" |
தவக்காலம் 2 ஆம் வாரம் 08-03-2020 |
|
முதல் வாசகம்
|
|
தொடக்க நூல் 12: 1-4a 2 திமொத்தேயு 1: 8b-10 மத்தேயு 17: 1-9 யார் இறைவனின் அன்பார்ந்த மைந்தர்? நிகழ்வு மிகப்பெரிய தொழிலதிபரான டாட்டாவின் மகன்களில் ஒருவர் ஜே.ஆர்.டி. டாட்டா. இவர் தனது இருபத்து ஒன்றாம் வயதிலேயே தன் தந்தையின் நிறுவனங்களில் ஒன்றான "டாட்டா ஸ்டீலில்" சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். ஒருநாள் இவருக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. இவருக்குச் சிகிச்சையளித்த மருத்துவர், இவரிடம் ஓரிரு நாள்கள் நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டால், எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்லிவிட்டுச் சென்றார்; ஆனால், இவர் வீட்டில் இருந்த "பிஸினஸ்" தொடர்பான நூல்களைப் படிக்கத் தொடங்கினார். இதைப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்தவர்கள் இவரிடம், "மருத்துவர் உங்களை நன்றாக ஓய்வெடுக்குமாறு சொல்லிவிட்டுச் சென்றிருக்கும்பொழுது, நீங்கள் இப்படி பெரிய பெரிய புத்தங்களைப் படித்துக்கொண்டிருந்தால் எப்படி?" என்றார்கள். உடனே இவர் அவர்களிடம், "நான் சாதாரண ஒரு மனிதருக்கு மகனாகப் பிறக்கவில்லை. மிகப்பெரிய தொழிலதிபரான டாட்டாவிற்கு மகனாகப் பிறந்திருக்கின்றேன். அவருடைய மகன் என்று நான் பெருமையோடு சொல்லிக்கொள்வதற்கு இப்படிப் புத்தங்களை வாசித்து, என்னுடைய தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டாமா...? சும்மா ஓய்வெடுத்துக்கொண்டிருந்தால் முடியுமா...?" என்றார். எப்படி டாட்டாவின் பெயர்சொல்லும் மகனாக, மைந்தராக இருப்பதற்கு ஜே.ஆர்.டி.டாட்டா தன்னைப் பல்வேறு விதங்களில் வளர்த்துக்கொண்டாரோ, அப்படி இறைவனின் அன்பார்ந்த மகனாக, மகளாக மாறுவதற்கு நம்முடைய தகுதியை வளர்த்துக்கொள்ளவேண்டும். தவக்காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, யார் இறைவனின் அன்பார்ந்த மைந்தர் என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம். தேங்கியிருப்பவர் அல்லர்; இயங்கிக்கொண்டிருப்பவர் நற்செய்தியில் இயேசு தோற்றமாற்றம் அடைகின்ற நிகழ்வினைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு தோற்றமாற்றம் அடைகின்றபொழுது, அவருக்கு முன் மோசேயும் எலியாவும் தோன்றுகின்றார்கள். அதைப் பார்த்துவிட்டு பேதுரு, "ஆண்டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது" என்கின்றார். பேதுரு சொல்வது போன்று "இங்கேயே" இருந்தால் அல்லது தேங்கியே இருந்தால், ஒருவரால் கடவுளின் அன்பு மைந்தராக மாற முடியுமா என்றால், நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இன்றைக்குப் பலர் "எல்லாமும் கிடைத்துவிட்டது", "இந்த வாழ்க்கை போதும்" என்று பேதுருவைப் போன்று தேங்கியே இருப்பதைப் பார்க்க முடிகின்றது. ஆனால், ஆண்டவர் இயேசு இப்படித் தேங்கியிருக்கவில்லை; அவர் இயங்கிக்கொண்டே இருந்தார். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு, "நாம் அடுத்த ஊர்களுக்குப் போவோம், வாருங்கள். அங்கும் நான் நற்செய்தியைப் பறைசாற்ற வேண்டும், ஏனெனில், இதற்காகவே நான் வந்திருக்கின்றேன்" (மாற் 1: 38) என்று இயேசு தன் சீடர்களிடத்தில் சொன்னது. ஆம், இயேசு இறைவனின் வார்த்தையை மக்களுக்கு எடுத்துரைத்தும் வல்ல செயல்களைச் செய்தும் இயங்கிக்கொண்டே இருந்தார். அதனால் அவர் கடவுளின் அன்பார்ந்த மைந்தரானார். நாம் தேங்கியிருக்கின்றோமா? அல்லது இயங்கிக்கொண்டிருக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். "மனித வாழ்க்கை தேங்கிய குட்டையாய் இருக்கக்கூடாது, அது ஆற்றைப்போன்று ஓடிக்கொண்டிருக்கவேண்டும்" என்பார் கவிக்கோ அப்துல் ரகுமான். மிகவும் சிந்தனைக்குரிய வார்த்தைகள் இவை. தன் விருப்பத்தின் நடப்பவர் அல்லர்; இறைவனின் குரல் கேட்டு நடப்பவர் கடவுளின் அன்பார்ந்த மைந்தராவதற்கு இயங்கிக்கொண்டே இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்த்த, இதற்கடுத்து என்ன செய்யவேண்டுமென்று சிந்தித்துப் பார்ப்போம். இன்றைய நற்செய்தியில் இடம்பெறுகின்ற இயேசுவின் தோற்றமாற்ற நிகழ்விற்கு முன்பாக, இயேசு தன்னுடைய பாடுகளை முன்னறிவிப்பார். அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, இது வேண்டாம்" என்பார். உடனே இயேசு அவரைப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே... நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல், மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்பார். ஆம், பேதுருவைப் போன்று மனிதருக்கு ஏற்றவை பற்றி எண்ணி, மனித விருப்பத்தின்படி அல்லது தன்னுடைய விருப்பத்தின் செயல்படுகின்ற எவரும் கடவுளின் மைந்தராக முடியாது. ஒருவர் கடவுளின் மைந்தராகவேண்டும் என்றால், அவர் கடவுளின் குரல் கேட்டு, அவருடைய திட்டத்தின்படி நடக்கவேண்டும். இயேசு கடவுளின் குரல்கேட்டு, அவருடைய திருவுளத்தின்படி நடந்தார். அதனால்தான், "என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று விண்ணகத்திலிருந்து தந்தையின் குரல் ஒலித்தது. நாம் நம்முடைய விருப்பத்தின்படி நடக்கின்றோமா அல்லது இறைவனின் குரல் கேட்டு, அவருடைய திருவுளத்தின் நடக்கின்றோமா? சிந்தித்துப் பார்ப்போம். பல நேரங்களில் நாம் பேதுருவைப் போன்று நம்முடைய விருப்பத்தின்படியே நடக்கின்றோம். நமக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகின்றோம். இப்படிச் செய்தால் நாம் ஒருபோதும் கடவுளின் மைந்தராக இருக்க முடியாது. ஆகையால், நாம் இறைவனின் மைந்தராக இருப்பதற்கு இறைவனின் குரல் கேட்டு, இறைவனின் திருவுளத்தின்படி நடக்க முயற்சி செய்வோம். தனித்திருப்பவர் அல்லர்; மக்களோடு இருப்பவர் கடவுளின் மைந்தராக இருப்பதற்கு ஒருவர் செய்யவேண்டிய மூன்றாவது முக்கியமான செயல் மக்களோடு இருப்பதாகும். மலையில் இயேசு தோற்றமாற்றம் அடைந்தபிறகு அங்கேயே இருக்கவில்லை. மாறாக மலையிலிருந்து கீழே இறங்கி வந்து, மக்களுக்குப் பணிவிடை செய்யத் தொடங்குகின்றார். அதனால் பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களிடமிருந்து பல்வேறு எதிர்ப்புகள் கிளம்புகின்றன. ஆனாலும்கூட இயேசு அவற்றிற்கெல்லாம் அஞ்சாமல், கல்வாரி மலையில் தன்னுடைய உயிரைக் கையளித்து தந்தைக் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி, அவருடைய அன்பார்ந்த மைந்தராகின்றார். அப்படியானால், ஒருவர் கடவுளின் மைந்தராக வேண்டுமானால், அவர் யாரோடும் எந்த ஒட்டும் உறவும் இல்லாமல் வாழ்வதை விடுத்து இயேசுவைப் போன்று மக்களோடு இருப்பவராக இருக்கவேண்டும்; மக்களின் இன்ப துன்பங்களில் பங்குபெறக்கூடியவராக இருக்கவேண்டும். இன்றைக்குப் பலர் "எல்லாம் என்னிடம் இருக்கின்றது, அதனால் எனக்கு யாரும் வேண்டாம்" என்ற மனநிலையோடு வாழ்வதைக் காணமுடிகின்றது. அடுத்தவரைப் பற்றிச் சிந்திக்காமல், அடுத்தவருடைய இன்ப துன்பங்களில் பங்குபெறாமல், எப்படி ஒருவர் ஆண்டவரின் மைந்தராக முடியும். ஆகையால், நாம் இயேசுவைப் போன்று கடவுளின் அன்பார்ந்த மைந்தராக இருக்க இயங்கிக்கொண்டே இருப்போம்; இறைவனின் குரல் கேட்டு நடப்போம். எல்லாவற்றிற்கும் மேலாக மக்களோடு இருப்போம். சிந்தனை "நாம் கடவுள்மீது அன்புகொண்டு அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கும்போது, கடவுளின் பிள்ளைகள்மீதும் அன்புகொள்கிறோம் என்பது நமக்குத் தெரியவரும்" (1 யோவா 5: 2) என்பார் புனித யோவான். ஆகையால், நாம் கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அவரையும் அவருடைய பிள்ளைகளையும் அன்பு செய்பவர்களாக மாறி, நாமும் அவருடைய அன்பு மைந்தர்களாக மாறுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |