முதல் வாசகம்
இறந்த இயேசு உயிர்த்தெழுந்தபின்பு
அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
திருத்தூதர் பணிகள் நூலிலிருந்து வாசகம் 10: 34a,
37-43
அந்நாள்களில்
பேதுரு பேசத் தொடங்கி, ‘‘திருமுழுக்குப் பெறுங்கள் என்று
யோவான் பறைசாற்றிய பின்பு கலிலேயா முதல் யூதேயா முழுவதிலும்
நடந்தது உங்களுக்குத் தெரியும். கடவுள் நாசரேத்து இயேசுவின்மேல்
தூய ஆவியாரின் வல்லமையைப் பொழிந்தருளினார். கடவுள் அவரோடு
இருந்ததால் அலகையின் கொடுமைக்கு உட்பட்டிருந்த அனைவரையும்
அவர் விடுவித்து எங்கும் நன்மை செய்துகொண்டே சென்றார்.
யூதரின் நாட்டுப் புறங்களிலும் எருசலேம் நகரிலும் அவர்
செய்த அனைத்திற்கும் நாங்கள் சாட்சிகள். மக்கள் அவரைச்
சிலுவையில் தொங்கவைத்துக் கொன்றார்கள். ஆனால் கடவுள்
அவரை மூன்றாம் நாள் உயிரோடு எழுப்பிக் காட்சி அளிக்கச்
செய்தார். ஆயினும் அனைத்து மக்களுக்குமல்ல, சாட்சிகளாகக்
கடவுள் முன் தேர்ந்துகொண்டவர்களுக்கு மட்டுமே, அவர்
காட்சியளித்தார். இறந்த அவர் உயிர்த்தெழுந்த பின்பு
அவரோடு உண்டு, குடித்த நாங்களே இதற்குச் சாட்சிகள்.
மேலும் வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் நடுவராகக் கடவுளால்
குறிக்கப்பட்டவர் இயேசுதாம் என்று மக்களுக்குப் பறைசாற்றவும்
சான்று பகரவும் அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார். அவரிடம்
நம்பிக்கை கொள்ளும் அனைவரும் அவரது பெயரால் பாவமன்னிப்புப்
பெறுவர் என்று இறைவாக்கினர் அனைவரும் அவரைக்
குறித்துச் சான்று பகர்கின்றனர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
பதிலுரைப் பாடல்
திபா 118: 1-2.
16-17. 22-23 (பல்லவி: 24) Mp3
பல்லவி: ஆண்டவர் தோற்றுவித்த வெற்றியின் நாள் இதுவே;
இன்று அக்களிப்போம்; அகமகிழ்வோம்.
அல்லது: அல்லேலூயா, அல்லேலூயா, அல்லேலூயா!
1
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்;
என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
2
‘என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு’ என இஸ்ரயேல் மக்கள்
சாற்றுவார்களாக! - பல்லவி
16
ஆண்டவரது வலக்கை உயர்ந்தோங்கி உள்ளது; ஆண்டவரது வலக்கை
வலிமையாய்ச் செயலாற்றியுள்ளது.
17
நான் இறந்தொழியேன்; உயிர் வாழ்வேன்; ஆண்டவரின் செயல்களை
விரித்துரைப்பேன். - பல்லவி
22
கட்டுவோர் புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல்
ஆயிற்று!
23
ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பாயிற்று!
- பல்லவி
இரண்டாம் வாசகம்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்.
அங்குக் கிறிஸ்து அமர்ந்திருக்கிறார்.
திருத்தூதர் பவுல் கொலோசையருக்கு
எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 3: 1-4
சகோதரர் சகோதரிகளே,
நீங்கள் கிறிஸ்துவோடு உயிர்பெற்று எழுந்தவர்களானால்
மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள். அங்குக் கிறிஸ்து கடவுளின்
வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். இவ்வுலகு சார்ந்தவை
பற்றி அல்ல, மேலுலகு சார்ந்தவை பற்றியே எண்ணுங்கள். ஏனெனில்
நீங்கள் கிறிஸ்துவோடு இறந்துவிட்டீர்கள். உங்கள்
வாழ்வு அவரோடு இணைந்து கடவுளிடம் மறைந்து இருக்கிறது.
கிறிஸ்துவே உங்களுக்கு வாழ்வு அளிப்பவர். அவர்
தோன்றும்பொழுது நீங்களும் அவரோடு மாட்சி பொருந்தியவராய்த்
தோன்றுவீர்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
அல்லது
நீங்கள் புதிதாய்ப் பிசைந்த
மாவாய் இருப்பீர்கள். ஆகையால், பழைய புளிப்பு மாவைத்
தவிர்க்க வேண்டும்.
திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு
எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் 5: 6b-8
சகோதரர் சகோதரிகளே,
சிறிதளவு புளிப்பு மாவு, பிசைந்த மாவு முழுவதையும்
புளிக்க வைக்கும் என்பது உங்களுக்குத் தெரியாதா? எனவே
புளிப்புச் சத்துள்ள பழைய மாவைத் தூக்கி எறிந்துவிடுங்கள்.
அப்போது நீங்கள் புதிதாய்ப் பிசைந்த மாவாய் இருப்பீர்கள்.
உண்மையில் நீங்கள் புளிப்பற்ற மாவாய்த்தான் இருக்கிறீர்கள்.
ஏனெனில் நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
ஆகையால் பழைய புளிப்பு மாவைத் தவிர்க்க வேண்டும்.
தீமை, பரத்தைமை போன்ற புளிப்பு மாவோடு அல்ல, மாறாக
நேர்மை, உண்மை போன்ற புளிப்பற்ற அப்பத்தோடு பாஸ்காவைக்
கொண்டாடுவோமாக.
ஆண்டவரின் அருள்வாக்கு.
தொடர்பாடல்
இன்று இதைச் சொல்ல வேண்டும் அல்லது பாட வேண்டும். எண்கிழமை
நாள்களில், விரும்பினால், சொல்லலாம்.
பாஸ்காப் பலியின் புகழ்தனையே
பாடிப் புகழ்வோம் கிறிஸ்தவரே.
மாசில் இளமறி மந்தையினை
மாண்பாய் மீட்டுக்கொணர்ந்தாரே;
மாசறு கிறிஸ்துவும் தந்தையுடன்
மாசுறு நம்மை இணைத்தாரே.
சாவும் உயிரும் தம்மிடையே
புரிந்த வியத்தகு போரினிலே
உயிரின் தலைவர் இறந்தாலும்
உண்மையில் உயிரோடாளுகின்றார்.
வழியில் என்ன கண்டாய் நீ?
மரியே, எமக்கு உரைப்பாயே.
உயிரோடுள்ள கிறிஸ்து பிரான்
கல்லறைதன்னைக் கண்டேனே;
உயிர்த்து எழுந்த ஆண்டவரின்
ஒப்பரும் மாட்சியும் கண்டேனே.
சான்று பகர்ந்த தூதரையும்
போர்த்திய பரிவட்டத்தினையும்
அவர்தம் தூய துகிலினையும்
நேராய்க் கண்ணால் கண்டேனே.
கிறிஸ்து என்றன் நம்பிக்கை,
கல்லறை நின்று உயிர்த்தாரே,
இதோ, உமக்கு முன்னாலே
செல்வர் கலிலேயாவிற்கே.
மரித்தோர் நின்று உண்மையிலே
கிறிஸ்து உயிர்த்தது யாமறிவோம்.
வெற்றிகொள் வேந்தே, எம்மீது
நீரே இரக்கங் கொள்வீரே.
நற்செய்திக்கு
முன் வாழ்த்தொலி
1 கொரி 5: 7b-8b
அல்லேலூயா, அல்லேலூயா! நம் பாஸ்கா ஆடாகிய கிறிஸ்து பலியிடப்பட்டிருக்கிறார்.
ஆகையால் நாம் ஆண்டவரின் பாஸ்காவைக் கொண்டாடுவோமாக. அல்லேலூயா.
நற்செய்தி வாசகம்
இயேசு இறந்து உயிர்த்தெழ
வேண்டும்.
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து
வாசகம் 20: 1-9
வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள்
நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்;
கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார்.
எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு
கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, ‘‘ஆண்டவரைக் கல்லறையிலிருந்து
யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ,
எங்களுக்குத் தெரியவில்லை!” என்றார்.
இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப்
புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர்
பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார்.
அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப்பதைக் கண்டார்;
ஆனால் உள்ளே நுழையவில்லை.
அவருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார்.
நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும்,
இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத்துண்டு
மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி
வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து
சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார்.
இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல்
வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ளவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
|
ஆண்டவருடைய உயிர்ப்பின்
ஞாயிறு
I திருத்தூதர் பணிகள் 10: 34a, 37-43
II கொலோசையர் 3: 1-4
III யோவான் 20: 1-9
கிறிஸ்து உயிர்த்தார்! அல்லேலூயா!
நிகழ்வு
இரஷ்யாவைச் சார்ந்த மிகப்பெரிய ஆளுமை நிகோலாய் இவானோவிச்
புகாரின் (Nikolai Ivanovich Bukharin 1888-1938). இவர்
1917 ஆம் ஆண்டு அந்நாட்டில் ஏற்பட்ட போல்ஸ்விக் புரட்சிக்கு
வித்திட்டவர்; கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியப் பொறுப்பை
வகித்தவர்; கடவுள் மறுப்பாளர்
1930 ஆம் ஆண்டு மாஸ்கோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு
பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய இவர், கிறிஸ்துவைக்
குறித்தும், கிறிஸ்தவ மதத்தைக் குறித்தும் கடுமையாகச்
சாடிப் பேசினார். இவர் இவ்வாறு பேசிவிட்டு அமர்ந்ததும்,
கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து, மேடைக்குச் சென்று,
“கிறிஸ்து உயிர்த்தார்” என்று உரக்கக் கத்தினார். மக்களும்
ஒருமித்த குரலில், “ஆம், கிறிஸ்து உயிர்த்தார்” என்று கத்தினார்கள்.
இதைக் கேட்டுவிட்டு இவர், ‘மக்கள் இப்படிக்
கிறிஸ்துவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டிருக்கும்போது, அவரைப்
பற்றி என்ன பேசினாலும், எடுபடாது’ என்று தன் மனத்தில்
நினைத்துக் கொண்டார்.
கிறிஸ்துவுக்கு எதிராக யார் என்ன பேசினாலும், அவர் உயிர்த்தார்
என்பதை யாரும் மறுக்கமுடியாது. இன்று நாம் ஆண்டவர் இயேசுவின்
உயிர்ப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழாவில்
நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச்
சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கையின் அடிப்படை
“கிறிஸ்து உயிருடன் எழுப்பப்படவில்லை என்றால், நாங்கள் பறைசாற்றிய
நற்செய்தியும் நீங்கள் கொண்டிருக்கின்ற நம்பிக்கையும் பொருளற்றதாகிவிடும்”
(1 கொரி 15: 14) – இது திருத்தூதர் புனித பவுல் ஆண்டவர் இயேசுவின்
உயிர்ப்பைக் குறித்துச் சொல்லும் மிக முக்கியமான வார்த்தைகள்.
இவ்வார்த்தைகள் கிறிஸ்துவின் உயிர்ப்பே நமது நம்பிக்கைக்கு
அடிப்படையாக இருக்கின்றது என்பதையும், பொருளைத் தருகின்றது
என்பதையும் எடுத்துக்கூறுகின்றது.
இன்றைப் பலர், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்களைப்
போன்று ஒன்றைச் சொல்வார்கள்; செயலில் காட்டமாட்டார்கள் (மத்
23: 3). ஆனால், ஆண்டவர் இயேசு, தான் இறந்து மூன்றாம் உயிர்த்தெழுவேன்
என்று சொன்னார் (மத் 17: 22; மாற் 8: 31; லூக் 9: 22; யோவா
2: 19). அவர் சொன்னது போன்றே மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.
இதன்மூலம் அவர் சொல்வீராக அல்ல, செயல்வீரராக விளங்குகின்றார்.
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமக்குத் தரும் நம்பிக்கை
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருள் தருகின்றது
என்று பார்த்தோம். கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப்
பொருள் தருவதோடு அல்லாமல், நாமும் ஒருநாள் உயிர்த்தெழுவோம்
என்ற நம்பிக்கையையும் தருகின்றது. இக்கூற்றிற்கு வலுசேர்ப்பதாய்
இருக்கின்றது இயேசு மார்த்தாவிடம் பேசிய வார்த்தைகள். இயேசு
மார்த்தாவிடம் “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே. என்னிடம்
நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்” (யோவா 11: 25-26)
என்பார். ஆதலால், நாம் இயேசுவிடம் நம்பிக்கை கொண்டு
வாழும்பொழுது, அவரைப் போன்று உயிர்த்தெழுவோம் என்பது உறுதி.
இங்கு அமெரிக்காவைச் சார்ந்த கவிஞரும் நாவலாசிரியருமான
பிரெடரிக் பூச்னர் (Frederick Buechner) சொல்லக்கூடிய ஒரு
செய்தி மிகவும் கவனிக்கத்தக்கது. அவர் சொல்கின்றார்:
“இயேசுவின் உயிர்ப்பு, இவ்வுலகில் நாம் எதிர்கொள்கின்ற மிகக்கொடிய
துன்பமும் நிரந்தரமானது அல்ல என்பதை உணர்த்துகின்றது.” ஆம்,
அக்காலத்தில் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட மிகக்கொடிய தண்டனை
சிலுவைச் சாவுதான். அத்தண்டனை ஒரு குற்றமும் செய்யாத இயேசுவுக்குக்
கொடுக்கப்பட்டது. யூதர்கள் இயேசுவைச் சிலுவையில் அறைந்துவிட்டால்,
அவருடைய வாழ்க்கை அத்தோடு முடிந்துவிடும் என்று நினைத்தார்கள்.
இயேசுவோ சிலுவைச்சாவை வென்று உயிர்த்தெழுந்தார். எனவே, மிகக்
கொடிய தண்டனையான சிலுவைச் சாவையே இயேசு வெற்றி கொண்டார் எனில்,
நம்முடைய வாழ்கையில் வரும் மிகக்கொடிய துன்பத்தையும் (இறைவனுடைய
துணையால்) நம்மால் வெற்றிகொள்ள முடியும். னெனில் அக்கொடிய
துன்பமும் நிரந்தரமல்ல!
உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் விளங்குவோம்
கிறிஸ்துவின் உயிர்ப்பு நமது நம்பிக்கைக்குப் பொருளைத்
தருகின்றது; நாமும் ஒரு நாள் உயிர்த்தெழுவோம் என்ற
நம்பிக்கையைத் தருகின்றது என்று பார்த்தோம். இப்பொழுது
கிறிஸ்து உயிர்ப்பு நமக்கு என்ன அழைப்பினைத் தருகின்றது
என்று பார்ப்போம்.
நற்செய்தியில், ஆண்டவர் இயேசு உயிர்த்த செய்தியை மகதலா
மரியா சீடர்களிடம் சொல்கின்றார். முதல்வாசகத்தில் பேதுரு
ஆண்டவர் இயேசுவைப் பற்றிய நற்செய்தியைச் கொர்னலேயுவின்
இல்லத்தில் இருந்தவர்களுக்குச் சொல்கின்றார். இவ்வாறு
இவர்கள் உயிர்த்த இயேசுவுக்குச் சான்று பகர்கின்றார்கள்.
இவர்களைப் போன்று நாம் ஒவ்வொருவரும் உயிர்த்த ஆண்டவர்
இயேசுவுக்குச் சான்று பகரவேண்டும். இதை நாம் வார்த்தையால்
வெளிப்படுத்திவிட்டால் போதுமா அல்லது வாழ்வாலும்
வெளிப்படுத்த வேண்டுமா? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை
இன்றைய இரண்டாம் வாசகம் தருகின்றது.
திருத்தூதர் புனித பவுல் கொலோசையருக்கு எழுதிய
திருமுகத்தில், “கிறிஸ்துவோடு உயிர்பெற்று
எழுந்தவர்களானால் மேலுலகு சார்ந்தவற்றை நாடுங்கள்”
என்பார். முன்னதாக இயேசு, நாம் இவ்வுலகைச் சார்ந்தவர் அல்ல
(யோவா 17: 14) என்று கூறியிருப்பார். புனித பவுல்
இக்கருத்தோடு சேர்த்து, நாம் மேலுலகு சார்ந்தவற்றை
நாடவேண்டும் என்ற கருத்தினையும் வலியுறுத்திக்
கூறுகின்றார். இன்றைக்கு ஒருசிலர் கிறிஸ்தவர்களாக
இருந்துகொண்டு தன்னலத்தோடும், தான் என்ற ஆணவத்தோடும்
தான்தோன்றித் தனமாக வாழ்வதைக் காணமுடிகின்றது. வேறு சிலர்,
அடுத்தவர்மட்டில் எந்தவோர் அக்கறையில்லாமலும், கரிசனை
இல்லாமலும் வாழ்வதைக் காண முடிகின்றது. “ஆன்மாவின்
பெருந்தன்மை என்பது நாம் எத்தனை சந்தர்பங்களில் இரக்கம்
காட்டுகின்றோம் என்பதை பொறுத்ததே!” என்பார் ஆங்கிலக்
கவிஞர் பேகன். எனவே, நாம் தன்னலத்தையும் தான் என்ற
அகந்தையும் துறந்து, அடுத்தவர் மட்டில் இரக்கமும்
அன்பும்கொண்டு மேலுலகு சார்ந்த வாழ்ந்து, இயேசுவின்
உயிர்ப்புக்குச் சாட்சிகளாய் விளங்குவோம்.
சிந்தனை:
‘நாமெல்லாம் உயிர்ப்பின் மக்கள்; அல்லேலூயா என்பதே நமது
பாடல்’ என்பார் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால்.
எனவே, உயிர்ப்பின் மக்களாகிய நாம், இவ்வுலகு சார்ந்த
வாழ்க்கை வாழாமல், மேலுலகு சார்ந்த வாழ்க்கை வாழ்வோம்.
அதன்வழியாக இறையருளை நிறைவகாப் பெறுவோம்.
- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை
மறைமாவட்டம்.
|