" |
தவக்காலம் 2 ஆம் வாரம் 10-03-2020 |
|
முதல் வாசகம்
|
|
எசாயா 1: 10, 16-20 "நீதியை நாடித் தேடுங்கள்" நிகழ்வு குருநானக், அபினாபாத் என்ற இடத்தில் இருந்தபொழுது, அவரைச் சந்திக்க மலிக்பாகோ என்ற பணக்காரன் ஒருவன் வந்தான். அவனுக்குக் கடவுள்மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அப்படிப்பட்டவன் குருநானக்கைச் சந்திக்க வந்தபொழுது நல்ல உணவுவகைகளையும் ரொட்டிகளையும் தயாரித்துக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தான். குருநானக் அவனிடம், "நான் இவற்றைப் பிறகு சாப்பிட்டுக்கொள்கின்றேன்" என்று சொல்லி அனுப்பி வைத்தார். அவன் அங்கிருந்து போன சிறிதுநேரத்தில் பாய்லாலு என்ற ஏழைத் தச்சன் ஒருவன் வந்தான். அவனும் தான் தயாரித்துவந்த ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். குருநானக் அவற்றை தொட்டுப் பார்த்தார், உடனடியாகச் சாப்பிட்டுவிட்டார். இதற்கிடையில் தான் கொடுத்த ரொட்டிகளை குருநானக் சாப்பிடாமல், ஏழைத் தச்சன் கொடுத்த ரொட்டிகளைச் சாப்பிட்ட செய்தி பணக்காரனுக்கு எப்படியே தெரியவந்தது. உடனே அவன் குருநானக்கிடம் வேகமாக ஓடிவந்து, "நீங்கள் ஏன் நான் கொடுத்த ரொட்டிகளைச் சாப்பிடாமல், ஏழை ஒருவன் கொடுத்த ரொட்டிகளைச் சாப்பிட்டீர்கள்?" என்று கேட்டான். உடனே குருநானக், பணக்காரன் கொடுத்த ரொட்டிகளை அழுத்தினார். அதிலிருந்து இரத்தம் வழிந்தது. பின்னர் அவர் ஏழைத் தச்சன் கொடுத்த ரொட்டியை அழுத்தினார். அதிலிருந்து பால் வழிந்தது. இதைப் பார்த்துவிட்டு அந்தப் பணக்காரன் அப்படியே அதிர்ந்துபோய் நின்றான். அப்பொழுது குருநானக் அந்தப் பணக்காரனைப் பார்த்துச் சொன்னார். "இப்பொழுது புரிகின்றதா நான் ஏன் நீ கொடுத்த ரொட்டியைச் சாப்பிடாமல், இந்த ஏழைத் தச்சன் கொடுத்த ரொட்டியைச் சாப்பிட்டேன் என்று" பணக்காரன் தன்னுடைய தவற்றை உணர்ந்தான். இத்தனை ஆண்டுகளும் தான் ஏழைகளைச் சுரண்டி, அவர்களுடைய வயிற்றில் அடித்துச் சம்பாதித்ததால்தான் ரொட்டியிலிருந்து இரத்தம் வழிந்திருக்கின்றது... இனிமேலும் இப்படிப்பட்ட தவற்றைச் செய்யக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டு, திருந்தி நடக்கத் தொடங்கினான். இந்த நிகழ்வில் வருகின்ற பணக்காரன் இறைவன்மீது மிகுந்த நம்பிக்கையோடு இருந்தான். ஆனால், ஏழைகளைச் சுரண்டி வாழ்ந்து வந்தான். இந்தப் பணக்காரனைப் போன்றுதான், இஸ்ரயேல் மக்கள் இறைவன் மிகுந்த பற்றுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அவர்கள் தங்களோடு இருந்த ஏழைகளையும் கைம்பெண்களையும் சுரண்டினார்கள்; அவர்களை ஒடுக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான் இறைவனை வழிபடுகின்றவர்கள் அல்லது இறைவன்மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்கள் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை இறைவாக்கினர் எசாயா எடுத்துக்கூறுகின்றார். நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம். நீதி என்பது அநீதியை விட்டொழிப்பது இன்றைய முதல் வாசகமானது, இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்டப்பட்டுள்ளது. இதில் இறைவாக்கினர் எசாயா, இஸ்ரயேல் சமூகத்தில் இருந்த தலைவர்கள, பணக்காரர்கள், கடவுளின் கட்டளையைப் புறக்கணித்துவிட்டுத் தீய வழியில் சென்றவர்கள் என்று பலரையும் சாடுகின்றார். மட்டுமல்லாமல், அவர்களைச் சோதோம் கொமோராவிற்கு ஒப்பிடுகின்றார். இஸ்ரயேலில் இருந்த பலர் ஆண்டவரிடம் நம்பிக்கை இருப்பதாகக் காட்டிக்கொண்டார்கள்; ஆனால், மறைமுகமாக அவர்கள் ஏழைகளை ஒடுக்கியும் நசுக்கியும் வாழ்ந்துவந்தார்கள். இத்தகைய போலியான வாழ்க்கையைப் பார்த்துவிட்டுதான் இறைவாக்கினர் எசாயா அவர்களைச் சோதோம் மற்றும் கொமோரா நகர்களுக்கு ஒப்பிடுக்கின்றார். எசாயா சொல்லுகின்ற இந்த இரண்டு நகர்களும் பாவத்தின் அடையாளமாக அறியப்படுகின்றவை (தொநூ 13:13, 18: 20-21). இந்த நகர்களில் இருந்தவர்கள் செய்த குற்றம் மிகுதியாகப் போனதால்தான் ஆண்டவர் அவற்றை அழித்தார். இங்கு இறைவாக்கினர் எசாயா சோதோமையும் கொமோராவையும் இஸ்ரயேல் மக்களோடு ஒப்பிடக் காரணம் அவர்களுடைய குற்றம், அந்த இரண்டு நகர்களில் இருந்தவர்கள் செய்த குற்றம்போல் இருந்தது என்பதால்தான். அதனால்தான் இறைவாக்கினர் எசாயா அவர்களிடம், தீமை செய்தலை விட்டொழியுங்கள்; நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள் என்று குறிப்பிடுகின்றார். நீதி என்பது வறியோர் பக்க இருப்பது இறைவாக்கினர் எசாயா, இஸ்ரயேல் மக்களிடம் நன்மை செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்; நீதியை நாடித் தேடுங்கள் என்று குறிப்பிடுகின்றார் எனில், அது என்னவாக இருக்கும் எனத் தெரிந்துகொள்வது நல்லது. நீதியை நாடித் தேடுவது என்பது சமூகத்தில் வறிய நிலையில் இருப்போரின் சார்பாக நிற்பது; அவர்களிடம் தேவையைப் பூர்த்தி செய்வது. இதுதான் நீதியை நாடித் தேடுவது என்று இறைவாக்கினர் எசாயா குறிப்பிடுகின்றார். இஸ்ரயேல் சமூகத்தில் மிகவும் வறிய நிலையில் ஏழைகளும் கைம்பெண்களும் இருந்தார்கள். இவர்கள் சார்பாக நிற்பதும் இவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதுதான் நீதியை நாடித் தேடுவதாக இருக்கும் என்பது இறைவாக்கினர் எசாயாவின் கருத்து. நாம் இறைவனின் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என்றால், நம்முடைய வழிபாடும் வாழ்க்கையும் வேறு வேறாக இல்லாமல், ஒன்றுபோல் இருக்கின்றதா...? அல்லது வெளிவேடத்தனமாக இருக்கின்றதா? சிந்திப்போம். சிந்தனை "பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்.... அன்றோ நான் விரும்பும் நோன்பு" (எசாயா 58: 7) என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் இறைவன் மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கின்றோம் என்பதை நம்முடைய செயல்களில் காட்டுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
மத்தேயு 23: 1-12 "உங்களுள் பெரியவர் உங்களுக்குத் தொண்டராக இருக்கவேண்டும்" நிகழ்வு ஆங்கிலேய அரசின் படைத்தளபதியாக இருந்தவர் சர் பிலிப் சிட்னி என்பவர். நல்ல மனம் படைத்தவரான இவர், ஒருமுறை எதிரிநாட்டோடு போர்தொடுக்கச் சென்றபொழுது, இவருடைய படையில் இருந்த பலரும் எதிரி நாட்டுப் படையின் தாக்குதலால் இறந்துபோனார்கள்; இவருக்கும் உடலெங்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. உடலில் பலமில்லாத நிலையில் இவர், "தண்ணீர் தண்ணீர்" என்று கத்தினார். இவருடைய சத்தத்தைக் கேட்டு, பக்கத்தில் இருந்த படைவீரர் ஒருவர் ஓடிவந்து தன்னிடத்தில் இருந்த தண்ணீரை இவருக்குக் குடிக்கக் கொடுத்தார். உடனே இவர் தண்ணீரைக் குடிப்பதற்காக, தண்ணீர் புட்டியை எடுத்து, வாயருகே கொண்டுசென்றபொழுது, சற்றுத் தொலைவிலிருந்த படைவீரர் ஒருவர் "தண்ணீர் தண்ணீர்" என்று தீனக்குரலில் கத்துவது இவருக்குக் கேட்க, இவர் தன்னிடத்தில் தண்ணீர் கொண்டுவந்த படைவீரரை நோக்கி, "எனது தேவையை விட அவருடைய தேவை பெரிது. அதனால் அவருக்கு முதலில் தண்ணீர் கொடுங்கள்" என்றார். இவர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, தண்ணீர் வைத்திருந்த படைவீரர், தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டிருந்த