maraikal
MUM
"


பாஸ்கா 6ஆம் வாரம் - ஞாயிறு  17-05-2020

முதல் வாசகம்

சமாரியர் மீது கைகளை வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 8: 5-8, 14-17

அந்நாள்களில்

பிலிப்பு, சமாரியா நகர் சென்று அங்குள்ள மக்களுக்கு மெசியாவைப்பற்றி அறிவித்தார். பிலிப்பு சொன்னவற்றைக் கேட்டும் அவர் செய்த அரும் அடையாளங்களைக் கண்டும் வந்த திரளான மக்கள் ஒருமனத்தோடு அவருக்குச் செவிசாய்த்தனர். ஏனெனில் பலரைப் பிடித்திருந்த தீய ஆவிகள் அவர்களிடமிருந்து உரத்த குரலுடன் கூச்சலிட்டுக்கொண்டே வெளியேறின. முடக்குவாதமுற்றோர், கால் ஊனமுற்றோர் பலரும் குணம் பெற்றனர். இதனால் அந்நகரில் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று.

சமாரியர் கடவுளின் வார்த்தையை ஏற்றுக்கொண்டனர் என்பதை எருசலேமிலுள்ள திருத்தூதர்கள் கேள்விப்பட்டு, பேதுருவையும் யோவானையும் அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று சமாரியர் தூய ஆவியால் ஆட்கொள்ளப்படுமாறு இறைவனிடம் வேண்டினார்கள்; ஏனெனில் அதுவரை அவர்களுள் யாருக்கும் தூய ஆவி அருளப்படவில்லை. ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் அவர்கள் திருமுழுக்கு மட்டுமே பெற்றிருந்தார்கள். பின்பு பேதுருவும் யோவானும் தங்கள் கைகளை அவர்கள்மீது வைக்கவே, அவர்கள் தூய ஆவியைப் பெற்றார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


பதிலுரைப் பாடல்


திபா 66: 1-3a. 4-5. 6-7a. 16,20 (பல்லவி: 1) Mp3

பல்லவி: அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அல்லது: அல்லேலூயா.
1
அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்;
2
அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.
3a
கடவுளை நோக்கி, "உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை" என்று சொல்லுங்கள். - பல்லவி

4
"அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்" என்று சொல்லுங்கள்.
5
வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுதற்கு உரியவை. - பல்லவி

6
கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். ஆங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.
7a
அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! - பல்லவி

16
கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன்.
20
என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி! - பல்லவி
 


இரண்டாம் வாசகம்
மனித இயல்போடு இருந்த கிறிஸ்து இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

திருத்தூதர் பேதுரு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 15-18

அன்பிற்குரியவர்களே,

உங்கள் உள்ளத்தில் கிறிஸ்துவை ஆண்டவராகக் கொண்டு அவரைத் தூயவரெனப் போற்றுங்கள். நீங்கள் எதிர்நோக்கி இருப்பதைக் குறித்து யாராவது விளக்கம் கேட்டால் விடையளிக்க நீங்கள் எப்பொழுதும் ஆயத்தமாய் இருங்கள். ஆனால், பணிவோடும் மரியாதையோடும் விடை அளியுங்கள். உங்கள் மனச்சான்றும் குற்றமற்றதாய் இருக்கட்டும். அப்பொழுது உங்கள் கிறிஸ்தவ நன்னடத்தையைப் பழிக்கிறவர்கள் உங்களை இழிவாகப் பேசியதைக் குறித்து வெட்கப்படுவார்கள். ஏனெனில், தீமை செய்து துன்புறுவதைவிட, கடவுளுக்குத் திருவுளமானால், நன்மை செய்து துன்புறுவதே மேல்.

கிறிஸ்துவும் உங்கள் பாவங்களின் பொருட்டு ஒரே முறையாக இறந்தார். அவர் உங்களைக் கடவுளிடம் கொண்டு சேர்க்கவே இறந்தார். நீதியுள்ளவராகிய அவர் நீதியற்றவர்களுக்காக இறந்தார். மனித இயல்போடு இருந்த அவர் இறந்தார் எனினும் ஆவிக்குரிய இயல்பு உடையவராய் உயிர் பெற்றெழுந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

(யோவா 14: 23)

அல்லேலூயா, அல்லேலூயா! என்மீது அன்பு கொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவருடன் குடிகொள்வோம், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.


நற்செய்தி வாசகம்


மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார்.

✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-21

அக்காலத்தில்

இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள். உங்களோடு என்றும் இருக்கும்படி மற்றொரு துணையாளரை உங்களுக்குத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை. நீங்கள் அவரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்.

நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடமாட்டேன். உங்களிடம் திரும்பி வருவேன். இன்னும் சிறிது காலத்தில் உலகம் என்னைக் காணாது. ஆனால் நீங்கள் என்னைக் காண்பீர்கள். ஏனெனில் நான் வாழ்கிறேன்; நீங்களும் வாழ்வீர்கள். நான் தந்தையுள்ளும் நீங்கள் என்னுள்ளும் நான் உங்களுள்ளும் இருப்பதை அந்நாளில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள். என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்பு கொண்டுள்ளார். என்மீது அன்பு கொள்பவர்மீது தந்தையும் அன்பு கொள்வார். நானும் அவர்மீது அன்பு கொண்டு அவருக்கு என்னை வெளிப்படுத்துவேன்."

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
 

I திருத்தூதர் பணிகள் 8: 5-8, 14-17
II 1 பேதுரு 3: 15-18
III யோவான் 14: 15-21

நம்மைத் திக்கற்றவர்களாய் விடாத இயேசு

நிகழ்வு

ஒரு தந்தையும் அவருடைய சிறு வயது மகனும் ஒருநாள் ஒரு காட்டுவழியாகச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் செல்லும் வழியில் ஒரு மரம் மிகவும் தாழ்ந்து இருந்தது; அதன் கிளைகள் எட்டிப் பிடிக்கக்கூடிய உயரத்தில் இருந்தன. இதைப் பார்த்ததும் மகன் தந்தையிடம், "ஐயா! இந்த மரக்கிளையை ஒடித்துக் கொள்ளட்டுமா...? அவசரத்திற்குத் தேவைப்படும்" என்றான். தந்தையும் சரியென்று சொல்ல, மகனும் துள்ளிக் குதித்து, மரக்கிளையைப் பிடிக்க முயற்சி செய்தான். அவனால் மரக்கிளையைப் பிடிக்க முடியவில்லை.

"ஐயா! மரக்கிளையைப் பிடிக்க முயன்றேன்; என்னால் முடியவில்லை. இப்பொழுது நான் என்ன செய்வது?" என்றான் மகன். "மகனே! உன்னுடைய முழு ஆற்றலையும் பயன்படுத்து; நிச்சயம் உன்னால் மரக்கிளையைப் பிடிக்க முடியும்" என்றார் தந்தை. தன் தந்தை சொன்ன இவ்வார்த்தைகளைக் கேட்டு, மகன் தன் முழு ஆற்றலையும் பயன்படுத்தித் துள்ளிக் குதித்தான். அவனால் மரக்கிளையைப் பிடிக்க முடிந்தது. இப்பொழுது அவனுக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. இதற்குப் பின்பு அவன், கையில் பிடித்திருந்த மரக்கிளையை ஒடிக்க முயன்றான்; அவனால் முடியவில்லை. மீண்டுமாக அவன் தன் தந்தையிடம், "ஐயா! மரக்கிளையைப் பிடித்துவிட்ட என்னால், அதனை ஒடிக்க முடிக்கவில்லை; இப்பொழுது நான் என்ன செய்வது?" என்றான். இதற்குத் தந்தை, "முன்பு சொன்னதைத்தான் இப்பொழுதும் சொல்கின்றேன்: "உன் முழு ஆற்றலையும் பயன்படுத்து" என்றார்.

மகன் தன் முழு ஆற்றலையும் பயன்படுத்திக் கிளையைக் ஒடிக்க முயன்றான். அப்பொழுதும் அவனால் முடியவில்லை. இதனால் பொறுமை இழந்த மகன், தன் தந்தையிடம், "ஐயா! நீங்கள் சொன்னதுபோன்று நான் முழு ஆற்றலையும் பயன்படுத்தித்தான் இந்தக் கிளையை ஓடிக்க முயல்கின்றேன். ஆனாலும், என்னால் முடியவில்லையே! ஒருவேளை நீங்கள் என்னிடம் பொய் சொல்கின்றீர்களோ?" என்றான். "இல்லை மகனே! நான் உன்னிடம் பொய்சொல்லவில்லை; உண்மையைத்தான் சொல்கின்றேன். நீ உன் முழு ஆற்றலையும் பயன்படுத்து என்றால், நானும் உன் ஆற்றல்தானே! நான் உன்னைத் திக்கற்று விட்டுவிட்டேனா என்ன...? உன்னோடுதானே இருக்கின்றேன். அப்படியானால் நீ என்னுடைய ஆற்றலும் உன்னுடைய ஆற்றல் என்று, என்னை உனக்கு உதவிக்கு அழைத்திருக்கலாம்தானே...!" என்றான் தந்தை. அப்பொழுதுதான் சிறுவனுக்குத் தன் தந்தை சொன்னதில் இருந்த உண்மை விளங்கியது.

கடவுள் நம்மோடுதான் இருக்கின்றார். நாம்தான் இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவனைப் போன்று கைவிடப்பட்டவர்களாய், திக்கற்றவர்களாய் இருக்கின்றோம் என்று நினைத்து, வருந்திக்கொண்டிருக்கின்றோம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், இன்றைய நாள் இறைவார்த்தை மூலம், நான் உங்களைத் திக்கற்றவர்களாய் விடமாட்டேன் என்று நமக்கு நம்பிக்கையை ஊட்டுகின்றார் இயேசு. அவர் நம்மை எப்படியெல்லாம் திக்கற்றவர்களாய் விடாமல் பாதுகாத்துக்கொள்கின்றார் என்பதைக் குறித்து நாம் சிந்திப்போம்.

ஒருவர் மற்றவரை அன்புசெய்வதன் மூலம், திக்கற்றவர்களாய் விடாத இயேசு

இறுதி இரவு உணவின்பொழுது, இயேசு தன்னுடைய சீடர்களிடம், "இன்னும் சிறிது காலமே உங்களோடு இருப்பேன்" (யோவா 13: 33) என்று சொன்னதும், அவர்கள் கலக்கமுறுகின்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், "நான் உங்களைத் திக்கற்றவர்களாய் விடமாட்டேன்" என்று கூறுகின்றார். இயேசு தன்னுடைய சீடர்களையும் நம்மையும் எந்தெந்த விதத்தில், திக்கற்றவர்களாய் விடாமல் காத்துக்கொள்கின்றார் என்பது பற்றிப் பார்ப்போம்.

இயேசு நம்மை மூன்றுவிதங்களில் திக்கற்றவர்களாய் விடாமல் காத்துக்கொள்கின்றார். அதில் முதலாவது விதம், நாம் அவருடைய கட்டளையை அல்லது அன்புக் கட்டளையை கடைப்பிடிப்பதன் மூலம், அவர் நம்மைத் திக்கற்றவர்களாய் விடாமல் காத்துக்கொள்கின்றார். இயேசுவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதால், அவர் எப்படி நம்மைக் காக்கின்றார் என்ற கேள்வி எழலாம் இதற்கான பதில் இன்றைய நற்செய்தியில் இருக்கின்றது. இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு, "என் கட்டளைகளை ஏற்றுக் கடைப்பிடிப்பவர் என்மீது அன்புகொண்டுள்ளார். என்மீது அன்புகொள்பவர்மீது தந்தையும் அன்புகொள்வார்" என்று கூறுகின்றார். தந்தைக் கடவுள் ஒருவரை அன்பு செய்கின்றார் எனில், அவரோடு கடவுள் உடனிருக்கின்றார் என்றுதான் பொருள். அப்படியிருக்கும்பொழுது அவர் திக்கற்றவராய்ப் போய்விடுவாரா, என்ன? இல்லைதானா!

இயேசு சொல்லும் இந்த உண்மையை நாம், இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு இதே அதிகாரத்தில் வருகின்ற 23 ஆம் இறைவார்த்தையை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இங்கு இயேசு, "என்மீது அன்புகொண்டுள்ளவர் நான் சொல்வதைக் கடைப்பிடிப்பார். என் தந்தையும் அவர்மீது அன்பு கொள்வார். நாங்கள் அவரிடம் வந்து அவரோடு குடிகொள்வோம்" என்கிறார். அப்படியானால், நாம் இயேசுவின் அன்புக் கட்டளையைக் கடைப்பிடிக்கின்றபொழுது, கடவுள் நம்மோடு குடிகொள்கின்றார். கடவுள் நம்மோடு குடிகொள்ளும்பொழுது, நாம் திக்கற்றவர்களாய்ப் போவதற்கு வாய்ப்பே இல்லை. இதுதான் உண்மை.

துணையாளராம் தூய ஆவியார் வழியாக திக்கற்றவர்களாய் விடாத இயேசு

அன்புக் கட்டளையைக் கடைப்பிடிப்பதன் இயேசு நம்மைத் திக்கற்றவர்களாய் விடமாட்டார் என்பது ஒருவிதம் என்றால், தூய ஆவியார் வழியாக, அவர் நம்மைத் திக்கற்றவர்களாய் விடமாட்டார். இது இரண்டாவது விதம்.

இயேசு, தூய ஆவியாரைப் பேசும்பொழுது அவரைத் "துணையாளர்" என்பார். துணையாளர் என்பதற்கு கிரேக்கத்தில் "Parakletos" என்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது. இச்சொல்லுக்கு ஆலோசகர், தேற்றுபவர், உதவிபுரிபவர் ஆகிய பொருள்களெல்லாம் இருக்கின்றன. தூய ஆவியார் நமக்கு ஆலோசகராக, நம்மைத் தேற்றுபவராக, நமக்கு உதவிபுரிபவராக இருந்தால், நாம் அனாதைகளாக, ஆதரவற்றவர்களாக, திக்கற்றவர்களாக இல்லை என்பதுதானே பொருள்! ஆம். இயேசு, சீடர்களுக்கு மற்றொரு துனையாளரைத் தருமாறு தந்தையிடம் கேட்டார். அவர் தந்தையிடம் கேட்டுக்கொண்டது போன்று, தந்தையும் தூய ஆவியாரைப் பெந்தக்கோஸ்து நாளில் அருளினார். இவ்வாறு இயேசு தூய ஆவியாரை நமக்கு தருவதன் வழியாக, நம்மைத் திக்கற்றவர்களாய் விடாமல் காக்கின்றார்.

தன்னுடைய உடனிருப்பால் நம்மைத் திக்கற்றவர்களாய் விடாத இயேசு

தன்னுடைய அன்புகட்டளையின் வழியாகவும் தூய ஆவியாரின் வழியாகவும் திக்கற்றவர்களாய் விடாமல் காக்கும் இயேசு, தன்னுடைய உடனிருப்பின் வழியாகவும் நம்மைத் திக்கற்றவர்களாய் விடாமல் காக்கின்றார். அது எப்படி என்று சிந்திப்போம்.

இயேசு தூய ஆவியாரைப் பற்றிப் பேசும்பொழுது, "மற்றொரு துணையாளர்" என்பார் என்று மேலே பார்த்தோம். "தூய ஆவியார் மற்றொரு துணையாளர் எனில், முதல் துணையாளர் யாராக இருக்கும்?" என்று கேள்வியை எழுப்பினால், இயேசுதான் முதல் துணையாளர் என்று பதில் வரும். ஆம், இயேசு நமக்காகப் பரிந்துபேசுவதன் வழியாக (1 யோவா 2:1) நமக்குத் துணையாளராக, நாம் திக்கற்றவர்களாய் போய்விடாமல் காக்கின்றார். மேலும், இயேசு தன்னுடைய அழியாத (மத் 24: 35) மற்றும் நிலைவாழ்வளிக்கும் வார்த்தையின் வழியாகவும் (யோவா 6: 63) நமக்குத் துணையாய் இருந்து, நம்மைத் திக்கற்றவர்களாய் விடாமல் காக்கின்றார்.

இவ்வாறு இயேசு அன்புக் கட்டளையின் வழியாகவும் தூய ஆவியாரின் வழியாகவும் தன்னுடைய உடனிருப்பின் வழியாகவும் நம்மைத் திக்கற்றவர்களாய் விடாமல் காக்கின்றபொழுது, நாம் எதற்குக் கலக்கமுறவேண்டும் என்பதே நம்முன் இருக்கின்ற கேள்வி. ஆகையால், நாம், இயேசுவின் உடனிருப்பை உணர்ந்தவர்களாய் கலக்கத்தைப் போக்கி, நம்பிக்கையோடு நம்முடைய வாழ்க்கையை எதிர்கொள்வோம்.

சிந்தனை

"இதோ உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கின்றேன்" (மத் 28: 20) என்பார் இயேசு. ஆகையால், நாம் இயேசுவின் அன்புக் கட்டளையைக் கடைப்பிடித்து அவருடைய உடனிருப்பையும் தூய ஆவியாரின் உடனிருப்பையும் உணர்ந்து, கலக்கமில்லாமல், நம்பிக்கையோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 
Free Blog Widget
Stats Counter
hit counter