maraikal
MUM
              

இளையோர்

 

                                        டிசம்பர் 24 காலைத் திருப்பலி

முதல் வாசகம்
தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5,8b-12,16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, “பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது'' என்று கூறினார்.

அதற்கு நாத்தான், “நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்'' என்று அரசரிடம் சொன்னார்.

அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: “நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்ற இடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்வேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்து வாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன்.

மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப் போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில் கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்.''

இது ஆண்டவர் வழங்கும் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 (பல்லவி: 1a) Mp3


பல்லவி: ஆண்டவரின் பேரன்பை நான் என்றும் பாடுவேன்.

1 ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன். 2 உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. பல்லவி

3 நீர் உரைத்தது: `நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது: 4 உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.' பல்லவி

26 `நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை' என்று அவன் என்னை அழைப்பான். 28 அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். பல்லவி

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

அல்லேலூயா, அல்லேலூயா! விடிவிண்மீனே, முடிவிலா ஒளியின் சுடரே, நீதியின் கதிரவனே, இருளிலும் மரண நிழலிலும் அவதிப் படுவோரைச் சுடர்வீசி ஒளிர்விக்க வந்தருளும். அல்லேலூயா.

 

நற்செய்தி வாசகம்

விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.
 

+ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 67-79

அக்காலத்தில் திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு உரைத்த இறைவாக்கு: “இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். தம் தூய இறைவாக்கினர் வாயினால் தொடக்க முதல் அவர் மொழிந்தபடியே அவர் தம் ஊழியராகிய தாவீதின் குடும்பத்தில் வல்லமை உடைய மீட்பர் ஒருவர் நமக்காகத் தோன்றச் செய்தார்; நம் பகைவரிடமிருந்தும் நம்மை வெறுப்போர் அனைவரின் பிடியிலிருந்தும் நம்மை மீட்பார். அவர் நம் மூதாதையருக்கு இரக்கம் காட்டி, தமது தூய உடன்படிக்கையையும், நம் தந்தையாகிய ஆபிரகாமுக்கு அவர் இட்ட ஆணையையும் நிறைவேற்ற நினைவு கூர்ந்தார். இவ்வாறு நாம் பகைவரின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டுத் தூய்மையோடும் நேர்மையோடும் வாழ்நாளெல்லாம் அச்சமின்றி அவர் திருமுன் பணி செய்யுமாறு வழிவகுத்தார்.

குழந்தாய், நீ உன்னத கடவுளின் இறைவாக்கினர் எனப்படுவாய்; ஏனெனில் பாவ மன்னிப்பால் வரும் மீட்பை அவர்தம் மக்களுக்கு அறிவித்து ஆண்டவருக்கான வழியைச் செம்மைப்படுத்த அவர் முன்னே செல்வாய். இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளி தரவும், நம்முடைய கால்களை அமைதி வழியில் நடக்கச் செய்யவும் நம் கடவுளின் பரிவுள்ளத்தாலும் இரக்கத்தாலும் விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகிறது.''

இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி.

 

"ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்"

பஞ்சாப் மாநிலத்தில் நற்செய்திப் பணியைச் செய்துவந்த சாது சுந்தர் சிங் சொல்லகூடிய கதை இது. பண்ணையார் ஒருவர் இருந்தார். அவருக்கு ஏராளமான நிலபுலன்களும் நூற்றுக்கணக்கில் ஆடுகளும் இருந்தன. எல்லாவற்றையும் தன்னுடைய பணியாளர்களைக் கொண்டே மேலாண்மை செய்து வந்தார்.

இதற்கிடையில் அவருடைய ஆடுகளை மேய்த்துவந்த மேய்ப்பர்கள், ஒவ்வொருநாளும் ஓரிரு ஆடுகளை வழியில் தொலைத்துக் கொண்டே வந்தனர். இது பண்ணையாருக்கு மிகுந்த மனவேதனையைத் தந்தது. ஏனென்றால், அவர் அந்த ஆடுகளை மிகவும் அன்பு செய்தார். "தொலைந்து போன ஆடுகளைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வரமுடியுமா?" என்று அவர் அவர்களைக் கேட்டுப் பார்த்தார். அதற்கு அவர்களோ, "இருட்டிய பிறகு ஆடுகளைத் தேடிப்போனால், கொடிய விலங்குகள் எங்களைத் தாக்கி, நாங்கள் உயிரிழக்கக் கூடும்" என்று அவர்கள் போக மறுத்தார்கள். இதற்கு என்ன செய்யலாம் என்று அவர் மிகத் தீவிரமாக யோசித்தார்.

தொலைந்து போன ஆடுகளை, தேடிக் கண்டுபிடித்து வரச் சொன்னால் இவர்கள் போக மறுக்கிறார்கள். ஆடுகளுக்கும் நம்மை அடையாளம் தெரியாது. அதனால் ஆட்டுத்தோலைப் போர்த்திக்கொண்டு ஆடுகளுக்குள் நாம் நடந்துபோனால் என்ன? என்று யோசித்தார். அது அவருக்கு சரியெனப் படவே, மறுநாளிலிருந்து கூலிக்கு மேய்க்கும் மேய்ப்பர்களுக்குப் பதிலாக, அவரே ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு ஓர் ஆட்டைப் போன்று அவர்களை வழிநடத்திச் சென்றார். ஆடுகளுக்கு எந்தவொரு சந்தேகமும் வரவில்லை. அவையோ அவரை அப்படியே பின்தொடர்ந்தன. அவர் ஆடுகளை நல்ல மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டுசென்று அவற்றை மேயவிட்டார். மாலையில் அவற்றைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தார். இதனால் எந்தவொரு ஆடும் வழிதவறியோ, தொலைந்தோ போகவில்லை.

இந்தக் கதையைச் சொல்லிவிட்டு சாது சுந்தர் சிங் சொல்வார் "எப்படி தொலைந்து போன ஆடுகளை மீட்பதற்காக அந்தப் பண்ணையார் ஆடுகளைப் போன்று மாறினாரோ, அது போன்று ஆண்டவர் இயேசுவும் மனிதர்களாகிய நம்மை மீட்பதர்காக மனித உரு எடுத்து நம்மைத் தேடிவந்தார்".

நற்செய்தி வாசகத்தில் செக்கரியா, ஆண்டவராகிய கடவுள் மக்களைத் தேடிவந்து மீட்டதற்காக அவரைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியாவோ ஆண்டவருடைய தூதர் அவரிடத்தில் சொன்ன செய்தியை நம்ப மறுத்ததால், பேச முடியாமல் பத்து மாதங்கள் கிடக்கின்றார். இப்படிப்பட்ட சூழலில், அவருடைய மனைவியான எலிசபெத் கருவுற்று ஓர் ஆண்மகனை/ யோவனை பெற்றெடுத்ததும் அவர் முன்புபோல் பேசுவதற்கான வல்லமையைப் பெறுகின்றார். அப்போதுதான் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்த் தொடங்குகின்றார்.

ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களை எல்லையற்ற விதமாக அன்பு செய்தார். எகிப்தில் அடிமைகளாக இருந்தவர்களை விடுவித்துக் கொண்டு வந்து, பாலும் தேனும் பொழியக்கூடிய கானான் தேசத்தில் குடியமர்த்தினார். அவர்களை வழிநடத்துவதற்காக அவர்களிடத்தில் நீதித்தலைவர்களையும் அரசர்களையும் அனுப்பிவைத்தார். இவற்றையெல்லாம் செய்தபின்பும் கூட, அவர்கள் அவரது அன்பைப் புறக்கணித்து வேற்று தெய்வத்தை வழிபட்டபோதும் அதனால் அவர்கள் நாடு கடத்தப்பட்டபோதும் அவர்களைத் தேடிமீட்பவராக இருந்தார். இவற்றுக்கெல்லாம் உச்சமாக தன்னுடைய ஒரே மகனை அனுப்பி அவர்களை தேடி மீட்பவராக இருந்தார். இதனை நினைவுகூர்ந்துதான் செக்கரியா, "இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார்" என்று புகழ்ந்து பாடுகின்றார்.

செக்கரியாவின் புகழ்ச்சிப் பாடலில் மேலும் ஒருசில செய்திகள் உள்ளடங்கி இருக்கின்றன. அதில் ஒன்று, ஆண்டவராகிய கடவுள் இஸ்ரயேல் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவுகூர்ந்தார் என்பதாகும். அவர் ஆபிரகாமிடத்தில் மெசியாவைப் பற்றி ஆணையிட்டார், அவர் ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல், அதனை நிறைவேற்றவும் செய்தார்.

நிறைவாக, செக்கரியா ஆண்டவராகிய கடவுள் தன் மகனின் வருகைக்காக, மக்களைத் தயார் செய்யும் பொறுப்பினை யோவானிடம் கொடுத்ததற்காக இறைவனைப் போற்றிப் புகழ்கின்றார். செக்கரியா, தன்னுடைய மகனுடைய பணியென்ன, அவன் எதற்காக தங்களுடைய வயது முதிர்ந்த காலத்தில் தங்களுக்கு அளிக்கப்பட்டான் என்பதை நன்றாகவே அறிந்திருந்தார். அதற்காகவும் அவர் ஆண்டவரைப் போற்றிப் புகழ்கின்றார்.

இவ்வாறு செக்கரியா, ஆண்டவரின் திட்டத்தை உணர்ந்தவராய், அவரை நெஞ்சாரப் போற்றிப் புகழ்கின்றார். நம்முடைய வாழ்வில் நாம் இறைவனின் திட்டத்தையும் அவர் நம்மைத் தேடி வருவதையும் உணர்ந்திருக்கின்றோமா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும். அது நாம் செய்யவேண்டிய மிக முக்கியமான பணி.

ஆகவே, இறைவன் நம்மைத் தேடிவருவதை உணர்வோம். அவருக்கு உகந்த வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.



- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
லூக்கா 01: 67-79

"விண்ணிலிருந்து விடியல் நம்மைத் தேடி வருகின்றது”


நிகழ்வு

பிரபல ஓவியரான ஹோல்மன் ஹன்ட் வரைந்த புகழ்பெற்ற ஓவியங்களுள் ஒன்று "உலகின் ஒளி" (Light of the world) என்ற தலைப்பில் வரையபபட்ட ஓவியமாகும். இவ்வோவியத்தில் இயேசு கிறிஸ்து தலையில் முள்முடி தரித்தவராய், தனது இடக்கையில் ஒரு விளக்கை ஏந்திக் கொண்டு, வலக்கையால் ஒரு வீட்டைத் தட்டிக்கொண்டிருப்பார்.

ஹோல்மன் ஹன்ட், இந்த ஓவியத்தை வரைந்து முடித்ததும், தன்னுடைய நண்பர்களிடம் காட்டி, ஓவியம் எப்படி இருக்கின்றது என்று கேட்டார். அவருடைய நண்பர்கள் எல்லாரும் ஓவியம் மிகவும் நன்றாக இருக்கின்றது... தத்ரூபமாக இருக்கின்றது... என்று என்று சொல்லிக்கொண்டிருக்கும்பொழுது, ஒரே ஒரு நண்பர் மட்டும், "இந்த ஓவியத்தில் குறை ஒன்று இருக்கின்றது"என்றார். "என்ன குறை இருக்கின்றது?" என்று ஹோல்மன் ஹன்ட் அவரிடம் கேட்டபோது, அவர், "இந்த ஓவியத்தில் உள்ள வீட்டில் கைப்பிடி என்ற ஒன்று இல்லைவே இல்லை; கைப்பிடி இல்லாமல் இயேசு எப்படி உள்ளே நுழைவார்?"என்றார்.

அவர் சொன்னதைப் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஹோல்மன் ஹன்ட் இவ்வாறு சொன்னார்; "இயேசு கிறிஸ்து ஒருவருடைய வீட்டுக்கு முன்பாக நின்றுகொண்டு தட்டிக்கொண்டிருக்கின்றார் என்றால், கதவைத் திறக்கவேண்டியது வீட்டினுள்ளே இருக்கின்றவர்தானே ஒழிய, இயேசு அல்ல."

ஆம், உலகின் ஒளியான இயேசு நம்மைத் தேடிவருகின்றபோது, அவரை நம்முடைய உள்ளத்திற்குள்ளும் இல்லத்திற்குள்ளும் அனுமதிக்கவேண்டியது நாம்தானே ஒழிய, இயேசு அல்ல. இன்றைய நற்செய்தி வாசகம், உலகின் ஒளியான இயேசு, நம்மைத் தேடி வந்து மீட்பதைக் குறித்துப் பேசுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

தேடி வரும் இறைவன்

நற்செய்தியில், திருமுழுக்கு யோவானின் தந்தை செக்கரியா, நா கட்டவிழ்ந்து ஆண்டவராகிய கடவுளைப் போற்றிப் புகழ்வதைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் பாடுகின்ற புகழ்ப்பாவின் முதற்பகுதியில், கடவுள் தன் மக்களைத் தேடிவந்து மீட்பதாகக் குறிப்பிடுக்கின்றார். மக்களெல்லாம் கடவுளைத் தேடிச்சென்றுகொண்டிருந்த, தேடிச்சென்றுகொண்டிருக்கும் தருணத்தில், ஆண்டவராகிய கடவுளோ மக்களைத் தேடிவந்து மீட்பவராக இருக்கின்றார். லூக்கா நற்செய்தி 19:10 இல் இடம்பெறுகின்ற, "இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்தார்"என்னும் வார்த்தைகள் இதை உறுதிசெய்வனவாக இருக்கின்றன.

வாக்குறுதிகளை நிறைவேற்றும் இறைவன்

செக்கரியா இறைவனைப் புகழ்ந்து பாடுகின்ற புகழ்ப்பாவில் இடம்பெறுகின்ற இரண்டாவது முக்கியமான செய்தி, கடவுள் தாம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுகின்றார் என்பதாகும்.

நம்பிக்கையின் தந்தை என அழைக்கப்படும் ஆபிரகாம் தம் ஒரே மகனையும் ஆண்டவருக்காகப் பலியிடத் துணிந்ததால், ஆண்டவர் அவருடைய வழிமரபை ஆசியால் நிரப்புவேன் (தொநூ 22: 16-18) என்று ஆணையிட்டுக் கூறினார். மேலும் தாவீது அரசரிடம் கடவுள், "உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன் (2 சாமு 7: 12) என்றும் ஆணையிட்டுக் கூறினார். இவற்றையெல்லாம் அவர் இயேசுவின் வழியாக நிறைவேற்றுகின்றார். ஆம், ஆண்டவராகிய கடவுள் மனிதர்களைப் போன்று கொடுத்த வாக்குறுதியை மீறுகின்றவர் அல்லர். மாறாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுபவர். அதைத்தான் செக்கரியா புகழ்ப்பாவாகப் பாடுகின்றார்.

ஒளியாக வரும் இறைவன்

கடவுள் தம் மக்களைத் தேடிவந்தார்; வாக்குறுதிகளை நிறைவேற்றினார் என்று பாடும் செக்கரியா, அவர் எப்படி வந்தார் என்பதையும் குறிப்பிடுகின்றார். கடவுள், இருளிலும் இறப்பின் பிடியிலும் இருப்போர்க்கு ஒளிதரும்பொருட்டு, விடியலாய், ஒளியாம் வந்தார் என்று அவர் குறிப்பிடுகின்றார். செக்கரியா குறிப்பிடுகின்ற இவ்வார்த்தைகள் இறைவாக்கினர் எசாயா நூலில் இடம்பெறுகின்ற, "காரிருளில் நடந்து வந்த மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; சாவின் இருள் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர் மேல் சுடர் ஒளி உதித்துள்ளது"(எசாயா 9: 2-3) என்ற வார்த்தைகளை நமக்கு நினைவபடுத்துவதாக இருக்கின்றன.

ஆகவே, ஒளியாக, விடியலாக நம்மைத் தேடி வந்து மீட்கும் இறைவனை, நாம் நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொண்டு, அவருடைய அன்பு மக்களாக வாழ முயற்சிசெய்வோம்.

சிந்தனை

"அவர் தமக்குரியவர்களிடம் வந்தார். அவருக்கு உரியவர்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை" (யோவா 1:11) என்பார் நற்செய்தியாளர் யோவான். ஆகையால், நாம் யூதர்களைப் போன்று நம்மைத் தேடிகின்ற உலகின் ஒளியாம் இயேசுவைப் புறக்கணியாமல், அவரை நம்முடைய உள்ளத்திலும் இல்லத்திலும் ஏற்றுக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 
Free Blog Widget
Stats Counter
hit counter