படைவீரரிடம் அதைக் கொண்டுபோய்க் கொடுக்க, அவர் தண்ணீர் குடித்ததும் உயிர் பிழைத்துக் கொண்டார். இன்னொரு பக்கமோ, தண்ணீர் கிடைக்காமையால் பிலிப் சிட்னி இறந்து போனார். தான் படைத்தளபதியாக இருந்தபொழுதும் தன்னுடைய தேவவையைப் பெரிதாகக் கருதாமல், தனக்குக் கீழிலிருந்த படைவீரனின் தேவையைப் பெரிதாகக் கருதி, அதற்காகத் தன்னுடைய உயிரையும் தந்தை பிலிப் சிட்னியின் இந்தத் தியாகச் செயலைப் பாராட்டி, ஆங்கிலேய அரசாங்கம் இவருக்கு "சர்" என்ற உயரிய பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. ஆம், சர் பிலிப் சிட்னி படைத்தளபதியாக இருந்தபொழுதும், ஒரு தளபதி அல்லது ஒரு தலைவன் எப்படி இருக்கவேண்டும் என்ற உண்மையை எல்லாருக்கும் கற்றுத் தருபவராக இருக்கின்றார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு ஒரு தலைவர் அல்லது பெரியவர் எப்படி இருக்கவேண்டும் என்ற செய்தியை நமக்குக் கற்றுத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். சொன்னதைப் போல் செய்யாத தலைவர்கள் மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தின் முதல் பகுதியில், ஆண்டவர் இயேசு பரிசேயர்களின் வெளிவேடத்தைச் சாடுவதாகவும் இரண்டாவது பகுதியில், ஒரு தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதைக் குறித்துக் கூறுவதாகவும் வாசிக்கின்றோம். இயேசு வாழ்ந்த காலத்தில், ஆன்மிகத் தலைவர்களாக இருந்தவர்கள் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும். இவர்கள் தங்களிடம் அதிகாரம் இருக்கின்றது என்பதற்காக, மக்கள் அதைக் கடைப்பிடிக்கவேண்டும்... இதைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று தேவையற்ற சட்டங்களை அவர்கள்மீது விதித்தார்கள். அந்தச் சட்டங்களை எல்லாம் இவர்கள் கடைப்பிடித்தார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. மட்டுமல்லாமல், மக்கள் பார்க்கவேண்டும், பாராட்டவேண்டும் என்றே இவர்கள் எல்லாவற்றையும் செய்துவந்தார்கள். அதனால்தான் இயேசு இவர்களைச் சாடுகின்றார். தலைவர் என்பவர் பிறரை முன்னிலைப் படுத்தவேண்டும். பரிசேயர்கள் சொல்வதைப் போன்று செய்யுங்கள்; அவர்கள் செய்வதைப் போன்று செய்யாதீர்கள் என்று சொன்ன இயேசு, ஒரு தலைவர் அல்லது பெரியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை அடுத்ததாகக் கற்றுத்தருகின்றார். ஆம், ஒரு குழுவில், சமுதாயத்தில் பெரியவராக இருப்பவர், எல்லாரும் தனக்குத் தொண்டு செய்யவேண்டும்... பணிவிடை செய்யவேண்டும் என்று இருக்கக்கூடாது. மாறாக, அவர் எல்லாருக்கும் தொண்டு செய்யவேண்டும். இதுதான் இயேசு கூறும் செய்தியாக இருக்கின்றது. தலைவர் அல்லது பெரியவர் தொண்டராக இருக்கவேண்டும் என்றால், எல்லாரைவிடயும் தன்னைக் கீழாக நினைத்துக்கொள்தல் கிடையாது. மாறாக, தன்னை விட மற்றவர் மதிப்புக்குரியவர் என்ற எண்ணத்தோடு வாழ்வதாகும். இத்தகைய எண்ணத்தோடு வாழ்கின்ற யாரும் மற்றவரை அடக்கவோ, ஒடுக்கவோமாட்டார். மாறாக, அவர் அவர்களுக்குப் தொண்டு செய்வார். ஆகையால், நாம் இயேசு விரும்புகின்ற நல்ல தலைவர்களாக, பெரியவர்களாக வாழ்வோம். அதன்வழியாக மற்றவர்களுடைய தேவைகளுக்கும் அவர்களுடைய உணர்வுகளுக்கும் மதிப்பளித்து, இயேசுவின் அன்புக்கு உரியவர்களாவோம். சிந்தனை "பிறர் உங்களைவிட மதிப்புக்குரியரென எண்ணுங்கள்" (உரோ 12: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் புனித பவுல் சொல்வதுபோன்று, பிறர் நம்மை விட மதிப்புக்குரியவர்கள் என எண்ணி, அவர்களுக்குத் தொண்டு செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |