முதல் வாசகம்
எங்கள் கண்கள் முன்பாக, இயேசு
மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார்.
திருத்தூதர் பணிகள்
நூலிலிருந்து வாசகம் 1: 1-11
தெயோபில் அவர்களே, இயேசு தாம் தெரிந்துகொண்ட திருத்தூதர்களுக்கு
அவர்கள் தூய ஆவியின் துணையோடு செய்ய வேண்டியவற்றைக்
குறித்து அறிவுறுத்தியபின் விண்ணேற்றமடைந்தார்.
விண்ணேற்றமடைந்த நாள்வரை அவர் செய்தவை, கற்பித்தவை யாவற்றையும்
குறித்து எனது முதலாம் நூலில் நான் எழுதினேன். இயேசு
துன்புற்று இறந்தபின்பு நாற்பது நாள்களாக அவர்களுக்குத்
தோன்றி, இறையாட்சியைப்பற்றிக் கற்பித்தார்; பல தெளிவான
சான்றுகளால் தாம் உயிரோடிருப்பதைக் காண்பித்தார்.
அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது அவர்களிடம், “நீங்கள்
எருசலேமை விட்டு நீங்க வேண்டாம். என்னிடமிருந்து கேட்டறிந்த
தந்தையின் வாக்குறுதி நிறைவேறக் காத்திருங்கள். யோவான்
தண்ணீரால் திருமுழுக்குக் கொடுத்தார். நீங்களோ இன்னும்
சில நாள்களில் தூய ஆவியால் திருமுழுக்குப் பெறுவீர்கள்”
என்று கூறினார்.
பின்பு அங்கே கூடியிருந்தவர்கள் அவரிடம், “ஆண்டவரே, இஸ்ரயேலுக்கு
ஆட்சியுரிமையை மீண்டும் பெற்றுத் தரும் காலம் இதுதானோ?”
என்று கேட்டார்கள். அதற்கு அவர், “என் தந்தை தம் அதிகாரத்தால்
குறித்துவைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது
உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது
நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும்
யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லை வரைக்கும்
எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்றார்.
இவற்றைச் சொன்னபின்பு, அவர்கள் கண்கள் முன்பாக அவர்
மேலே எடுத்துக்கொள்ளப்பட்டார். மேகம் ஒன்று அவரை எடுத்துச்
சென்று அவர்கள் பார்வையிலிருந்து மறைத்துவிட்டது. அவர்
செல்லும்போது அவர்கள் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டே இருந்தார்கள். அப்போது வெண்ணுடை அணிந்த
இருவர் தோன்றி, “கலிலேயரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்து
பார்த்துக்கொண்டே நிற்கிறீர்கள்? இந்த இயேசு உங்களிடமிருந்து
விண்ணேற்றம் அடைந்ததைக் கண்டீர்கள் அல்லவா? அவ்வாறே
அவர் மீண்டும் வருவார்” என்றனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 47: 1-2. 5-6. 7-8 (பல்லவி: 5b) Mp3
பல்லவி: எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
அல்லது: அல்லேலூயா.
1
மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக்
கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள்.
2
ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும்
ஆளும் மாவேந்தர் அவரே. - பல்லவி
5
ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம்
முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.
6
பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள்,
நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். - பல்லவி
7
ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா
தொடுத்துப் புகழ் பாடுங்கள்.
8
கடவுள் பிற இனத்தார்மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம்
திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். - பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்துவிடம் காணப்பட்ட
நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
திருத்தூதர் பவுல் எபேசியருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 4: 1-13
சகோதரர் சகோதரிகளே,
ஆண்டவர் பொருட்டுக் கைதியாக இருக்கும் நான் உங்களைக்
கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு
ஏற்ப வாழுங்கள். முழு மனத்தாழ்மையோடும் கனிவோடும்
பொறுமையோடும் ஒருவரையொருவர் அன்புடன் தாங்கி, அமைதியுடன்
இணைந்து வாழ்ந்து, தூய ஆவி அருளும் ஒருமைப்பாட்டைக்
காத்துக்கொள்ள முழு முயற்சி செய்யுங்கள். நீங்கள் ஒரே
எதிர்நோக்குக் கொண்டு வாழ அழைக்கப் பட்டிருக்கிறீர்கள்.
ஒரே எதிர்நோக்கு இருப்பதுபோல, உடலும் ஒன்றே; தூய ஆவியும்
ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; திருமுழுக்கு ஒன்றே.
எல்லாருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே; அவர் எல்லாருக்கும்
மேலானவர்; எல்லார் மூலமாகவும் செயலாற்றுபவர்; எல்லாருக்குள்ளும்
இருப்பவர்.
கிறிஸ்து கொடுக்க விரும்பும் அளவுக்கேற்ப நம் ஒவ்வொருவருக்கும்
அருள் அளிக்கப்பட்டுள்ளது. ஆகையால்தான், ‘அவர் உயரே ஏறிச்
சென்றார்; அப்போது, சிறைப்பட்ட கைதிகளை இழுத்துச்
சென்றார்; மனிதருக்குப் பரிசுகளை வழங்கினார்’ என்று மறைநூல்
கூறுகிறது.
‘ஏறிச் சென்றார்’ என்பதனால் அதன் முன்பு மண்ணுலகின்
கீழான பகுதிகளுக்கு அவர் இறங்கினார் என்று விளங்குகிறது
அல்லவா? கீழே இறங்கியவர்தான் எங்கும் நிறைந்திருக்கும்படி
எல்லா வானுலகங்களுக்கும் மேலாக ஏறிச் சென்றவர்.
அவரே சிலரைத் திருத்தூதராகவும், சிலரை இறைவாக்கினராகவும்,
வேறு சிலரை நற்செய்தியாளர்களாகவும், ஆயர்களாகவும், போதகர்களாகவும்
ஏற்படுத்தினார். திருத்தொண்டாற்ற இறைமக்களை ஆயத்தப்படுத்தவும்,
கிறிஸ்துவின் உடலைக் கட்டி எழுப்பவும் இவர்களை அவர் ஏற்படுத்தினார்.
அதனால் நாம் எல்லாரும் இறைமகனைப் பற்றிய அறிவிலும் நம்பிக்கையிலும்
ஒருமைப்பாட்டை அடைவோம். கிறிஸ்துவிடம் காணப்பட்ட
நிறைவைப் பெறும் அளவுக்கு நாம் முதிர்ச்சியடைவோம்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
மத் 28: 19-20
அல்லேலூயா, அல்லேலூயா! நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும்
சீடராக்குங்கள்; இதோ! உலக முடிவு வரை எந்நாளும் நான்
உங்களுடன் இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
கிறிஸ்து விண்ணேற்றமடைந்து கடவுளின்
வலப்புறம் அமர்ந்தார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 16: 15-20
அக்காலத்தில்
இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி,
“உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப்
பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப்
பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத்
தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும்
அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை
ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம்
கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது
அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது
கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து
கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச்
சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும்
உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால்
அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|
I திருத்தூதர் பணிகள் 1: 1-11
II எபேசியர் 4: 1-13
III மாற்கு 16: 15-20
“அவர் உயரே ஏறிச் சென்றார்”
நிகழ்வு
பிரபல இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் ஓர் இசைத்
தொகுப்பினை இரவு பகல் பாராமல், மிகக் கடினமாக உழைத்து உருவாக்கிக்கொண்டிருந்தார்.
திடீரென இவருக்குப் புற்றுநோய் வந்தது, இதனால் இவர் மிகவும்
சிரமப்பட்டார்.
தனக்குப் புற்றுநோய் வந்த போதும் இவர் இசைத் தொகுப்பை உருவாக்குவதை
மட்டும் நிறுத்தவே இல்லை. அப்பொழுது இவரது நண்பர்கள் இவரிடம்,
“உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியவில்லையே! பிறகு எதற்குத்
தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றீர்; நன்றாக ஓய்வெடுங்கள்!”
என்று அறிவுறுத்தினார்கள். இவர் அவர்களது அறிவுரையை ஏற்காமல்,
தொடர்ந்து உழைத்தார். ஒரு கட்டத்தில் இவர் தனக்குச் சாவு
நெருங்கி வருவதை உணர்ந்து, தன் மாணவர்களை அழைத்து, “நான்
ஓர் இசைத்தொகுப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இதை
நான் இறப்பதற்குள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான்
என் ஆசை. ஒருவேளை என்னால் இது முடியாத பட்சத்தில் நீங்கள்தான்
இதை நிறைவு செய்ய வேண்டும்” என்றார். இவ்வாறு இவர் தன் மாணவர்களிடம்
கூறிவிட்டு, ஒருசில நாள்களிலேயே இறந்தார்.
இதன்பிறகு இவரது மாணவர்கள் அந்த இசைத்தொகுப்பை
நிறைவுசெய்து, ஒரு குறிப்பிட்ட நாளில், நகரில் இருந்த ஒரு
பெரிய அரங்கில் அரங்கேற்றினார்கள். அரங்கில் கூடியிருந்த
மக்களனைவரும் மெய்ம்மறந்து இசையை இரசித்துக்
கொண்டிருந்தார்கள். அப்பொழுது இசையைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர்
மக்களுக்கு முன்பாக வந்து, “எங்களுடைய குருநாதரால் இதுவரைக்கும்தான்
இசையை உருவாக்க முடிந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார்.
இதன்பிறகு வரும் பகுதியை அவரது மாணவர்களான நாங்கள்தான் உருவாக்கினோம்”
என்றார். இதைக்கேட்டு அரங்கிலிருந்த அனைவரும் கண்ணீர்
விட்டு அழுதார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற இசைக் கலைஞர் வேறு யாருமல்லர் இத்தாலியைச்
சார்ந்த மிகப்பெரிய ஓபரா இசைக்கலைஞரான கியோகோமோ புக்கினி (Giocomo
Puccini 1858 -1924) என்பவர்தான். இவர் Turandot என்ற இசைத்
தொகுப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும்பொழுதுதான் திடீரென இறந்தார்.
இதன்பிறகு இவருடைய மாணவர்கள்தான் இவர் உருவாக்கிக்கொண்டிருந்த
Turandot என்ற இசைத் தொகுப்பை நிறைவு செய்து அரங்கேற்றினார்கள்.
அது இன்றளவும் மிகச் சிறந்ததொரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
கியோகோமோ புக்கினி தான் உருவாக்கிக்கொண்டிருந்த இசைத்
தொகுப்புப் பணியைத் தன் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு இறையடி
சேர்ந்தார். நம் ஆண்டவர் இயேசுவோ தான் தான் தொடங்கிய நற்செய்திப்
பணியைத் தன் சீடரிடம் கொடுத்துவிட்டுத் விண்ணேற்றம் அடைகின்றார்.
அதைத்தான் இன்று நாம் ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவாகக்
கொண்டாடுகின்றோம். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவான இன்று
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் செய்தி
என்ன என்று சிந்திப்போம்.
இனி அவர் நமக்காகப் பரிந்து பேசுவார்
“மறைநூல்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு
எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம்
வீற்றிருக்கின்றார்” – இவை நம்பிக்கை அறிக்கையில் நாம்
சொல்லக்கூடிய வார்த்தைகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாவை
வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்த பின்பு, யூதர்களுக்கு
அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை மூடிவைத்து வாழ்ந்த
(யோவா 20: 19) சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார்.
மேலும் பல்வேறு சான்றுகளால் தாம் உண்மையாகவே உயிர்த்துவிட்டேன்
என்பதை அவர் அவர்களுக்கு அறிவித்தார். நாற்பது நாள்களுக்குப்
பின் விண்ணேற்றம் அடைந்து, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தார்.
இயேசு தன் சீடர்களை விட்டு அல்லது இவ்வுலகை விட்டுச்
சென்றுவிட்டார் என்று நாம் வருத்தமடையத் தேவையில்லை.
மாறாக, இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் இருக்கின்றார்,
அங்கு அவர் நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (உரோ 8: 34;
எபி 7: 25; 1 யோவா 2: 1) என்று நாம் ஆறுதல் அடையலாம்.
ஆகவே, இயேசுவின் விண்ணேற்றம் அவர் நமக்காகப் பரிந்து
பேசுவார் என்ற நம்பிக்கைச் செய்தியை அளிக்கின்றது.
இனி அவர் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார்
இயேசு இம்மண்ணுலகில், தம் சீடர்களோடு இருந்தபொழுது
அவர்களிடம், “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான்
போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால்
அவரை உங்களிடம் அனுப்புவேன்’ (யோவா 16: 7) என்று
சொல்லியிருப்பார். இன்றைய நாளில் இயேசு விண்ணேற்றம்
அடைந்திருக்கின்றார். அப்படியெனில், அவர் தூய ஆவியாரை
அனுப்பி வைப்பார் என்பது உறுதி. ஏனெனில் கடவுளின்
வார்த்தைகள் உண்மையும் (திபா 119: 160)
நம்பிக்கைக்குரியவையும் ஆனவை (2 சாமு 7: 28). மேலும் இயேசு
உண்மையாய் (யோவா 16: 4) இருப்பதால், அவர் நிச்சயம் தூய
ஆவியாரை அனுப்பி வைப்பார்.
இயேசு தம் சீடர்களிடம் தூய ஆவியாரை அனுப்புவதாகச்
சொல்கின்றாரே... அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர்
அவர்களுக்குச் சொல்லத் தவறவில்லை. இயேசு தூய ஆவியாரைத்
குறித்துப் பேசுகின்றபொழுது அவரைத் துணையாளர் (யோவா 14:
16; 16: 7) என்கிறார். அவ்வாறெனில், இயேசு
இவ்வுலகைவிட்டுச் சென்று, தந்தையின் வலப்பக்கம்
இருந்தாலும், தூய ஆவியார் நமக்குத் துணையாக இருப்பதால்,
நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அத்தகைய நம்பிக்கைச்
செய்தியையும் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு
அளிக்கின்றது.
இனி அவரது நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச் சான்று
பகரவேண்டும்
விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் இருந்து
நமக்காகப் பரிந்து பேசுவார்; துணையாளர் வருவார் என்ற
இரண்டு நம்பிக்கைச் செய்திகளை இயேசுவின் விண்ணேற்றப்
பெருவிழா நமக்குத் தருகின்ற அதே நேரத்தில், “உலங்கெங்கும்
சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”
என்ற அழைப்பினையும் நமக்குத் தருகின்றது.
இயேசு தம் சீடர்களிடம், “நற்செய்தியை அறிவியுங்கள்” என்று
சொல்லவில்லை; மாறாக, “நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்”
என்கிறார். அறிவியுங்கள் என்பது போதிப்பது நின்றுவிடும்;
ஆனால், பறைசாற்றுங்கள் என்பது வாழ்ந்து போதிப்பதாக
இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால்,
சாட்சிகளாய் வாழ்வது. இதையே இயேசு இன்றைய முதல்
வாசகத்தில், “சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்று கூறுவதாக
நாம் வாசிக்கின்றோம்.
எனவே, ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த
நாளில், இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார்; தூய ஆவியார்
வருவார் என்ற நம்பிக்கைச் செய்தியைப்
பெற்றுக்கொண்டவர்களாய், உலகெங்கும் சென்று
படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச்
சாட்சிகளாய்த் திகழ்வோம்.
சிந்தனை
‘நல்ல கிறிஸ்தவர்கள் தங்களது துன்பங்களையும் சோதனைகளையும்
குறை சொல்லாமல் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின்
மகிழ்வுக்குச் சான்று பகர வேண்டும்’ என்பார் திருத்தந்தை
பிரான்சிஸ். எனவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களையும்
சோதனைகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, இயேசுவின்
நற்செய்தியை எங்கும் பறைசாற்றி, அவருக்குச் சான்று
பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
|