்தான் எடுத்துக்கூறுகின்றது.
அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மிகுதியான செல்வத்திலிருந்து காணிக்கை செலுத்திய செல்வந்தர்கள்
எருசலேமிற்குள் வெற்றிவீரராய் வந்த இயேசு, அங்கேயே தங்கி மக்களுக்குக்
கற்பித்து வந்தார். இன்றைய நற்செய்தியில் அவர் பெண்கள் பகுதியில் இருந்த
காணிக்கைப் பெட்டிக்கு முன்பாக அமர்ந்துகொண்டு, அதில் காணிக்கை
செலுத்துபவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கின்றார். எருசலேம்
திருக்கோயிலில் நடைபெற்ற பல்வேறு பணிகளுக்காக, தேவைகளுக்காக அங்குப்
பன்னிரண்டு காணிக்கைப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன அவற்றில் மக்கள்
காணிக்கை செலுத்திக் கொண்டிருந்தார்கள். மேலும் அது பாஸ்கா காலம்
என்பதால், செல்வந்தர்கள் மிகுதியாகக் காணிக்கை செலுத்தினார்கள்.
அவர்கள் மிகுதியாகக் காணிக்கை செலுத்தியது இயேசுவின் கவனத்தை
ஈர்க்கவில்லை; மாறாக, ஒருவர் செலுத்திய காணிக்கை இயேசுவின் கவனத்தை
ஈர்த்தது. அது ஏன் அந்த ஒருவர் செலுத்திய காணிக்கை இயேசுவின் கவனத்தை
ஈர்த்தது என்று நாம் தொடர்ந்து சிந்திப்போம்.
பற்றாக்குறையிலிருந்து காணிக்கை செலுத்திய ஏழைக் கைம்பெண்
இன்றைய நற்செய்திப் பகுதிக்கு முந்தைய பகுதியில் இயேசு, கைம்பெண்களின்
வீடுகளைப் பறித்துக் கொண்டதற்காக மறைநூல் அறிஞர்களைக் கடுமையாகச்
சாடுவார் (லூக் 20: 47). இதனால் கைம்பெண் அதிகாரத்தில் இருந்த பலரால்
வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை அறிந்து நாம் கொள்ளலாம். இப்படிப்பட்ட
நிலையில் இருந்து, தன்னுடைய பற்றாக்குறையிலிருந்து நற்செய்தியில் வரும்
கைம்பெண் இரண்டு காசுகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றார். இதனாலேயே
கைம்பெண்ணின் காணிக்கை செல்வந்தர்கள் செலுத்திய காணிக்கையாக விட
இயேசுவுக்கு மிகுதியாகத் தெரிந்தது.
மேலும் இயேசு மக்கள் எவ்வளவு காணிக்கையை செலுத்தினார்கள் என்று
பார்க்கவில்லை. காணிக்கை செலுத்திய பின் அவர்களிடம் எவ்வளவு இருந்தது
என்பதைப் பார்த்தார். கைம்பெண் தன் பிழைப்பிற்காக
வைத்திருந்தவற்றிலிருந்து காணிக்கை செலுத்தியதால், அவர் காணிக்கை
செலுத்திய பின் அவரிடம் ஒன்றும் இல்லை. இறைவனை முழுமையாக நம்பியே
இப்படியொரு செயலைச் செய்தார் அவர் என்று இயேசு அவரைப்
பாராட்டுகின்றார்.
நாம் இறைவனுக்குக் காணிக்கை செலுத்துகின்றபொழுது எத்தகைய மனநிலையோடு
காணிக்கை செலுத்துகின்றோம். சிந்திப்போம்.
சிந்தனை
‘மாசிதோனியத் திருஅவையினர் வறுமையில் மூழ்கி இருந்தாலும் வள்ளன்மையோடு
வாரி வழங்கினார்கள்’ (2 கொரி 8: 2) என்பார் புனித பவுல். ஆகையால், நாம்
வறுமையில் இருந்தாலும் வள்ளன்மையோடு இறைவனுக்கு வாரி வழங்குவோம்.
இறைவனை நம்பி நம்முடைய வாழ்க்கையை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை
நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |