maraikal
MUM
"

"

இளையோர்


ஆண்டவரின் திருமுழுக்கு விழா  12-01-2020

முதல் வாசகம்


இதோ! என் ஊழியர்! அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது.

இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 42: 1-4, 6-7

ஆண்டவர் கூறுவது: இதோ! என் ஊழியர்! அவருக்கு நான் ஆதரவு அளிக்கிறேன்; நான் தேர்ந்துகொண்டவர் அவர்; அவரால் என் நெஞ்சம் பூரிப்படைகின்றது; அவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார். அவர் கூக்குரலிடமாட்டார்; தம் குரலை உயர்த்தமாட்டார்; தம் குரலொலியைத் தெருவில் எழுப்பவுமாட்டார். நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அணையார்; உண்மையாகவே நீதியை நிலைநாட்டுவார். உலகில் நீதியை நிலைநாட்டும்வரை அவர் சோர்வடையார்; மனம் தளரமாட்டார்; அவரது நீதிநெறிக்காகத் தீவு நாட்டினர் காத்திருப்பர். ஆண்டவராகிய நான் நீதியை நிலைநாட்டுமாறு உம்மை அழைத்தேன்; உம் கையைப் பற்றிப்பிடித்து, உம்மைப் பாதுகாப்பேன்; மக்களுக்கு உடன்படிக்கையாகவும் பிற இனத்தாருக்கு ஒளியாகவும் நீர் இருக்குமாறு செய்வேன். பார்வை இழந்தோரின் கண்களைத் திறக்கவும், கைதிகளின் தளைகளை அறுக்கவும், இருளில் இருப்போரைச் சிறையினின்று மீட்கவும் உம்மை அழைத்தேன்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்
திபா 29: 1-2. 3ac-4. 3b,9c-10 (பல்லவி: 11b) Mp3

பல்லவி: ஆண்டவர் தம் மக்களுக்கு அமைதி அளித்து ஆசி வழங்குவாராக!
1a
இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள்.
2
ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். - பல்லவி

3ac
ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார்.
4
ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. - பல்லவி

9b
ஆண்டவரின் குரல் காடுகளை வெறுமையாக்குகின்றது; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
10
ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். - பல்லவி

இரண்டாம் வாசகம்
கடவுள் இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார்.

திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34-38

கொர்னேலியு மற்றும் அவரது வீட்டாரை நோக்கிப் பேதுரு கூறியது: “கடவுள் ஆள் பார்த்துச் செயல்படுவதில்லை என்பதை நான் உண்மையாகவே உணர்கிறேன். எல்லா இனத்தவரிலும் அவருக்கு அஞ்சி நடந்து, நேர்மையாகச் செயல்படுபவரே அவருக்கு ஏற்புடையவர். இயேசு கிறிஸ்து வாயிலாக அமைதி உண்டு என்னும் நற்செய்தியை அவர் இஸ்ரயேல் மக்களுக்கு அனுப்பினார். அவரே அனைவருக்கும் ஆண்டவர். திருமுழுக்குப் பெறுங்கள் என்று யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும் நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல் தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும் அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி (மாற் 9: 7)

அல்லேலூயா, அல்லேலூயா! வானம் திறந்தது; தந்தையின் குரலொலி கேட்டது: “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்.” அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்
திருமுழுக்குப் பெற்ற இயேசு, கடவுளின் ஆவி தம்மீது இறங்கி வருவதைக் கண்டார்.

+ மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 13-17

அக்காலத்தில் இயேசு யோவானிடம் திருமுழுக்குப் பெறக் கலிலேயாவிலிருந்து யோர்தானுக்கு வந்தார். யோவான், “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெற வேண்டியவன்; நீரா என்னிடம் வருகிறீர்?'' என்று கூறித் தடுத்தார். இயேசு, “இப்பொழுது விட்டுவிடும். கடவுளுக்கு ஏற்புடையவை அனைத்தையும் நாம் நிறைவேற்றுவதுதான் முறை'' எனப் பதிலளித்தார். அதற்கு யோவானும் இணங்கினார். இயேசு திருமுழுக்குப் பெற்றவுடனே தண்ணீரை விட்டு வெளியேறினார். உடனே வானம் திறந்ததையும் கடவுளின் ஆவி, புறா இறங்குவதுபோலத் தம்மீது வருவதையும் அவர் கண்டார். அப்பொழுது, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே. இவர் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.


 

I எசாயா 42: 1-4, 6-7
II திப 10: 34-38
III மத்தேயு 3: 13-17

மறு கிறிஸ்து வாழ்வோம்

நிகழ்வு

சில ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு சிறுமியும் அவளுடைய தாயும் தந்தையும் திருமுழுக்குப் பெற்று, கிறிஸ்தவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கு அடுத்து வந்த நாளில் சிறுமி தான் படித்துவந்த பள்ளிக்கூடத்திற்குச் சென்றாள். பள்ளிக்கூடத்தில் அவளோடு படித்துவந்த மாணவிகள், அவள் திருமுழுக்குப் பெற்ற செய்தியைக் கேள்விப்பட்டு அவளிடம், “திருமுழுக்கின்பொழுது என்ன நடந்தது?” என்று கேட்டார்கள். சிறுமியோ மிகவும் தீர்க்கமான குரலில், “குருவானவர் என்னிடம் ‘கிறிஸ்தவ சமூகம் உன்னைப் பெருமகிழ்வுடன் வரவேற்கின்றது. இந்த சமூகத்தின் பெயரால் நான் உன்மீது சிலுவை அடையாளம் வரைகிறேன்’ என்று சொல்லி என்னுடைய நெற்றியில் சிலுவை அடையாளம் வரைந்தார். பின்னர் அவர், ‘கிறிஸ்துவின் அடையாளத்தைத் தாங்கியிருக்கின்றாய். அதனால் நீ மறுகிறிஸ்துவாக வாழவேண்டும் என்றார்” என்று சொல்லி முடிந்தாள்.

திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் மறு கிறிஸ்துவாக வாழவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்று நாம் ஆண்டவரின் திருமுழுக்கு விழாவைக் கொண்டாடுகின்றோம். இந்த விழா நமக்கு உணர்த்தும் உண்மை என்ன, இந்த நாளில் நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு எடுத்துரைக்கும் செய்தி என்ன ஆகியவற்றைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

மாந்தரோடு தன்னை ஒன்றிணைத்துக்கொண்ட இயேசு

மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தியில், யோர்தான் ஆற்றில், திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு திருமுழுக்குப் பெறுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு, திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறுகின்ற இந்நிகழ்வினை, அவர் இவ்வுலகிற்குத் தன்னை மூன்றாம்முறையாக வெளிப்படுத்துகின்றார் என்று சொல்லலாம். முதலில், யூத சமூகத்தில் மிகவும் வறியநிலையில் இருந்த இடையர்களுக்கும் பின்னர் புறவினத்தாராகிய கீழ்த்திசை ஞானிகளுக்கும் வெளிப்படுத்திய இயேசு, திருமுழுக்கின்பொழுது மூன்றாம்முறையாகத் தன்னை வெளிப்படுத்துகின்றார்.

இப்பொழுது நமக்கு ஓர் கேள்வி எழலாம். “மக்கள் தங்களுடைய பாவங்களிலிருந்து மனம்மாறுவதற்காகக் கொடுக்கப்பட்ட திருமுழுக்கினை, ஒரு குற்றமும் செய்யாத (லூக் 24: 31) இயேசு பெறவேண்டியதன் தேவை என்ன?” என்பதுதான் அக்கேள்வி. திருமுழுக்கு யோவான்கூட, “நான்தான் உம்மிடம் திருமுழுக்குப் பெறவேண்டியவன். நீரா என்னிடம் வருகின்றீர்?” என்று இதையொத்த கேள்வியைத்தான் கேட்கின்றார். இயேசு, திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றது, பாவ மன்னிப்பைப் பெற அல்ல. மாறாக, மக்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்ளவே. ஆம், மக்களோடு தன்னை ஒன்றித்துக்கொள்ளவே இயேசு திருமுழுக்கு யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெற்றார்.

இறையாட்சிப் பணிசெய்யப் புறப்படும் இயேசு

திருமுழுக்கு யோவானிடமிருந்து இயேசு பெற்ற திருமுழுக்கு அவருடைய பணிவாழ்வின் தொடக்கம் என்று சொல்லலாம். காரணம், இயேசு திருமுழுக்கு பெற்றபின்புதான், “காலம் நிறைவேறிவிட்டது; இறையாட்சி நெருங்கிவந்துவிட்டது; மனம்மாறி நற்செய்தியை நம்புங்கள்” (மாற் 1: 14-15) என்று கடவுளின் நற்செய்தியை எடுத்துரைக்கத் தொடங்குகின்றார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் குருவோ, அரசரோ தன்னுடைய பணியைத் தொடங்குகின்றபொழுது, அவரைத் திருப்பொழிவு எண்ணெயால் அருள்பொழிவு செய்வது வழக்கம் (விப 29: 7; 1சாமு 10:1, 16: 13; 1அர 1: 39, 2அர 9:6). நற்செய்தியில் திருமுழுக்கு யோவான் இயேசுவுக்குத் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுப்பதை அந்த அடிப்படையில் புரிந்துகொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும். இயேசு தண்ணீராலோ எண்ணெயினாலோ அல்ல, தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்படுகின்றார். இதனை இன்றைய இரண்டாம் வாசகத்தில், பேதுரு கொர்னேலியுக்குப் கூறுகின்ற, “கடவுள் தூய ஆவியாரின் வல்லமையை இயேசுவின்மீது பொழிந்திருந்தருளினர்” (திப 10:38) என்ற வார்த்தைகளிலும், நாசரேத்தில் உள்ள தொழுகைக்கூடத்தில், இறைவாக்கினர் எசாயாவின் இறைவார்த்தையை மேற்கோள் காட்டிப் பேசுகின்ற இயேசுவின் வார்த்தைகளிலும் (லூக் 4: 18) கண்டுகொள்ளலாம்.

திருமுழுக்கின் மூலம் தூய ஆவியாரின் அருள்பொழிவைப் பெற்ற இயேசு கிறிஸ்து எத்தகைய பணியைச் செய்தார் அல்லது செய்யப்போகிறார் என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலாக இருக்கின்றது இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம். “அவர் நீதி வழங்குவார்... நெரிந்த நாணலை முறியார்...பிற இனத்தாருக்கு ஒளியாக இருப்பார்...பார்வையிழந்தோருக்குப் பார்வையளிப்பார்...” என்று வருகின்ற வார்த்தைகள் யாவும் மெசியாவாம் இயேசுவைக் குறித்துச் சொல்லப்பட்டவை. இவையாவும் இயேசுவில் நிறைவேறின. ஆம், தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.

மறுகிறிஸ்துவாக வாழ அழைக்கும் இயேசு

திருமுழுக்கின் மூலம் தூய ஆவியாரால் அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார் என்பது, நாமும் இயேசுவைப் போன்று எங்கும் நன்மை செய்துகொண்டே செல்ல அல்லது மறுகிறிஸ்துவாக வாழ அழைப்புத் தருகின்றது. இன்னும் சொல்லப்போனால், திருமுழுக்கு என்பதே ஒரு கடத்தல்தானே! எப்படிப்பட்ட கடத்தல், சாவிலிருந்து வாழ்விற்கும் இருளிலிருந்து ஒளிக்கும் சாத்தானின் பிள்ளையிலிருந்து கடவுளின் பிள்ளை என்ற ஒரு நிலைக்குமான கடத்தல். இதுவே திருமுழுக்கு உணர்த்தும் ஆழமான உண்மையாகும். இன்றைக்குப் பலர் திருமுழுக்குப் பெற்ற பின்பும், பழைய பாவ வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருப்பது மிகவும் வியப்பாக இருக்கின்றது.

பிராமணர் ஒருவர் இருந்தார். (சாதிப் பெயரைக் குறிப்பிடுவதை நினைத்துத் தவறாக நினைக்கவேண்டும். ஓர் உண்மையை உணர்த்தவே குறிப்பிடுகின்றேன்) இவர் ஒரு பிராடஸ்டன்ட் சபைப் போதகரின் போதனையால் தொடப்பட்டு, கிறிஸ்துவ மதத்திற்கு மாறுவதாகச் சொன்னார். உடனே அந்தப் போதகர், “கிறிஸ்துவ மதத்திற்கு மாறவேண்டும் என்றால், திருமுழுக்கு (முழுக்கு ஞானஸ்நானம்) பெறவேண்டும்” என்றார். அவரும் அதற்குச் சரியென்று சொல்ல, போதகர் அவரை அருகில் இருந்த ஒரு குளத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு போதகர் அவரை மூன்றுமுறை நீருக்குள் முக்கி எடுத்தார். மூன்றாம் முறையாக அவர் முக்கி எடுத்தபொழுது, அந்த மனிதர் தன்னுடைய உடம்பில் அணிந்திருந்த பூணூலைக் கழற்றி எறிந்திருந்தார். இதைப் பார்த்துவிட்டுப் போதகர் அந்த மனிதரைப் பார்த்து, “நீர் உண்மையான கிறிஸ்தவராக மாறிவிட்டீர் என்பதை நான் நம்புகிறேன்’ என்று அவரைப் பாராட்டினார்.

இந்த நிகழ்வில் வருகின்ற பிராமணர், கிறிஸ்தவை ஏற்றுக்கொண்டதன் அடையாளமாக அல்லது மறு கிறிஸ்துவாக வாழத் தொடங்கிவிட்டதன் அடையாளமாக தன்னுடைய உடலில் அணிந்திருந்த பூணூலைக் கழற்றி எறிந்தார். நாம் மறு கிறிஸ்துகளாக வாழத் தொடங்கிவிட்டோம் என்பதை எப்படிக் காட்டப் போகின்றோம்? சிந்தித்துப் பார்க்கவேண்டும்.. “நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாய் இருக்கிறீர்கள்” (மத் 5:14). ஆகையால், நாம் மண்ணுலகிற்கு உப்பாக, ஒளியாக இருந்து, மறுகிறிஸ்துகளாக வாழ்வோம். அதன்மூலம் இயேசுவின் திருமுழுக்கைப் பெருவிழாவை, நாம் பெற்றுக்கொண்ட திருமுழுக்கைப் பொருளுள்ளதாக்குவோம்.

சிந்தனை

‘இனி வாழ்பவன் நான் அல்ல; கிறிஸ்துவே என்னுள் வாழ்கிறார்’ (கலா 2:20) என்பார் புனித பவுல். ஆகவே, இயேசுவின் திருமுழுக்குப் பெருவிழாவில் திருமுழுக்குப் பெற்ற நாம் ஒவ்வொருவரும் மறு கிறிஸ்துவாக வாழ முற்படுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter