maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                   இயேசு, மரியா, யோசேப்பின் திருக்குடும்பவிழா

முதல் வாசகம்

உனக்குப் பிறப்பவனே உனக்குப்பின் உரிமையாளன் ஆவான்.

தொடக்க நூலிலிருந்து வாசகம் 15: 1-6; 21: 1-3

ஆண்டவரின் வாக்கு ஆபிராமுக்கு ஒரு காட்சி வழியாக வந்து அறிவித்தது: “ஆபிராம்! அஞ்சாதே. நான் உனக்குக் கேடயமாக இருப்பேன். உனக்குப் பெரும் கைம்மாறு கிடைக்கும்."

அப்பொழுது ஆபிராம், “என் தலைவராகிய ஆண்டவரே, எனக்கு என்னதான் தருவீர்? எனக்கோ குழந்தையே இல்லை! தமஸ்கு நகர் எலியேசர்தான் எனக்குப் பின் என் இல்லத்திற்கு உரிமை மகன் ஆகப்போகிறான்! நீர் எனக்குக் குழந்தை ஒன்றும் தராததால் என் வீட்டு அடிமை மகன் எனக்குப் பின் உரிமையாளன் ஆகப்போகிறான்” என்றார். அதற்கு மறுமொழியாக, “இவன் உனக்குப் பின் உரிமையாளன் ஆகமாட்டான். ஆனால், உனக்குப் பிறப்பவனே உனக்குப் பின் உரிமையாளன் ஆவான்” என்று ஆபிராமுக்கு ஆண்டவரின் வாக்கு அருளப்பட்டது. அப்பொழுது ஆண்டவர் ஆபிராமை வெளியே அழைத்து வந்து, “வானத்தை நிமிர்ந்து பார். முடியுமானால், விண்மீன்களை எண்ணிப்பார். இவற்றைப் போலவே உன் வழிமரபினரும் இருப்பர்” என்றார். ஆபிராம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டார். அதை ஆண்டவர் அவருக்கு நீதியாகக் கருதினார்.

ஆண்டவர் தாம் கூறியிருந்தபடி சாராவைக் கண்ணோக்கினார். ஆண்டவர் தம் வாக்குறுதிக்கேற்ப சாராவுக்குச் செய்தருளினார். கடவுள் வாக்களித்தபடி, குறிப்பிட்ட அதே காலத்தில் சாரா கருத்தாங்கி, ஆபிரகாமுக்கு அவரது முதிர்ந்த வயதில் ஒரு மகனைப் பெற்றெடுத்தார். ஆபிரகாம் தமக்குப் பிறந்த, சாரா தமக்குப் பெற்றுக்கொடுத்த, மகனுக்கு ‘ஈசாக்கு’ என்று பெயரிட்டார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

பதிலுரைப் பாடல்

திபா 105: 1-2. 3-4. 5-6. 8-9 . (பல்லவி: 8a) Mp3

பல்லவி: ஆண்டவர் தம் உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொண்டுள்ளார்.

1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்! அவர்தம் பெயரைச் சொல்லி வழிபடுங்கள்! அவர்தம் செயல்களை மக்களினங்கள் அறியச் செய்யுங்கள்.
2
அவருக்குப் பாடல் பாடுங்கள்; அவரைப் புகழ்ந்தேத்துங்கள்! அவர்தம் வியத்தகு செயல்கள் அனைத்தையும் எடுத்துரையுங்கள்! - பல்லவி

 
3
அவர்தம் திருப்பெயரை மாட்சிப்படுத்துங்கள்; ஆண்டவரைத் தேடுவோரின் இதயம் அக்களிப்பதாக!
4
ஆண்டவரையும் அவரது ஆற்றலையும் தேடுங்கள்! அவரது திருமுகத்தை இடையறாது நாடுங்கள்! - பல்லவி

 
5
அவர் செய்த வியத்தகு செயல்களை நினைவு கூருங்கள்! அவர்தம் அருஞ்செயல்களையும், அவரது வாய் மொழிந்த நீதித் தீர்ப்புகளையும் நினைவில் கொள்ளுங்கள்.
6
அவரின் ஊழியராம் ஆபிரகாமின் வழிமரபே! அவர் தேர்ந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே! - பல்லவி

 
8
அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவில் கொள்கின்றார்; ஆயிரம் தலைமுறைக்கென தாம் அளித்த வாக்குறுதியை நினைவுகூர்கின்றார்.
9
ஆபிரகாமுடன் தாம் செய்துகொண்ட உடன்படிக்கையையும் ஈசாக்குக்குத் தாம் ஆணையிட்டுக் கூறியதையும் அவர் நினைவில் கொண்டுள்ளார். - பல்லவி

 

இரண்டாம் வாசகம்

ஆபிரகாம், சாரா, ஈசாக்கு ஆகியோரின் நம்பிக்கை.

எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து வாசகம் 11: 8, 11-12, 17-19

ஆபிரகாம் தாம் அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, உரிமைப்பேறாகப் பெறவிருந்த இடத்திற்குச் சென்றதும் நம்பிக்கையினால்தான். தாம் எங்கே போகவேண்டும் என்று தெரியாதிருந்தும் அவர் புறப்பட்டுச் சென்றார்.

ஆபிரகாம் வயது முதியவராயும் சாரா கருவுற இயலாதவராயும் இருந்தபோதிலும், அவர் ஒரு தந்தையாவதற்கான ஆற்றல் பெற்றதும் நம்பிக்கையினால்தான். ஏனெனில் வாக்களித்தவர் நம்பிக்கைக்குரியவர் என அவர் கருதினார். இவ்வாறு, உயிரற்றவர் போலிருந்த இந்த ஒருவரிட மிருந்து வானத்திலுள்ள திரளான விண்மீன்களைப் போலவும் கடற்கரையிலுள்ள எண்ணிறந்த மணலைப் போலவும் கணக்கற்ற மக்கள் பிறந்தனர்.

ஆபிரகாம் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியிடத் துணிந்தது நம்பிக்கையினால்தான். “ஈசாக்கின் மூலமே, உன் வழிமரபு விளங்கும்” என்ற வாக்குறுதியை அவர் பெற்றிருந்தபோதிலும், அவர் தம் ஒரே மகனைப் பலியிட முன் வந்தார். ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக்கொண்டார். பின்பு நடக்க இருந்ததற்கு இது ஓர் அறிகுறி.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

எபி 1: 1-2

அல்லேலூயா, அல்லேலூயா! பலமுறை, பலவகைகளில் முற்காலத்தில் இறைவாக்கினர் வழியாக நம் மூதாதையரிடம் பேசிய கடவுள், இவ்விறுதி நாள்களில் தம் மகன் வழியாக நம்மிடம் பேசியுள்ளார். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது, குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள். ஏனெனில், “ஆண் தலைப்பேறு அனைத்தும் ஆண்டவருக்கு அர்ப்பணிக்கப்படும்” என்று அவருடைய திருச்சட்டத்தில் எழுதியுள்ளது. அச்சட்டத்தில் கூறியுள்ளவாறு இரு மாடப்புறாக்கள் அல்லது இரு புறாக்குஞ்சுகளை அவர்கள் பலியாகக் கொடுக்க வேண்டியிருந்தது.

அப்போது எருசலேமில் சிமியோன் என்னும் ஒருவர் இருந்தார். அவர் நேர்மையானவர்; இறைப்பற்றுக் கொண்டவர்; இஸ்ரயேலுக்கு வாக்களிக்கப்பட்ட ஆறுதலை எதிர்பார்த்திருந்தவர்; தூய ஆவியை அவர் பெற்றிருந்தார். “ஆண்டவருடைய மெசியாவைக் காணுமுன் அவர் சாகப்போவதில்லை” என்று தூய ஆவியால் உணர்த்தப்பட்டிருந்தார். அந்த ஆவியின் தூண்டுதலால் அவர் கோவிலுக்கு வந்திருந்தார். திருச்சட்ட வழக்கத்திற்கு ஏற்பச் செய்ய வேண்டியதைக் குழந்தை இயேசுவுக்குச் செய்து முடிக்கப் பெற்றோர் அதனை உள்ளே கொண்டுவந்தபோது, சிமியோன் குழந்தையைக் கையில் ஏந்திக் கடவுளைப் போற்றி,

“ஆண்டவரே, உமது சொற்படி உம் அடியான் என்னை இப்போது அமைதியுடன் போகச் செய்கிறீர். ஏனெனில் மக்கள் அனைவரும் காணுமாறு நீர் ஏற்பாடு செய்துள்ள உமது மீட்பை என் கண்கள் கண்டுகொண்டன. இம்மீட்பே பிற இனத்தாருக்கு வெளிப்பாடு அருளும் ஒளி; இதுவே உம் மக்களாகிய இஸ்ரயேலுக்குப் பெருமை” என்றார்.

குழந்தையைக் குறித்துக் கூறியவை பற்றி அதன் தாயும் தந்தையும் வியப்புற்றனர். சிமியோன் அவர்களுக்கு ஆசிகூறி, அதன் தாயாகிய மரியாவை நோக்கி, “இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். இவ்வாறு பலருடைய மறைவான எண்ணங்கள் வெளிப்படும். உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” என்றார்.

ஆசேர் குலத்தைச் சேர்ந்த பானுவேலின் மகளாகிய அன்னா என்னும் இறைவாக்கினர் ஒருவர் இருந்தார். அவர் வயது முதிர்ந்தவர்; மணமாகி ஏழு ஆண்டுகள் கணவரோடு வாழ்ந்தபின் கைம்பெண் ஆனவர்; அவருக்கு வயது எண்பத்து நான்கு. அவர் கோவிலை விட்டு நீங்காமல் நோன்பிருந்து மன்றாடி அல்லும் பகலும் திருப்பணி செய்துவந்தார். அவரும் அந்நேரத்தில் அங்கு வந்து கடவுளைப் புகழ்ந்து எருசலேமின் மீட்புக்காகக் காத்திருந்த எல்லாரிடமும் அக்குழந்தையைப்பற்றிப் பேசினார்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.


அல்லது குறுகிய வாசகம்

பாலன் வளர்ந்து ஞானம் நிறைந்தவராய் இருந்தார்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 22, 39-40

மோசேயின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணிக்க அவர்கள் எருசலேமுக்குக் கொண்டு சென்றார்கள்.

ஆண்டவருடைய திருச்சட்டப்படி எல்லாவற்றையும் செய்து முடித்த பின்பு அவர்கள் கலிலேயாவிலுள்ள தங்கள் ஊராகிய நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார்கள். குழந்தையும் வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்தது.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

 

 

 

I தொடக்க நூல் 15: 1-6; 21: 1-3
II எபிரேயர் 11: 8, 11-12, 17-19
III லூக்கா 2: 22-40

ஆண்டவரில் நம்பிக்கை கொண்ட குடும்பம் அசைவுறாது

 

நிகழ்வு

நமது இந்தியத் திருநாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவராக இருந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் சிறுவனாக இருந்தபொழுது நடந்த நிகழ்வு இது. ஒருநாள் மாலைவேளையில், வேலையை முடித்துக்கொண்டு மிகவும் களைப்போடு வீட்டிற்குத் திரும்பிய கலாமின் தாயார் ஆஷியம்மா, தன்னுடைய கணவர் ஜெய்னுலாய்தீனும் பிள்ளைகளும் மிகவும் பசியோடு இருப்பதைப் பார்த்துவிட்டு, அவரச அவரசமாக அவர்களுக்கு ரொட்டி சுட்டித் தந்தார். தான் சுட்ட ரொட்டிகளை ஆஷியம்மா முதலில் தன் கணவருக்குத் தான் வைத்தார்.

அவர் சுட்ட ரொட்டிகள் மிகவும் கருகிப் போயிருந்தன. ஆனாலும் கலாமின் தந்தை அவற்றைப் பற்றி எதுவும் சொல்லாமல், சுவைத்துச் சாப்பிட்டார். கலாம் இதைப் பார்த்துக்கொண்டே இருந்தார். இதற்கு நடுவில் தான் சுட்டுத் தந்த ரொட்டிகள் கருகிப் போகியிருப்பதை அறிந்த ஆஷியம்மா தன்னுடைய கணவரிடத்தில் வந்து, “தெரியாமல் நடந்துவிட்டது; மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார். ஜெய்னுலாய்தீன் அதற்கு, “பரவாயில்லை; எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்” என்றார். அவர் இவ்வாறு சொன்னதைக் சிறுவன் கலாம் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பின்னர் கலாமும் அவருடைய உடன்பிறப்புகளும் தங்களது தாயார் சுட்டுத் தந்த ரொட்டிகளைச் சாப்பிட்டுவிட்டுத் தூங்கப் போனார்கள். தூங்கும்பொழுது எப்பொழுதும் தன் தந்தையருகே தூங்கும் கலாம் அவரிடம், “அப்பா! உங்களுக்குக் கருகிய ரொட்டி பிடிக்காது என்று எனக்கு நன்றாகத் தெரியும். பிறகு எதற்கு அம்மா கருகிய ரொட்டிகளைச் சுட்டித் தந்தபொழுது, ‘எனக்குக் கருகிய ரொட்டிகள்தான் மிகவும் பிடிக்கும்’ என்று சொன்னீர்கள்” என்றார். “மகனே கலாம்! உன் அம்மா பகல் முழுவதும் வேலை பார்த்துவிட்டு மிகவும் களைப்போடு வந்து உணவு தயாரிக்கின்றார். அப்படியிருக்கும்பொழுது, அவர் தயாரித்துத் தரும் உணவில், எப்போதாவது கருகிப்போய் வரும் ரொட்டியைப் பெரிதுபடுத்துவதா..? மேலும் கருகிப்போய் வரும் ரொட்டி என்னைக் காயப்படுத்தாது; ஆனால் நான் பயன்படுத்தும் கடினமான வார்த்தைகள் உன் அம்மாவைக் காயப்படுத்தும் அல்லவா! அதனால்தான் நான் உன் அம்மாவிடம் அவ்வாறு சொன்னேன்” என்றார் கலாமின் தந்தை.

ஆம், குடும்பமாக வாழும் நாம், குடும்பத்தில் இருக்கின்ற ஒருவர் செய்யும் தவற்றைப் பெரிதுபடுத்தாமல், அவரைப் பொறுத்துக்கொண்டு, மன்னித்து (கொலோ 3: 13) ஏற்றுக்கொண்டு வாழ்கின்றபோது, அதைவிட மகிழ்ச்சியான செயல் வேறெதுவும் இல்லை. இன்று நாம் திருக்குடும்பத் திருநாளைக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஆண்டின் இறுதி ஞாயிறான இன்று நாம் கொண்டுகின்ற இத்திருவிழா நமக்கு என்ன செய்தியைத் தருகின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.

வீட்டுக்கு வீடு வாசற்படி!

ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனை உண்டு என்பதை உணர்த்துவதற்காக, ‘வீட்டுக்கு வீடு வாசற்படி’ என்ற சொல்வழக்கைப் பயன்படுத்துவது உண்டு. ஆம், நன்றாகச் சிந்தித்துப் பார்த்தால், இந்த உலகத்தில் பிரச்சனை இல்லாத குடும்பமே கிடையாது என்று சொல்லிவிடலாம். இதற்கு நம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் விளங்கிய ஆபிரகாமின் குடும்பமும் திருக்குடும்பமும் கூட விதிவிலக்கில்லை.

தொடக்க நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தின் முதல் பகுதியில் (தொநூ 15: 1-6), ஆண்டவர் சொல் கேட்டு, தன்னுடைய சொந்த ஊரையும் உறவுகளையும் விட்டுவிட்டு ஆண்டவர் காட்டிய இடத்திற்குப் போன ஆபிரகாம், “எனக்குக் குழந்தை இல்லையே!” என்று சொல்வதை நாம் வாசிக்கின்றோம். குழந்தைப் பேறு என்பது ஆண்டவர் ஒருவருக்கு அளிக்கின்ற மிகப்பெரிய பேறு. அது ஆபிரகாமிற்கு அவருடைய தொண்ணூற்று ஒன்பதாவது வயதுவரை இல்லாமல் இருந்ததால், அது அவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாகவே இருந்திருக்கும்.

நற்செய்தியில், குழந்தை இயேசுவை அதன் தாய் மரியாவும், அவருடைய கணவர் யோசேப்பும் கோயிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க எடுத்துச் சொல்லும்பொழுது, அதைத் தன் கையில் ஏந்தும் சிமியோன், “இக்குழந்தை ...எதிர்க்கப்படும் அடையாளமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு, அவர் மரியாவை நோக்கி, “உமது உள்ளத்தையும் ஓர் வாள் ஊடுருவிப் பாயும்” என்பார். இது இயேசு, மரியா, அவர்களோடு சேர்ந்து யோசேப்பும் கடவுளின் மீட்புத் திட்டத்தின் பொருட்டு அடைய இருந்த துன்பங்களை முன்னறிவிப்பதாக இருக்கின்றது. இதை வைத்துப் பார்க்கின்றபொழுது திருக்குடும்பத்திலும்கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இல்லாமல் இல்லை என்று சொல்லலாம்.

ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்தல்

நம்பிக்கைக்குக் எடுத்துக்காட்டாக விளங்கிய ஆபிரகாமின் குடும்பத்திலும், இயேசு, மரியா, யோசேப்பு இருந்த திருக்குடும்பத்திலும் கூட பிரச்சனைகளும் துன்பங்களும் இருந்தன என்று பார்த்தோம். இவர்களுடைய குடும்பத்தில் பிரச்சனை இருந்தாலும், ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்ந்தார்கள். ஆபிரகாம் தனக்குக் குழந்தை இல்லையே என்று வருந்தாமல், “உன்னை நான் பெரிய இனமாக்குவேன்...” (தொநூ 12: 2) என்று ஆண்டவர் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கைகொண்டு வாழ்ந்தார். இதனால் அவர் நம்பியது போன்றே, அவர் வழியாகப் பெரிய இனம் தோன்றியது. இதைத்தான் இன்றைய இரண்டாம் வாசகத்தில் எபிரேயர்த் திருமுகத்தின் ஆசிரியர், “நம்பிக்கையால்தான்” என்று கூறுகின்றார்.

திருக்குடும்பத்திலிருந்த இயேசு, மரியா, யோசேப்பும்கூட தங்களுடைய வாழ்வில் பல்வேறு துன்பங்கள், பிரச்சனைகள் வந்தபொழுதும் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு, அவருடைய திருவுளத்தின்படி நடந்து அசைவுராமல், பதற்றமடையாமல் (எசா 28: 16) இருந்தார்கள்.

தன்மீது கொண்டோரின் குடும்பங்களை ஆசிகளால் நிரப்பும் ஆண்டவர்

ஆபிரகாமின் குடும்பத்திலும், திருக்குடும்பத்திலும் பிரச்சனைகளும் துன்பங்களும் இருந்தாலும், அவர்கள் ஆண்டவரில் நம்பிக்கை வைத்து வாழ்ந்தால்தான் அசைவுராமல் இருந்தார்கள் எனில், குடும்பமாக வாழக்கூடிய நாமும் ஆண்டவர்மீது நம்பிக்கையும், ஒருவர் மற்றவரிடம் அன்பும் கொண்டு வாழ்ந்தோமெனில், நம்முடைய குடும்பமும் திருக்குடும்பமாக மாறும் என்பது உறுதி.

இன்றைக்கு உள்ள குடும்பங்களில் கணவன் மனைவியிடம், பெற்றோர் பிள்ளைககளிடம் நல்லுறவு இல்லை. குடும்பத்தில் நல்லுறவு ஏற்பட வேண்டுமெனில், அக்குடும்பம் அன்பில் கட்டி எழுப்பப்பட வேண்டும். அதற்காகத்தான் புனித பவுல், “இவையனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் பிணைத்து நிறைவுபெறச் செய்யும்” (கொலோ 3: 14) என்பார். ஆகையால், நாம் அனைத்திற்கும் மேலாக அன்பையும், ஆண்டவரின் நம்பிக்கையும் கொண்டு வாழ்வோம். அதன்வழியாக நம்முடைய குடும்பத்தைத் திருக்குடும்பம் ஆக்குவோம்.

சிந்தனை

‘குடும்பங்கள் எப்படியோ அப்படியே சமூகம்’ என்பார் தேயர் என்ற அறிஞர். ஆகையால், நாம் நம்முடைய குடும்பங்களைத் திருக்குடும்பங்களாக, நல்ல குடும்பங்களாகக் கட்டியெழுப்பி, சமூகத்தை இறைச் சமூகமாக உருவாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.
 


 
Free Blog Widget
Stats Counter
hit counter