குருத்தோலைப் பவனி நற்செய்தி
வாசகம்
ஆண்டவர் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 11: 1-10
இயேசு தம் சீடரோடு ஒலிவ மலை அருகிலுள்ள பெத்பகு,
பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை
நெருங்கியபொழுது இரு சீடர்களைஅனுப்பி, “உங்களுக்கு எதிரே
இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை
யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக்
காண்பீர்கள். அதை அவிழ்த்துக்கொண்டு வாருங்கள். யாராவது
உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று
கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே
திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.
அவர்கள் சென்று ஒரு வீட்டு வாயிலுக்கு வெளியே,
தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக்
கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில், அங்கே
நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், “என்ன செய்கிறீர்கள்?
கழுதைக்குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர்.
அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு
நின்றவர்களும் போகவிட்டனர்.
பிறகு அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து,
அதன்மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.
பலர் தங்கள் மேலுடைகளையும் வேறு சிலர் வயல்வெளிகளில்
வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர். முன்னேயும்
பின்னேயும் சென்றவர்கள், “ஓசன்னா! ஆண்டவர் பெயரால் வருகிறவர்
போற்றப்பெறுக! வரவிருக்கும் நம் தந்தை தாவீதின் அரசு
போற்றப்பெறுக! உன்னதத்தில் ஓசன்னா!” என்று ஆர்ப்பரித்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
ஆண்டவர் பெயரால் வருபவர் போற்றப்பெறுக!
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 12: 12-16
அக்காலத்தில்
பாஸ்கா திருவிழாவுக்குப் பெருந்திரளாய் வந்திருந்த மக்கள்
இயேசு எருசலேமுக்கு வருகிறார் என்று கேள்வியுற்று,
குருத்தோலைகளைப் பிடித்துக்கொண்டு அவருக்கு எதிர்கொண்டு
போய், “ஓசன்னா! ஆண்டவரின் பெயரால் வருகிறவர் போற்றப்பெறுக!
இஸ்ரயேலின் அரசர் போற்றப்பெறுக!” என்று சொல்லி ஆர்ப்பரித்தனர்.
இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதன்மேல் ஏறி அமர்ந்தார்.
“மகளே சீயோன், அஞ்சாதே! இதோ! உன் அரசர் வருகிறார்; கழுதைக்
குட்டியின்மேல், ஏறி வருகிறார்” என்று மறைநூலில் எழுதியுள்ளதற்கேற்ப
அவர் இவ்வாறு செய்தார்.
அந்நேரத்தில் அவருடைய சீடர்கள் இச்செயல்களின் பொருளைப்
புரிந்துகொள்ளவில்லை. அவரைப் பற்றி மறைநூலில் எழுதப்
பட்டிருந்தவாறே இவையனைத்தும் நிகழ்ந்தன என்பது இயேசு
மாட்சி பெற்ற பிறகே அவர்கள் நினைவுக்கு வந்தது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
திருப்பலி இந்த ஞாயிற்றுக்கிழமையில் தரப்பட்ட மூன்று
வாசகங்களையும் வாசிப்பது நலம். ஆனால் ஆண்டவருடைய
திருப்பாடுகளின் வரலாறு முக்கியமானதால், அதை ஒருபோதும்
விட்டுவிடக் கூடாது. திருக்கூட்டத்தின் நிலைக்கு ஏற்றபடி,
நற்செய்திக்கு முன் வரும் வாசகங்களில், ஒரு வாசகத்தை
மட்டும் வாசிக்கலாம். அல்லது, தேவையானால் இரு வாசகங்களையும்
விட்டுவிடலாம். மேலும் தேவையானால், திருப்பாடுகளின்
குறுகிய வாசகத்தைப் பயன்படுத்தலாம்.
மேற்கூறியவை மக்களோடு சேர்ந்து நிறைவேற்றப்படும்
திருப்பலிக்கே பொருந்தும்.
முதல் வாசகம்
நிந்தனை செய்வோர்க்கு என் முகத்தை
மறைக்கவில்லை. இழிநிலையை நான் அடைவதில்லை என்று அறிவேன்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து வாசகம் 50: 4-7
நலிந்தவனை நல் வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நான்
பெற்றிட, ஆண்டவராகிய என் தலைவர், கற்றோனின் நாவை எனக்கு
அளித்துள்ளார்; காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகின்றார்;
கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச்
செய்கின்றார்.ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்.
நான் கிளர்ந்தெழவில்லை. விலகிச் செல்லவுமில்லை. அடிப்போர்க்கு
என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என்
தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும்
காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைக்கவில்லை. ஆண்டவராகிய
என் தலைவர் துணை நிற்கின்றார்; நான் அவமானம் அடையேன்;
என் முகத்தைக் கற்பாறை ஆக்கிக்கொண்டேன்; இழிநிலையை
நான் அடைவதில்லை என்று அறிவேன்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 22: 7-8.
16-17a. 18-19. 22-23 (பல்லவி: 1a) Mp3
பல்லவி: என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக்
கைவிட்டீர்?
7
என்னைப் பார்ப்போர் எல்லாரும் ஏளனம் செய்கின்றனர்; உதட்டைப்
பிதுக்கித் தலையசைத்து,
8
‘ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்தானே! அவர் இவனை மீட்கட்டும்;
தாம் அன்புகூர்ந்த இவனை அவர் விடுவிக்கட்டும்’ என்கின்றனர்.
- பல்லவி
16
தீமை செய்வோரின் கூட்டம் என்னை வளைத்துக்கொண்டது; நாய்கள்
என அவர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்; என் கைகளையும்
கால்களையும் துளைத்தார்கள்.
17a
என் எலும்புகளை எல்லாம் நான் எண்ணிவிடலாம். - பல்லவி
18
என் ஆடைகளைத் தங்களிடையே பங்கிட்டுக்கொள்கின்றனர்; என்
உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.
19
நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத் தொலையில் போய்
விடாதேயும்; என் வலிமையே! எனக்குத் துணை செய்ய
விரைந்து வாரும். - பல்லவி
22
உமது பெயரை என் சகோதரருக்கு அறிவிப்பேன்; சபை நடுவே உம்மைப்
புகழ்ந்து பாடுவேன்.
23
ஆண்டவருக்கு அஞ்சுவோரே; அவரைப் புகழுங்கள்; யாக்கோபின்
மரபினரே, அனைவரும் அவரை மாட்சிமைப்படுத்துங்கள்; இஸ்ரயேல்
மரபினரே, அனைவரும் அவரைப் பணியுங்கள். - பல்லவி
இரண்டாம் வாசகம்
கிறிஸ்து தம்மையே
தாழ்த்திக்கொண்டார்; எனவே கடவுளும் கிறிஸ்துவை உயர்த்தினார்.
திருத்தூதர் பவுல் பிலிப்பியருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 2: 6-11
கடவுள் வடிவில் விளங்கிய கிறிஸ்து, கடவுளுக்கு இணையாய்
இருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக்
கருதவில்லை. ஆனால் தம்மையே வெறுமையாக்கி, அடிமையின் வடிவை
ஏற்று, மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும்
அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும்
மேலான பெயரை அவருக்கு அருளினார். ஆகவே இயேசுவின் பெயருக்கு
விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக ‘இயேசு கிறிஸ்து ஆண்டவர்’
என எல்லா நாவுமே அறிக்கையிடும்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
நற்செய்திக்கு
முன் வசனம்
பிலி 2: 8-9
சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும்
அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும்
மேலான பெயரை அவருக்கு அருளினார்.
ஆண்டவருடைய திருப்பாடுகளின் வரலாறு,
எரியும் திரிகளும் தூபமும் இன்றி, வாழ்த்துரை கூறாமலும்
திருநூலில் சிலுவை அடையாளம் வரையாமலும் வாசிக்கப்படும்.
நற்செய்தி வாசகம்
மாற்கு எழுதியபடி நம் ஆண்டவராகிய
இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் 14: 1- 15: 47
பாஸ்கா என்னும் புளிப்பற்ற அப்ப விழா நிகழ இன்னும் இரண்டு
நாள்கள் இருந்தன. தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞரும்
இயேசுவை எவ்வாறு சூழ்ச்சியாய்ப் பிடித்துக் கொலை செய்யலாம்
என்று வழிதேடிக்கொண்டிருந்தனர்; ஆயினும்,
‘விழாவின்போது வேண்டாம்; ஒருவேளை மக்களிடையே கலகம் ஏற்படக்
கூடும்’ என்று நினைத்தனர்.
இயேசு, பெத்தானியாவில் தொழுநோயாளர் சீமோன் இல்லத்தில்
இருந்தார். அங்கே பந்தியில் அமர்ந்திருந்தபோது இலாமிச்சை
நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழுடன் பெண் ஒருவர் வந்தார்.
அந்தத் தைலம் கலப்பற்றது, விலையுயர்ந்தது. அவர் அப்படிகச்
சிமிழை உடைத்து இயேசுவின் தலையில் ஊற்றினார். ஆனால் அங்கிருந்த
சிலர் கோபமடைந்து, “இந்தத் தைலத்தை இவ்வாறு வீணாக்குவதேன்?
இதை முந்நூறு தெனாரியத்துக்கும் மேலாக விற்று ஏழைகளுக்குக்
கொடுத்திருக்கலாமே,” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.
அப்பெண்மீதும் சீறி எழுந்தனர்.
இயேசு அவர்களிடம், “அவரை விடுங்கள். ஏன் அவருக்குத்
தொல்லை கொடுக்கிறீர்கள்? அவர் எனக்குச் செய்தது
முறையான செயலே. ஏனெனில் ஏழைகள் எப்போதுமே உங்களோடு இருக்கின்றார்கள்.
நீங்கள் விரும்பும்போதெல்லாம் அவர்களுக்கு நன்மை செய்ய
முடியும். ஆனால் நான் எப்போதும் உங்களோடு இருக்கப்போவதில்லை.
இவர் தம்மால் இயன்றதைச் செய்தார். என் அடக்கத்திற்காக
இவர் முன்னதாகவே என் உடலுக்குத் தைலம் பூசிவிட்டார்.
உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுமோ
அங்கெல்லாம் இவர் செய்ததும் எடுத்துக் கூறப்படும்; இவரும்
நினைவுகூரப்படுவார் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” என்று கூறினார்.
பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு இஸ்காரியோத்து இயேசுவைக்
காட்டிக்கொடுக்கும் நோக்கத்தோடு தலைமைக் குருக்களிடம்
சென்றான். அவர்கள் அதை அறிந்து மகிழ்ச்சியுற்று அவனுக்குப்
பணம் கொடுப்பதாக வாக்களித்தனர். அவனும் அவரை எப்படிக்
காட்டிக் கொடுக்கலாம் என்று வாய்ப்புத்
தேடிக்கொண்டிருந்தான்.
புளிப்பற்ற அப்ப விழாவின் முதல் நாள் வந்தது. பாஸ்கா
ஆட்டுக் குட்டியைப் பலியிடும் அந்நாளிலே இயேசுவின் சீடர்,
“நீர் பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே சென்று ஏற்பாடு
செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
அவர் பின்வருமாறு கூறி, தம் சீடருள் இருவரை அனுப்பினார்:
“நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள். மண்குடத்தில்
தண்ணீர் சுமந்து கொண்டு ஓர் ஆள் உங்களுக்கு எதிரே வருவார்.
அவர் பின்னே செல்லுங்கள். அவர் எந்த வீட்டுக்குச்
செல்கிறாரோ, அந்த வீட்டின் உரிமையாளரிடம், “ ‘நான் என்
சீடர்களோடு பாஸ்கா விருந்து உண்பதற்கான என் அறை எங்கே?’
என்று போதகர் கேட்கச் சொன்னார் எனக் கூறுங்கள். அவர்
மேல்மாடியில் ஒரு பெரிய அறையைக் காட்டுவார். அது
தேவையான வசதிகளோடு தயார் நிலையில் இருக்கும். அங்கே
நமக்கு ஏற்பாடு செய்யுங்கள்.” சீடர்கள் சென்று, நகரை
அடைந்து, தங்களுக்கு அவர் சொல்லியவாறே அனைத்தையும் கண்டு
பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்தார்கள்.
மாலை வேளையானதும் இயேசு பன்னிருவரோடு வந்தார். அவர்கள்
பந்தியில் அமர்ந்து உண்டுகொண்டிருந்தபொழுது இயேசு,
“என்னோடு உண்ணும் உங்களுள் ஒருவன் என்னைக்
காட்டிக்கொடுப்பான் என உறுதியாக உங்களுக்குச்
சொல்கிறேன்” என்றார். அவர்கள் வருத்தமுற்று, ஒருவர்
பின் ஒருவராக “நானோ? நானோ?” என்று அவரிடம் கேட்கத் தொடங்கினார்கள்.
அதற்கு அவர், “அவன் பன்னிருவருள் ஒருவன்; என்னுடன்
பாத்திரத்தில் தொட்டு உண்பவன். மானிடமகன் தம்மைப் பற்றி
மறைநூலில் எழுதியுள்ளவாறே போகிறார். ஆனால் ஐயோ! அவரைக்
காட்டிக்கொடுக்கிறவனுக்குக் கேடு! அம்மனிதன் பிறவாதிருந்தால்
அவனுக்கு நலமாய் இருந்திருக்கும்” என்றார்.
அவர்கள் உண்டுகொண்டிருந்தபொழுது அவர் அப்பத்தை எடுத்து,
கடவுளைப் போற்றி அதைப் பிட்டு, அவர்களுக்குக்
கொடுத்து, “இதைப் பெற்றுக்கொள்ளுங்கள்; இது எனது உடல்”
என்றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்துக் கடவுளுக்கு
நன்றி செலுத்தி அவர்களுக்குக் கொடுத்தார். அனைவரும் அதிலிருந்து
பருகினர். அப்பொழுது அவர் அவர்களிடம், “இது எனது உடன்படிக்கையின்
இரத்தம்; பலருக்காகச் சிந்தப்படும் இரத்தம். இனிமேல்
இறையாட்சி வரும் அந்நாளில்தான் நான் திராட்சைப்பழ இரசத்தைக்
குடிப்பேன்; அதுவரை ஒருபோதும் குடிக்க மாட்டேன் என உறுதியாக
உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார். அவர்கள் புகழ்ப் பாடல்
பாடிவிட்டு ஒலிவ மலைக்குச் சென்றார்கள்.
இயேசு அவர்களிடம், “நீங்கள் அனைவரும் ஓடிப்போவீர்கள்.
ஏனெனில், ‘ஆயரை வெட்டுவேன்; அப்போது ஆடுகள் சிதறடிக்கப்படும்’
என்று மறைநூலில் எழுதியுள்ளது. ஆனால் நான் உயிருடன் எழுப்பப்பட்ட
பின்பு உங்களுக்குமுன்பே கலிலேயாவுக்குப் போவேன்” என்றார்.
பேதுரு அவரிடம், “எல்லாரும் ஓடிப்போய்விட்டாலும் நான்
அவ்வாறு செய்யமாட்டேன்” என்றார். இயேசு அவரிடம்,
“இன்றிரவில் சேவல் இரு முறை கூவுமுன் மும்முறை நீ என்னை
மறுதலிப்பாய் என உனக்குச் சொல்கிறேன்” என்றார். அவரோ,
“நான் உம்மோடு சேர்ந்து இறக்க வேண்டியிருந்தாலும் உம்மை
ஒருபோதும் மறுதலிக்க மாட்டேன்” என்று மிக அழுத்தமாகச்
சொன்னார். அப்படியே அவர்கள் அனைவரும் சொன்னார்கள்.
பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர்
கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம்,
“நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள்”
என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன்
கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும்
அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு
ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி
விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
சற்று அப்பால் சென்று தரையில் விழுந்து, முடியுமானால்
அந்த நேரம் தம்மைவிட்டு விலகுமாறு இறைவனிடம்
வேண்டினார். “அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும்.
இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும்
என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்”
என்று கூறினார். அதன்பின்பு அவர் வந்து அவர்கள் உறங்கிக்கொண்டிருப்பதைக்
கண்டு பேதுருவிடம், “சீமோனே, உறங்கிக்கொண்டா இருக்கிறாய்?
ஒரு மணி நேரம் விழித்திருக்க உனக்கு வலுவில்லையா? உங்கள்
மனம் ஆர்வம் உடையதுதான்; ஆனால் உடல் வலுவற்றது. எனவே
சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம்
வேண்டுங்கள்” என்றார்.
அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம்
வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக்
கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக்
கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே
அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து
அவர்களை நோக்கி, “இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா?
போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின்
கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள்,
போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான்”
என்று கூறினார்.
இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது பன்னிருவருள்
ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல்
அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும்,
தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன்,
“நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு. அவரைப்
பிடித்துக் காவலோடு கொண்டுபோங்கள்” என்று அவர்களுக்கு
அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக
அவரை அணுகி, “ரபி” எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான்.
அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.
அருகில் நின்றுகொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி,
தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத்
துண்டித்தார்.
இயேசு அவர்களைப் பார்த்து, “கள்வனைப் பிடிக்க வருவதுபோல
வாள்களோடும் தடிகளோடும் என்னைக் கைது செய்ய வந்தது ஏன்?
நான் நாள்தோறும் கோவிலில் கற்பித்துக்கொண்டு உங்களோடு
இருந்தேன். நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே! ஆனால் மறைநூலில்
எழுதப்பட்டுள்ளவை நிறைவேற வேண்டும்” என்றார். அப்பொழுது
சீடர் அனைவரும் அவரை விட்டுவிட்டுத் தப்பி ஓடினர். இளைஞர்
ஒருவர் தம் வெறும் உடம்பின் மீது ஒரு நார்ப்பட்டுத்
துணியைப் போர்த்திக்கொண்டு அவர் பின்னே சென்றார்; அவரைப்
பிடித்தார்கள். ஆனால் அவர் துணியை விட்டுவிட்டு ஆடையின்றித்
தப்பி ஓடினார்.
அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச்
சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும்
மறைநூல் அறிஞர்களும் ஒன்றுகூடினார்கள். பேதுரு
தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின்
வீட்டு உள்முற்றம்வரை வந்து காவலரோடு உட்கார்ந்து
நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்துகொண்டிருந்தார்.
தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு
மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள்.
ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை. பலர் அவருக்கு எதிராகப்
பொய்ச் சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று
முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, “மனித கையால் கட்டப்பட்ட
இந்தத் திருக்கோவிலை இடித்துவிட்டுக் கையால் கட்டப்படாத
வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று
இவன் சொல்லக் கேட்டோம்” என்று அவருக்கு எதிராகப்
பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று
ஒத்துவரவில்லை. அப்பொழுது தலைமைக் குரு எழுந்து அவர்களின்
நடுவே நின்று, “இவர்கள் உனக்கு எதிராகக் கூறும்
சான்றுக்கு மறுமொழி ஒன்றும் கூறமாட்டாயா?” என்று இயேசுவைக்
கேட்டார். ஆனால் அவர் பேசாதிருந்தார். மறுமொழி ஒன்றும்
அவர் கூறவில்லை. மீண்டும் தலைமைக் குரு,
“போற்றுதற்குரிய கடவுளின் மகனாகிய மெசியா நீதானோ?” என்று
அவரைக் கேட்டார்.
அதற்கு இயேசு, “நானே அவர்; மேலும் மானிடமகன் வல்லவராம்
கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பதையும் வானமேகங்கள்
சூழ வருவதையும் காண்பீர்கள்” என்றார். தலைமைக் குருவோ
தம் அங்கியைக் கிழித்துக்கொண்டு, “இன்னும் நமக்குச்
சான்றுகள் தேவையா? இவன் கடவுளைப் பழித்துரைத்ததைக்
கேட்டீர்களே; உங்களுக்கு என்ன தோன்றுகிறது?” என்று
கேட்க, அவர்கள் அனைவரும், “இவன் சாகவேண்டியவன்” என்று
தீர்மானித்தார்கள். பின்பு சிலர் அவர்மேல் துப்பவும்,
அவர் முகத்தை மூடி அவரைக் கையால் குத்தி,
“இறைவாக்கினனே, யார் எனச் சொல்” என்று கேட்கவும் தொடங்கினர்.
காவலரும் அவரைக் கன்னத்தில் அறைந்தனர்.
அப்பொழுது பேதுரு கீழே முற்றத்தில் இருக்க, தலைமைக்
குருவின் பணிப்பெண் ஒருவர் வந்து, பேதுரு
குளிர்காய்ந்துகொண்டிருக்கக் கண்டு அவரைக் கூர்ந்து
நோக்கி, “நீயும் இந்த நாசரேத்து இயேசுவோடு இருந்தவன்தானே”
என்றார். அவரோ, “நீர் சொல்வது என்னவென்று எனக்குத்
தெரியவில்லை, புரியவுமில்லை” என்று மறுதலித்து,
வெளிமுற்றத்திற்குச் சென்றார். அப்பொழுது சேவல்
கூவிற்று.
அந்தப் பணிப்பெண் அவரைக் கண்டு சூழஇருந்தவர்களிடம்,
“இவனும் அவர்களைச் சேர்ந்தவன்தான்” என்று மீண்டும் கூறத்
தொடங்கினார். அவர் மீண்டும் மறுதலித்தார். சற்று நேரத்திற்குப்பின்
சூழ இருந்தவர்களும், “உண்மையாகவே நீ அவர்களைச் சேர்ந்தவனே.
ஏனெனில் நீ ஒரு கலிலேயன்” என்று மீண்டும் பேதுருவிடம்
கூறினார்கள். அவரோ, “நீங்கள் குறிப்பிடுகின்ற இந்த மனிதனை
எனக்குத் தெரியாது” என்று சொல்லிச் சபிக்கவும் ஆணையிடவும்
தொடங்கினார். உடனே இரண்டாம் முறை சேவல் கூவிற்று. அப்பொழுது,
“சேவல் இருமுறை கூவுமுன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்”
என்று இயேசு தமக்குக் கூறிய சொற்களைப் பேதுரு
நினைவுகூர்ந்து மனம் உடைந்து அழுதார்.
பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச்
சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை
செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று, பிலாத்திடம்
ஒப்புவித்தனர். பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின்
அரசனா?” என்று கேட்க அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்”
என்று பதில் கூறினார். தலைமைக் குருக்கள் அவர்மீது பல
குற்றங்களைச் சுமத்தினார்கள். மீண்டும் பிலாத்து, “நீ
பதில் ஒன்றும் சொல்லமாட்டாயா? உன்மீது இத்தனை குற்றங்களைச்
சுமத்துகிறார்களே!” என்று அவரிடம் கேட்டான். இயேசுவோ
எப்பதிலும் கூறவில்லை. ஆகவே பிலாத்து வியப்புற்றான்.
விழாவின்போது மக்கள் கேட்டுக்கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப்
பிலாத்து விடுதலை செய்வதுண்டு. பரபா என்னும் கைதி ஒருவன்
இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு
பிடிபட்டவன் அவன். மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச்
செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை
வேண்டத் தொடங்கியது. அதற்குப் பிலாத்து, “யூதரின் அரசரை
உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று
விரும்புகிறீர்களா?” என்று கேட்டான். ஏனெனில் தலைமைக்
குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள்
என்று அவன் உணர்ந்திருந்தான். ஆனால் தலைமைக் குருக்கள்
தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக்
கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.
பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, “அப்படியானால்
நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான்
என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான், அவர்கள்,
“அவனைச் சிலுவையில் அறையும்” என்று மீண்டும் கத்தினார்கள்.
அதற்குப் பிலாத்து. “இவன் செய்த குற்றம் என்ன?” என்று
கேட்க, அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று இன்னும்
உரக்கக் கத்தினார்கள். ஆகவே பிலாத்து கூட்டத்தினரின்
விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை
செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு
ஒப்புவித்தான்.
பிறகு படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு
இழுத்துக்கொண்டுபோய்ப் படைப்பிரிவினர் அனைவரையும்
கூட்டினர்; அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு
முள்முடி பின்னி அவருக்குச் சூட்டி, “யூதரின் அரசே
வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்; மேலும்
கோலால் அவர் தலையில் அடித்து, அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு
அவரை வணங்கினர்; அவரை ஏளனம் செய்தபின் செந்நிற ஆடையைக்
கழற்றிவிட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச்
சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.
அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான
சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து
வந்து கொண்டிருந்தார். படை வீரர்கள் இயேசுவின்
சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.
அவர்கள் ‘மண்டை ஓட்டு இடம்’ எனப் பொருள்படும்
‘கொல்கொதா'வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்.
அங்கே அவருக்கு வெள்ளைப்போளம் கலந்த திராட்சை இரசத்தைக்
குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதைப் பெற்றுக்
கொள்ளவில்லை. பிறகு அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்;
குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய
ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். அவரைச்
சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி. அவரது மரண தண்டனைக்கான
காரணத்தை அறிவிக்க “யூதரின் அரசன்” என்று அவர்கள் எழுதி
வைத்தார்கள்; அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக
இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள். இவ்வாறு
‘கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்’ என்ற மறைநூல்
வாக்கு நிறைவேறிற்று.
அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “ஆகா,
திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே,
சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்” என்று
அவரைப் பழித்துரைத்தார்கள். அவ்வாறே தலைமைக் குருக்கள்
மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து,
“பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை”
என்று தங்களிடையே பேசிக் கொண்டார்கள். அவர்கள்,
“இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து
இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்” என்றார்கள்.
அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.
நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று.
பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது. பிற்பகல்
மூன்று மணிக்கு இயேசு, “எலோயி, எலோயி, லெமா சபக்தானி?”
என்று உரக்கக் கத்தினார். “என் இறைவா, என் இறைவா, ஏன்
என்னைக் கைவிட்டீர்?” என்பது அதற்குப் பொருள். சூழ
நின்றுகொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக் கேட்டு, “இதோ!
எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர். அப்பொழுது அவர்களுள்
ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த
திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி,
அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள்,
எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார்.
இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.
( இங்கு முழந்தாளிட்டு, சிறிது நேரம் மௌனமாக இருக்கவும்.
)
அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக்
கிழிந்தது. அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர்
தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு,
“இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்
கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன
யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும்
இருந்தனர். இயேசு கலிலேயாவில் இருந்தபோது அவர்கள் அவரைப்
பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள். அவருடன்
எருசலேமுக்கு வந்திருந்த வேறு பல பெண்களும் அங்கே இருந்தார்கள்.
இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வு நாளுக்கு
முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால், அரிமத்தியா ஊரைச்
சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய்
இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச்
சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக்
காத்திருந்தவர். ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக்
குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை
அழைத்து, “அவன் இதற்குள் இறந்துவிட்டானா?” என்று
கேட்டான். நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும்
உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான். யோசேப்பு மெல்லிய
துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித்
துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில்
கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி
வைத்தார். அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும்
யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப்
பார்த்துக்கொண்டிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.