maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                     இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பம் விழா


முதல் வாசகம்
 

அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.

சாமுவேல் முதல் நூலிலிருந்து வாசகம் 1: 20-22, 24-28

உரிய காலத்தில் அன்னா கருவுற்று ஒரு மகனைப் பெற்றெடுத்தார். “நான் அவனை ஆண்டவரிடமிருந்து கேட்டேன்” என்று சொல்லி, அவர் அவனுக்குச் ‘சாமுவேல்’ என்று பெயரிட்டார்.

எல்கானாவும் அவர் வீட்டார் அனைவரும் ஆண்டவருக்குத் தங்கள் ஆண்டுப் பலியையும் பொருத்தனையையும் செலுத்தச் சென்றார்கள். ஆனால், அன்னா செல்லவில்லை. அவர் தம் கணவரிடம், “பையன் பால்குடி மறந்ததும் அவனை எடுத்துச் செல்வேன். அவன் ஆண்டவர் திருமுன் சென்று என்றும் அங்கே தங்கியிருப்பான்” என்று சொன்னார்.

அவன் பால்குடி மறந்ததும், அன்னா அவனைத் தூக்கிக்கொண்டு மூன்று காளை, இருபது படி அளவுள்ள ஒரு மரக்கால் மாவு, ஒரு தோல்பை திராட்சை இரசம் ஆகியவற்றுடன் சீலோவிலிருந்து ஆண்டவரின் இல்லத்திற்கு வந்தார். அவன் இன்னும் சிறு பையனாகவே இருந்தான். அவர்கள் காளையைப் பலியிட்ட பின், பையனை ஏலியிடம் கொண்டு வந்தார்கள். பின் அவர் கூறியது: “என் தலைவரே! உம் மீது ஆணை! என் தலைவரே! உம்முன் நின்று ஆண்டவரிடம் வேண்டிக்கொண்டிருந்த பெண் நானே. இப்பையனுக்காகவே நான் வேண்டிக்கொண்டேன். நான் ஆண்டவரிடம் விண்ணப்பித்த என் வேண்டுகோளை அவர் கேட்டருளினார். ஆகவே நான் அவனை ஆண்டவருக்கு அர்ப்பணிக்கிறேன். அவன் தன் வாழ்நாள் அனைத்தும் ஆண்டவருக்கே அர்ப்பணிக்கப்பட்டவன்.” அங்கே அவர்கள் ஆண்டவரைத் தொழுதார்கள்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 84: 1-2. 4-5. 8-9 (பல்லவி: 4) Mp3

பல்லவி: ஆண்டவரே உமது இல்லத்தில் தங்கியிருப்போர் பேறுபெற்றோர்.

1
படைகளின் ஆண்டவரே! உமது உறைவிடம் எத்துணை அருமையானது!
2
என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றும் உள்ள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. - பல்லவி

 
4
உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறுபெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
5
உம்மிடமிருந்து வலிமை பெற்ற மானிடர் பேறுபெற்றோர்; அவர்களது உள்ளம் சீயோனுக்குச் செல்லும் நெடுஞ்சாலைகளை நோக்கியே உள்ளது. - பல்லவி

 
8
படைகளின் ஆண்டவரே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்! யாக்கோபின் கடவுளே, எனக்குச் செவிசாய்த்தருளும்!
9
எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம்.

திருத்தூதர் யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-2, 21-24

அன்பார்ந்தவர்களே,

நம் தந்தை நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்று பாருங்கள். நாம் கடவுளின் மக்களென அழைக்கப்படுகிறோம்; கடவுளின் மக்களாகவே இருக்கிறோம். உலகம் அவரை அறிந்துகொள்ளாததால் தான் நம்மையும் அறிந்துகொள்ளவில்லை. என் அன்பார்ந்தவர்களே, இப்போது நாம் கடவுளின் பிள்ளைகளாய் இருக்கிறோம். இனி எத்தன்மையராய் இருப்போம் என்பது இன்னும் வெளிப்படவில்லை. ஆனால் அவர் தோன்றும்போது நாமும் அவரைப்போல் இருப்போம்; ஏனெனில் அவர் இருப்பதுபோல் அவரைக் காண்போம்.

அன்பார்ந்தவர்களே, நம் மனச்சான்று நாம் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதிருந்தால் நாம் கடவுள் திருமுன் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்க முடியும். அவரிடம் நாம் எதைக் கேட்டாலும் பெற்றுக் கொள்வோம்; ஏனெனில் அவர் கட்டளைகளைக் கடைப்பிடிக்கிறோம்; அவர் திருமுன் அவருக்கு உகந்தவற்றையே செய்து வருகிறோம். கடவுள் நமக்குக் கொடுத்த கட்டளைப்படி, அவருடைய மகன் இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும். இதுவே அவரது கட்டளை. கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர் அவரோடு இணைந்திருக்கிறார்; கடவுளும் அவரோடு இணைந்திருக்கிறார். கடவுள் நம்மோடு இணைந்திருக்கிறார் என்பதை அவர் நமக்கு அருளிய தூய ஆவியால் அறிந்துகொள்கிறோம்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

திப 16: 14 காண்க

அல்லேலூயா, அல்லேலூயா! உம் திருமகனின் வார்த்தைகளை மனத்தில் இருத்தும்படி, ஆண்டவரே, எங்கள் இதயத்தைத் திறந்தருளும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

போதகர்கள் நடுவில் அமர்ந்திருந்த இயேசுவை அவருடைய பெற்றோர் கண்டுகொள்கின்றனர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-52

ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.

மூன்று நாள்களுக்குப் பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக்கொண்டும் இருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்துகொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம், “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை.

பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார். இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.


 


இயேசு, மரி, யோசேப்பின் திருக்குடும்பம்


I சாமுவேல் 1: 20-22, 24-28
II 1 யோவான் 3: 1-2, 21-24
III லூக்கா 2: 41-52

ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்!


நிகழ்வு

மன்னரைப் பற்றி அவதூறாகப் பேசிவிட்டார் என்பதற்காக ஒரு பெண்மணி, மன்னருக்கு முன்பாக இழுத்துக்கொண்டு வரப்பட்டார். மன்னர் அவரை விசாரித்தபோது, அவர் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசியது உண்மை எனத் தெரிய வந்தது. இதனால் மன்னர் அவருக்கு மரண தண்டனை விதித்தார்.

இச்செய்தியை அறிந்த அந்தப் பெண்மணியின் கணவன் மன்னரிடம் விரைந்து வந்து, “மன்னா! நீர் என் மனைவிக்குக் கொடுக்கப்போகும் தண்டனையை எனக்குக் கொடும்; நான் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன்” என்றான். இதைக்கேட்டுப் பெரிதும் வியந்த மன்னன், ‘தன் மனைவிக்காகத் தன் உயிரையே தர முன்வந்திருக்கின்ற இந்தக் கணவரைப் பார்ப்பதற்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது. இவர் சாகக்கூடாது; தன் மனைவியோடு இவர் சேர்ந்து வாழவேண்டும்’ என்று, அந்தப் பெண்மணி செய்த தவற்றை மன்னித்து, அவரை விடுதலை செய்து அனுப்பினார்.

விடுதலைக்குப் பின் கணவன், மனைவி இருவரும் தங்களுடைய வீட்டிற்குத் திரும்பி வந்துகொண்டிருந்தனர். வழியில், கணவன் தன் மனைவியிடம், “மன்னர் உன்னுடைய குற்றத்தை மன்னித்து, உன்னை விடுதலை செய்தபோது, அவருடைய முகத்தை நீ பார்த்தாயா, அது எத்துணை அழகாக இருந்தது தெரியுமா?” என்றான். அதற்கு அவனுடைய மனைவி, “நான் மன்னருடைய முகத்தையெல்லாம் பார்க்கவில்லை. எனக்காக உயிரையே தர முன்வந்த உங்களுடைய முகத்தை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தேன்” என்றாள். தன் மனைவியிடமிருந்து இப்படியொரு பதிலைக்கேட்டுப் பூரித்துப்போன கணவன், அவளை வாரி அணைத்துக்கொண்டான்.

ஆம், தன் மனைவிக்காக உயிரையே கொடுக்கத் துணிந்த கணவன், தன் கணவனை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்த மனைவி... இப்படி ஒவ்வொரு கணவனும் மனைவியும் வாழ்கிறபோது, அந்தக் குடும்பம் திருக்குடும்பமாக இருக்கும் என்பதில் எந்தவோர் ஐயமுமில்லை. இன்று நாம் இயேசு, மரி, யோசேப்பின் திருக்குடும்பப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பொன்னான தருணத்தில், இப்பெருவிழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.

அன்பே அனைத்தையும் நிறைவுபெறச் செய்யும்

எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் என்ற அருளடையாளத்தின் மூலம் ஒன்றிணைகிறார்கள். இவ்வாறு திருமணத்தின் மூலம் கணவன் மனைவியாக ஒன்றிணைவோரின் இல்லற வாழ்க்கை சிறக்கவேண்டும் எனில், அதற்கு அன்பு என்ற ஒன்று தேவையானதாக இருக்கின்றது. இது குறித்துப் பவுல் கொலோசையருக்கு எழுதிய திருமுகத்தில், “அனைத்திற்கும் மேலாக, அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்” (கொலோ 3:14) என்று கூறுவார். இதன்மூலம் திருமண வாழ்வில் ஒன்றிணைந்திருக்கும் ஆணும் பெண்ணும் அன்பையே அடிப்படையாகக் கொண்டு வாழ்தல் இன்றியமையாததாக இருக்கின்றது.

யோவான் எழுதிய முதல் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்டிருக்கும் இன்றைய முதல் வாசகத்தில் யோவான், “இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு, ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும்” என்றார். யோவான் விடுக்கும் இந்த அழைப்பானது எல்லாருக்கும் பொருந்தும் என்றாலும், திருமண உறவில் கணவன் மனைவியாக ஒன்றிணைந்திருக்கும் ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இது நன்றாகப் பொருந்தும். இங்கே இன்னொரு செய்தியையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்த வேண்டும்” என்று சொன்ன யோவான், அதற்கு முன்னதாகச் சொல்லும் “இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொண்டு” என்ற வார்த்தைகளைத்தான்.

ஆம், ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டிய கணவனும் மனைவியும், அதற்கு முன்னதாக, இயேசு கிறிஸ்துவிடம் நம்பிக்கை கொள்ளவேண்டும். அந்த நம்பிக்கையே, இருவரது திருமண அன்பை நிலைத்திருக்கச் செய்யும். மேலும், இயேசு எப்படி அவரது மறையுடலாம் திருஅவை மிகுதியாக அன்பு செய்தாரோ, அப்படி இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டு வாழும் கணவன் மனைவி ஒருவர் மற்றவரை மிகுதியாக அன்புசெய்வர். அந்த அன்பிற்கு அவர்கள் இயேசுவின்மீது கொள்ளும் நம்பிக்கை தூண்டுகோலாக இருக்கும்.

ஆண்டவர் கொடுத்ததை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும்

ஒரு குடும்பம் சிறந்ததாய்த் தளைத்தோங்க வேண்டுமெனில், அக்குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புசெலுத்துவது இன்றிமையாதது. அத்தோடு இன்னொன்றும் அக்குடும்பத்திற்கு இன்றியமையாததாக இருக்கின்றது. அதுதான் பெற்றோர் தங்களது பிள்ளைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவர்களை ஆண்டவருக்கு ஏற்புடையவர்களாக வளர்க்க வேண்டும் என்பதாகும்.

முதல் வாசகத்தில், குழந்தை இல்லாமல் மிகவும் துன்பப்பட்ட அன்னா, மனம் கசந்து அழுது ஆண்டவரிடம் வேண்டிக் கொண்டதன் பயனாக, ஆண்டவர் தனக்குக் கொடுத்த குழந்தையை (சாமுவேல்) அவருக்கே அர்ப்பணிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். இதன்மூலம் அன்னா, ஆண்டவருக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றி, அவருக்கு நன்றியுள்ளவராய் இருந்தது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளை ஆண்டவருக்கு அர்ப்பணித்து வாழ வேண்டும் என்ற உயர்ந்த நெறியைக் கற்பிப்பவராக இருக்கின்றார்.

