" |
பொதுக்காலம் 3 ஆம் வாரம் 26-01-2020 |
|
முதல் வாசகம்
|
|
I எசாயா 9: 1-4 II 1கொரிந்தியர் 1: 10-13,17 III மத்தேயு 4: 12-23 “மனிதர்களைப் பிடிப்பவர்களாக” நிகழ்வு ஒருசமயம் இறைநம்பிக்கையில்லாத நாத்திகன் ஒருவன் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்து வந்த பிஜி தீவுக்குச் சென்றான். அந்தத் தீவில் இருந்த மக்கள் யாவரும் கிறிஸ்தவர்களாக இருந்ததைக் கண்டு, அவன் மிகவும் ஆச்சரியப்பட்டான். பின்னர் அவன் அந்த மக்களின் தலைவரைச் சந்தித்து, அவரோடு பேசத் தொடங்கினான்: “அது எப்படி இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள்?”. “இங்கொரு மிஷினரி – மறைப்பணியாளர் இருக்கின்றார். அவரால்தான் நான் உட்பட இந்தத் தீவில் இருக்கின்ற எல்லாரும் கிறிஸ்தவர்கள ஆனோம்” என்றார் மக்கள் தலைவர். தலைவர் இவ்வாறு சொன்னது நாத்திகனுக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது. “இன்னுமா இந்த மறைப்பணியாளர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் ஏமாற்றுக்காரர்கள்... இவர்கள் போதிக்கப் பயன்படுத்தும் திருவிவிலியம் காலாதியான ஒரு நூல்... இவர்கள் போதிக்கக்கூடிய இயேசுவோ எப்போதோ வாழ்ந்தவர். இப்படியிருக்கையில் இந்த மறைப்பணியாளரின் பேச்சைக் கேட்டு, நீங்கள் அனைவரும் கிறிஸ்தவர்களாக மாறியிருக்கின்றீர்களே...! உங்களைப் போன்ற முட்டாள்களை இவ்வுலகத்தில் நான் பார்த்ததே இல்லை” என்றான். நாத்திகன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டுவிட்டு, மக்கள் தலைவர் அவனிடம் மிகவும் பொறுமையாகப் பேசத் தொடங்கினார்: “நீ சொல்வதுபோன்றே என்றோ வாழ்ந்த இயேசுவை காலாவாதியான நூலின் வழியாக எங்களுக்குப் போதித்த மறைப்பணியாளர் ஏமாற்றுக்காரராக இருக்கட்டும்; ஆனால் ஒன்று மட்டும் உண்மை. இந்த மறைப்பணியாளர் மட்டும் இயேசுவின் வார்த்தையை எங்களுக்கு அறிவிக்காமல் இருந்திருந்தால், அதோ தெரிகின்றதே ஒரு பெரிய கல். அந்த கல்லில் உன் மண்டையை உடைத்து, இதோ தெரிகின்றதே ஒரு பெரிய அடுப்பு. இதில் போட்டு உன்னை வேகவைத்துச் சாப்பிட்டிருப்போம். இவ்வளவு நேரம் நீ உயிரோடு இருந்து, என்னோடு பேசிக்கொண்டிருக்க முடியாது. இப்பொழுது நீ உயிரோடு இருப்பதற்குக் காரணமே, இந்த மறைப்பணியாளர்தான். அதனால் இந்த மறைப்பணியாளருக்கு, இவரை இங்கு அனுப்பி வைத்த இயேசுவுக்கு நன்றி சொல்.” மக்கள் தலைவர் பேசியதை ஆச்சரியமாகக் கேட்டுக்கொண்டிருந்த நாத்திகன், அதன்பிறகு எதுவும் பேசாமல், அங்கிருந்து நகர்ந்துசென்றான். மனிதர்களைப் பிடித்து உண்ணும் ஒரு பெருங்கூட்டத்தையே முழு மனிதர்களாக மாற்றிய பெருமை மறைப்பணியாளரையே சாரும். ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மறைப்பணியாளர் இயேசு சொல்வதுபோன்று ‘மனிதர்களைப் பிடிப்பவராக’ மாறினார். அதனால்தான் அவரால் பிஜி தீவில் வாழ்ந்த பழங்குடி மக்களை முழு மனிதர்களாக மாற்ற முடிந்தது. ஆண்டவர் இயேசு நம் ஒவ்வொருவரையும் பார்த்து, நீங்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாகுங்கள் என்கின்றார். இயேசு விடுக்கும் இந்த அழைப்பிற்கு நாம் எப்படிப் பணிந்து வாழ்வது என்று சிந்தித்துப் பார்ப்போம். தொடர்ந்து நடைபெறவேண்டிய இறையாட்சிப் பணி திருமுழுக்கு யோவான் கைதுசெய்யப்பட்டபின்பு இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குகின்றார் (மத் 4:12) திருமுழுக்கு யோவான் மெசியாவாம் இயேசுவுக்காக மக்களை ஆயத்தம் செய்தார். அவர், இயேசு வந்ததும் பொறுப்பினை அவரிடம் கொடுத்துவிட்டு விலகிக்கொள்கின்றார். இவ்வாறு நற்செய்திப் பணி அல்லது இறையாட்சிப் பணி ஒருவருக்குப் பின் ஒருவராகத் தொடர்ந்து நடைபெறுகின்றது. இயேசு தன்னுடைய பணியைத் தொடங்குபொழுது, தன் சொந்த ஊராகிய நாசரேத்தைவிட்டு, செபுலோன், நப்தலி ஆகிய இடங்களின் எல்லையில் கடலோரமாய் இருந்த கப்பர்நாகுமுக்கு வருகின்றார். இது புறவினத்தார் அதிகமாக வாழும் பகுதி. இயேசு தன் சொந்த ஊரைவிட்டு புறவினத்தார் வாழும் பகுதிக்கு வந்து நற்செய்திப் பணிசெய்தார் எனில், அவர் எல்லா மக்களுக்கும் பணிசெய்து, எல்லா மக்களுக்கும் மீட்பரானார் என்ற செய்தியை மத்தேயு நற்செய்தியாளர் மிக அழகாக எடுத்துரைக்கின்றார். இயேசு, கப்பர்நாகுமுக்கு வந்து இறையாட்சிப் பணி செய்யத் தொடங்குவதைக் குறிப்பிடுகின்றபொழுது, மத்தேயு நற்செய்தியாளர் இறைவாக்கினர் எசாயா நூல் 9:2 ல் இடம்பெறுகின்ற, “காரிருளில் இருந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்...” என்ற இறைவார்த்தையைக் குறிப்பிடுகின்றார். இதன்மூலம் எல்லா மக்களுக்கும் பணிசெய்யத் தொடங்கும் இயேசு, அவர்கள் அனைவர்க்கும் ஒளியாக இருக்கப்போகிறார் என்பதையும் குறிப்பிடுகின்றார். ஆம், உலகின் ஒளியான இயேசு (யோவா 8:12), திருமுழுக்கு யோவான் தன்னுடைய பணியிலிருந்து விலகியபின்பு அல்லது ஓய்ந்த பின்பு, அங்கிருந்து தன்னுடைய இறையாட்சிப் பணியைத் தொடங்குகின்றார். சீடர்களை அழைக்கும் இயேசு நற்செய்திப் பணியை ஒரு தொடர் ஓட்டத்திற்கு ஒப்பிடுவார்கள். தொடர் ஓட்டத்தில் பங்கேற்கின்ற போட்டியாளர் தன்னிடம் ஒப்படைக்கப்படும் கோலினை எடுத்துச் சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். அவர் அதனை எடுத்துச்சென்று இன்னொருவரிடம் ஒப்படைப்பார். இவ்வாறு அணியில் இருக்கின்ற எல்லாருடைய கூட்டு முயற்சியின் காரணமாக இலக்கினை அடைவர். ஆண்டவர் இயேசு இறையாட்சிப் பணியைச் செய்தபொழுது, அவர் மட்டும் செய்துகொண்டிருக்கவில்லை. தனக்குப் பின் அப்பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காக முதலில் அந்திரேயாவையும் அவர் சகோதரர் பேதுருவையும் அவர்களுக்குப் பின் யாக்கோபையும் யோவானையும் தொடர்ந்து மற்றவர்களையும் அழைத்தார். இதன்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்கான விதையினை இயேசு விதித்தார். இங்கு நாம் கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு முக்கியமான செய்தி, ‘இறையாட்சிப் பணி ஒருகூட்டு முயற்சி’ என்பதைத்தான். ஆம். ஆண்டவர் தொடங்கி, விட்டுச் சென்ற இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெற ஒவ்வொருவரும் தன்னுடைய பங்களிப்பைச் செய்யவேண்டும். இதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. ‘மனிதர்களைப் பிடிக்க’ அழைக்கும் இயேசு இயேசு முதல் சீடர்களை அழைத்த பின்பு, அவர்களிடம் சொல்லக்கூடிய வார்த்தைகள், “என் பின்னே வாருங்கள். நான் உங்களை மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆக்குவேன்” என்பதாகும். இயேசு சொல்லும் இவ்வார்த்தைகள் நமது ஆழமான சிந்தனைக்குரியவையாக இருக்கின்றன. இயேசு சீடர்களிடம் சொன்னதுபோன்றே அவர்களுக்கு அவர் உரிய பயிற்சி தந்து மனிதர்களைப் பிடிப்பவர் ஆக்கினார். சீடர்களும் இயேசு தங்களை எதற்காக அழைத்தாரோ, அந்த அழைப்பினை உணர்ந்து மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆனார்கள். இயேசுவின் சீடர்கள் மனிதர்களைப் பிடிப்பவர்களாக ஆனதுபோல் நாம் ஒவ்வொருவரும் மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறவேண்டும். இது ஒவ்வொருவருடைய கடமை. நற்செய்திப் பணி தொடர்பாக அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வு இவ்வாறு சொல்கின்றது: “உலக மக்களில் பத்தில் ஒன்பது பேர் தங்களுடைய வாழ்வைத் தொலைத்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த ஒன்பது பேரில் ஆறு பேர் இயேசு கிறிஸ்துவைக் குறித்து முழுமையாக அறிந்துகொள்ளாமல் இருக்கின்றார்கள். இந்த ஆறு பேரிலும் மூன்று பேர் இயேசுவைப் பற்றி இதுவரைக்கும் கேள்விப்படாதவர்களாக இருக்கின்றார்கள்.” இந்த ஆய்வுமுடிவின் படி பார்த்தால், பத்துக்கு மூன்று பேர் இயேசுவைக் குறித்து கேள்விப்படாதவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களிடம் இயேசுவைக் கொண்டு செல்லும் ‘மனிதர்களைப் பிடிப்பவர்களாக’ மாறவேண்டியது திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரின் கடமை (1 கொரி 9:16). இக்கடமையை நாம் உணர்ந்து செய்கின்றபொழுது, இயேசுவின் அன்பிற்கு உரியவர்களாவோம் என்பது உறுதி. எனவே, நாம் இயேசு விட்டுச் சென்ற பணி இப்புவியில் தொடர்ந்து நடைபெற மனிதர்களைப் பிடிப்பவர்களாக மாறுவோம். சிந்தனை ‘அன்பில்லாமல் செய்யப்படும் மறைப்பணி. அன்பே இல்லாத தாய்மைக்கு ஒப்பாக இருக்கும்’ என்பார் சுக் ஸ்விண்டோல் என்ற அறிஞர். தாய்மைக்கு அழகே அன்புதான். அதுபோன்றுதான் மறைப்பணிக்கும் அன்பே அழகு. ஆகையால், நாம் அன்போடு மறைப்பணி செய்வோம் அல்லது மனிதர்களைப் பிடிப்பவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம். - மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம். |
|
Stats Counter hit counter |