maraikal
MUM
"

 
 
 
இளையோர்
 
 
 
 
 
 
 
 
 
 
 

                                               திருவருகைக்காலம் 4ஆம் வாரம் - ஞாயிறு

முதல் வாசகம்

தாவீதின் அரசு ஆண்டவர்முன் என்றென்றும் உறுதியாக இருக்கும்.

சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் 7: 1-5, 8b-12, 14-16

தாவீது அரசர் தம் அரண்மனையில் குடியேறியபின், சுற்றியிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, "பாரும், நான் கேதுரு மரங்களாலான அரண்மனையில் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் குடியிருக்கிறது" என்று கூறினார்.

அதற்கு நாத்தான், நீர் விரும்பியது அனைத்தையும் செய்துவிடும்; ஏனெனில் ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்று அரசரிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது: "நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்:

நான் தங்குவதற்காக எனக்கு ஒரு கோவில் கட்டப்போகிறாயா? என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்; உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்; மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர்போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன்; அவர்கள் அந்த இடத்திலேயே நிலைத்துவாழச் செய்வேன். என் மக்களாகிய இஸ்ரயேல்மீது நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்க காலத்தில் தீயவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டதுபோல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் உனக்கு ஓய்வு அளிப்பேன். மேலும், ஆண்டவர்தாமே உன் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார்.

உன் வாழ்நாள்கள் நிறைவுபெற்று நீ உன் மூதாதையரோடு துயில்கொள்ளும்போது, உனக்குப் பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப்பின் நான் உயர்த்தி, அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். என் முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!"

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

பதிலுரைப் பாடல்

திபா 89: 1-2. 3-4. 26,28 . (பல்லவி: 1a) Mp3

பல்லவி: ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்.

1
ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
2
உமது பேரன்பு என்றென்றும் நிலைத்துள்ளது என்று அறிவிப்பேன்; உமது உண்மை வானைப்போல் உறுதியானது. - பல்லவி

3
நீர் உரைத்தது: ‛நான் தேர்ந்துகொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது:
4
உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்.’ - பல்லவி

26
‛நீரே என் தந்தை, என் இறைவன், என் மீட்பின் பாறை’ என்று அவன் என்னை அழைப்பான்.
28
அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும். - பல்லவி

இரண்டாம் வாசகம்

ஊழி காலமாக மறைபொருளாக இருந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து வாசகம் 16: 25-27

சகோதரர் சகோதரிகளே,

இயேசு கிறிஸ்துவைப்பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 

நற்செய்திக்கு முன் வாழ்த்தொலி

லூக் 1: 38

அல்லேலூயா, அல்லேலூயா! நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும். அல்லேலூயா.

நற்செய்தி வாசகம்

இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்.

லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 26-38

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா.

வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, "அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்" என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார்.

வானதூதர் அவரைப் பார்த்து, "மரியா, அஞ்சவேண்டாம்; கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்; அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்; உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது" என்றார்.

அதற்கு மரியா வானதூதரிடம், "இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!" என்றார். வானதூதர் அவரிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை" என்றார்.

பின்னர் மரியா, "நான் ஆண்டவரின் அடிமை; உம்சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.

ஆண்டவரின் அருள்வாக்கு.

 
I 2 சாமுவேல் 7: 1-5, 8b-12, 14-16
II உரோமையர் 16: 25-27
III லூக்கா 1: 26-38

"நான் உமது அடிமை"


நிகழ்வு

புனித பிலிப்பு நேரி வாழ்ந்த காலத்தில், உரோமைக்கு அருகில் இருந்த ஒரு துறவுமடத்தில் புனிதத்திற்கு எடுத்துக்காட்டாக ஒரு பெண் துறவி வாழ்ந்து வருகின்றார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இச்செய்தியை அப்போதிருந்த திருத்தந்தை கேள்விப்பட்டார். அவர் பிலிப்பு நேரியை அழைத்து, தான் கேள்விப்பட்ட செய்தி உண்மையா என்பதை அறிந்துவர அவரை அனுப்பி வைத்தார்.

திருத்தந்தையின் வேண்டுகோளுக்கிணங்க, பிலிப்பு நேரி அந்தப் பெண்துறவி வாழ்ந்து வந்த துறவு மடத்திற்குக் கால்நடையாகவே நடந்து சென்றார். இவர் அந்தத் துறவுமடத்திற்குச் சென்றபொழுது மழை பெய்து, வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்தது. இவர் அதன்வழியாக நடந்து சென்றதால், இவர் அணிந்திருந்த காலணி அழுக்கானது. ஒருவழியாக இவர் துறவுமடத்தை அடைந்தார். இவர் துறவுமடத்தை அடைந்தபொழுது, யார் வந்திருக்கின்றார் என்று பார்ப்பதற்காக ‘புனிதத்திற்கு எடுத்துக்காட்டான அந்தப் பெண் துறவி’ வெளியே வந்தார். அவரிடம் இவர், "வழியெங்கும் ஒரே சேறும் சகதியுமாய் இருந்ததால், என்னுடைய காலணிகள் அழுக்காகிவிட்டன. அவற்றைக் கழுவிச் சுத்தம் செய்ய, கொஞ்சம் தண்ணீர் ஊற்ற முடியுமா?" என்று கெஞ்சிக் கேட்டார். பிலிப்புநேரி இப்படிச் சொன்னதும், அந்தப் பெண் துறவி, "உங்களுடைய காலணிகளில் இருக்கும் அழுக்கைப் போக்குவதற்குத் தண்ணீர் ஊற்ற, நான் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா?" என்றார்.

இதற்குப் பிலிப்பு நேரி அவரிடம் மறுவார்த்தை பேசாமல், நேராகத் திருத்தந்தையிடம் வந்தார். "இவ்வளவு சீக்கிரத்தில் ஒருவர் புனிதமானரா? இல்லையா? என்று நீங்கள் கண்டுபிடித்துவிட்டீர்களா?" என்று திருத்தந்தை பிலிப்பு நேரியிடம் கேட்டதற்கு, இவர் திருத்தந்தையிடம், "ஒருவர் புனிதமானவரா? இல்லையா? என்று தெரிந்துகொள்வதற்குத் தாழ்ச்சி என்ற அளவுகோல் இருக்கின்றது. அந்த அளவுகோலைக் கொண்டு அளந்துபார்த்தபொழுது அந்தப் பெண்துறவி புனிதத்திற்கு எடுத்துக்காட்டு இல்லை என்பது தெரிந்தது. அதனால்தான் இவ்வளவு விரைவாக வந்துவிட்டேன்" என்றார்.

ஆம், எவர் ஒருவர் தாழ்ச்சியில் சிறந்து விளங்குகின்றாரோ, அவர் புனிதத்திலும் சிறந்து விளங்குவார். திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் ஒவ்வொருவரும் மரியாவைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறைவனின் திருவுளம் நிறைவேற நாம் ஒத்துக்க வேண்டும் என்றோர் அழைப்பினைத் தருகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.

கடவுளைத் தன்னுடைய விருப்பத்திற்கேற்ப வளைத்த தாவீது

நாம் இறைவனுக்கு மிக நெருக்கமாக இருக்கலாம்; பணபலம், படைபலத்தில்கூட பெரியவர்களாக இருக்கலாம். அதற்காக நாம் இறைவனை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்ப வளைக்கக்கூடாது. அப்படிச் செய்வது இறைவனின் விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுவதற்குச் சமமாகும். இஸ்ரயேலை ஆண்ட மன்னர்களில் ஆண்டவரின் நெஞ்சத்திற்கு நெருக்கமாக இருந்தவர் தாவீது மன்னர். இவர் தம் அரண்மனையில் குடியேறியதும், ஆண்டவரின் விருப்பத்தை அறியாமல், அவருக்கென கோயில் கட்ட விருப்புகின்றார். அப்பொழுது ஆண்டவர் இறைவாக்கினர் நாத்தான் வழியாக, "ஆண்டவர்தாம் உம் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கின்றார்" என்கிறார்.

தாவீது மன்னர் ஆண்டவரின் விருப்பத்தை அறிய விரும்பாமல் ‘நான்தான் மிகப்பெரியவன் ஆயிற்றே’ என எண்ணத்தில் ஆண்டவருக்கெனக் கோயில்கட்ட நினைத்ததால், அது முடியாமல் போனது ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் அவர் மிகுதியான குருதியைச் சிந்தியிருந்தார் (1 குறி 22:8). அதனாலும் அவரால் ஆண்டவருக்கென கோயிலைக் கட்ட முடியவில்லை. மேலும் தாவீது மன்னர் ஆண்டவருக்கென கற்களாலான கோயிலையே கட்ட விரும்பினார்; ஆனால் ஆண்டவராகிய கடவுள் என்றுமுள்ள அரசைக் கட்டப் போவதாக வாக்குறுதி அளிக்கின்றார். இவ்வாறு தாவீது மன்னர் ஆண்டவரின் விருப்பத்தை அறிய விரும்பாமல், ‘தான் மிகப்பெரிய மன்னன்’ என்ற மமதையில் ஆண்டவருக்கென கோயில் கட்ட விரும்பியதால், அவரால் கோயில் கட்ட முடியாமலேயே போகின்றது.

கடவுளின் விருப்பத்திற்கேற்ப வளைந்து கொடுத்த மரியா

மரியா சிறுவயதிலிருந்தே ஆண்டவருக்குத் தன்னை அர்ப்பணித்து, அவருக்கு மிக நெருக்கமாக இருந்தவர்தான். ஆனாலும் அவர் தாவீது மன்னரைப் போன்று இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கு வளைக்கவில்லை. மாறாக, இறைவனின் விருப்பத்திற்கு வளைந்து கொடுக்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் முதன்மை வானதூதர் மரியாவிற்குத் தோன்றி, இறைவனின் மீட்புத் திட்டத்தைச் சொல்லி முடிந்ததும் அவர், "நான் ஆண்டவரின் அடிமை; உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்" என்கின்றார். மரியா முதன்மை வானதூதர் கபிரியேலிடம் சொல்லும் இச்சொற்களில் இரண்டு உண்மைகள் அடங்கியிருக்கின்றன. ஒன்று, மரியா, இறைவனிடம் திருவுளம் நிறைவேற இசைவு தந்தது அல்லது ஆம் என்று சொன்னது. இரண்டு, இறைவனின் திருவுளத்தைத் தாழ்ச்சியோடு நிறைவேற்றத் தான் தயார் என்று சொன்னது. ஆம், மரியா இறைவனின் திருவுளம் நிறைவேறுவதற்கு ஓர் அடிமையைப் போன்று தம்மைத் தாழ்த்திக் கொண்டார். இதன்மூலம் இறைவனின் என்றுமுள்ள அரசு கட்டியெழுப்பப்பட அவர் காரணமாக இருந்தார்.

தாழ்ச்சியுள்ளோரின் உள்ளத்தில் ஆண்டவர்

இதுவரையில், இறைவனைத் தன்னுடைய விரும்பத்திற்கேற்ப வளைத்த தாவீது மன்னரையும், இறைவனின் விரும்பத்திற்கு வளைந்து கொடுத்த அல்லது தாழ்ச்சியோடு ஆம் என்று சொன்ன மரியாவையும் குறித்துச் சிந்தித்துப் பார்த்திருக்கின்றோம். இவர்கள் இருவரில் நாம் யாராக இருக்கப் போகின்றோம் என்று சிந்தித்துப் பார்ப்பது நம்முடைய கடமையாகும்.

"இறைவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உள்ளன. ஒன்று, விண்ணகம். மற்றொன்று, தாழ்ச்சியுள்ளவரின் உள்ளம்" என்று கூறுவார் புனித அகுஸ்தின். மரியா தாழ்ச்சியுள்ளவராய், இறைவனின் விரும்பத்திற்கு ஆம் என்று சொல்லி, அவருடைய மீட்புத் திட்டம் நிறைவேறக் காரணமாக இருந்தார். இதனால் அவர் இயேசுவைத் திருவயிற்றில் சுமந்து, எல்லாத் தலைமுறையும் பேறுபெற்றவர் என அழைக்கும் சிறப்பினைப் பெற்றார் (லூக் 1:48) நாமும் மரியாவைப் போன்று தாழ்ச்சி உள்ளவர்களாய், இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்தோமெனில், இறைவனிடமிருந்து ஆசி பெறுவோம் என்பது உறுதி.

ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தாவீது மன்னரைப் போன்று அல்லாமல், மரியாவைப் போன்று தாழ்ச்சியோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப வாழ்ந்து, அவர் தருகின்ற ஆசியைப் பெற்று மகிழ்வோம்.

சிந்தனை

‘தன்னை அல்ல, கடவுளை மாட்சிப்படுத்தியதில்தான் புனித கன்னி மரியாவின் மகத்துவம் அடங்கியிருக்கின்றது’ என்பார் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் (An Invitation to Faith). ஆகையால், நாம் புனித கன்னி மரியாவைப் போன்று நம்மை அல்ல, கடவுளை நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் மாட்சிப்படுத்துவோம். அதற்குத் தாழ்ச்சியோடு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.


- மறைத்திரு. மரிய அந்தோணிராஜ், பாளையங்கோட்டை மறைமாவட்டம்.

 


Free Blog Widget
Stats Counter
hit counter