நற்செய்தியில், பன்னிரண்டு வயதான இயேசு தன் பெற்றோரோடு எருசலேம் திருக்கோயிலுக்குச் செல்வதையும், அங்கே அவர் காணாமல் போவதையும், மூன்று நாள்களுக்குப் பின் கண்டுபிடிக்கப்படுவதையும், அப்போது அவர் அவர்களிடம், “நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்று சொல்வதையும் குறித்து வாசிக்கின்றோம். பெற்றோர் தங்கள் குழந்தைகளை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்ற கருத்தினை இன்றைய முதல்வாசகம் வலியுறுத்திக் கூறுகின்றது எனில், நற்செய்தியில் இயேசு ஒரு படி மேலே சென்று, தந்தையின் அலுவல்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அவரது திருவுளம் சிறப்புறப் செய்து, ஒவ்வொருவரும் கடவுளின் திருவுளத்தைச் சிறப்புறச் செய்யவேண்டும் என்கிற செய்தியை எடுத்துக்கூறுகின்றார்.

ஆதலால், ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை; ஏன், தங்களை ஆண்டவருக்கு அர்ப்பணித்து, அவரது திருவுளம் சிறப்புறச் செய்யவேண்டும்.

ஆண்டவருக்கு அர்ப்பணித்துக் கொண்டோருக்குக் கிடைக்கும் ஆசி:

கணவன் மனைவி இருவரும், இயேசு கிறிஸ்துவின்மீது நம்பிக்கைகொண்டு ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்தவேண்டும் என்றும், அவர்கள் ஆண்டவர் தங்களுக்கு அளிக்கும் குழந்தையை அவருக்கே அர்ப்பணித்து வாழவேண்டும் என்றும் சிந்தித்தோம். இத்தகையோருக்கு எத்தகைய ஆசி கிடைக்கும் என்பதை இன்றைய இரண்டாம் பதிவு செய்கின்றது. இவர்கள் பெறுகின்ற முதலாவது ஆசி. கடவுளின் மக்களாய் அவரைப் போன்று இவர்கள் இருப்பார்கள் என்பதாகும். இரண்டாவது ஆசி, இவர்கள் எதைக் கேட்டாலும் பெற்றுக்கொள்வார்கள் என்பதாகும். மூன்றாவது ஆசி, இவர்கள் கடவுளோடு ஒன்றித்திருப்பார்கள்; கடவுளும் இவர்களோடு ஒன்றித்திருப்பார் என்பதாகும்.

ஆம், எந்தக் குடும்பத்தில் உள்ளவர்கள் மற்றவர்மீது அன்பு செலுத்தி, ஆண்டவருக்குத் தங்களை அர்ப்பணித்து, அவரோடு ஒன்றித்திருக்கின்றார்களோ, அந்தகக் குடும்பத்தில் உள்ளவர்கள் ஆண்டவரின் மக்களாய் இருந்து, அவரோடு ஒன்றித்திருப்பார்கள்; அதனால் அவர்களுடைய வேண்டுதல் கேட்கப்படும் நாம் ஒருவர் மற்றவரை அன்பு செய்து, ஆண்டவருக்கு நம்மை அர்ப்பணித்து, அவரோடு ஒன்றித்திருக்கின்றோமா? சிந்திப்போம்.

சிந்தனை

‘ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் ஒரு மறைப்பணியாளரைப் போன்றது. ஏனெனில், மறைப்பணியாளர் எப்படிக் கடவுளின் பேரன்பை இவ்வுலகிற்கு அறிவிக்கின்றாரோ, அப்படி ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் கடவுளின் பேரன்பை இவ்வுலகிற்கு அறிவிக்க வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். ஆகையால், நாம் ஒவ்வொருவரும் நம்முடைய குடும்பங்களை கடவுளின் அன்பினை அறிவிக்கும் குடும்பங்களாகக் கட்டியெழுப்பி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.




 

 


 
Free Blog Widget
Stats Counter
hit counter