முதல் வாசகம்
நற்செய்தி வாசகம் புனித திருமுழுக்கு யோவானின் பாடுகள்
நினைவுக்கு உரியது.
நான் உங்களுக்குக் கட்டளையிட்டுச்
சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம்.
இணைச்சட்ட நூலிலிருந்து வாசகம் 4:
1-2, 6-8
இஸ்ரயேலரே! கேளுங்கள்; நான் உங்களுக்குக் கற்றுத்தரும் நியமங்கள்
முறைமைகளின்படி ஒழுகுங்கள். அதனால் நீங்கள் வாழ்ந்து, உங்கள்
மூதாதையரின் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும்
நாட்டுக்குச் சென்று அதை உரிமையாக்குவீர்கள். நான் உங்களுக்குக்
கட்டளையிட்டுச் சொல்பவற்றோடு எதையும் சேர்க்க வேண்டாம். அதிலிருந்து
எதையும் நீக்கவும் வேண்டாம். உங்கள் கடவுளாகிய ஆண்டவரின்
கட்டளைகளை நான் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்; அவற்றைப்
பின்பற்றுங்கள்.
நீங்கள் அவற்றைப் பின்பற்றி நடங்கள். அதுவே மக்களினங்கள்
முன்னிலையில் உங்கள் ஞானமும் அறிவாற்றலுமாய் விளங்கும். இந்த
நியமங்களைக் கேள்வியுறும் அனைவரும் உண்மையில் இப்பேரினம்
ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களால் ஆனது என்பர். நாம் குரல்
எழுப்பும் போதெல்லாம் நம் கடவுளாகிய ஆண்டவர் நம்மோடு உள்ளார்.
அவரைப் போல், மக்களுக்கு மிகவும் நெருங்கிய கடவுளைக் கொண்ட
வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா? நான் இன்று நேர்மைமிகு சட்டங்களை
உங்களுக்குத் தந்துள்ளேன். இவற்றைப் போன்ற நியமங்களையும்
முறைமைகளையும் கொண்ட வேறு பேரினம் ஏதாகிலும் உண்டா?
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 15: 2-3a.
3bc-4ab. 5 (பல்லவி: 1a) Mp3
பல்லவி: ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர்
யார்?
2
மாசற்றவராய் நடப்போரே! - இன்னோர் நேரியவற்றைச் செய்வர்;
உளமார உண்மை பேசுவர்;
3a
தம் நாவினால் புறங்கூறார். - பல்லவி
3bc
தம் தோழருக்குத் தீங்கிழையார்; தம் அடுத்தவரைப் பழித்துரையார்.
4ab
நெறிதவறி நடப்போரை இழிவாகக் கருதுவர்; ஆண்டவருக்கு அஞ்சுவோரை
உயர்வாக மதிப்பர். - பல்லவி
5
தம் பணத்தை வட்டிக்குக் கொடார்; மாசற்றவருக்கு எதிராகக்
கையூட்டுப் பெறார்; - இவ்வாறு நடப்போர் என்றும்
நிலைத்திருப்பர். - பல்லவி
இரண்டாம் வாசகம்
இறைவார்த்தையின்படி நடக்கிறவர்களாய் இருங்கள்.
திருத்தூதர் யாக்கோபு எழுதிய திருமுகத்திலிருந்து
வாசகம் 1: 17-18, 21b-22, 27
சகோதரர் சகோதரிகளே,
நல்ல கொடைகள் அனைத்தும், நிறைவான வரமெல்லாம், ஒளியின் பிறப்பிடமான
விண்ணகத் தந்தையிடமிருந்தே வருகின்றன. அவரிடம் எவ்வகையான
மாற்றமும் இல்லை; அவர் மாறிக்கொண்டிருக்கும் நிழல் அல்ல.
தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகளாகும்படி உண்மையை அறிவிக்கும்
வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க அவர் விரும்பினார்.
உங்கள் உள்ளத்தில் ஊன்றப்பட்ட வார்த்தையைப் பணிவோடு ஏற்றுக்
கொள்ளுங்கள். அதுவே உங்களை மீட்க வல்லது. இறைவார்த்தையைக்
கேட்கிறவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக்கொள்ள
வேண்டாம். அதன்படி நடக்கிறவர்களாயும் இருங்கள்.
தந்தையாம் கடவுளின் பார்வையில் தூய்மையானதும் மாசற்றதுமான
சமய வாழ்வு எதுவெனில், துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும்
கவனித்தலும், உலகத்தால் கறைபடாதபடி தம்மைக் காத்துக் கொள்வதும்
ஆகும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
யாக் 1: 18
அல்லேலூயா, அல்லேலூயா! தம் படைப்புகளுள் நாம் முதற்கனிகள்
ஆகும்படி உண்மையை அறிவிக்கும் வார்த்தையால் நம்மை ஈன்றெடுக்க
அவர் விரும்பினார். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில்
வைத்து இப்போதே எனக்குக் கொடும்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 6: 17-29
அக்காலத்தில்
ஏரோது, தன் சகோதரனான பிலிப்பின் மனைவி ஏரோதியாவை மனைவியாக்கிக்
கொண்டிருந்தான்; அவள் பொருட்டு ஆள் அனுப்பி யோவானைப்
பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.
ஏனெனில் யோவான் ஏரோதிடம், “உம் சகோதரர் மனைவியை நீர்
வைத்திருப்பது முறை அல்ல” எனச் சொல்லி வந்தார். அப்போது ஏரோதியா
அவர்மீது காழ்ப்புணர்வு கொண்டு, அவரைக் கொலை செய்ய
விரும்பினாள்; ஆனால் அவளால் இயலவில்லை. ஏனெனில் யோவான்
நேர்மையும் தூய்மையும் உள்ளவர் என்பதை ஏரோது அறிந்து அஞ்சி
அவருக்குப் பாதுகாப்பு அளித்துவந்தான். அவர் சொல்லைக்
கேட்டு மிகக் குழப்பமுற்ற போதிலும், அவருக்கு மனமுவந்து
செவிசாய்த்தான்.
ஒரு நாள் ஏரோதியாவுக்கு நல்ல வாய்ப்பு ஒன்று கிடைத்தது. ஏரோது
தன் பிறந்த நாளில் அரசவையினருக்கும், ஆயிரத்தவர் தலைவர்களுக்கும்
கலிலேய முதன்மைக் குடிமக்களுக்கும் ஒரு விருந்து படைத்தான்.
அப்போது ஏரோதியாவின் மகள் உள்ளே வந்து நடனமாடி ஏரோதையும்
விருந்தினரையும் அகமகிழச் செய்தாள். அரசன் அச்சிறுமியிடம்,
“உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள், தருகிறேன்” என்றான்.
“நீ என்னிடம் எது கேட்டாலும், ஏன் என் அரசில் பாதியையே
கேட்டாலும் உனக்குத் தருகிறேன்” என்றும் ஆணையிட்டுக்
கூறினான்.
அவள் வெளியே சென்று, “நான் என்ன கேட்கலாம்?” என்று தன்
தாயை வினவினாள். அவள், “திருமுழுக்கு யோவானின் தலையைக்
கேள்” என்றாள்.
உடனே சிறுமி அரசனிடம் விரைந்து வந்து, “திருமுழுக்கு
யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து இப்போதே எனக்குக்
கொடும்” என்று கேட்டாள்.
இதைக் கேட்ட அரசன் மிக வருந்தினான். ஆனாலும் விருந்தினர்
முன் தான் ஆணையிட்டதால் அவளுக்கு அதை மறுக்க விரும்பவில்லை.
உடனே அரசன் ஒரு காவலனை அனுப்பி யோவானுடைய தலையைக் கொண்டு
வருமாறு பணித்தான். அவன் சென்று சிறையில் அவருடைய தலையை
வெட்டி, அதை ஒரு தட்டில் கொண்டு வந்து அச்சிறுமியிடம்
கொடுக்க, அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள்.
இதைக் கேள்வியுற்ற யோவானுடைய சீடர்கள் வந்து அவருடைய உடலை
எடுத்துச் சென்று ஒரு கல்லறையில் வைத்தார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|
பொதுக்காலம் இருபத்து இரண்டாம்
ஞாயிறு
I இணைச்சட்டம் 4: 1-2, 6-8
II யாக்கோபு 1: 17-18, 21b-22 ,27
III மாற்கு 7: 1-8, 14-15, 21-23
“துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்”
நிகழ்வு
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவைச் சார்ந்த பிரபல
மானுடவியலாரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்கரெட் மீட்
(Margaret Mead) என்பவரிடம், “நாகரிகம் எப்போது தோன்றியது?”
என்றொரு கேள்வியைக் கேட்டார். இதற்கு மார்கரெட் மீட்,
‘எப்பொழுது மீன்பிடிக்கும் தூண்டில், மண்பாண்டம், மாவரைக்கும்
கல் என ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்பொழுது நாகரிகம்
தொடங்கியது’ என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார்
செய்தியாளர்.
ஆனால், செய்தியாளர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக,
மார்கரெட் மீட் இவ்வாறு பதிலளித்தார்: “ஆபத்திலிருந்த ஒரு
மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவி செய்தானோ அப்பொழுதுதான்
நாகரிகம் தொடங்கியது. ஏனெனில், ஒரு விலங்கு அடிப்பட்டுக்
கிடக்கும் இன்னொரு விலங்குக்கு உதவுவதும் இல்லை; காயத்திற்குக்
கட்டுப்போட்டு நலப்படுத்துவமில்லை. மனிதன்தான் இன்னொரு மனிதன்
அடிபட்டுக் கிடக்கின்றபோது, அவனுக்கு உதவுகின்றான்; அவனுடைய
காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவனை நலப்படுத்துகின்றான்.
அதனால் ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன்
உதவினானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது.”
மார்கரெட் மீட் சொன்ன இத்தகையதொரு பதிலைக் கேட்டுச்
செய்தியாளர் மிகவும் வியந்து போனார்.
ஆம், துன்பத்தில் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு
மனிதன் உதவுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்த
மனிதனாகின்றான். பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் இறைவார்த்தையைக்
கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், துன்புறுபவர்களைக்
கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது
குறித்து நாம் சிந்திப்போம்.
இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்போம்
‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்பர். “என்னை நோக்கி
‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள்
செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி
செயல்படுவரே செல்வர்” (மத் 7: 21) என்று நாம் சொல்வீரர்களாக
மட்டும் இருந்துவிடாமல், செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும்
என்ற அழைப்பினைப் தருவார் நம் ஆண்டவர் இயேசு.
யாக்கோபு திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம்
வாசகமும் நாம் செயல்வீரர்களாக இருக்க அழைக்கின்றது. அதற்குச்
சான்றாக இருப்பதுதான், “இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக
மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி
நடக்கின்றவர்களாகவும் இருங்கள்” என்ற இறைவார்த்தை.
யாக்கோபு கூறும் இவ்வார்த்தைகளின் ஆழமான பொருளை உணர்ந்துகொள்வதற்கு,
அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப்
பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
யாக்கோபு வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் இருந்த திருஅவையில்
ஏழை பணக்கார் என்ற பாகுபாடு இருந்தது. இன்னும்
குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பணக்காரர் என்றால்,
அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’, ஏழை என்றால் அவருக்கு ஒருவிதமான
‘கவனிப்பும்’ இருந்தது. இதனால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள்
ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. இத்தகைய
சூழ்நிலையில்தான் யாக்கோபு, “....இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாகவும்
இருங்கள்” என்று கூறிவிட்டு, துன்புறும் அனாதைகளையும்
கைம்பெண்களையும் கவனித்தலே உண்மையான சமய வாழ்வு என்று
குறிப்பிடுகின்றார். இங்கே யாக்கோபு கூறுகின்ற வார்த்தைகள்,
“ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு
நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுக்காக வழக்காடுங்கள்” (எசா
1: 17) என்ற எசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றன.
ஆதலால், நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக்
கொள்வது கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று உணர்ந்து
வாழவேண்டும்.
வெளிவேடம் இறைவனுக்கு ஏற்புடையது அல்ல
நம்மோடு இருக்கும் துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்வதே
கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு, அதுவே உண்மையான சமய
வாழ்வு என்று யாக்கோபு கூறுகையில், அதற்கு முற்றிலும் எதிராகச்
செயல்பட்டவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள்
மற்றும் மறைநூல் அறிஞர்கள் (இன்றும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்).
இவர்கள், கைம்பெண்கள், துன்புறுவோரைக் கவனித்துகொள்வது கடவுள்
விடுத்த மேலான அழைப்பாக இருக்கும்பொழுது, அதற்கு
முற்றிலும் மாறாகக் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்
கொண்டார்கள் (மாற் 12: 40). இவற்றோடு நின்றுவிடாமல், வறியவர்களை
இவர்கள் மேலும் நசுக்கினார்கள்.
இன்றைய நற்செய்தியில் இவர்கள் இயேசுவின் சீடர்கள் கைகளைக்
கழுவாமல் உண்டதை, பெரிய குற்றமாக இயேசுவிடம்
முறையிடுகின்றார்கள். உண்மையில் இயேசுவின் சீடர்கள் கைகளைக்
கழுவித்தான் உண்டார்கள்; ஆனால் அவர்கள் மூதாதையர் மரபுப்படி
கைகளைக் கழுவாததாலேயே (மத் 15: 2), மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும்
இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இங்கே
சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதற்கு மறைநூல் அறிஞர்களும்
பரிசேயர்களும் ஏன் இயேசுவிடம் முறையிட்டார்கள் எனத்
தெரிந்துகொள்ள வேண்டும். இயேசு ஒரு இரபியாக, போதகராக இருந்துகொண்டு,
தன் சீடர்களுக்கு மூதாதையர் மரபுப்படி முறையாகக் கைகளைக்
கழுவதற்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காகவே இவர்கள் இயேசுவிடம்
அவருடைய சீடர்களைப் பற்றி முறையிடுகின்றார்கள். அப்பொழுதான்
இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைச் சாடிவிட்டு (எசா 29: 13),
“நீங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி
வருகிறவர்கள்” என்கிறார்.
மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடவுளுக்கு
உண்மையாய் இருந்திருந்தால், தங்களோடு இருந்த
துன்புறுவோரைக் கவனித்திருப்பர். அவர்கள் அவ்வாறு இல்லாததாலேயே
துன்புறுவோரை மேலும் துன்பப்படுத்தி, வெளிவேடத்தனமான
வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
இறைவார்த்தையின் படி நடக்கும்போது ஆசி
மறைநூல் அறிஞர்களைப் போன்று வெளிவேடமாக வாழாமல், நம்மோடு
வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வதே கடவுள்
விடுக்கும் மேலான அழைப்பு என்று சிந்தித்துப் பார்த்தோம்.
இத்தகையதொரு வாழ்க்கை வாழ்வோருக்குக் கடவுள் எத்தகைய ஆசிகளைத்
தருகின்றார் என்று இன்றைய முதல்வாசகம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது.
அதைப் பற்றிப் பார்ப்போம்
நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துகொள்வது உட்பட்ட
கடவுளின் முறைமைகள், கட்டளைகளின்படி நாம் வாழ்கின்றபொழுது
(வாக்களிக்கப்பட்ட) நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம் என்கிறார்
ஆண்டவர். அடுத்ததாக, நாம் கடவுள் நமக்குச் சொன்னவற்றை மறைநூல்
அறிஞர்களைப் போன்று கூட்டாமல், குறைக்காமல் அப்படியே கடைப்பிடித்து
வாழ்கின்றபொழுது, நாம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாவோம்.
நிறைவாக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும்போது
கடவுள் எப்பொழுதும் நம்மோடு இருப்பார்.
ஆகையால், கடவுள் அளிக்கும் இந்த மூன்றுவிதமான ஆசிகளைப்
பெற்றுக்கொள்வதற்கு நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக்
கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து
வாழ்வது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குத் துன்புறும் ஏழைகள்,
அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர் மேலும் மேலும் வஞ்சிப்படுவது
மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்களில் இறைவன் இருக்கின்றார்
(மத் 25: 40) என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர்களை நாம்
கவனித்துக்கொண்டு உண்மையான சமய வாழ்ந்து வாழ்ந்து, கடவுளின்
அளிக்கும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை
‘மக்களிடையே இரக்கமும் சகோதர அன்புமே மனித வாழ்வில் பெறுவதற்கு
முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும்’ என்பார் மார்லி என்ற அறிஞர்.
நாம் இரக்கத்தையும் சகோதர அன்பையும் மற்றவர்களிடமிருந்து
பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருந்து, துன்புறுபவர்களைக்
கவனித்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப்
பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
|