maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

பொதுக்காலம் 30 ஆம் வாரம்  02-11-2020

முதல் வாசகம்

ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

புலம்பல் நூலிலிருந்து வாசகம் 3: 17-26

அமைதியை நான் இழக்கச் செய்தீர். நலமென்பதையே நான் மறந்து விட்டேன்! ‘என் வலிமையும் ஆண்டவர் மீது நான் கொண்டிருந்த நம்பிக்கையும் மறைந்துபோயின!’ என்று நான் சொல்லிக்கொண்டேன்.

என் துயரத்தையும் அலைச்சலையும், எட்டிக் காடியையும் கசப்பையும் நினைத்தருளும்! அதை நினைந்து நினைந்து என் உள்ளம் கூனிக் குறுகுகின்றது! இதை என் நினைவுக்குக் கொண்டு வருகின்றேன்; எனவே நான் நம்பிக்கை கொள்கிறேன்.

‘ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றன! நீர் பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!’ ‘ஆண்டவரே என் பங்கு’ என்று என் மனம் சொல்கின்றது! எனவே நான் அவரில் நம்பிக்கை கொள்கின்றேன்.

ஆண்டவரில் நம்பிக்கை வைப்போர்க்கும், அவரைத் தேடுவோர்க்கும் அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்!

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்
திபா 103: 8,10. 13-14. 15-16. 17 . (பல்லவி: 8a) Mp3

பல்லவி: ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்.

அல்லது: (திபா 37: 39a): நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடம் இருந்தே வருகின்றது.
8
ஆண்டவர் இரக்கமும் அருளும் கொண்டவர்; நீடிய பொறுமையும் பேரன்பும் உள்ளவர்.
10
அவர் நம் பாவங்களுக்கு ஏற்ப நம்மை நடத்துவதில்லை; நம் குற்றங்களுக்கு ஏற்ப நம்மைத் தண்டிப்பதில்லை. - - பல்லவி

13
தந்தை தம் பிள்ளைகள் மீது இரக்கம் காட்டுவது போல் ஆண்டவர் தமக்கு அஞ்சுவோர் மீது இரங்குகிறார்.
14
அவர் நமது உருவத்தை அறிவார்; நாம் தூசி என்பது அவர் நினைவிலுள்ளது. - - பல்லவி

15
மனிதரின் வாழ்நாள் புல்லைப் போன்றது; வயல்வெளிப் பூவென அவர்கள் மலர்கின்றார்கள்.
16
அதன் மீது காற்றடித்ததும் அது இல்லாமல் போகின்றது; அது இருந்த இடமே தெரியாமல் போகின்றது. - - பல்லவி

17
ஆண்டவரது பேரன்போ அவருக்கு அஞ்சுவோர் மீது என்றென்றும் இருக்கும்; அவரது நீதியோ அவர்களின் பிள்ளைகளின் பிள்ளைகள் மீதும் இருக்கும்.
18
அவருடைய உடன்படிக்கையைக் கடைப்பிடித்து அவரது கட்டளையின்படி நடப்பதில் கருத்தாய் இருப்போர்க்கு அது நிலைக்கும். - - பல்லவி

இரண்டாம் வாசகம்

சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது.


திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 15: 51-57

சகோதரர் சகோதரிகளே,

இதோ, ஒரு மறைபொருளை உங்களுக்குச் சொல்கிறேன்; நாம் யாவரும் சாக மாட்டோம்; ஆனால் அனைவரும் மாற்று உருப் பெறுவோம்.

ஒரு நொடிப் பொழுதில், கண் இமைக்கும் நேரத்தில், இறுதி எக்காளம் முழங்கும்போது இது நிகழும். எக்காளம் முழங்கும் போது இறந்தோர் அழிவற்றவர்களாய் உயிருடன் எழுப்பப்படுவர்; நாமும் மாற்று உருப் பெறுவோம். ஏனெனில், அழிவுக்குரிய இவ்வுடல் அழியாமையை அணிந்தாக வேண்டும். சாவுக்குரிய இவ்வுடல் சாகாமையை அணிந்தாக வேண்டும்.

அழிவுக்குரியது அழியாமையையும், சாவுக்குரியது சாகாமையையும் அணிந்துகொள்ளும்போது மறைநூலில் எழுதியுள்ள வாக்கு நிறைவேறும்: “சாவு முற்றிலும் ஒழிந்தது; வெற்றி கிடைத்தது. சாவே, உன் வெற்றி எங்கே? சாவே, உன் கொடுக்கு எங்கே?”

பாவமே சாவின் கொடுக்கு. பாவத்துக்கு வலிமை தருவது திருச்சட்டமே. ஆகவே நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக நமக்கு இந்த வெற்றியைக் கொடுக்கும் கடவுளுக்கு நன்றி!

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

மத் 25: 34

அல்லேலூயா, அல்லேலூயா! என் தந்தையிடமிருந்து ஆசி பெற்றவர்களே, வாருங்கள்; உலகம் தோன்றியது முதல் உங்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் ஆட்சியை உரிமைப்பேறாகப் பெற்றுக்கொள்ளுங்கள், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.

✠ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 25-30


அக்காலத்தில்

இயேசு, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்துக் குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர். ஆம் தந்தையே, இதுவே உமது திருவுளம்.

என் தந்தை எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர வேறு எவரும் மகனை அறியார்; மகனும் அவர் யாருக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறாரோ அவருமன்றி வேறு எவரும் தந்தையை அறியார்” என்று கூறினார்.

மேலும் அவர், “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும். ஆம், என் நுகம் அழுத்தாது; என் சுமை எளிதாயுள்ளது” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

அல்லது

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 23-26

அக்காலத்தில்

இயேசு தம் சீடர்களைப் பார்த்து, “மானிட மகன் மாட்சி பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.

தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர். எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்” என்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.
 

 

பிலிப்பியர் 2: 1-4

“ஒரே மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்”



நிகழ்வு

ஒரு காட்டில் எறும்புக் கூட்டம் ஒன்று இருந்தது. இந்தக் கூட்டம் அந்தக் காட்டிலிருந்த எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் பறவைகளுக்கும், காட்டில் வாழ்ந்த எல்லா உயிரினங்களுக்கும் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கியது. காரணம், இது எங்கு போனாலும் ஒன்றாகவே போகும், வரும். ஒத்த கருத்துடையதாக இருக்கும். இதைப் பார்த்துவிட்டு எல்லாக் காட்டு விலங்குகளும் வியப்படைந்தன.

ஒருநாள் அந்தக் காட்டில் பெரும் தீ பரவியது. காட்டிலிருந்த உயிரினங்கள் யாவும், தீயிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தபொழுது, இந்த எறும்புக் கூட்டம் ஒன்றுகூடியது. “காட்டுத் தீயிலிருந்து நம்மை எப்படிக் காத்துக் கொள்வது?” என்று தலைமை எறும்பு கேட்டபொழுது, ஒவ்வொரு எறும்பும் ஒவ்வொரு கருத்தைச் சொன்னது. கடைசியில் அந்தக் கூட்டத்திலிருந்த வயதான எறும்பு, “இந்தக் காட்டுத் தீயிலிருந்து நம்மைக் காத்துக்கொள்ள, தனித்தனியாக அல்ல, மாறாக நாம் அனைவரும் ஓர் உருண்டை போன்று திரண்டு, இந்தத் தீயைக் கடந்துபோவோம். அப்பொழுது மேற்பகுதியில் இருக்கும் நம்மில் ஒருசிலர் தீயில் எரிந்துபோனாலும், உள்ளே இருக்கும் பலர் தப்பித்துக் கொள்ளலாம்” என்றது.

அந்த வயதான எறும்பு சொன்ன இந்த ஆலோசனை, எறும்புக் கூட்டத்திலிருந்த மற்ற எல்லா எறும்புகளுக்கும் பிடித்துபோக, அது சொன்னது போன்றே செய்யலாம் என எல்லா எறும்புகளும் முடிவுசெய்தன. இதன்பிறகு அந்த எறும்புக் கூட்டம் ஓர் உருண்டை போலத் திரண்டு தீயைக் கடந்து சென்றன. தீயில் மேற்பகுதியில் இருந்த ஒருசில எறும்புகள் கருகி இறந்து போனாலும், உட்பகுதியில் இருந்த பல எறும்புகள் உயிர் பிழைத்தன.

ஆம், இந்தக் கதையில் வருகின்ற எறும்புக்கூட்டம், ஒத்த கருத்துடையதாய்ச் செயல்பட்டது. அதனாலேயே காட்டுத் தீயிலிருந்து அது தன்னைக் காத்துக்கொண்டது. இன்றைய முதல் வாசத்தில் புனித பவுல் பிலிப்பி நகர் மக்களிடம் நீங்கள் ஒரே மனத்தவராய் வாழுங்கள் என்கின்றார். புனித பவுல் விடுக்கும் இந்த அழைப்பின் வழியாக அவர் நமக்கு என்ன செய்தியைச் சொல்ல வருகின்றார் என்று சிந்தித்துப் பார்ப்போம்.

ஒரே மனத்தவராய் வாழவேண்டும்

‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்பதுபோல், பிலிப்பி நகர்த் திருஅவையிலும் இருந்த கட்சி மனப்பான்மையும் ஒற்றுமையின்மையையும் அறிய வரும் புனித பவுல், “நீங்கள் ஒரே எண்ணமும் ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவராய்த் திகழ்ந்து, ஒரே மனத்தவராயிருந்து என் மகிழ்ச்சியை நிறைவாக்குங்கள்” என்கிறார். இப்படிச் சொல்லிவிட்டுப் புனித பவுல், “கட்சி மனப்பான்மைக்கும் வீண் பெருமைக்கும் இடம் தரவேண்டாம்” என்றார்.

இயேசுவைப் பின்பற்றி நடக்கின்ற ஒவ்வொருவரும் அவருடைய உடலின் உறுப்பாக இருக்கின்றனர் (1கொரி 12: 12). அப்படியிருக்கும்பொழுது, இதில் நான் பெரியவன், நீ சிறியவன் என்று சண்டையிடுவதும், பிரிந்து கிடப்பதும் கிறிஸ்துவைப் பின்பற்றி நடக்கின்ற ஒருவருக்கு அழகல்ல என்பதால்தான் புனித பிலிப்பி நகர் இறைமக்களிடம் நீங்கள் ஒரே மனத்தவராய் வாழுங்கள் என்றோர் அழைப்பினை விடுக்கின்றார்.

நம்மைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளவேண்டும்

ஒரே மனத்தவராய் வாழ்வதற்கு, பிலிப்பி நகர் இறைமக்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் புனித பவுல் பட்டியலிடுகின்றார். உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொள்ளுங்கள்... மற்றவர்களை உங்களிலும் உயர்ந்தவர்களாகக் கருதுங்கள் என்று சொல்லும் புனித புனித இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்கின்றபொழுது, ஒரே மனத்தவராய், ஒரே அன்பும் ஒரே உள்ளமும் கொண்டவர்களாய்த் திகழ முடியும்.

ஆம், குழுமமாக, குடும்பமாக வாழக்கூடிய நாம் பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை வாழவேண்டும். அதற்குப் பிறர் என்னிலும் மதிப்புக்குரியவர் (உரோ 12: 10) என்ற எண்ணமானது நம்மிடத்தில் இருக்கவேண்டும். ஆகவே, இயேசுவின் வழியில் நடக்கின்ற நாம் பிறரைச் சார்ந்தவற்றில் அக்கறை கொண்டவர்களாய் வாழ்ந்து, ஒரே மனத்தவராய் வாழ முயற்சி செய்வோம்.

சிந்தனை

‘இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்ககளோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன்’ (மத் 19: 20) என்பார் இயேசு. ஆம், நாம் இயேசுவின் பொருட்டு, ஒன்றாய், ஒரு மனத்தவராய் வாழ்கின்றபொழுது, அவர் நம் நடுவில் என்பது உறுதி. ஆகவே, நாம் ஒரு மனத்தவராய் வாழ்ந்து இயேசுவுக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
லூக்கா 14: 12-14

“நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்பொழுது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்”


நிகழ்வு

சேலம் மற்றும் அதனைச் சுற்றி வாழும் மக்களுக்கு முப்பத்தாறு வயதுப் பெரியசாமியையும், அவருடைய நண்பர்களையும் தெரியாமல் இருக்க வாய்ப்புக் குறைவு. ஏனென்றால், இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ‘அமுத சுரபி’ என்றொரு குழு அமைத்து, அதன்மூலம் ஒவ்வொருநாளும் பசியால் வாடும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதற்றவற்றவர்கள், வறியவர்கள் ஆகியோருக்கு உணவு வழங்கிக்கொண்டு வருகின்றார்கள்.

ஒவ்வொருநாளும் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் தங்களுடைய பணிகளைத் தொடங்கிவிடும் இவர்கள், நல்லமுறையில் உணவைத் தயாரித்து, அதை அருமையாகப் பொட்டலமாகக் கட்டி, அவற்றைச் சாலையோரங்களில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதற்றவர்கள், வறியவர்கள் ஆகியோருக்கு வழங்கிக் கொண்டு வருகின்றார்கள். ஞாயிற்றுக்கிழமை என்றால் ஐநூறு பேருக்கும் மேல் இவர்கள் உணவளித்து வருகின்றார்கள். இதில் சிறப்பு என்னவெனில், ‘இந்த மக்களுக்கு’ உணவு வழங்குவதற்கு ஆகும் செலவினங்களை இவர்களே பார்த்துக்கொள்கின்றார்கள் என்பதுதான்.

“இப்படிப்பட்ட உயர்ந்த எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?” என்று யாராவது அமுத சுரபிக் குழுவை ஒருங்கிணைத்து வரும் பெரியசாமியிடம் கேட்டால், அவரிடமிருந்து இப்படியொரு பதில் வருகின்றது: “வழக்கமாக என்னுடைய மனைவி கார்த்திகாவும், நானும் மலைக்கோயிலுக்குச் சென்று, அங்குள்ள குரங்குகளுக்கு வாழைப் பழங்களை வழங்குவதுண்டு. ஒருநாள் என்னுடைய மனைவி என்னிடம், ‘இங்குள்ள குரங்குகள் எங்காவது போய் இரைதேடிக்கொள்ளும் அல்லது யாராவது இவற்றிற்கு உணவு வழங்கிவிடுவார்கள்; ஆனால் வழியோரங்களில் இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோருக்கு உணவு வழங்குவதற்கு ஆளில்லை. நாம் ஏன் அவர்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யக்கூடாது...?’ என்றார். அதற்குப் பிறகுதான் நான் என் நண்பர்களின் உதவியுடன் அமுத சுரபி என்ற குழுவைத் தொடங்கி இந்த மக்களுக்கு உணவு வழங்கிக்கொண்டிருக்கின்றேன்.”

இந்த உலகத்தில் பணக்காரர்களுக்கும், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் உணவு வழங்குவதற்கு ஏராளமான பேர் இருக்கின்றார்கள்; ஆனால், குடும்பங்களால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு உணவு வழங்குவதற்கு யாரும் கிடையாது. இத்தகைய சூழ்நிலையில் இத்தகைய மக்களுக்கு ஒவ்வொரு நாளும் ‘அமுத சுரபி’ என்ற குழுவின் வழியாக உணவிடும் சேலத்தைச் சார்ந்த பெரியசாமியையும், அவருடைய நண்பர்களையும் கட்டாயம் நாம் பாராட்டியாக வேண்டும்.

நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, நாம் விருந்து வழங்குகின்றபொழுது யாருக்கு உணவு வழங்கவேண்டும் என்பதைப் பற்றிப் பேசுகின்றார். இது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

உணவிடுபவர்களுக்கே உணவிடும் உலகம்

இன்றைய சூழ்நிலையில் நடைபெறும் திருமண விருந்தாக இருக்கட்டும், மற்ற விருந்துகளாக இருக்கட்டும், எவ்வளவு பணம் அதற்காகச் செலவிடப்படுகின்றது என்று நாம் சிந்தித்துப் பார்த்தால், நமக்குத் ‘தலையே சுற்றிவிடும். மேலும் விருந்துகளின்பொழுது யாருக்கெல்லாம் அழைப்புக் கொடுக்கப்படுகின்றது, யாரெல்லாம் அழைக்கப்படுகின்றார்கள் என்று பார்த்தால் அதிகாரத்தில் இருப்பவர்கள், வசதி படைத்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் ஆகியோர்தான் அழைக்கப்படுகின்றார்களே ஒழிய, வறியவர்கள், ஆதரவற்றவர்கள் ஆகியோர் அழைக்கப்படுவதில்லை என்ற உண்மை நமக்குத் தெரிந்துவிடும்.

இப்படிப்பட்ட நிலை இயேசு, தன்னை விருந்துக்கு அழைத்தவரிடம், நீர் விருந்து கொடுக்கின்றபொழுது, திரும்ப விருந்து கொடுக்க முடியாத உடல் ஊனமுற்றவர்களையும், பார்வையற்றவர்களையும் அழையும் என்கின்றார். வசதிபடைத்தவர்களையும், நண்பர்களைகளையும், அழைத்தவர்களையும் மட்டும் விருந்துக்கு அழைக்கும் இந்த உலகில், விருந்துக்குத் திரும்ப அழைக்க முடியாதவர்களை அழையும் என்று இயேசு சொல்வது புதிதாய் இருக்கின்றது.

உணவிட முடியாதவர்களுக்கு உணவிடுவோருக்குக் கிடைக்கும் கைம்மாறு

விருந்து கொடுக்கின்றபொழுது, உடல் ஊனமுற்றவர்கள், பார்வையற்றவர்கள், வறியோர்கள் ஆகியோரை ஏன் விருந்துக்கு அழைக்க வேண்டும் என்று இயேசு சொல்கின்றார் எனில், அவர்களால் நமக்குத் திரும்ப விருந்து கொடுக்க முடியாது. அதனால் நேர்மையாளர்கள் உயிர்த்தெழும்பொழுது நமக்குக் கைம்மாறு கிடைக்கின்ற நிலையானது ஏற்படும்.

இன்றைக்குப் பலர் மனிதர்களிடமிருந்து கிடைக்கும் கைம்மாறையும் பாராட்டையும் எதிர்பார்த்து எதையும் செய்கின்றார்கள். இத்தகையோர் இறைவனிடமிருந்து கைம்மாறு பெறப்போவது கிடையாது. ஏனெனில், அன்பு செலுத்துவோரிடத்தில் அன்பு செலுத்துவதில் பெரிதாக என்ன இருக்கின்றது! அன்பு செலுத்தாதவரிடம் அன்பு செலுத்துவதில்தான் எல்லாமும் அடங்கி இருக்கின்றது. ஆகையால், நாம் அன்பு செலுத்தாதவரிடம் அன்பு செலுத்துவோம், திரும்பித் தரமுடியாதவர்களுக்குத் தாராளமாகத் தருவோம்.

சிந்தனை

‘ஏழைக்கு இரங்கி உதவி செய்கிறவர் ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார்; அவர் கொடுத்ததை ஆண்டவரே திருப்பித் தந்துவிடுவர்’ (நீமொ 19: 17) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் விருந்து கொடுக்கும்பொழுதும் சரி, நம்முடைய அன்றாட வாழ்விலும் சரி, வறியவர்களை நம்முடைய நினைவில் வைத்துச் செயல்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter